Pages

Monday, January 29, 2024

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 1 // சிவ.கதிரவன்


திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு


www.swasthammadurai.com


  திருக்குறள் போல ஒரு நல்ல நூலை நாம் பேசுவது என்பது ஒரு இலக்கிய தளத்தில் ஆரோக்கியமானது என்பது  மட்டுமல்லாமல் நம்முடைய அறிவு வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அது நமக்கு ஒரு பெரும் உயர்வை தரும் வல்லமையுடையது என்பதாகவும் எனக்கு ஒரு கருத்து உண்டு எப்போதும்.

 கடவுள் வாழ்த்து என்று முதல் பகுதியை நாம் சென்ற உரையாடலில் பாத்திருந்தோம். அதாவது திருக்குறளினுடைய முன்னுரையில் நான்கு அதிகாரங்களை வள்ளுவர் வைத்திருக்கிறார். அதில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இரண்டாவது அதிகாரம் வான் சிறப்பு. இன்று நாம் வான் சிறப்பு பற்றி பேச வேண்டும் என்பது நாம் வகுத்து வைத்திருக்கிற முடிவு. வான் சிறப்பை பேசுவதற்கு முன்பு சில செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

திருக்குறளை ஒரு வாழ்வியல் நோக்கில் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். உரையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் வாழ்வை செம்மையாக வாழ்வதற்கு திருக்குறள் நல்ல வழிகாட்டும் நூலாக இருந்து கொண்டிருக்கிறது என்ற புரிதலில் நாம் திருக்குறளை படித்துக் கொண்டிருக்கிறோம். இலக்கிய பெருமனார்கள், பெரும் பெரும் சிந்தனையாளர்கள் திருக்குறளின் மீது தனிப்பட்டு கவனம் செலுத்தி அவற்றிற்குள் இருக்கிற நுட்பங்களை விரிவாக பேசியவர்கள் என்று பலரும் திருக்குறள் மீது பெரிய நேசத்தோடு, மதிப்போடு பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாமும் நீங்கள் அறிந்தது தான்.

ஆனால் வாழ்வியல் நோக்கில்  திருக்குறளைப் பற்றி நாம் பேசுவது என்பது சற்று புதிய கோணத்தில் நாம் திருக்குறளை வாழ்வியல் நோக்கில் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்கிற பாணியில் அவற்றை நாம் தொடர்ந்து செய்கிறோம். முதல் அதிகாரத்திலேயே வள்ளுவர் வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று பார்க்கிறபோது வாழ்வினுடைய அர்த்தமாக சொல்லப்படுகிற புகழ், பெயர், செல்வம், துன்பமில்லாமை, நெருக்கடியிலிருந்து விடுதலை, பிறவிப் பெருங்கடல் இவ்வாறு ஒரு மனிதன் வாழ்வதற்கு என்னென்ன சிக்கல்களை பட்டியலில் வைத்திருக்கிறாரோ அந்த பட்டியலின் அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முதல் அதிகாரத்திலேயே திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

மனிதனுக்கு எப்போதும் வாழ்க்கைக்கு இரண்டு முக்கியமான அடிப்படை செயல்பாடுகள் உண்டு. நாம் இன்றைக்கு எடுத்துக் கொள்வோம் என்றால் நாம் வாழ்வதற்கு அமைதியான மனநிலை, சௌகரியமான மனநிலை, இரண்டாவது நல்ல உணவு. இவை இரண்டும் மனிதன் நலமாக, மகிழ்வாக, உற்சாகமாக வாழ்வதற்குரிய தேவையாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஒரு மனிதன் நன்றாக வாழ வேண்டும் என்றால் நல்ல உணவு சாப்பிட வேண்டும். நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்பது ஒவ்வொருவரும் அவரவர் நினைப்பில் இருக்கிற நல்ல உணவு அல்ல. எனக்கு பிரியாணி பிடிக்கும். அதுதான் நல்ல உணவு. எனக்கு காரமாக, பொரித்த, அவித்த உணவுகள் பிடிக்கும். அதுதான் நல்ல உணவு என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக   அபிப்பிராயங்களை வைத்திருப்போம். அப்படியான விருப்பங்களை வைத்திருப்போம். ஆனால் நல்ல உணவு என்பது என்ன என்பது திருவள்ளுவரினுடைய பார்வையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

நல்ல வாழ்க்கைக்கு, மனம் அமைதியாக இருப்பதற்கு என்ன செய்வது என்பதை திருவள்ளுவர் அறிந்து குறட்பாள்களை வகுத்திருக்கிறார். உடல் என்ன செய்ய வேண்டும். உடலுக்கு என்ன அவசியமாக இருக்கிறது என்பதை அறிந்து திருவள்ளுவர் அதிகாரங்களை வகுத்து வைத்திருக்கிறார் என்று நாம் பார்க்க முடிகிறது. இப்போது நல்ல உணவு என்றால் நாம் விரும்புகிற உணவெல்லாம் நல்ல உணவா? குறைந்தபட்சம் நல்ல உணவு என்பது என்ன? என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நல்ல உணவு என்பது என்ன என்று நாம் தேடுகிற போது, பார்க்கிறபோது, நல்ல உணவு குறித்து சிந்திக்கிற போது மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையில் நல்ல உணவு என்பது உங்கள் உடலுக்கு ஆற்றல் தருகிற உணவாக இருக்க வேண்டும் என்பதை நாம் வைத்துக் கொள்ளலாம். இது ஒரு நல்ல உணவிற்கான குறியீடு. இரண்டாவதாக நீங்கள் உண்கிற உணவு உங்களுக்கு ஆற்றலை தருவது போல இல்லாமல், நோய்கள் எதையும் கொண்டு வந்து சேர்க்காத உணவாக இருக்க வேண்டும். இது இரண்டாவது அவசியமான குறிப்பு. இந்த இரண்டு குறிப்புகளும் மிக முக்கியமானது என்று நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் உணவு குறித்து  நமக்கு நிறைய குழப்பங்கள் அல்லது புதிய புதிய செயல்பாட்டு நுட்பங்களை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இன்றைக்கு நாம் தேடுகிற போது புதிய உணவுகளை செய்து பார்ப்பதற்கென்று  தனி துறைகளெல்லாம் உருவாகிவிட்டன. வாழ்வியலை போற்றுகிற சமூகம் உணவு குறித்து வேறொரு புரிதலை வைத்திருந்தது. இயற்கையான உணவு. இன்றைக்கு மருத்துவ உலகம் நவீன மருத்துவ உலகம் உணவுகளை கோட்பாடு ரீதியில் பிரித்து வைத்திருக்கிறது.  ஆக, நல்ல உணவு என்று நாம் பார்க்கிறபோது மருத்துவ உலகத்தின் அடிப்படையில் மருத்துவ வரையறைகளின்  அடிப்படையில் நாம் பார்த்தோம் என்றால் நல்ல உணவு என்பது உங்களுக்கு ஆற்றலை தருகிற உணவு அல்லது நல்ல உணவு என்பது உங்களுக்கு நோய்கள் உருவாவதற்கு ஏற்பாடு செய்யாத உணவு. நோய்களைப் போக்குகிற உணவு என்று நல்ல உணவை நாம் வரையறுத்துக் கொள்ள முடியும்.

உண்மையிலேயே நல்ல உணவு என்பது என்ன என்று நமக்கு புரிதல் இருக்கிற போது வள்ளுவரின் வார்த்தைகளை நாம் இன்னும் நுட்பமாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே நாம் இரண்டாவது அதிகாரத்தை பார்ப்பதற்கு முன்பு நமக்கு இருக்கிற உடல் ஆரோக்கியம் பற்றி, நமக்கு இருக்கிற உடல் நலம் பற்றிய புரிதல் இருக்கும் என்றால்  இது இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிற அடிப்படையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு, வாழ்விற்கு, வாழ்வை செம்மையாக வாழ்வதற்குரிய அடையாளங்களாக முதல் அதிகாரத்தில் சொன்னது போல் உள்ள இறை வழிபாட்டு  குறிப்புகளுக்குள் ஒளிந்திருக்கிற வாழ்விற்கு அடிப்படையாக இருக்கிற அம்சங்களையும் இரண்டாவது அதிகாரத்திற்குள் முன் நுழைகிற போது சில புரிதலோடு நாம் செல்வோம் என்றால் இன்னும் கூடுதல் சிறப்பாக திருக்குறளை வாழ்வியல் நோக்கில் திருக்குறளோடு வாழ்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதில் நமக்கு எளிமையான வாய்ப்புகள் உண்டாகும்.

ஆகவே நல்ல உணவு என்பது முதல் குறிப்பிட்ட அம்சத்தில் மனிதனுக்கு மனிதன் நல்ல உணவு என்பது ஒரு பார்வை. எனக்கு பொருந்துகிற உணவு உங்களுக்கு பொருந்தாமல் இருக்கலாம். நமக்கு பொருந்துகிற உணவு இன்னொருவருக்கு பொருந்தாமல் இருக்கலாம்.  இப்படியான வேறுபட்ட உணவு அபிப்ராயங்கள் நமக்குள் இருக்கின்றன. ஆனால் நாம் மனித சமூகத்திற்கு ஒரு பொதுவான நல்ல உணவு என்று நாம் வைத்துக் கொண்டோம் என்றால்  மனிதர்கள் அல்லாத வேறு ஜீவரசிகளுக்கு அந்த உணவு முறை பொருந்துமா என்று வேறொரு கேள்வி வருகிறது.

ஆக திருவள்ளூர் துல்லியமான ஒரு பதிலை முன் வைக்கிறார். எல்லா ஜீவரசிகளுக்கும் பொருந்துகிற ஒரு உணவை இயற்கை வழங்குகிறது. நல்ல வாழ்கை முறை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்று சொன்னால் உங்கள் உணவு எப்படிப்பட்ட உணவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் பின்பற்றி கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் வள்ளுவர் இரண்டாவது அதிகாரத்தை படைத்திருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment