Wednesday, June 26, 2024

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                             எண்ணங்கள் பற்றி...



வணக்கம்,

                 இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்ணம், நேர்மறை எண்ணம் என்று நாம் பேசுகிற, கேட்கிற பல செய்திகளை விளக்கிப் பேசிப் பார்க்கலாம் என்கிற  நோக்கத்தில் இந்த உரையாடலை பேசிப் பார்க்கிறோம். இதுவரையிலும் ஆகச்சிறப்பாக எண்ணங்கள், மனம், அதனுடைய செயல்பாடுகள் பற்றி அது எப்படி இயங்குகிறது? எப்படி நடைமுறைப்படுத்துவது?  எப்படி புரிந்து கொள்வது?  என்று அதை ஒட்டி பேசுபவர்கள் என்று பார்த்தால் மிகச் சிறப்பாக யாரையும் பார்க்க முடிவதில்லை.

எண்ணத்தின் வலிமை, எண்ணத்தினுடைய செயல்பாடு, எண்ணத்தினுடைய வெளிப்பாடு என்று பல தலைப்புகளில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. பல விதமான உரையாடல்கள் நடைபெற்று இருக்கின்றன. அது எவ்வளவு பயன்படுகிறது என்பதும் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால் அது அப்படி ஒரு பயன்படும் தன்மையில் இருப்பதாகவும் புலப்படுவதில்லை. சிறிய அளவில் ஆங்காங்கே புரிந்து கொண்ட செய்திகளை புத்தகங்களாகவும் இது போன்ற உரையாடல்களாகவும்  தன்முனைப்பு செயல்பாடுகளாகவும் வெளிப்படுத்துகிறார்கள் என்கிற அளவில் தான் இருக்கிறது.

மிக நேர்மையாக அதிக பொறுப்புடன் மனம் பற்றி, எண்ணங்கள் பற்றி பேசிய  எழுதியவர்கள் என்றால் மெய்யியல் புரிந்து வேலை செய்த மதிப்பிற்குரிய ஓஷோ அவர்களை கூறலாம். மதிப்பிற்குரிய ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கூறலாம். அவர்களுடைய எழுத்துக்களும் நடைமுறையும் பேச்சும் மனிதர்களுக்குள் தோன்றி மனிதனை இயக்குகிற, உறவாட செய்கிற எண்ணங்கள் பற்றி மிக விரிவாகப் பேசி இருக்கிறார்கள். மிக ஆழமாக பேசியிருக்கிறார்கள். சமகாலத்தில் அப்படி பேசியவர்கள் எழுதியவர்கள் என்றால் மதிப்பிற்குரிய அய்யா.ஞானமூர்த்தி அவர்களினுடைய  உரை.  ஒரு மெய்யியல் நூலினுடைய அடிப்படையில்  விளக்கி பேசுவதும் அது பற்றிய உரையாடல் செய்வதையும் பார்க்க முடிகிறது. அது மிகுந்த மதிப்பிற்குரியதாகவும் இருக்கிறது. அதனுடன் ஐயா செந்தமிழன் அவர்களினுடைய  மனம் குறித்த உரையாடல்கள் மதிப்பிற்குரியதாக இருக்கிறது. இப்படி சில குறிப்பிடத்தகுந்த மதிப்பு மிக்க உரையாடல்களும் நூல்களும் குறைவாகத்தான் இருக்கிறது.

Monday, June 24, 2024

நீத்தார் பெருமை - பகுதி 5 - சிவ.கதிரவன்

                                             நீத்தார் பெருமை



துறந்தார் இந்திரனாக இருக்கிறரே ஒருவர் அவர் தான் துறந்தாருக்கு சான்று என்று இந்திரனை குறிப்பிடுகிறார். இந்திரன் கதை குறித்து நாம் வேறொரு பகுதியில் விரிவாக பேசலாம். ஐந்தும் அடக்கியவன், ஆற்றலுக்கு தலைவன் என்று இந்திரனை சொல்கிற போது சொல்கிறார். ஐந்து என்பது என்ன? ஐந்தையும் அடக்குவது என்பது என்ன? என்பது ஒரு தனி விவாதம். அவற்றை நாம் பின்னால் பேசுகிற போது விரிவாக பேசலாம்.

துறவிகள் பற்றி அவர் சொல்கிற போது, "செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலா கார்"  என்று சொல்கிறார். அரிய செயல்களை துறவியர் செய்வர். அத்தகைய அரிய செயல்களை எளிமையானவர், சாதாரணமானவர் செய்ய மாட்டார். ஏனென்றால் அரிய செயல்களை ஏன் துறவியால் செய்ய முடிகிறது என்று பார்க்கிற போது துறவிகள் எதுவும் செய்வதில்லை.  உண்மையிலேயே துறவிகள் எதுவும் செய்வதில்லை. வெறுமனே காத்திருப்பதும் பண்பாக, அருளாக ஒன்றை அணுகுவது மட்டுமே துறவிகளினுடைய செயல்பாட்டு நிலை. ஆக இவர்களை சொல்கிறபோது அரிய செயல்களை செயல்களை செய்பவர் என்று வள்ளுவர் கூறுவது கவனத்திற்குரியது.

துறவிகள் அமைதியாகவும் வழக்கு மொழியில் சொல்வதென்றால் சும்மா இருப்பது. சும்மா இருப்பது அரிய செயல்களாக சமூகத்திற்கு பார்க்கப்படுகிறது. நீத்தார் பெருமையை நாம் படிக்கிற போது சமூகத்தில் இருக்கிற வழக்கத்தை நேர் எதிரான திசையில் வள்ளுவர் அணுகுகிறார் என்கிற புரிதலோடு படிக்க வேண்டி இருக்கிறது. அரிய செயல்களை துறவியர் செய்வர் என்றவுடன் அவர் தண்ணீரில் நடப்பார். தீயில் உள்ளே சென்று வெளியில் வருவார் என்கிற கதைகள் எல்லாம் பொருள் கொள்வதற்கு இல்லை.

Sunday, June 23, 2024

நீத்தார் பெருமை - பகுதி 4 - சிவ.கதிரவன்

                                                                                 நீத்தார் பெருமை



 துறவை மேற்க்கொள்கிற தரமிக்க மனிதர்களை துறவிகள் என்று, நீத்தார் என்று பெருமை செய்கிறார். நூல்கள் எல்லாமும் இப்படிப்பட்ட துறவிகளை பெருமையாக பேசுகின்றன என்று தம் செய்யுளில் சொல்கிறார்.

உலகில் இருக்கிற மனிதர்களினுடைய பெருமை, உலகில் இருக்கிற மனிதர்களினுடைய இறப்பு என்று ஒரு ஆய்வு குறிப்பு அல்லது ஒரு பட்டியல் தயார் செய்தோம் என்றால் இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து எவ்வளவு மனிதர்கள் பிறந்து இறந்திருப்பார்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம் என்றால்  அந்த எண்ணிக்கை எவ்வளவு இருக்குமோ அவ்வளவு பெருமைகளை துறவிகள் கொண்டிருப்பர் என்று அதன் மதிப்பை அவ்வளவு உயர்வாக சொல்கிறார். இதில் ஒரு அழகான உவமை இருக்கிறது. துறவிகளினுடைய பெருமையை இறந்தவர்களினுடைய எண்ணிக்கைக்கு ஒப்பாக வள்ளுவர் சொல்கிறார். நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தில் "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று"  என்று ஒரு செய்யுள் இருக்கிறது. இந்த செய்யுளில் வள்ளுவர் கூறுகிற உவமை மிக முக்கியமானது. துறந்தாரின் பெருமையை இறந்தார் கொண்டு வள்ளுவர் கூறுவதற்கு காரணம் இந்த மனம் வாழ்வதிலேயே, கொண்டாட்டமாக கழிவதிலேயே பெருமையாக, உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருக்கும். இந்த மனம் என்று நான் சொல்கிற பொருள் அவசரம் நிறைந்த காரண காரிய அறிவு இல்லாத பரபரப்பான மேலோட்டமான மனநிலை. இந்த மேலோட்டமான மனநிலைக்கு வாழ்வது என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்வது, வாழ்வது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் அப்படி ஒரு குணம் உண்டு.

தத்துவவாதிகள் மனதை மனம் என்றும் புத்தி என்றும் பிரித்து சொல்வார்கள். புத்தி என்பது அடிப்படையாக இருப்பது. மனம் என்பது அலைபாய்த்து கொண்டிருப்பது. ஆக, அலைபாய்ந்து கொண்டிருக்கிற மனம் வாழ்வது என்பது என்னவென்று தெரியாமலேயே வாழ்வது வாழ்வது என்று அலை பாய்ந்து கொண்டிருக்கிற சூழலில் மனதிற்கு பதற்றம் தரும் வகையாக மனதினுடைய அறியாமையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் முறையாக, மன அதிர்ச்சியின் பொருட்டு துறந்தாரினுடைய பெருமையை இறந்தாரின் எண்ணிக்கை கொண்டு வள்ளுவர் முன் வைக்கிறார். இறப்பு என்பதை, மரணம் என்பதை, நிலையாமை என்பதை மனித மனதால் கொள்ள முடியாது. முன்பே சொன்னது போல மேலோட்டமான மனம், அவசரமான மனம் மரணம் குறித்து ஒன்று சந்திக்க நேர்ந்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகும். பெரும் பரபரப்பிற்குள்ளாகும். இந்த பரபரப்பின் பொருட்டு, மரணம் குறித்து எந்த ஒன்றையும் பார்க்கவோ, படிக்கவோ, ஆய்வு செய்யவோ இந்த மனதால் முடியாது. மனம் அஞ்சிய ஒரு பேசும் பொருள் மரணம்.  ஆக இந்த வாழ்வு என்றால் என்னவென்று தெரியாத இந்த மேலோட்டமான மனதின் அவசரத்திற்கு இறந்தாரின் எண்ணிக்கையைக் கொண்டு அல்லது அப்படி ஒரு உவமையைக் கொண்டு துறந்தாரின் பெருமையை சொல்வதின் வழியாக வள்ளுவர் பாடம் புகட்டுகிறார். அது என்ன பாடம் என்றால் மரணம் என்றவுடன் மனதிற்கு பதட்டம் வருகிறது. ஆனால் துறந்தாருக்கு, துறவிகளுக்கு அவர்கள் உயிரை பின்பற்றி நடப்பவர்கள். அவர்கள் என்ற ஒன்றையும் பற்றி கொள்ளாதவர்கள். தன் உடல்கள் உட்பட, உடைமைகள் உட்பட, உறவுகள் உட்பட எவற்றையும் பற்றி கொள்ளாத  நிலைப்பாடு உள்ளவர்கள். அவர்களுக்கு உயிர் மட்டுமே கவனத்திற்குரியது. அவர்களது கோட்பாடுகளில் உயிர்களுக்கு மரணம் இல்லை. உயிர்களுக்கு பிறப்பும் இல்லை. உயிர் என்பது நித்தியமானது. மற்ற எல்லாமும் மாறக்கூடியது.

Saturday, June 22, 2024

நீத்தார் பெருமை - பகுதி 3 - சிவ.கதிரவன்

 

நீத்தார் பெருமை 



நிறைவாக நீங்கள் ஒரு உணவை உண்ட பின்பு, நிறைவாக நீங்கள் ஒரு  உணவை நீங்கள் எடுத்துக்கொண்ட பின்பு அந்த உணவின் மீது நாம் நிறைவாக உண்டோம் என்று உணர்வு ஏற்படுகிற போது மீண்டும் மீண்டும் அந்த உணவை கட்டாயப்படுத்தி உங்களுக்கு ஒருவர் ஊட்டி விட முடியாது. நீங்கள் அதன் மீது போதுமான நிறைவுத் தன்மையோடு இருக்கிறபோது அதன் மீது உங்களுக்கு இருக்கிற பற்று மெது மெதுவாக விலகிச் செல்வதை நீங்கள் பார்க்க முடியும். அதுதான் துறவு. உங்கள் அனுபவம் நிரம்பி இருக்கிற போது எல்லாவற்றின் மீதும் எல்லா பொருள்களின் மீதும் உங்களை சுற்றி இருக்கிற எல்லா உறவுகளின் மீதும் உங்கள் அனுபவத்தினுடைய அறிவின் பொருட்டு, உங்கள் அனுபவத்தினுடைய நிதானத்தின் பொருட்டு நீங்கள் வைத்திருக்கிற பற்றான செயல்பாடுகள், நீங்கள் வைத்திருக்கிற பற்றுக்கொண்ட  வினையாற்றும் முறை எல்லாமும் மெதுமெதுவாக நகர்ந்து அமைதி நிலைக்கு செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அதற்கு பெயர் துறவு. துறவு என்பது அப்படியானது தான்.

நன்றாக ஒருவர் வாழ்வை நிறைவாக வாழ்ந்திருக்கிறார்.  இந்த வாழ்வில் தமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில்  தவறவிடாமல் எல்லாவற்றையும் நிறைவாக பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார் என்றால் அந்த வாழ்க்கை முறையில் அவர் பெற்றிருக்கிற அனுபவம் அந்த வாழ்க்கைக்கு டே இருக்கிற எல்லாவற்றின் மீதும் எல்லா செயல்பாடுகளின் மீதும் ஒரு நிறைவை அவருக்கு கொடுத்திருக்கும். ஒரு அறிவை அவருக்கு கொடுத்திருக்கும். இது அவரை துறவியாக மாற்றி இருக்கும். ஆக, துறவு என்பது நீங்கள் முயற்சிப்பது அல்ல. உங்களுக்குள் நிகழ்வது.

சிறிய குழந்தையாக இருக்கிற ஒருவர் ஒரு வேலையை செய்கிறார். உதாரணமாக வீட்டில் இருக்கிற ஒரு குழந்தை ஒரு விளையாட்டு பொருளை உருட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு விளையாடுகிறது. தொடர்ந்து விளையாடி அந்த பொருளுக்கும் அதற்குமாக இருக்கிற உறவை பலப்படுத்திக் கொள்கிறது. அந்த பொருளில் அந்த குழந்தை நிறைவு கொள்கிறது. அந்த குழந்தை பின்னாளில் வளர்ந்து நிற்கிற போது அந்த பொருளோடு விளையாடுகிற இன்னொரு குழந்தையை பார்க்கிற போது அந்த குழந்தை விளையாடுகிற விளையாட்டுக்களை அது உருட்டி எழுப்புகிற சத்தங்களை தாம் குழந்தையாக இருந்த போது முழுமையாக நிறைவாக விளையாடிய ஒருவரால் மிகச் சரியான புரிதலோடு பார்க்க முடியும். இப்போது அவர் வளர்ந்திருக்கிறார்.  நிறைவான விளையாட்டிலிருந்து விடுபட்டு இருக்கிறார். வேறொரு அதை பயன்படுத்தி விளையாடுகிறார் என்கிற நிலையில் அதை பார்க்கிறபோது இந்தக் குழந்தையும் நிறைவாக விளையாடுகிற போது சத்தங்களை நிறுத்திக் கொள்ளும் என்கிற புரிதலோடு அவர் அந்த குழந்தை மீது அன்பாகவும் அருளாகவும் காத்திருப்பார். இந்த குழந்தை எழுப்புகிற சத்தத்தின் பொருட்டு அந்த குழந்தை மீது எதிர்வினை செய்யமாட்டார்.

Friday, June 21, 2024

நீத்தார் பெருமை - பகுதி 2 - சிவ.கதிரவன்

 

                                                     நீத்தார் பெருமை



நான் இன்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட புண்ணிய தளத்திற்கு செல்கிறேன். அங்கு புண்ணிய  நீராடி முடித்தவுடன் நான் இந்த உணவை துறந்து விடுகிறேன். இன்றிலிருந்து இந்த உணவை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். இந்த உணவை பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிற துறவு சொற்கள் சமூகத்தில் உண்டு. குறிப்பாக காசியில், இராமேஸ்வரத்தில் சென்று இன்றிலிருந்து உருளைக்கிழங்கை சாப்பிட மாட்டேன். பாகற்காயை சாப்பிட மாட்டேன். நான் அவற்றைத் துறந்து விட்டேன் என்று துறக்கிற துறவு என்பது துறவாகுமா? இந்த துறவை பற்றி தான் நீத்தார் பெருமையில் வள்ளுவர் பேசுகிறாரா என்றெல்லாம் பேசிp பார்ப்பதற்காக இந்த உரையாடலை செய்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் சமூகத்தில் நோன்பு நோற்று இருக்கிற இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகிற நம்பிக்கையாளர்கள் நோன்பு துறப்பு என்கிற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். நோன்பு காலங்களில் நோன்பு துறக்கிற நேரம் என்று ஒரு நேரத்தை துறப்பு நேரமாக வைத்திருக்கிறார்கள். நோன்பு நோற்று இருக்கிற அந்தக் குறிப்பிட்ட நேரத்தை நிறைவு செய்யும் முகமாக அவர்கள் நோன்பை துறந்து, உணவை எடுத்துக்கொள்கிற நேரமாக குறிப்பிடும் வண்ணம் நோன்பு துறப்பு என்று ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய செயல்பாடு துறப்பு ஆகுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையிலேயே துறப்பு, துறவு, துறவி என்கிற சொல்லிற்கு பின்னால் இருக்கிற மெய்யான பொருள் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆக, துறவு என்பது நான் மேற்சொன்ன வகையிலேயே அமைந்திருக்கிறதா என்றால் அவ்வளவுதான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் துறவு என்பது அப்படியானது அல்ல. வள்ளுவரினுடைய அறிமுகத்தில் வள்ளுவர் துறவியர் பற்றி அறிமுகம் செய்கிற போது அவர்களுக்கு வணக்கம் சொல்கிற முகமாகவும் அவர்களுக்கு புகழ் செலுத்தும் முகமாகவும் அவர்களை போற்றும் முகமாகவும் பாடல்களை வடிவமைக்கிறார்.

Thursday, June 20, 2024

நீத்தார் பெருமை - பகுதி 1 - சிவ.கதிரவன்

 

நீத்தார் பெருமை   

www.swasthammadurai.com

       

திருக்குறளினுடைய உரையாடலில் தொடர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிற அதிகார வரிசையில் தற்போது நீத்தார் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த உரையாடலில் நீத்தார் பெருமைக்காக நாம் எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சம் கூடுதல் காலம் தான். ஏனென்றால் நீத்தார் பெருமை குறித்து நாம் பேசுவதற்கு ஒரு தயக்கமும் ஒரு அச்சமும்  இருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அது என்ன காரணம் என்றால் நீத்தார் என்பவர் யார் என்று  உரையாசிரியரினுடைய  உரையைப் படிக்கிற போது மிகுந்த வியப்புக்குரியதாக இருக்கிறது. யாரைக் குறிப்பிட்டு நீத்தார் என்று வள்ளுவர் பெருந்தகை உரை செய்கிறார். அதிகாரம் படைக்கிறார் என்ற வியப்பும் வினாவும் ஒருபுறம். அதேபோலவே இன்று நீத்தார் பெருமைக்கு பொருத்தமாக இருக்கிற மனிதர்களை நாம் எங்கிருந்து காண்பது? எவ்வாறு பொருத்தி பேசுவது? என்றெல்லாம் கூட நமக்கு பெரிய யோசனை, சிந்தனை வந்து கொண்டே இருந்தது. அந்த வகையிலேயே நாம் கொஞ்சம் துல்லியமான செயல்பாடாக இருக்கிற,  வடிவமாக இருக்கிற பெருமைகளை  துறவு பூண்டோரின் பெருமையாக  சுருக்கி விடாமல், நான் துறவு பூண்டோர் என்று அதற்குரிய விரிவான செய்தியை நான் சொல்கிறேன். ஏனென்றால் துறவு, துறவிகள் என்பதற்கு சமூகத்தில் சமகாலத்தில் வேறொரு வடிவம் இருக்கிறது. இந்த வடிவத்தின் பார்பட்டு துறவையும் துறவிகளையும் நாம் குறிப்பிட்டு அவர்களே  நீத்தார் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று நாம் பேசினோம் என்றால் அந்த உரையாடலில் நமக்கு வேறொரு குழப்பம் வந்துவிடும் என்கிற அச்சமெல்லாம் கூட நீத்தார் பெருமையை பேசுவதற்கு ஒரு காலத்தை எடுத்துக் கொள்ளும்படி செய்து விட்டது.

நண்பர்களே நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்திற்குள் நாம் செல்கிறபோது அந்த அதிகாரத்தில் நமக்கு நீத்தார் என்பவர் யார்? அவரின் குண நலன்கள், பண்புகள், வெளிப்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் அவசியமாகிறது.

வள்ளுவரின் வார்த்தையின்படி,  நீத்தார் என்பது அல்லது நீத்தார் என்கிற சொல்லின் பொருள் என்பது துறவியர் என்று உரையாசிரியர்களால், மொழி வல்லுனர்களால் முன்வைக்கப்படுகின்றன. அறிவு மிகுந்த உரையாசிரியர்களினுடைய மூல உரையை, பொழிப்புரையை படிக்கிற போது துறவியரின் பெருமை என்கிற அடிப்படையில் நீத்தார் பெருமையை படிக்கிற போது இன்றைய வாழ்விற்கு இன்னும் நெருக்கமாக பொருத்தி சொல்ல வேண்டுமென்று ஒரு  சிந்தனை இருந்து கொண்டே இருக்கிறது என்னுள். அந்த வகையிலேயே நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தில் நாம் படிக்கிற போது நீத்தார் என்பவர் யார் என்பது குறித்து ஒரு தெளிவான புரிதலை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

Sunday, June 16, 2024

திருக்குறள் வாழ்வியல் - பாயிரம் - பகுதி 4 // சிவ.கதிரவன்

                                                                 பாயிரம்

தொடர்ந்து நீத்தார் பெருமை. நீத்தார்  பெருமை என்று சொல்கிற போது தொல்காப்பியம் நீத்தார் என்று குறிப்பிடுவது இந்த வாழ்வை செம்மையாக வாழ்ந்தவர்கள் என்ற குறிப்பை தொல்காப்பியம் இலக்கணமாக வைத்திருக்கிறது.   

கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீர்த்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் இந்த நான்கு அதிகாரங்களை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று சொன்னால் நீங்கள் வாழ்வில்  செம்மையான வாழ்வியலை வாழ்வீர்கள் என்பதில் ஐயமில்லை என்பதற்காகத்தான் இந்த திருக்குறளை நாம் தொடர்ந்து  பேசிக் கொண்டிருக்கிறோம். 

அறம் என்றால் இன்றைக்கு என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. அதில் ஒரு பாட்டு சொல்கிறார் "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்" 

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்.

அழுக்காறு என்பது பொறாமை. பொறாமை என்பது என்ன? பொறுத்துக் கொள்ளாமை. என்ன பொறுத்துக் கொள்ளாமை? நமக்கு ஏற்படுகிற நம்மால் தாங்க முடியாத ஒன்று நமக்கு நிகழ்கிறது என்றால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஓரிடத்தில் ஒருவர் கிள்ளுகிறார்.  அழுத்துகிறார். உங்களுக்கு காயம் ஏற்படுத்துகிறார். நீங்கள் தாங்கிக் கொள்வதை விடவும் வலியாக ஒன்றை அதிகமாக தருகிறார் என்றால் அந்த நிகழ்வை, அந்த அதிர்வை, அந்த வலியை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது உங்களுக்கு நடக்கிறது. இது பொறாமையல்ல.

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...