Tuesday, November 28, 2023

மிர்தாதின் புத்தகம் - மிர்தாதின் புத்தகம் பற்றிய புரிதல் - பகுதி 1// சிவ.கதிரவன்

 

மிர்தாதின் புத்தகம் பற்றிய புரிதல்

மிர்தாதின் புத்தகம் குறித்து உரையாடுவதில் ஒரு தயக்கமான, மெய்யியல் புரிதலற்ற தன்மையோடு நான் இப்போது உணர்கிறேன். மிர்தாதின் புத்தகம் ஒவ்வொரு முறை வாசிக்கிற போதும் மெய்யியலினுடைய உட்சபட்ச வரையறையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. முதல் முறை படிக்கிற போது ஏற்பட்ட மெய்யியல் புரிதல் என்பது மீண்டும் ஒருமுறை படிக்கிற போது பொருத்தமாக அமைவதில்லை. மெய்யியல் தேடுகிற ஒவ்வொருவரையும் இத்தகைய எண்ணம் எழுவதற்கு உட்படுத்தி இருக்கும் இத்தகைய மனோபாவம் உருவாவதற்கு காரணமாய் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

மிர்தாதின் புத்தகம் அப்படியான ஒரு மெய்யியல் சாரம் நிரம்பி தழும்புகிற, பொங்கி வழிகிற கருத்து கோப்பையாக, மெய்யியல் கோப்பையாக இருக்கிறது என்பதை நான் தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருக்கிறேன். ஒரு கதை போல், ஒரு பெரும் நாவல் போல் உருவாகிற, உருவாக்கப்பட்டிருக்கிற இந்த புத்தகம் ஒரு மலைச்சரிவில் துவங்குகிறது.

மிர்தாதின் புத்தகத்தினுடைய தொடர் உரையாடலை கேட்டுக் கொண்டிருக்கிற பலருக்கும் இது தெரிந்திருக்கும். இந்த புத்தகம் ஒரு மலைச்சரிவில் தன் பயணத்தை துவங்குகிற ஒரு எளிய இளைஞனின் அறிமுகத்தோடு துவங்குகிறது. அந்த எளிய இளைஞன் தொடர்ந்து அந்த மலைப்பாங்கான இடத்தில் தன் பயணத்தை மேற்கொள்கிறார். அதில் அவருக்கு ஏற்படுகிற பல்வேறு வகையான அனுபவங்களை பதிவு செய்கிறார். அந்த அனுபவங்கள் புத்தகத்தில் காணக் கிடைக்கிறது. முடிவாக தன் வாழ்வில் சந்தித்திராத, முன்பே பலரும் எச்சரித்த பல்வேறு வகையான துயரங்களையும் பொருள் சார்ந்த லவ்கீகம் சார்ந்த சங்கடங்களையும் கடந்த பின்பு அந்த இளைஞன் ஒரு பெரும் பள்ளத்தாக்கில் தூக்கி எறியப்படுகிறான். பின்பு அவர் விழித்துப் பார்க்கையில் அவர் தேடி வந்த மடாலயத்தின் வாசலில் கண் விழிப்பு நடக்கிறது. இந்த மடாலயத்தின் வாசலில் அவருக்காக காத்திருந்த ஒரு முதியவர், அந்த மடாலயத்தை காவல் காத்துக் கொண்டிருந்தவர் அந்த இளைஞனை எழுப்பி தாம் காத்திருந்த மிர்தாதின் புத்தகதை அவர் கையில் ஒப்படைக்கிறார். வாழ்நாளின் கடமைக்காக தாம் காத்திருந்ததாக மிர்தாத்தோடு அவர் புத்தகத்தை அறிமுகம் செய்து தம்மையும் அறிமுகம் செய்து மிர்தாத்தையும் அறிமுகம் செய்து கல்லாகி போகிறார் என்று கதை நகர்கிறது. இந்த புத்தகம் முழுவதும் உங்களது மெய்யியல் ஆர்வம் குறித்து உங்கள் மெய்யியல் ஆர்வத்தில் உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது, தேடல் இருக்கிறது என்பது குறித்து மதிப்பளிக்கூடியதாக இருந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் மெய்யியலை தேடுவது என்பது நீங்கள் வாழ்கிற சமூகத்தில் விதவிதமான அளவுகோலில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மெய்யியல் கேளிக்கையாக நிகழ்வதும் நடக்கிறது. மெய்யியல் விவாதப் பொருளாக நடக்கிறது. மெய்யியல் மறை பின்பற்றுதலாக நடக்கிறது. மெய்யியல் மெய்யியல் தேடலாக நடக்கிறது. இப்படி விதவிதமான மெய்யியல் குறித்த அணுகுமுறைகள் நிரம்பி கிடக்கிற சமூகத்தில் மெய்யாகவே மெய்யியல் குறித்த ஆழமான அக்கறையும் தொடர்ந்த தேடலும் ஒருவருக்கு எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் மிர்தாதின் புத்தகம் தருகிற முழுமையான தரிசனத்தை அவர் ஏற்றுக் கொள்ள முடியும் கண்டுகொள்ள முடியும் என்று எனக்கு தோன்றுகிறது.

மெய்யியலை ஒரு பிரதான, முதன்மையான நோக்கமாக பேசத் தொடங்குகிற பலரும் சொந்த வாழ்வின் நெருக்கடிகளில் பயணிக்கிற போது தொடர்ந்து மெய்யியலில்  அவர்களால் பயணிக்க முடிவதில்லை. நவீன இலக்கியங்களில் இருத்தலியல் கோட்பாடு என்று ஒரு இலக்கிய அணுகுமுறை உண்டு.

ஒரு கதையை, ஒரு பெருங்கதையை உருவாக்குகிற போது அந்தக் கதையினுடைய நாயகர்கள் பெரும்பாலும் மெய்யியல் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தாம் பின்பற்றுகிற மெய்யியலை இருத்தலியல் கோட்பாடு என்று வரையறுப்பார்கள். இருத்தலியல் என்பது இந்த உலகத்தினுடைய மைய இருப்பைப் பற்றி பேசுகிற ஒரு கோட்பாடு என்ற ஒரு வரையறையும் அதில் உள்ளடக்கமாக இருக்கும். இருத்தலியல் பேசுகிற அந்த கதையின் முதன்மையான கதாபாத்திரங்கள் அந்த கதையினுடைய எல்லா அம்சங்களிலும் இருத்தலியல் சார்புள்ள, இருத்தலியலை பின்பற்றுகிற நபராக நகர்ந்து கொண்டே இருக்கிற கதையம்சம், வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய கதை அம்சம், வடிவமைப்பு பெரும்பாலான நேரங்களில் புனைவாகவும் சில நேரங்களில் நிஜமாகவும் கூட இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த கதையின் வழியாக இந்த கதாபாத்திரம் இந்த சமூகத்திற்கு வழங்குகிற கருத்தாக்கங்கள் இருத்தலியல் கோட்பாடினுடைய சாராம்சத்தை சார்ந்தவையாக இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த இருத்தலியல் பேசுகிற, இருத்தலியலை பின்பற்றுகிற கதாபாத்திரங்கள் வாழ்வில்  இளமைக்காலத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆற்றல் மிகுந்திருக்கிற நேரங்களில் அவர்கள் இருத்தலியலை இறுகப்பற்றிக் கொண்டு நிலைத்து நிற்பவர்களாக இருப்பதை இந்த கதையின் வழியாக பார்க்க முடிகிறது, பார்த்திருக்கிறோம். இன்றும் அத்தகைய பெருங்கதைகள் வடிவமைப்பில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த இருத்தலியலை மெய்யியலாக பின்பற்றுகிற அந்தக் கதையின் முதன்மை கதாபாத்திரம் தன் வாழ்வின் ஆற்றல் குறையத் துவங்குகிற போது, தடுமாறத் துவங்குகிற போது தனிமையை உணரத் துவங்குகிறார்கள். தனிமைக்கு பின்பு பெரும் சோகத்தை உணர்கிறார்கள். சோகத்திற்குள் தம்மை உட்படுத்திக் கொள்கிறார்கள். எதிர்காலம் குறித்த, கடந்த காலம் குறித்த அனுபவங்களும் அச்சங்களும் அவர்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இருத்தலியல் பேசுகிற பலரும் தற்கொலை செய்து இறந்து போவதாக இருத்தலியல் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இருத்தலியல் பேசுபவர்கள் சமூகத்திலிருந்து முழுவதுமாக முற்றிலுமாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் என்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்கள் இத்தகைய கதைகள் வழியாக பெருங்கதைகள் வழியாக. இவர்கள் இருத்தலியல் என்று கருதுகிற ஒன்று மெய்யியல் கோட்பாடாக அவர்கள் நினைத்துக் கொண்டது. இப்படி மெய்யியல் கோட்பாடு பேசுகிற பலரும் மெய்யியல் கோட்பாடை தனிமையாக, சமூகத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட ஒன்றாக, சமூகத்திற்கும் தமக்கும் தொடர்பில்லாத ஒன்றாக, தம்மை தனித்துக் கொள்கிற, துண்டித்துக் கொள்கிற ஒன்றாக இருக்கக்கூடிய ஒன்றுதான் மெய்யியல் கோட்பாடு என்ற பார்வை சமூகத்தில் இருக்கிறது. இந்தப் பார்வை குறித்த விவாதங்கள் பேசப்படுகிற போது இவை சரி என்பது போன்ற பெரும்பாலான வாதங்கள் முன் வைக்கப்படுகிறது. மிக முக்கியமான கருத்தாக நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது இதைத்தான். இத்தகைய சமூக உரையாடல் வடிவங்களில் மெய்யியல் கோட்பாடுகள் என்பது சமூகத்திற்கு உள்ளே இருப்பதா, சமூகத்தை விட்டு அப்புறப்பட்டு நிற்பதா, துண்டிக்கப்பட்டு நிற்பதா என்பது குறித்த தெளிந்த பார்வை ஒன்று இல்லாமல் உங்களால் மிர்தாத் போன்றதொரு மெய்யியல் கோட்பாட்டை, மெய்யியல் கருத்து பெட்டகத்தை திறந்து பார்க்க வாய்ப்பே இல்லை.

மிர்தாத் போன்றதொரு மெய்யியல் கோட்பாடு என்பது உங்களுக்கு அறிமுகமாகி இருக்கிற இருத்தலியல் கதாபாத்திரங்கள் போன்ற வடிவத்தில் கை கொள்வீர்கள் என்று சொன்னால் அது நிச்சயமாக தனிமையை, சமூக துண்டாட்டத்தை, முடிவாக சுய இரக்கத்தை என்று உங்களை அழைத்துக் கொண்டே செல்லும். ஆனால் மெய்யியல் என்பது அத்தகைய தன்மை கொண்டது அல்ல.

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருக்கிற இறை உணர்வை, ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருக்கிற  மேன்மையான நிலையை, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் இருக்கிற பேசப்படாத, பேச முடியாத பேசு பொருளை மையமாகக் கொண்டு  இயங்கிக் கொண்டிருக்கிறது, இயக்கிக் கொண்டிருப்பது.  இத்தகைய புரிதலோடு நாம் நகர வேண்டும் என்பது சாத்தியமில்லை என்றாலும் இத்தகைய ஒன்று இருக்கிறது என்கிற தன்மையில் மெய்யியலை அணுகுகிற ஒருவரால் மட்டுமே மெய்யியலினுடைய மையப் பகுதியை ருசிக்கவோ, காணவோ முடியும் அதற்கு அதிகமான சாத்தியம் இருக்கிறது. இத்தகைய மெய்யியல் வழியாக சமூகத்திற்கு இன்னும் நெருக்கமாக தனி மனிதனினுடைய மேன்மை இன்னும் மேன்மையாக, இன்னும் சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும். மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற சாராம்சத்தில், என்கிற உள்ளடக்கத்தின் வழியாக மட்டுமே மெய்யியலை புரிந்து கொள்பவர்கள் மெய்யியலை தேடுபவர்கள் மெய்யியல் கோட்பாடுகளை கேளிக்கை போல் அல்லாமல் சாதாரணமான பொழுதுபோக்கிற்குறிய உரையாடலாக அல்லாமல், மெய்யியலுக்குறிய மதிப்போடு பெரும் மரியாதையோடு அணுகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படித்தான் அணுகப்பட்ட மெய்யியல் கோட்பாடுகள் தனி மனிதனுக்கு விடுதலையும் அளித்திருக்கின்றன.

இன்னும் நுட்பமாக ஜென் உள்ளிட்ட, ஜென் போன்றதொரு கிழக்கத்திய மெய்யியல் மரபுகளில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு மெய்யியல் கோட்பாடு என்கிற வரையறைகள் என்று இருக்கின்றன.

மெய்யியல் கோட்பாடுகளை பின்பற்றி ஒரு மனிதன் பின்பற்றுதலின் வழியாக மெய்யியல் குறித்த விடுதலையை, மெய்யியல் குறித்த பெரும் புரிதலை பெற்றுக்கொள்ள முடியாது என்று ஜென் தத்துவ மரபு பரிந்துரைக்கிறது. ஜென் தத்துவ மரபு அப்படித்தான் வழிகாட்டுகிறது. ஆனாலும் மெய்யியல் தேடுகிறவருக்கு முதலில் துவங்குகிற ஒரு எரிபொருள் தேவைப்படுகிறது. துவங்க வேண்டிய அவசியத்தின் மீது நம்பிக்கை  கொள்வதற்கு ஒரு இலக்கண குறிப்பு தேவைப்படுகிறது. அத்தகைய இலக்கண குறிப்புகளாக மெய்யியல் கோட்பாடுகளும் மெய்யியல் நூல்களும் அவரை வரவேற்க தயாராக இருக்கின்றன. இத்தகைய வரவேற்பிற்குள் அவர் செல்கிற போது அவர் எவ்வாறு நபராக இருக்க வேண்டும் என்று ஒரு குறிப்பு எழுதினால் அவர் மெய்யாகவே மெய்யியலை தேடுபவராக இருக்க வேண்டும். அவர் பொழுதுபோக்கிற்காக மெய்யியலுக்கு உட்படாதவராக இருக்க வேண்டும். தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும் தன்முனைப்பை வளர்த்துக் கொள்வதற்காகவும் மெய்யியலை பேசுகிறவர் மெய்யியல் கோட்பாடை முழுமையாக குறைந்தபட்சம் ஒரு வரியேனும் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லாதவராக மாறி போகிறார். அத்தகைய தேடல் உள்ள ஒரு மனிதராக மிர்தாத்தை  தேடி செல்கிற அந்த இளைஞன் மலையில் இருந்து தன்னுடைய மிர்தாத் வாசிப்பை துவங்குகிறார்.  அப்படித்தான் அவரும் மிர்தாத்தும் சந்திக்கிறார்கள். மிர்தாத் மிர்தாதின் புத்தகம் என்கிற நூலின் வழியாக, மிர்தாதின் புத்தகம் என்கிற தொகுப்பின் வழியாக அந்த இளைஞனோடு பேசத் துவங்குகிறார்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...