Pages

Thursday, February 1, 2024

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 5 // சிவ.கதிரவன்

                                    வான் சிறப்பு 

www.swasthammadurai.com

அடுத்த குறட்பா இன்னும் வேறொரு தளத்தில் உணவை பற்றி பேசுகிறது. முதலில் உலக உயிர்கள் அனைத்திற்கும் பேசியாயிற்று. பின்பு மனிதனினுடைய உணவு உற்பத்தி முறையைப் பற்றி பேசியாயிற்று. இப்போது உணவு வேறு யாருக்கு என்று பார்க்கிற போது மனிதனைச் சுற்றி வளர்கிற ஜீவராசிகள், மனிதனை நம்பி வளர்கிற ஜீவராசிகள்  என்ற வகையில் ஒரு குறளை வைக்கிறார்.

மழை மேலிருந்து வருகிறது. மேலிருந்து வருகிற போது மழையினுடைய வருகை பொய்யாகப் போகுமென்றால் இந்த உலகில் ஒரு புல் கூட (அவர் பசும் புல் என்று குறிப்பிடுகிறார்.) இந்த பசும் புல் என்கிற சொல்லை பசுவின் புல் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் தான் நான் மனிதரோடு வளர்கிற ஜீவரசிகள் என்று ஒரு சொல் குறிப்பை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். பசும் புல் என்பதை வேறொரு பொருளிலும் நாம் இளமையான பசும் புல் என்றால் பசுமையான புல் என்றும் நாம் வைத்துக்கொள்ள முடியும். ஆக பசும் புல்லினுடைய நுனியை கூட நாம் பார்க்க முடியாது என்று அந்த குறளிலே வைக்கிறார். மேலிருந்து மழை நீர் வரவில்லை என்றால் வானிலிருந்து மழை நீர் வரவில்லை என்றால் “துளி வீழின்” என்கிற ஒரு சொல்லை, ஒரு துளி கூட மேலிருந்து வரவில்லை என்றால் கீழே தரையிலேயே பசுவின் புல்லை அல்லது பசுமையான புல்லை நாம் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது வள்ளுவரினுடைய இந்தக் குறளினுடைய பொருள்.

ஆக, இந்த அடுக்கு முறையில் அடுத்து நிலப்பரப்பில் இருக்கிற மனிதனைச் சுற்றி இருக்கிற வேறுவேறு அம்சங்களை பற்றி நாம் வள்ளுவரினுடைய பார்வையில் பார்க்க முடிகிறது.

அடுத்த பாடலில் மேகம் நீரைத் தராவிட்டால் இங்கு கடலும் கூட தன் வளமையை குறைத்துக் கொள்ளும். கடல் எவ்வாறு உற்பத்தி செய்கிறது. கடல் எவ்வாறு சுழற்சியை வைத்து இருக்கிறது என்றெல்லாம் கூட நாம் பார்க்க முடியும். என்ன பார்க்க முடியும் என்றால் மழை எவ்வாறு உற்பத்தி ஆகிறது என்று விஞ்ஞானப் பூர்வமான சில அணுகுமுறையை பார்க்கிறபோது சில செய்திகளை பார்க்கிற போது விஞ்ஞானிகள் ஒரு நீர் சுழற்சி முறையை விளக்கமாக கூறுகிறார்கள். 

ஆக நீர் சுழற்சி முறையில் நீர் உற்பத்திக்கு மழை பெய்ய வேண்டும். பின்பு பரவலாக தேங்கி சேகரிக்கப்பட்டு கடலுக்கு செல்ல வேண்டும். கடல் ஆவியாக வேண்டும். பின்பு மீண்டும் அது மழையாக பெய்யும் என்கிற ஒரு சுழற்சி முறையை கூறுகிறார்கள். இந்த சுழற்சி முறையில் பார்க்கிற போது மழையினுடைய சுழற்சி தடைபடும் என்றால் மேகங்கள் நீரைத் தாங்கி  பொழியாவிட்டால் நெடுங்கடலும் தன் வளத்தை குறைத்து விடும் என்று கடலுக்கும் வளமைக்கும் கடலினுடைய வளமையை மனிதனை சுற்றி இருக்கிற வேறுவேறு அங்கங்களினுடைய வளமையை பேசுகிற ஒரு பொருளில் வள்ளுவர் அந்த பாடலை வைத்திருக்கிறார்.

இப்படி ஒவ்வொன்றாக சொல்கிறபோது மனிதனினுடைய திருவிழாக்கள் அடுத்த பாடலில் அதுதான் வள்ளுவரினுடைய உரையாடல். வானம் வறண்டு விட்டால் இங்கு கடவுளுக்கே வேலை இல்லை என்கிற அளவில் சொல்கிறார். மனிதர்களுடைய  மிகப்பெரும் கொண்டாட்டமாக இருப்பது கடவுள் வழிபாடு. திருவிழாக்கள். ஆக திருவிழாக்களை சிறப்போடு, பூஜைகளோடு, கொண்டாட்டங்களோடு நாம் செய்ய வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக மழையோடு அனுசரித்து இருக்க வேண்டும் என்பது நம்முடைய ஒரு முடிவு, ஒரு யூகம். ஆனால் எதார்த்தமாக என்ன இருக்கிறது என்றால் மழை வருகையினாலேயே இந்த சமூகம் திருவிழாக்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்று வள்ளுவரினுடைய வார்த்தையில் நாம் பார்க்க முடிகிறது.

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு" - வானம் வறண்டு போகும் என்றால் வானத்திலிருந்து நீர்வரத்து இல்லையென்றால் இங்கு வழிபாடும் திருவிழாக்களும் எதுவும் நடக்காது.

உலகில் எந்த வழிபாடும் எந்த திருவிழாக்களும் சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் நிச்சயமாக அதற்கு வானத்தினுடைய, மழையினுடைய பங்களிப்பு முக்கியம் என்று வள்ளுவர்  வகுக்கிறார். 

ஆக, இந்த குறட்பாக்களினுடைய வரிசையை நாம் பார்க்கிறபோது ஒரு மனித சமூகம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தனி மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படையான கட்டமைப்பை, வரிசை அமைப்பை வள்ளுவர் வரையறுக்கிறார் என்பதை மகிழ்வோடு, ஒரு சிலாகிப்போடு நான் பார்க்கிறேன்.

வான் சிறப்பினுடைய மேன்மையை எவ்வளவு விரிவாக பேசினாலும் தகும் என்பது என்னுடைய அபிப்பிராயம். பெரும் பெரும் அறிஞர்கள் வான் சிறப்பை பற்றி பேசுகிறபோது பரிமேலழகர்  உள்ளிட்ட சமகாலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் பலரும் குறட்பாக்களை விரிவாக, மேன்மையாக, சிலாகிப்பாக பேசுகிற தன்மையோடு நாம் ஒப்பிடுகிற போது இன்னும் சிலாகிப்பாக பேசுவதற்குரிய வாய்ப்பை இந்த குறட்பாக்கள் வைத்திருக்கிறன என்பது பெரு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

  இரண்டாவது அதிகாரத்தில் ஒரு மனிதன் மகிழ்வாக வாழ்வதற்குரிய உணவை இயற்கையோடு இணைத்து, மழையோடு இணைத்து வள்ளுவர் போற்றுகின்ற பாங்கு என்பது ஒருபுறம்.

இந்த மறைநூலை பின்பற்ற வேண்டுமென்றால் நமக்கான உணவு என்பது என்ன என்று சரியான புரிதலை நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் ஒரு பக்கம். இவற்றை ஒப்பிட்டு பார்க்கிற அந்த அறிவு – ‘அறிவுடையார் எல்லாம் உடையார் ‘என்று ஒரு குறள் இருக்கிறது. அறிவுடையார் எல்லாம் உடையார் என்ற குறளினுடைய பொருள் நமக்கு ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்குரிய அறிவு இருக்கும் என்றால் எல்லாமும் நமக்கு கிடைத்து விடுகிறது. எல்லாமும் நம்மால் ரசிக்கவும் ருசிக்கவும் அனுபவிக்கவும் முடிகிற தன்மையை அது நமக்கு வழங்கி விடுகிறது என்கிற பார்வையோடு பார்க்கிற போது வள்ளுவரினுடைய இந்த அணுகுமுறை இப்படியான அணுகுமுறையாக இருக்கிறது என்கிற புரிதல் ஏற்படுகிற போது ஒவ்வொரு குறட்பாவும் நமக்கு பெரு மகிழ்ச்சியை தருகிறது.

                           ...தொடர்ந்து பேசுவொம்...

No comments:

Post a Comment