Pages

Saturday, June 15, 2024

திருக்குறள் வாழ்வியல் - பாயிரம் - பகுதி 3 // சிவ.கதிரவன்

                                                  பாயிரம் 

கடவுள் வாழ்த்து என்பது கடவுளை வாழ்த்துவது என்று ஒரு புறம் வைத்துக் கொண்டாலும் கூட மனிதனின் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதற்கு கடவுளினுடைய பங்களிப்பு என்ன?  கடவுளிடம் பேசுகிற போது வருகிற விளைவு என்ன? என்கிற அடிப்படையில் வள்ளுவர் வகைப்படுத்தி இருந்தார்.

துன்பம் வருகிறது. கலக்கம் வருகிறது. இந்தப் பிறவிப் பெருங்கடலை எவ்வாறு நீந்த போகிறோம். அடுத்து ஜென்மத்தில் என்ன செய்யப் போகிறோம்  என்பதெல்லாம் நமக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்துவிடுங்கள். கடவுளிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கடவுள் கொள்கையை எளிமையாக மனிதனினுடைய தேவையைப் பொருட்டு கடவுளுக்கும் மனிதனுக்குமாக இருக்கிற, மனிதன் எங்கெல்லாம் தடுமாறுகிறான் என்பதை நுணுக்கமாக புரிந்து கொண்டு கடவுள் வாழ்த்தை வள்ளுவர் வைத்திருக்கிறார்.

கடவுளினுடைய தேவை இதுதான் என்று  கடவுள் வாழ்த்தில் அமைந்திருக்கும். அது  எனக்கு பிடித்த அமைப்பு முறை. ஏனென்றால் நீட்சே என்கிற தத்துவ அறிஞர், “கடவுள் இறந்துவிட்டார்” என்று சொல்லுவார். அது ஒரு சோர்வு வெளிப்பாடு அல்லது ஒரு புரிதலின் வெளிப்பாடு. அவருக்கு பதில் உரைத்த ஓஷோ வேறொரு இடத்தில் சொல்லுவார். கடவுள் பிறக்கவே இல்லை.  பிறந்தால் தானே இறப்பதற்கு என்று.   இந்த தத்துவவாதிகள் ஒருபுறம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் கூட மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற தேவை என்ன?  ப்ரடெரிக் ஏங்கல்ஸ் ஒரு இடத்தில் சொல்லுவார், “கடவுளே இத்தனை காலம் மனிதனோடு வாழ்ந்து கொண்டிருப்பதால் கடவுளை நாம் லேசாக  நினைத்து விடக்கூடாது” என்று அவரது புத்தகத்தில், கட்டுரைகளில் சொல்லுவார்  ஏங்கல்ஸ். இப்படி பலரும் கடவுளை பற்றி  பேசுகிறபோது கடவுளினுடைய செயல்பாடு மனிதனிடத்தில் எப்படி இருக்கிறது அல்லது மனிதனுக்கு கடவுள் எங்கெல்லாம்  தேவைப்படுகிறார் என்று குறிப்புணர்ந்து ஒரு அதிகாரத்தை கடவுள் வாழ்த்தில் மனிதனினுடைய மனநிலைக்கு இறங்கி அதுதான் அதற்குள் இருக்கிற ஒரு அழகு. கடவுள் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர் அப்படி கதையெல்லாம் ஒன்று அதில் சொல்லவில்லை. வள்ளுவர் நேராக, “உனக்கு என்ன பிரச்சனை?, எனக்கு நான் நன்றாக படிக்க வேண்டும். படித்து முடித்தவுடன் படித்த பயனை அடைய வேண்டும் . அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?  சரி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நீண்ட காலம் வாழ வேண்டும். என்ன செய்வது? அதற்கும் என்னவென்று பதில் சொல்கிறேன்.  புகழோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? அதுக்கும் பதில் இருக்கிறது. இப்படி ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் கேள்வி வருகிறதோ, ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் யோசனை வருமோ அதை தான் கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் வகைப்படுத்துகிறார்.


அகரம் - நாம் முன்னமே கடவுள் வாழ்த்து பற்றி பேசிய போது நாம் பேசியிருந்தோம். அகரம் என்பது ‘அ’ என்ற ஒலி எல்லாம் எழுத்துக்களுக்கு இருக்கிற மாதிரி என்னுடைய தந்தையார் சொல்கிறபோது நீ அதை இன்னும் அழுத்தி சொல்வில்ல என்று கூறினார்கள். ‘அ’ என்கிற ஒலிக் குறிப்பு உலகதில் இருக்கிற எல்லா மொழிகளில் இருக்கிற மாதிரி கடவுளினுடைய தன்மை இருப்பதாக அதைப் பற்றி இப்போது பேசுவதற்கு தொடர்பில்லை. ஞாபகம் வந்ததினால் சொல்கிறேன். இப்போது கடவுளை பற்றி சொல்கிற போது ஒரு மனிதனினுடைய கடவுள் தேவை என்ன மனிதனினுடைய மனம் எப்படியெல்லாம் சிந்திக்கும்? எப்படியெல்லாம் கடவுளை தேடும் என்று மனுதனினுடைய மனத் தேவை உணர்ந்து கடவுளை பதிவு செய்த ஒரு பெரிய ஆற்றல் மிகுந்த கவிஞர். ஆற்றல் மிகுந்த புலவர். ஆற்றல் மிகுந்த வழிகாட்டி. ஆனால் எப்படி சொன்னாலும் பொருந்தும். உனக்கு என்ன பிரச்னை இன்றைக்கு கடவுளிடம் ஏன் போகிறாய் இன்றைக்கு. நவீன சாமியார்கள் எல்லாம் தொலைத்தொடர்பு சாதனங்களில் தோன்றி உனக்கு பணம் வர வேண்டும் என்றால் என்ன செய்வது? உங்களுக்கு தொழில் நன்றாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?  ஆன்மீகத்தினுடைய உச்சபட்ச நிலைகள் எப்படி இருக்கும் என்கிற இடத்திற்கு இன்று வந்து விட்டார்கள். அதையெல்லாம் வள்ளுவர் 2500, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகத்துல்லியமாக உணர்ந்ததினாலோ என்னவோ கடவுள் வாழ்த்து பகுதியில் பெரும் பெரும் அறிஞர்கள் சொல்வது போல் ஒரு பக்கம் இருந்தாலும் வள்ளுவர் நேரடியாக சொல்கிறார்.  நீடூடி வாழ்வதற்கு என்ன செய்வது அப்படி என்றால் அதற்கும் வழி சொல்கிறார். கடவுள் வாழ்த்தில் பகுதியில்  மூன்றாவது பாடலை படித்து பார்த்தால் சொல்லி இருப்பார் "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்". நீங்கள் நல்ல நிலத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கும்.  நான் நீண்ட காலம் வாழ என்ன செய்வது? அப்படி என்றால் மலர்மிசை  ஏகினான் மானடி சேர்.  நீங்கள்   நிலத்தில் நீண்ட காலம் வாழலாம்.

நிறைய புகழோடு வாழ்வதற்கு என்ன செய்வது? பாவங்கள் இல்லாமல் வாழ்வதற்கு என்ன செய்வது? பிறவிக் கடல் நீந்தி கடந்து போவதற்கு என்ன செய்வது? என்னவெல்லாம் உங்களுக்கு கேள்வி வருகிறதோ, 2500 ஆண்டுகளுக்கு பின்னால் இன்றைக்கும் கூட உங்களுக்கு என்ன கேள்வி வருகிறதோ எல்லா கேள்விகளுக்கும் வள்ளுவர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பதில்  சொல்லி இருப்பதினால் தான் இதை ஒரு வாழ்வியல் நூல்  என்று நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்வதற்கான காரணம். வாழ்வியல் நூல் என்று நான் சாதாரணமான அர்த்தத்தில் சொல்லவில்லை. இது என்னுடைய பார்வை என்றாலும் கூட பெரும் அறிஞர்களினுடைய பார்வை இன்னும் விசாலமாக இருக்கிறது. இதில் என்னுடைய பார்வையை மிக அழுத்தமாக நான் உங்களுக்கு சொல்கிறேன். இது ஒரு வாழ்வியல் நூல் என்று.

உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது.  இன்றைக்கு கடவுளை எதையெல்லாம் கொண்டு தேடுகிறீர்களோ அதை இரகசியமாக ஒரு பட்டியலை போட்டு வாசித்தீர்கள் என்றால் அதற்கெல்லாம் கடவுள் வாழ்த்தில் பாடலை சொல்லி இருக்கிறார். என்ன செய்தால் என்ன செய்ய வேண்டும் என்று. நீங்கள் மூன்றாவது நான்காவது சிந்தனை ஓட்டத்தில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விடலாம். சாதாரணமாக எளிய தொழில் செய்பவராக  இருக்கலாம். உலகம் முழுவதும் விஸ்திரமாக பயணம் செய்து தொழில் செய்பவராக இருக்கலாம். சும்மா இருப்பவராக இருக்கலாம். எந்த துறை சார்ந்தவராகவும் இருக்கலாம். உங்கள் இலக்கு என்ன, வெற்றி என்ன, அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன, எப்போது நீங்கள் கடவுளை அழைப்பீர்கள். அப்போது என்ன பாடல் என்பதை அவர் செய்யுளில் சொல்கிறார்.  அப்படி ஒரு ஆழமான வாழ்வியல் நூல்.

இன்றைக்கு வேறு சில பகுதிகள் பேச வேண்டும் என்று நான் யோசித்தேன். ஆனாலும் கொஞ்சம் கூடுதலாக பாயிரத்தை  பேசலாம் என்று இருந்தது.  அப்படி ஒரு ஆளுமை நமக்கு திருக்குறள் வழியாக வழிகாட்டுகிறார்கள். வாழ்வியல் குறிப்புகளை நமக்குத் தருகிறார்கள். தொடர்ந்து வான் சிறப்பு. வான் சிறப்பு என்று சொன்னவுடன் பிற அறிஞர்களுடைய மேலான கூற்றுகள் ஒருபுறம் இருக்கிறது.

கடவுளுக்குப் பிறகு மனிதனுக்கு என்ன தேவை இருக்கிறது என்றால்  உணவு. வான் சிறப்பு முழுவதும் உணவைப் பற்றி தான் பேசியிருக்கிறார். உங்களுக்கு உணவு கொடுப்பது என்ன, வானம் தான் கொடுக்கிறது. வானம் உணவு தருகிறது. வள்ளுவர் பின்னால் மருந்து என்கிற அதிகாரத்தில் உணவைப் பற்றி சொல்கிறபோது அருந்தியது அற்றது போற்றி உணின் என்கிற பாட்டில் சொல்கிறார். "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்". இது ஒரு விளையாட்டு.  கம்பரினுடைய கம்பராமாயணத்தில் நிறைய விளையாட்டுக்கள் இருப்பது போல இலக்கியத்தில் பேசுபவர்கள் சொல்லுவார்கள். எவ்வளவு பிரமாதமாக இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார் என்று சொல்லுவார்கள் அது உண்மைதான். கம்பராமாயணம் பேசுகிற பெரும் அறிஞர்களுடைய கம்பராமாயண உரையாடல்களையும் சொற்பொழிவுகளையும் கேட்கிறபோது நமக்கே மிகவும் ஆசையாக இருக்கும். அதைக் கேட்க வேண்டும், படிக்க வேண்டும் என்று. அப்படி ஒரு இலக்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவர் நிறைய நுட்பங்களை செய்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள். அப்படியான ஒரு நுட்பத்தை உணவு குறித்து உணவு என்று சொல்லாமல் உணவை தருகிற உணவிற்கு முதன்மையாக இருக்கிற உணவிற்கு அடிப்படையாக இருக்கிறது மழை என்று இரண்டாவது அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லிவிட்டு, அதற்குப் பின்னால் 80, 90 அதிகாரங்களுக்கு பின்னால் உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லுகிற போது “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது” என்ற ஒரு சொல் குறிப்பு அதற்குள் வைக்கிறார். “அருந்தியது அற்றது” அதனுடைய விளக்கம் என்னவென்றால், மருந்து என்பது வேண்டாம்.  யாக்கை என்பது உடம்பு. உடம்பிற்கு மருந்து வேண்டாம். எப்போது? அருந்தியது அற்றது போற்றி உணின். அருந்தியது என்றால் பருகியது. அற்றது என்றால் வெளியே போனது. உங்களை விட்டு களைந்தது. உங்களுக்குள் சென்ற உணவும் உங்களை விட்டு வெளியேறிய உடல் களைப்பும், கழிவுகளும் சென்ற பின்பு என்ன இருக்கிறது, எவ்வாறு இருக்கிறது என்று நீங்கள் புரிந்து கொண்டு உணவை உட்கொள்வீர்கள் என்றால் அருந்தியதையும் அற்றதையும் போற்றி உண்பீர்கள் என்றால் உங்கள் உடலுக்கு மருந்து என்பது வேண்டாம் என்று மருந்து என்று அதிகாரத்தில் வள்ளுவரினுடைய சொல்  கூற்று அது.

இந்த கூற்றிலே ஒரு செய்தியை வள்ளுவர் நாமக்கு சொல்கிறார். மருந்து எந்த உடலுக்கு மருந்து வேண்டாம் என்று பார்க்கிற போது உணவை அருந்துவதாக சொல்கிறார். அருந்துவதாக சொல்லுகிற வள்ளுவர், உணவிற்குரிய அதிகாரங்களை பேசுகிறபோது மழைநீருக்கும் உணவிற்குமாக இருக்கிற நெருக்கத்தை சொல்கிறார்.

வான் சிறப்பு என்ற அதிகாரத்தை படிக்கிறபோது, வான் சிறப்பு என்றவுடன் அறிஞர்கள் சொல்லுகிற பொருளில் ஏகத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது. மழையைப் பற்றி பேசுகிறார். விண்ணைப் பற்றி பேசுகிறார். அதற்குள் இருக்கிற உற்பத்தி முறையைப் பற்றி பேசுகிறார் என்றாலும் கூட எல்லாமும் உணவிற்கு நெருக்கமாக வான்சிறப்பில் வருகிற அதிகாரம் விரிந்து பேசுவது உணவை.

உணவினுடைய வித்தாக இருப்பது மழை.  உணவு அருந்தப்பட வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதினுடைய அழகு இங்கு துவங்குகிறது. இப்படி ஒரு உணவிற்கும் வானிற்கும் மழைக்குமாக இருக்கிற தொடர்பை  பேசுகிற தன்மையோடு வான் சிறப்பு  இருக்கிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment