Pages

Sunday, June 16, 2024

திருக்குறள் வாழ்வியல் - பாயிரம் - பகுதி 4 // சிவ.கதிரவன்

                                                                 பாயிரம்

தொடர்ந்து நீத்தார் பெருமை. நீத்தார்  பெருமை என்று சொல்கிற போது தொல்காப்பியம் நீத்தார் என்று குறிப்பிடுவது இந்த வாழ்வை செம்மையாக வாழ்ந்தவர்கள் என்ற குறிப்பை தொல்காப்பியம் இலக்கணமாக வைத்திருக்கிறது.   

கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீர்த்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் இந்த நான்கு அதிகாரங்களை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று சொன்னால் நீங்கள் வாழ்வில்  செம்மையான வாழ்வியலை வாழ்வீர்கள் என்பதில் ஐயமில்லை என்பதற்காகத்தான் இந்த திருக்குறளை நாம் தொடர்ந்து  பேசிக் கொண்டிருக்கிறோம். 

அறம் என்றால் இன்றைக்கு என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. அதில் ஒரு பாட்டு சொல்கிறார் "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்" 

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்.

அழுக்காறு என்பது பொறாமை. பொறாமை என்பது என்ன? பொறுத்துக் கொள்ளாமை. என்ன பொறுத்துக் கொள்ளாமை? நமக்கு ஏற்படுகிற நம்மால் தாங்க முடியாத ஒன்று நமக்கு நிகழ்கிறது என்றால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஓரிடத்தில் ஒருவர் கிள்ளுகிறார்.  அழுத்துகிறார். உங்களுக்கு காயம் ஏற்படுத்துகிறார். நீங்கள் தாங்கிக் கொள்வதை விடவும் வலியாக ஒன்றை அதிகமாக தருகிறார் என்றால் அந்த நிகழ்வை, அந்த அதிர்வை, அந்த வலியை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது உங்களுக்கு நடக்கிறது. இது பொறாமையல்ல.


வள்ளுவர் சொல்லுகிற பொறாமை பிறருக்கு ஒன்று கிடைக்கிற போது, நிகழ்கிற போது, ஒன்று அமைகிற போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலைக்குப் பெயர் பொறாமை. அப்படி பொறாமை என்பது ஒன்று. 

"ஆசை". ஆசை என்பது பலரும் பேசி இருக்கிறார்கள். இது வேண்டும். அது வேண்டும் என்று கருதுகிற மனவேகம் ஆசை. அது தான் அவா.

வெகுளி என்பது சினம். பொறாமை, ஆசை, சினம், இன்னா சொல்.  இன்னா சொல் என்பது இனிய சொல் குறித்து வள்ளுவர் பேசுகிறபோது அதில் ஒரு வார்த்தையை சொல்லுவார் "இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று" என்று. இன்னா சொல்லினுடைய அடர்த்தியை, இன்னா சொல்லினுடைய நிஜத்தை   நாம் பார்க்க வேண்டும் என்றால் இனிய உளவாக இன்னாது  என்ற அந்தக் குறளில் பார்த்தால் நமக்கு தெரியும். எப்படி ஒரு நிறைந்த வனத்தில் பழங்கள் நிறைய இருக்கிறபோது காய்  அதனுடைய கவர்ச்சியால் ஈர்க்க முடியாதோ, பழங்கள்தான் முதன்மையாக எல்லார் கண்ணிலும் படும். எல்லோருக்கும் அதுதான் பிடித்ததாக இருக்கும்.

ஆக எப்படி ஒரு வனத்தில், ஒரு சோலையில் கனிகள் இருக்கிறபோது காய்கள் எப்படி கவராதோ அதேபோல இன்னா சொல் என்பது பக்குவம் இல்லாத சொல் அப்படி வைத்துக் கொள்ளலாம். இன்னா சொல் என்று உரையாசிரியர்கள் பலரும்  சொல்லுகிற போது அவரவரின் அறிவு எல்லைக்கு, அவரவர் அறிவு விசாலத் தன்மைக்கு உகந்தது போல இந்த பாடலை விரிவாக சொல்லுவார்கள். வள்ளுவர் இன்னா சொல் குறித்து துல்லியமான  ஒரு உதாரணத்தை உவமையை நமக்கு சொல்கிறார்.

கனி - காய் இரண்டும் உண்பதற்குரிய பக்குவத்தில் வேறுபட்டு இருப்பவை. உண்பதற்குரிய பக்குவத்தோடு பார்க்கிற போது கனியினுடைய மிக முந்திய உண்பதற்குரிய முந்தைய நிலை. கனி என்பது ருசியானது. இனிப்பானது. மகிழ்விற்குரியது.  இந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிற, செல்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிற இன்னும் பழுக்காத, பண்படாத, இனிப்பு கூடாத, அழகு கூடாத நிலையில் காய் இருக்கிறது. அதற்கு பெயர் தான் காய். இந்த உவமையை வள்ளுவர் சொல்கிறார், இன்னா, இனிய என்று சொற்களை சொல்கிற போது, இனியவை என்பதும் இன்னா நிலை என்பதும் எதிரானவை அல்ல. மிக முக்கியமான ஒரு சொல்லை நான் இதை உங்களுக்கு  மிக மகிழ்ச்சியாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்  இந்த பாட்டை  நான் உங்களுக்கு சொல்வதற்கு காரணம், இன்னா சொல்லும்  இனிய சொல்லும் நேர் எதிரானவை அல்ல.

 மொழி ஆசிரியர்கள், உரையாசிரியர்கள் சொல்லுகிற போது இன்னா சொல் என்பது கடும் சொல் என்று மொழிபெயர்த்து சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இனிய சொல், கடுமையான சொல் என்று. ஆனால் வள்ளுவர் இனிய சொல்லையும் இன்னா சொல்லையும் ஓரிடத்தில் குறிப்பிடுகிற போது மிக நுட்பமாக ஒரு செய்தியை சொல்கிறார். அதற்கு உவமையாக சொல்கிறார், “கனியிருப்ப காய் கவர்ந்தற்று. இனிய உளவாக இன்னாத கூறல்” என்று.

அந்த செய்யுளை சொல்கிறபோது அதற்குள் பயன்படுத்துகிற உவமை தான்  வள்ளுவர் நமக்கு சொல்லுகிற வாழ்வியல் குறிப்பு. எதுவுமே வீண் கிடையாது. இந்திய மரபில், தமிழ் மரபில் எதுவுமே வீண் இல்லை என்று ஒரு ஆன்மீக செயல்பாடு உண்டு.  ஆன்மீக தத்துவம் உண்டு. எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கிறது என்று ஒரு ஆன்மீகப் பார்வை உண்டு. அப்படி ஒரு செம்மையான தமிழ்  சமூகத்தில் வள்ளுவரினுடைய  வாக்கு அல்லது வள்ளுவரினுடைய செய்திக் குறிப்பு, சொற்குறிப்பு நேர் எதிரான ஒன்றை பாவமான, புண்ணியமான, தீட்டான, பிழையான அப்படி ஏதாவது ஒன்றை சொல்லி விடுவாரா என்றால் வள்ளுவர் அப்படி சொல்லவே மாட்டார்.

வள்ளுவர் இனிய சொல்லிற்கும் இன்னா சொல்லிற்கும் உவமை சொல்லுகிற போது உருவகம் சொல்லுகிற போது எவ்வளவு அழகான ஒரு பாடலை சொல்லி அதற்குள் ஒரு உவமையை வைக்கிறார். "இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று" கனியும் காயும் எதிரெதிரானவையா? எதிரானது இல்லை. கனி வளர்ந்தது. காய் வளர்ந்து கொண்டிருப்பது. அது ஒரு நாள் கனியாகிவிடும். பக்குவம் இல்லாதது. ஆக இன்னா சொல் என்பது பக்குவம் இல்லாத சொற்கள். அதை தான் அறன் வலியுறுத்தலில் முன்னால் வைக்கிறார். அந்தப் பாடலில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்று  சொன்னவுடனே நாம் பின்னால்போய் படிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அந்த சொற்கள் பற்றி, உரையாடல் பற்றி வள்ளுவரினுடைய அழகான வாழ்வியல் வழிகாட்டலை பார்க்கிற போது பேசுகிற போது மிகவும் மகிழ்ச்சியாக படிக்கலாம் வள்ளுவரினுடைய வாழ்வியல் கருத்துக்களை. எவ்வளவு உயர்வான  ஒரு பார்வை. ஒரு சொல்லை குறிப்பிகிற போது அதுதான் அகர முதல எழுதெல்லாம் என்கிற முதல் அடியில் இருந்தே அவர் அவ்வளவு உயர்வாகத்தான் இந்த தமிழ் சமூகத்திற்கு, மனிதனுக்கு இரண்டாயிரம், மூவாயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் வருடங்களுக்கு பின்னால் வருபருக்கும் கூட அவ்வளவு உயர்வான இடத்தில் இருந்து நமக்கு வழிகாட்டுகிறார். அந்த அளவிற்கு அந்த சொல்லினுடைய வளமையை, சொல்லினுடைய மேன்மையை பிழை இல்லாமல் துல்லியமாக பக்குவமாகிக் கொண்டிருக்கிற சொற்கள் எல்லாமும் இன்னா சொற்கள். நிறைந்த பக்குவம் கொண்ட சுவை மிகுந்த இனிய நிலையில் இருப்பவை இனிய சொற்கள். ஆக அழுக்காறு - பொறாமை, அவா – ஆசை, வெகுளி – சினம், இன்னா சொல் - பக்குவமாகிக் கொண்டிருக்கிற பக்குவமாகாத சொற்கள். இந்த நான்கையும் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அதான் அறம். இந்த நான்கையும் விட்டு நீங்கள் வெளியே தள்ளி நிற்கிறீர்கள் என்றால் அதான் அறம்.

அழுக்காறு - நீங்கள் இன்னொருவருக்கு ஒன்று ஏற்படுவது கண்டு அதை பொறுத்து கொள்ள  முடியாத மனநிலை வருகிறது என்கிற போது தான் ஆசை பிறக்கிறது அல்லது ஆசையில் இருந்து தான் இந்த மனநிலை பிறக்கிறது. அதை சொல்ல முடியாமல் உங்களுக்குள்ளே அழுத்தி வைத்துக் கொண்டிருப்பீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வந்துவிடும். உங்களுக்கு கோபம் வந்தவுடன் பக்குவம் இல்லாத சொற்கள் வந்துவிடும். இந்த நான்கும் ஒன்றை ஒன்று சேர்ந்ததுதான். நீங்கள் பக்குவம் இல்லாத சொல்லை நிறுத்தி விட்டீர்கள் என்றால் கூட இந்த நான்கையும் கொண்டவராக ஆகிவிடுவீர்கள்.

ஆக, ஒரு வாழ்வியலை  வழிகாட்டுகிற, வாழ்வியல் நெறிமுறையை பெருமகனார் வள்ளுவரினுடைய வாழ்வியல் நூலின் வழியாக நாம் படிக்கிற போது அதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதை அப்படியே எந்த யோசனையும் இல்லாமல் பின்பற்ற முடியும் அந்த வகையில் நாம் பின்பற்றி போகிற போது பின்பற்றிப் பார்க்கிறபோது பிழையே இல்லை. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியே தவிர வேறொன்றும் நமக்கு அதிர்வான, கஷ்டமான ஒன்று வரவே வராது  என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. வள்ளுவத்தை வளர்ப்பது என்பது காக்கா கதை சொல்வது போல். ஒவ்வொரு கல்லாக போட்டு வளர்க்கிற முயற்சிதான் என்னை  பொறுத்த வரைக்கும். ஏனென்றால் அவ்வளவு பெரிய தேவை இருக்கிறது. வள்ளுவத்தை வளர்க்கிற தேவை இன்றைக்கு இருக்கிறது.

வள்ளுவரைப் பற்றி பேசுகிற, வாழ்வியலைப் பற்றிப் பேசுகிற தேவை இருக்கிறது. இன்றைக்கு மனிதர்களினுடைய வேகத்தை பார்க்கிறபோது நாம் சிறிய முயற்சியாக வள்ளுவம் குறித்து சிறிது சிறிதாக உரையாடலை செய்கிறோம். தொடர்ந்து செய்வோம்.

அந்த வகையில் ஒரு வாழ்வியல் நூலாக வள்ளுவத்தை, வள்ளுவரை, திருக்குறளை வாழ்வியல் வழிகாட்டியாக நாம் பார்ப்பதற்குரிய நிறைய சாத்தியங்களை, சாத்தியங்கள் என்பது கூட நம்முடைய  பண்பின்மை.  அது அப்படி ஒரு இயல்போடு இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதற்கு மேல் மிஞ்சிய வாழ்வியல் நூல் என்பது வாழ்வியல் வழிகாட்டும் சாத்தியம் என்பது நமக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. அப்படியான பேருண்மைகளை உள்ளடக்கமாக வைத்திருக்கிற திருக்குறளினுடைய முன்னுரை என்பது நாம் இன்றைக்கு அறிமுகமாக பேசியிருக்கிறோம். அதற்குள் பாயிரமாக இருக்கிற நான்கு அதிகாரங்களை புரிந்து கொண்டு உரையாடி பார்த்து செயல்படுத்துவதற்குரிய அம்சங்களோடு நாம்   இயங்குவோம் என்றால், செயல்படுவோம் என்றால் அச்சமும் பதற்றமும் சிக்கலும் ஏதுமில்லாத மலர்ந்த, உயர்ந்த மனிதனாக நாம் மாறுவதற்குரிய வழியை திருக்குறள் நமக்கு போட்டு வைத்திருக்கிறது.  பயணிப்பது மட்டும்தான் நமது வேலை.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment