பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்
நாம்
இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக்
கொண்டிருப்பது மட்டுமில்லாமல் நிலை கொள்ளத் துவங்கியிருக்கிறது. சீர்குலைவே நிலையானது
என்பது போன்ற மாயையான காட்சிகளை நாம் பார்க்கிறோம். சீர்குலைவிலிருந்து நம்மை பாதுகாத்துக்
கொள்வதற்கு உரிய சாரமான கருத்துகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சீர்குலைவியிலிருந்து
நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு அடிப்படையான
சாரங்களில் ஒன்று பொறுமை கடைப்பிடிப்பது. பொறுமை கடைபிடிப்பது இன்று அறியப்பட்ட அளவில்
ஒரு வன்மத்தை சுமந்து கொள்வது என்கிற பொருளில் நடைமுறையில் இருக்கிறது. உங்கள் முன்
ஒரு காட்சி நடக்கிறது என்றால் அந்த காட்சியை நீங்கள் உள்வாங்கிக் கொண்டு அது குறித்த
எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் உங்களுக்கான வாய்ப்பு வரும் வரை அந்த காட்சி குறித்த
எதிர் கருத்துகளையும் விமர்சனங்களையும் உங்கள் நினைவில் சுமந்து கொண்டு உங்கள் வாய்ப்பு
வருகிற போது சிதைவான வகையில் அறுவறுக்கத்தக்க வகையில் வெளிப்படுத்திக் கொள்வதும் நான்
இதுவரை பொறுமையாக இருந்தேன் என்று விளக்கிச் சொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த
சீர்குலைவான காலத்தில் பொறுமை குறித்த கருத்துகளும் இப்படித்தான் வெளிப்படும். ஆனால்
சீர்குலைவை நீங்கள் எதிர்கொள்வதற்கும் சீர்குலைவில் உங்களை காத்துக் கொள்வதற்கும் மெய்யாகவே
பொறுமை உங்களுக்கு அறன் போல இருக்கும்.
நடப்பில்
நீங்கள் அறிந்து வைத்திருக்கிற பொறுமை குறித்த கருத்துகளை தவிர்த்து விட்டு பொறுமை
என்கிற மெய்யான, சாரமான, காப்பாக இருக்கிற கருத்தினை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது
என் விருப்பம்.. நடைமுறையில் இருக்கிற அடிப்படையில் நீங்கள் பொறுமை காப்பீர்கள் என்றால்
அது பொறுமையே இல்லை என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது. ஆனால் நீங்கள் குழப்பமான,
சீர்குலைவான சமூகப் போக்கில் இருந்து உங்களை காத்துக் கொள்வதற்கு மெய்யாகவே உங்களுக்கு
காப்பரணாக இருப்பது பொறுமை என்கிற கருத்து தான்.
பொறுமையினுடைய
சாரமான உள்ளடக்கம் என்னவென்றால் ‘அடங்குவதே பொறுமை’ என்று நினைவில் கொள்ளுங்கள். அடங்குவதே பொறுமை என்றால்
எதில் அடங்குவது என்ற கேள்வி உங்களுக்குள் எழும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வரம்புகளில்
நீங்கள் அடங்குவது. சான்றாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதத் தோற்றமாக நாம் இருக்கிறோம்.
மனிதத் தோற்றமாக இருக்கிறபோது இந்தத் தோற்றத்திற்கு சில வரம்புகள் இருக்கின்றன. அவை என்னவென்றால் அது உடலாக
இருக்கிறது. உடலிற்கு தோற்ற வரம்புகள் உண்டு. உடல் இயங்கு முறைக்கு இயங்கு முறை வரம்புகள்
உண்டு. உடலின் சிந்தனை முறைக்கு வரம்புகள் உண்டு. இவ்வாறாக இருக்கிற வரம்புகளை நீங்கள்
சான்றாக வைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக உங்களுக்கு அறிந்திருக்கிற அளவில், புரிந்து
இருக்கிற அளவில், ஏற்றுக் கொண்டிருக்கிற அளவில், உணர்ந்து இருக்கிற அளவில் உள்ள வரம்புகளை
நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்றால் அது அடங்குவதாகும். உங்கள் வரம்புகளுக்குள் நீங்கள்
அடங்குவீர்கள் என்றால் அது பொறுமை என கொள்ளப்படும். உங்கள் வரம்புகளுக்குள் அடங்குவது
தான் பொறுமை எனக் கொள்ளப்படுகிறது.
உங்கள்
உடல் தோற்றத்திற்கு சில வரம்புகள் இருக்கின்றன. உங்களால் எவ்வளவு தூரம் ஓட முடியும்.
உங்களால் எவ்வளவு உறக்கப் பேச முடியும்? உங்களால் எவ்வளவு ஒலியினை கேட்க முடியும்.
உங்களால் எவ்வளவு வெளிச்சத்தை பார்க்க முடியும் என்றெல்லாம் உங்களால் எளிமையாகக் காண
முடியும். ஒப்பிட முடியும். உள்ளபடி உங்களால் இந்த வரம்புகளுக்குள் பொருந்துவது தான்
பொறுமை எனப்படுகிறது. இந்த வரம்புகளில் நீங்கள் இப்பொழுது எவ்வாறு பொருந்துகிறீர்கள்
என்பதுதான் நாம் உரையாடிக் கொண்டிருக்கிற கருத்து. ஒளி மற்றும் வெளிச்சம் என்கிற அளவில்
உங்கள் கண்களுக்கு எவ்வளவு பார்க்க முடிகிறதோ அதை விடவும் பன்மடங்கு கூடுதலான ஒளியினையும் வெளிச்சத்தினையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இது ஒரு வரம்பு மீறல். இது ஒரு விளைவை ஏற்படுத்தும். உங்கள் செவிகளால் எவ்வளவு ஒலியினை
செவி மடுக்க முடியும் என்கிற எல்லை கடந்து
தாறுமாறான இரைச்சல்களை ஒலியினை செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வகையில் ஒலி
வரம்பினை, கேட்கும் வரம்பினை எவ்வாறு மீறுகிறீர்கள் என்பதை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க
முடியும். இவை வரம்பு மீறல் ஆகிறது. இவ்வாறாக உடலில் இன்னும் பிற இயங்கு முறைகளை நீங்கள்
ஒப்பிட்டு பார்க்க முடியும். உங்கள் உணவு எவ்வாறு இருக்கிறது என்றால் அது இன்னும் சிக்கலானதாக
இருக்கிறது. உங்கள் உடலிற்கு எது பொருந்துகிறது என்று பார்ப்பதே இல்லை. யாவற்றையும்
சமைத்துக் கொடுத்தால் உண்ணலாம் என்கிற சிந்தனை வளர்ந்து இருக்கிறது.
மனித
உயிருக்கு வாழ்வியல் போக்கில் பேரண்டம் முழுவதும் உணவு பொதிந்திருக்கிறது என்றாலும்
பேரண்டம் முழுவதும் இருக்கிற உணவை நான் ஒருவனே உண்ண முடியும் என்கிற மயக்கத்தில் நீங்கள்
இருக்கிறீர்கள். இந்த மயக்கம் அப்பட்டமான வரம்பு மீறல். உங்கள் உணவிற்கு இலக்கணம்
- உங்கள் உடலில் அது பொருந்த வேண்டும் என்பதுதான். இன்று நீங்கள் உட்கொள்கிற உணவு வகைகளில்
எவ்வளவு உங்கள் உடலிற்கு பொருந்துகிறது என்பதை நீங்கள் பார்ப்பதே இல்லை. இவ்வாறாக பாராமுகமாக
நீங்கள் உட்கொள்கிற உணவுப் பழக்கம் என்பது
உங்கள் வரம்பு மீறலின் வெளிப்பாடாகத்தான் உள்ளது. இன்று கிடைக்கிற உணவுகளும் பானங்களும்
உங்கள் வரம்பு மீறலை காட்சிப்படுத்துகின்றன. அதுவே எவ்வளவு வரம்பு மீறி இருக்கிறீர்கள்
என்பதை சான்று பகிர்கின்றன. இத்தகைய வரம்பு மீறல்கள் என்ன செய்கிறது என்பது இத்தகைய
சீர்குலைவான சூழலில் உரையாடப்பட வேண்டிய கருத்தாக இருக்கிறது. அவ்வாறு சமூக உறவாடலில்
ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே இருக்கிற உறவாடலில் வரம்பு மீறலாக இருக்கிறபோது
அதிகாரத்தை ஊக்குவிக்கிறது. இயலாமையை ஊக்குவிக்கிறது, தோல்வியை வரவழைக்கிறது.
அவரவர்
தம் வரம்பில் உறவு பாராட்டுவார் என்றால் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையே இருக்கிற
உறவு நிலை மேம்பட்ட உறவாக மலரும். அது நிலைபெறும். அது ஒரு நல் வாழ்விற்குரிய வழிப்போக்கை
அமைத்து அருளும். இன்று வரம்பு மீறப்பட்ட உறவாகவே எல்லா உறவுகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன
என்பதை நீங்கள் அறிவீர்கள். யார் மீதும் எவற்றையும் தூக்கி வீசலாம் எந்தக் கருத்தையும்
அள்ளிப் பூசலாம் என்கிற போக்கும் நடைமுறையில் இருக்கிறது. சீர்குலைவான இந்த காலத்தில்
அதிகாரமாக வாழ்வதுதான் வாழ்வின் இலக்கணம் என்று மீண்டும் மீண்டும் கற்பிக்கப்படுகிறது.
அதிகாரத்தோடு இரு. அதிகாரத்தை பயன்படுத்து.
எவர் மீதும் அத்துமீறலாம் என்கிற கருத்துகளை வைத்துக்கொண்டு வரம்பு மீறுகிற நடைமுறையை
கடைபிடிக்கும் போது உறவிற்குள் இருக்கிற எல்லா உன்னதங்களும் சிதைகின்றன.
அதிகாரம்
செய்கிற மனிதன் மீது அத்துமீறல் கடைபிடிக்கிற மனிதன் மீது எரிச்சலும் அவமரியாதையும்
மதிப்பிழப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை நீங்கள் உங்கள் வாழ்வில் பார்ப்பீர்கள்.
இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன என்றால் உணர்வு நிலையில் உணர்ச்சி நிலையில் வரம்பு
அறியாத பிறழ்வுபட்ட காரணத்தினால் வருகின்றன.
இத்தகைய வரம்பு கடைபிடித்தல் இல்லாதபோது உறவுகளும் உடல்நலமும் இன்ன பிற வாழ்வியல் கூறுகளும்
சிதைவிற்கு உள்ளாகின்றன என்பதை நாம் கண்டு கொண்டே இருக்கிறோம். கண்முன் நிகழ்ந்து கொண்டே
இருக்கிறது.

No comments:
Post a Comment