Monday, October 10, 2022

குழந்தைக்குள் நலமும் நலத்திற்குள் குழந்தைகளும் - பகுதி 1

   குழந்தைக்குள் நலமும் நலத்திற்குள் குழந்தைகளும்

www.swasthammadurai.com


வணக்கம். குழந்தைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு நுட்பமான, சுவாரசியமான செய்திகள் இருந்து கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றையும் விட குழந்தைகளைப் பற்றி ஒவ்வொரு தனி மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உண்டென்றால் அது குழந்தைகளின் நலம் அவர்களால் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதே.

குழந்தைகளின் நலம் அவர்களால் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதற்கு நேரடியான பொருள் மிகுந்த முக்கியமானது. ஏனென்றால் நலம் பராமரிக்கப்படுவதற்கு இரண்டு வேறுபட்ட முகங்கள் இருக்கின்றன.

ஒன்று நலம் நன்முறையில் தொடர்ந்து இருக்க வேண்டும். மற்றொன்று நலம் பாழ்படுத்தப்படாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டு வேறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாடு குழந்தைகள் எனும் ஒரு புள்ளியில் இருக்கிறது. இது குழந்தைகள் பற்றிய பல்வேறு சுவாரசியமான சேகரிப்புகளை விடவும் முதன்மையானது என்று நான் கருதுகிறேன்.

நலம் என்பது எப்போதும் இருப்பது. அது இயற்கையானது. இயற்கையானது, இயல்பானது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது, எல்லா அம்சங்களிலும் நலம் ஒரு இறைத்தன்மை போல, ஒரு இயக்கவியல் இயங்குமுறை போல மிக நுட்பமாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நலத்தை புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு அதன் பாற்பட்டு தொடர்ந்து பயணிப்பதும் அவற்றை சிதைவுறாமல் செய்வதும் சிதைவுக்குள்ளாக்காமல் பார்த்துக் கொள்வதும் நலத்தை போற்றுவதற்கான அடையாளம். இத்தகைய அடையாளக் குறிப்புகளோடு ஒவ்வொருவரும் நலத்தைப் போற்றவும் சிதைவுறாமல் பார்த்துக் கொள்ளவும் பேணி கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை புரிந்துகொள்வதற்கு அவரவர் வசதிக்கேற்ப புத்தகங்களை படிக்கலாம். பயிற்சிப் பட்டறைகளில் இணைத்துக் கொள்ளலாம். சமூக ஊடகங்களில் குழுக்கள் வழியாக செய்திகளை சேகரிக்கலாம். ஆயிரம் வாய்ப்புகள் ஒவ்வொரு தனிமனிதனின் நலம் மீதும் அக்கறை கொண்ட வாய்ப்புகள் அவனைச் சுற்றி இருக்கின்றன.

இத்தகைய வாய்ப்புகளை விடவும் எளிய சாட்சியாய் குழந்தைகள் இருக்கின்றனர். கண் முன் நலம் நடக்கிறது குழந்தைகள் வழியாக. கண்முன் நலம் ஓடுகிறது குழந்தைகள் வாயிலாக. கண்முன் நலம் விளையாடுகிறது குழந்தைகள் வாயிலாக. இவ்வாறு குழந்தைகளுக்குள் நலமும் நலத்திற்குள் குழந்தைகளும் பிரித்துப் பார்க்க முடியா வண்ணம் பிண்ணிப் பிணைந்திருப்பதை நாம் பார்ப்பதின் வெற்றி நம் நலத்தை பேணிக் கொள்வதற்கு உதவுகிறது.

வளர்ந்து இருக்கிற மனிதன் சமூக சாஸ்திரங்களில், சமூகம் வழங்கி இருக்கிற நம்பிக்கைகளில், சமூகம் போட்டு வைத்த பாதையில் நடக்க வேண்டும் என்ற வழக்கு முறைகளில் சிக்கி ஏராளமானவற்றை இழக்கிறான். இழந்து கொண்டிருக்கிறான். இன்னும் இழப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் பார்க்கவும் யூகிக்கவும் முடியும்.

 நலம் என்பதை தெரிந்து கொள்வதற்கு, புரிந்து கொள்வதற்கு மீண்டும் ஒரு முறை தேடிப் போகவேண்டும் என்பதே நலம் தேடும் முயற்சிக்கு ஆரோக்கியமானது அல்ல.  ஆனால் மனித சமூகத்திற்கு, வளர்ச்சியடைந்த மனித சமூகத்திற்கு நலம் பற்றி ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும், பேணிக்கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் மீண்டும் ஒருமுறை பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அக்கறையோடு யாராவது சொல்லித் தர வேண்டி இருக்கிறது. இந்த நடைமுறை குழந்தைகளுக்கு அவசியமில்லை.

ஏன் குழந்தைகளை நலம் குறித்து பேசுகிறபோது முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன் என்றால் நான் அவ்வாறு பார்க்கிறேன் என்று கூட சொல்ல முடியும். நலம் குறித்து பேசுகிறபோது ஒவ்வொரு தனிமனிதனும் மிக எளிமையாக புரிந்து கொள்வதற்கும் பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பக்கத்தில் இருக்கிற சக மனித ஜீவராசி குழந்தைகள் என்று என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியும். அவர்களை சிலாகிப்பின் அடிப்படையில் இயற்கையானவர்கள், இயல்பானவர்கள் என்று மட்டும் கடந்து போக விரும்பவில்லை நான்.  அவர்கள் சமூகம் அறியாதவர்கள். புற உலகம் என்று ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது.  புற உலகத்தில் புனிதங்களும் தீட்டுகளும் ஏற்றங்களும் இறக்கங்களும் மனிதனை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாது.

அறியாத பார்வையோடு வெகுளித்தனமான கண் ஒளியோடு அவர்கள் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். வெகுளித்தனமான இருத்தல் நலத்தின் குறியீடாக நான் பார்க்கிறேன். மனித சமூகத்திற்கு ஒட்டுமொத்தமாக நலம் வழங்கி விட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஒரு பெரும் ஞானி மலைமுகடில் இருந்துகொண்டு அங்கு அவரைப் பார்க்க வரும் அனைவரையும் அமர வைத்துக் கொண்டு உபதேசம் கொடுப்பது போன்று ஞானத்தைக் கொடுத்து அவர்கள் அனைவரையும் ஞானியாக்கி விடலாம் என்று அவருக்கு நம்பிக்கை இருப்பது போன்ற கதைகளை இந்திய சமூகம் வைத்திருக்கிறது. ஒரு ஞானி அவரது சீடர்களை, நண்பர்களை பின்பற்றவும் பக்தர்களை ஒரு நாற்காலியில் இருந்து கொண்டு உபதேசத்தின் வழியாக, வழிகாட்டுதலின் வழியாக ஞானம் அடைவதை சாத்தியமாக்க முடியும். 

ஆனால் நலம் குறித்து அப்படி ஒன்றை செய்து விட முடியாது.  அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து ஒரு கூடுகையில் இருந்துகொண்டு அவர்கள் முன் நின்று கொண்டு யார் ஒருவரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் முழுமையாக அனைவருக்கும் நலம் பற்றி பிரசங்கத்தின் வழியாக எதுவும் செய்துவிட முடியாது.

        வேத நூட்கள், மறை நூட்கள், மறை இலக்கியங்கள் எல்லாமும் குவிந்து கிடந்தாலும் சமூக ஊடகங்கள் செய்திக் குறிப்புகளை சேகரிப்புகளை உங்கள் தொலைபேசியில், தொலைக்காட்சியில், கணிப்பொறிக்குள் வந்து கொட்டித் தீர்த்தாலும் நலம் பற்றி உங்களுக்கு புரிவதற்கு நீங்கள் ஏதாவது மெனக்கெடல் செய்ய வேண்டும்.

                                                                                            ...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...