Saturday, October 15, 2022

குழந்தைக்குள் நலமும் நலத்திற்குள் குழந்தைகளும் - பகுதி 2

 குழந்தைக்குள் நலமும் நலத்திற்குள் குழந்தைகளும் 

வேத நூட்கள், மறை நூட்கள், மறை இலக்கியங்கள் எல்லாமும் குவிந்து கிடந்தாலும் சமூக ஊடகங்கள் செய்திக் குறிப்புகளை, சேகரிப்புகளை உங்கள் தொலைபேசியில், தொலைக்காட்சியில், கணிப்பொறிக்குள் வந்து கொட்டித் தீர்த்தாலும் நலம் பற்றி உங்களுக்கு புரிவதற்கு நீங்கள் ஏதாவது மெனக்கெடல் செய்ய வேண்டும். நீங்கள் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். அதில் உங்களது அதீதமான முயற்சி தேவைப்படும்.   

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் நலமாக இருப்பதற்கு வெளியில் இருப்பது வாய்ப்புகளாக மட்டுமே இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு அந்த தனி மனிதன் தன்னளவில் ஒரு அடியேனும் எடுத்து வைக்க வேண்டும்.  இந்த ஒரு அடியையும் எடுத்து வைக்கிற முன்வைப்பு அவனளவில் நிகழ்வது. இந்த தனிமனிதனின் கவனத்தையும் விழிப்புணர்வையும் முன்வைப்பையும் ஞானிகள் வழியாக, குருமார்கள் வழியாக, வேத புத்தகங்கள் வழியாக, அற இலக்கியங்கள் வழியாக கொடுத்து விடுவதற்கு சாத்தியமில்லை என்று நான் பார்க்கிறேன்.

மேன்மையான பொருளாதாரம் பேசிய தத்துவஞானிகளும் அறம் பேசிய மகான்களும் விழிப்புணர்வும் அகநிலையும் பேசிய உளவியல் ஆய்வாளர்களும் கூட தத்தமது வாழ்வில் தாம் நோய் வாய்ப்பட்டிருந்த காலங்களை பதிவு செய்திருக்கின்றனர்.

அறிவிற்கும் ஞானத்திற்கும் கூட அனைவருக்கும் சாத்தியம் இருக்கிறது. ஒரு குழு உரையாடலில் விவாதத்தில் நீங்கள் அறிவைப் பற்றியோ, ஞானத்தைப் பற்றியோ, அறம் பற்றியோ கலந்து பேசி முடிவு செய்துவிட முடியும். நீங்கள் பேசிய கருத்துக்களை சேர்த்து வைத்துக்கொண்டு அன்றாட வாழ்வில் செயல்படுத்திக் கொள்ள முடியும். அதில் நீங்கள் வெற்றி தோல்விகளை பரிசீலிக்க முடியும். புதிய ஒன்றை கண்டுபிடிக்க முடியும்.  ஆனால் நலம் பற்றி ஏதாவது செய்யவேண்டும் என்றால் இத்தகைய அணுகுமுறை புற அளவில் நிகழ்கிற எந்த ஒன்றும் பயன்படாது. ஒரு தனி மனிதனின் நலத்திற்கு ஒரு தனி மனிதனின் முயற்சி அவசியம்.  நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற மன விருப்பமும் குழந்தையாக இருந்தபோது நாம் நலமாக இருந்தோமா என்கிற சுய வினாப் பயணமும் நலமாக இருந்த நாம் எப்போது பிழைப்பட்டுப் போனோம் என்கிற சுய விமர்சனமும் அந்த தனி  மனிதனின் நலம் தேடும் முயற்சிக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த தனிமனிதனின் நலம் தேடும் முயற்சி மிக விரைவில் அந்த தனி மனிதனை நலத்தை நோக்கி இழுத்து வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நோய்வாய்ப்பட்டிருக்கிற, நோய் சுமந்து கொண்டிருக்கிற, படுக்கைகளில் படுத்த வண்ணம் உடல் நலம் பற்றி, மனநலம் பற்றி தனக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிற  யார் ஒருவருட்குள்ளும் நாம் குழந்தையாக இருந்தபோது நலமாக இருந்தோம் என்கிற செய்தி ஒளிந்திருக்கிறது. 80 வயதில் இருப்பவருக்கும் நான் குழந்தையாக இருந்தபோது நலமாக இருந்தேன் என்று நினைவிருக்கும். பெரும் அறுவை சிகிச்சைக்காக தயாராகிக் கொண்டிருக்கிற ஒருவருக்கும் நான் குழந்தையாக இருந்தபோது நலமாக இருந்தேன் என்பது நினைவிருக்கும்.  கடும் நோய்வாய்ப்பட்டு ஓய்வில் இருக்கிற ஒருவருக்கும் நான் குழந்தையாய் இருந்தபோது நலமாக இருந்தேன் நின்று நினைவிருக்கும்.

எத்தகைய அசௌகரியங்களில் இருக்கிற அசௌகரிய இருப்பை சுமந்து கொண்டிருக்கிற யார் ஒருவருக்கும் அவரவர் குழந்தையாக இருந்த போது நலமாயக இருந்தோம் என்கிற அனுபவமும் செய்தியும் நிச்சயமாக நினைவிருக்கும். ஏனென்றால் அவரவருக்கு இயற்கையின் வசத்தில் வழங்கப்பட்ட உண்மை அது. ஒவ்வொருவரும் குழந்தையாக இருந்தபோது நலமாகவே இருந்திருக்கிறோம். இன்றும் குழந்தைகள் குழந்தையாக இருக்கிறபோது நலமாகவே இருக்கிறார்கள். அதனால்தான் நான் உங்களுக்கு சொல்கிறேன், நீங்கள் நலமாக இருக்க வேண்டுமென்றால் குழந்தைகளை பின்பற்ற வேண்டும் என்று.

குழந்தைகளை பின்பற்ற வேண்டும் என்றவுடன் உங்கள் தெரு ஓரங்களில் விளையாடுகிற, உங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் ஏதாவது ஒரு மாடியிலிருந்து எட்டிப் பார்க்கிற, நீங்கள் பயணத்தில் செல்கிறபோது உங்கள் இரயில் வண்டிக்கு வெளியிலிருந்து டாட்டா காட்டுகிற குழந்தைகளை இப்படி உங்களுக்கு வெளியில் இருக்கிற குழந்தைகளை தொட்டுத் துவங்கி  பின்பற்றும் பக்குவமும் தேடலும் இருந்தால் அழகானதுதான். ஆனால் அதை விட எளிய சாத்தியம் ஒன்று நான் உங்களுக்கு கூறுகிறேன். நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களுக்குள் ஒரு குழந்தையை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அந்தக் குழந்தை இப்போதும் நினைவில் இருக்கக்கூடும்.  உங்கள் குழந்தைத்தனம் உங்களோடு இருந்ததை நீங்கள் கண்டுபிடித்து, நினைவுறுத்தி மீண்டுமொருமுறை பின்பற்றிக் கொள்வதற்கு வெளியில் இருக்கிற குழந்தைகளை விடவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. வெளியில் இருக்கிற குழந்தைக்கு அலங்காரங்கள் இடப்பட்டு இருக்கலாம். வெளியில் இருக்கிற குழந்தை பூச்சூடப்பட்டிருக்கும். வெளியில் இருக்கிற குழந்தை உங்களுக்கு ஒவ்வாத ஒரு கழிவு ஓடையில் விளையாடிக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. வெளியில் இருக்கிற குழந்தை உங்கள் பரிதாபத்திற்குரிய மருத்துவமனை வாசலில் கை கால்களில் கட்டு கட்டிக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. வெளியில் இருக்கிற குழந்தை உங்கள் அன்பையும் இரக்கத்தையும் வேண்டுகிற குழந்தையாக கூட இருக்கலாம். ஆனால் உங்களுக்குள் நீங்கள் குழந்தையாக இருக்கிற போது இருந்த குழந்தை நீங்களே அது. அந்த குழந்தை முழு நிர்வாணமானது. அந்தக் குழந்தைக்கு அலங்காரங்கள் இருக்காது. அலங்காரங்கள் இருந்தாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்தக் குழந்தைக்கு எது அழகு? எது அவலம்? என்று உங்களுக்கு தெரியும். அந்தக் குழந்தை உங்களது குழந்தை. அந்தத் தருணத்தில் நீங்களே குழந்தை.  அந்தக் குழந்தையை உங்களால் பின்பற்றிக் கொள்ள முடியும். ஏனென்றால் எல்லாக் குழந்தைகளும் குழந்தைகளாக இருக்கிறபோது நலமாக இருக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் குழந்தைகளாக இருக்கிறபோது அழகாக இருக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் குழந்தைகளாக இருக்கிறபோது பரிவாகவும் கருணையாகவும் இருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்குற குழந்தையும் இத்தகைய அழகோடும் இத்தகைய நலத்தோடும் இத்தகைய பரிவோடும் இன்னும் ஆகச்சிறந்த செல்வாக்கோடும் உங்களுக்குள் இருக்கிற குழந்தையும் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். உங்கள் நலம் வேண்டி நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் கூட உங்களுக்குள் இருக்கிற உங்களுக்குள் இருந்த அந்தக் குழந்தையை நீங்கள் பின்பற்றி கொள்ள முடியும். நலம் குறித்து வெளியில் தேடுவதற்கு, வெளியில் தேடி செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் நலம் குறித்து துவங்குகிற இடம் உங்களுக்குள் தான்.

ஒவ்வொரு தனிமனிதனும் நலமாக இருக்கவேண்டும். மகிழ்வாக இருக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் விருப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எந்த மனிதனுக்கும் எனக்கு நலமும் மகிழ்வும் அமைதியும் வேண்டாம் என்கிற கோட்பாடுகள் உள் இருப்பதில்லை. எல்லா மனிதனுக்குள்ளும் நலமும் மகிழ்வும் அமைதியும் பரவசமும் தேவைப்படுவதாகவே இருக்கிறது. இதைப் பெற்றுக் கொள்வதற்கு புறவுலகில் இருப்பதுபோன்ற காட்சிகளில் கிடைப்பது போன்ற வசதி வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கின்றன. இவை எல்லாமும் உண்மையா அல்லது சாத்தியமற்றதா என்பது பற்றிய ஆய்வுக்குள் இறங்காமல் புறவுலகில் இருக்கிற நலம் குறித்தான எல்லா கருத்தாக்கங்களும் உண்மையா இல்லையா என்பதைக் கூட பார்ப்பதற்கு நலம் குறித்து தேடுகிற தனிமனிதன் ஒவ்வொருவரும் தனக்குள் இருந்து துவங்க வேண்டும். தான் துவங்குவதற்கு தனக்கு கண் முன் தெரிகிற குழந்தையோ, தமக்குள்ளே இருந்த, தற்போதும் இருக்கிற குழந்தையோ உதவி செய்வார்கள். நலம் பெற்றுக் கொள்வதற்கு மிக எளிய வழி, மிக அரிய வாய்ப்பு குழந்தைகளை பின்பற்றுவதே.

…தொடர்ந்து பின்பற்றுவோம்; தொடர்ந்து பேசுவோம்....

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...