கற்றல் நலம் – உரையாடல் 2
கற்றல் நலம் குறித்த தொடர் உரையாடல். யாவருக்கும் உரிய நலம் பொருட்டு நாம் உரையாடுகிறோம்.
ஒவ்வொருவரின் கற்றலும் முதன்மையானது என்கிற
தளத்தில் கற்றல் பார்க்கப்பட வேண்டும் என்று இந்தத் தொடர் உரையாடல் செய்யப்படுகிறது.
கற்றல் குழந்தைகளுக்கானது என்ற பொது மனநிலை
உலகளாவிய சமூக மனநிலையாக இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கற்றலை இவர்கள்
தான் செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கத்திற்குள் உரையாடல் நிகழ்கிறது. நாம் புரிந்து
கொள்ள வேண்டும் என்று அனுபவமாக பரிந்துரைப்பது, பார்ப்பது - கற்றல் என்பது நிகழ்வது.
கற்றல் என்பது மலர்வது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மனிதனின் அல்லது
ஒரு சமூகத்தின் தலையீடுகள் ஏதும் இல்லாமலேயே கற்றல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதற்கான
விஞ்ஞானப்பூர்வ ஆதாரங்களும் உளவியல் சார்ந்த ஆவணங்களும் கூட இருக்கின்றன. அந்த வகையில்
கற்றல் என்பது நகர்வு, மலர்ச்சி, விளைவு, தானாக நிகழ்வது என்கிற தன்மையில் பார்க்கிறபோது
அனுபவமும் அது தொடர்ந்து தானாக நிகழ்கிற நிகழ்வு மாற்றமும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
நிறைய மனிதர்கள் சேர்ந்திருக்கிற சமூகத்திற்குள்ளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
என்பதை நாம் பார்க்க முடியும். அந்த பார்வையின் அடிப்படையிலேயே கற்றலை நாம் உரையாடலுக்கு
எடுத்துக் கொள்வதும் அதன் பயன்பாட்டை விளக்கிப் பேசுவதும் அவசியமாகிறது.
கற்றல் என்பது ஒரு கூடத்தில் நிகழ்வதல்ல என்பதை நான் பார்ப்பதற்கு அதன் மீது உரையாடுவதற்கு ஏதுமில்லை என்கிற அளவிற்கு புரிதலோடு நகர்கிறோம். கற்றல் என்பது ஒரு கூடத்தில் நிகழ்வது அல்ல. ஒரு பொது வெளியில் நிகழ்வது. கூடத்திற்குள்ளும் நிகழலாம். மாணவர்களுக்கும் ஒரு வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கும் ஒரு கூடத்தில், ஒரு சாலையில், ஒரு பல்கலைக்கழகத்தில் சுருக்கமான வழிபாட்டுத் தலங்களில் என்று எந்த வரையறைக்குள்ளும் நிகழ்கிற கற்றல் கற்றலாக இருப்பதில்லை. அவை கற்பித்தல் தளத்திலேயே நிகழ்த்தப்படுகிற, உரையாடப்படுகிற ஒன்றாக இருக்கிறது. என்றாலும்கூட கற்றல் பற்றி பேசுவதும் கற்பித்தல் பற்றி பேசுவதும் இருவேறு தளங்களாக இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கிறோம்.
நாம் முழு நிதானமான கற்றல் நிகழ்வது பற்றிய
ஒரு தன்மையை கற்றல் நிகழ்வு பற்றிய ஒரு பார்வையை நாம் பார்க்கிறபோது கற்றல் என்பது
தொடர்ந்து நிகழ்வதாக நிகழ்கிற, மலர்கிற ஒன்றாக ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் கற்றல்
இருக்கிறது என்பதை பார்ப்பதன் அடிப்படையில், புரிந்து கொள்வதன் அடிப்படையில் கற்றல்
பற்றி நாம் பார்க்க முடியும்.
கல்வி என்பது கற்றலுக்கு மிக நெருக்கமான வார்த்தை,
சொல். கல்வி என்பது இரண்டு சொற்களில் ஆங்கிலச் சொற்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று Education, இன்னொன்று Learning. Education என்பது பயிற்சி. அது கற்பித்தல் உடன்பட்டது.
Learning என்பது கற்றல் உடன்பட்டது. கற்பித்தலும் கற்றலும் Education &
Learning என்கிற இரண்டு வேறு வார்த்தைகளினுடைய பொருளும் நாம் ஆங்கிலத்தில் பார்க்கிற
போது, அதை மொழிபெயர்த்து தமிழில் பார்க்கிறபோது கற்றல் என்கிற வார்த்தையினுடைய ஒரு அடர்த்தியை நாம் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
Learning என்பது எல்லா நிகழ்விலும் எல்லா காட்சியிலும் ஒவ்வொரு தனி மனிதனும் அவருக்கே
உரிய மன ஓட்டத்திலிருந்து உந்துதலிலிருந்து, விருப்பத்திலிருந்து உள்வாங்கிக் கொள்வது
learning - கற்றல். ஒன்றிற்குப் பயிற்சி அளிக்கப்படுவது
என்பது கற்பித்தல் EDUCATE THE CONTENT. அந்த குறிப்பிட்ட வகையான ஒன்றை பயிற்றுவிக்கும்
முறையாக, கருத்தாக்கத்தை உருவாக்கும் முறையாக ஒரு சிந்தனை முறையை கட்டமைக்கும் முயற்சியாக
செய்யப்படுபடுகிற எல்லாமும் Education என்று நாம் வகைப்படுத்த முடியும்.
இன்று கல்விக்கூடங்களை, பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களை,
நிறுவனங்களை பார்க்கிறபோது அவை தம் குழுவிற்கு, தம்முன் இருக்கிற சிறு கூட்டத்திற்கு
தொடர்ந்து பயிற்சி அளிக்கிற கற்பித்தல் முறையை கற்றலாக நாம் புரிந்து கொள்கிறோம். சமூகம்
புரிந்து வைத்திருக்கிறது என்கிற ஒரு தளத்தை சீர்தூக்கிப் பார்ப்பதன் மீது இந்த கற்றல்
உரையாடலை நாம் செய்கிறோம். கற்றல் என்பது கற்பித்தல் அல்ல. கற்றல் என்பது பயிற்சி முறை
அல்ல. கற்றல் என்பது தொடர்ந்து ஒன்றை செய்து கொண்டே இருப்பதும் ஒன்றை கையாளப் பழகிக்
கொள்வதுமான செயல்பாடு அல்ல. இவையெல்லாம் கற்பித்தல். இவையெல்லாம் பயிற்சி முறைகள்.
இவையெல்லாம் வழக்கத்தை உருவாக்குவது. இத்தகைய முறைகள் உள்ளாகாமல் கற்றல் என்பது வேறொன்றாக
நிகழ்கிறது.
கற்றல் என்பது இரண்டு வேறு நிலைகளில் மனிதனுக்கு
நிகழ்கிறது. ஒன்று அவரது உடலளவில்; மற்றொன்று அவரது சமூக அளவில்.
ஒரு மனிதன் ஒரு பனி இரவில் உறங்குகிற போது
பனி இரவு முழுவதும் அவனுக்கு தாங்க முடியாத குளிரை எதிர்கொள்கிற போது இதமான வெப்பத்திற்காக
ஒரு கம்பளியை அம்மனிதன் தமக்குப் போர்த்திக் கொள்கிறார் என்று ஒரு நிகழ்வை நாம் கற்பனை
செய்வோம் என்றால் அல்லது அனுபவத்தை பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் குளிர் ஏற்படுகிறதோ
அப்போதெல்லாம் கதகதப்பை உருவாக்கிக் கொள்வதற்காக
ஒரு கம்பளியை நீங்க போர்த்துக் கொள்வது வழக்கமானது. உங்களைப் பாதுகாப்பதற்கும்
உங்களை தகவமைத்துக் கொள்வதற்கும் உங்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஒரு வெப்ப நிலையை
பராமரிப்பதற்கும் ஒன்றை நீங்கள் கற்றுக் கொள்ளவும் ஒன்றை செய்து பார்க்கவும் நீங்கள்
பழகியிருக்கிறீர்கள். நடைமுறையில் நீங்கள் அனுபவமாக ஒன்றைப் பெற்று இருக்கிறீர்கள்.
இவையெல்லாம் உள்ளடக்கிய ஒரு கம்பளி போர்த்தும் நிகழ்விற்க்குள் உங்களுக்கான, உங்கள்
உயிர் பாதுகாப்பிற்கான, உங்கள் குளிர் தடுப்பு நடவடிக்கைக்கான ஒன்று இருக்கிறது. அந்த
ஒன்று உங்களது உடலைப் பாதுகாக்கும் அறிவு. இந்த அறிவை நீங்கள் குளிரிலிருந்து, குளிர்கால
இரவிலிருந்து, உங்கள் உடல் வெப்பநிலை பறிபோவதிலிருந்து, அவற்றைப் பாதுகாப்பதில் இருந்து
கற்றுக்கொண்ட செயல்பாடு. இந்த செயல்பாடு எல்லா நிகழ்விலும் உடல் பாதுகாப்பாக, உயிர்
பாதுகாப்பாக, ஒரு வெப்பநிலை பாதுகாப்பாக, உங்கள் உணவு செரிமானம் பாதுகாப்பாக என்று
பல்வேறு விதமான பாதுகாப்பு நிலை குறித்து நீங்கள் எடுக்கிற முயற்சிகளில் இம்மாதிரியான
ஒன்றை கற்றுக் கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் அனுபவமாகவோ, செய்முறையாகவோ நிகழ்வதை பார்த்திருப்பீர்கள்.
இப்படித்தான் அது நிகழும்.
இரவு நேரம் நீங்கள் உறங்குகிற போது, உங்கள்
நினைவு கூட உங்களுக்கு இல்லாத போது, உங்கள் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டுகிற போது
உங்கள் மேல் படர்ந்து இருக்கிற ஒரு எளிய துணியை உங்கள் உடலில் இருந்து விலக்கிக் கொள்கிற
நினைவே இல்லாத அளவிற்கு உங்கள் உடல் விலக்கிக் கொள்ளும். உங்கள் நினைவு எல்லைக்கு அப்பாற்பட்டு
நிகழ்வது அது. உங்கள் உடலுக்குரிய அறிவு. இந்த உடலுக்குரிய அறிவிலிருந்து எப்போது நான்
இந்த போர்வையை என்னிடம் இருந்து விலக்கிக் கொண்டேன் அல்லது எப்போது போர்வையை குளிருக்காக
போர்த்திக் கொண்டேன் என்கிற நினைவு கூட இல்லாத அளவிற்கு உங்கள் உடலில் ஒரு அறிவார்ந்த,
அனுபவம் சார்ந்த ஒரு செயல்முறை நிகழ்வதை நீங்கள் அனுபவமாக பார்த்திருப்பீர்கள். இந்த
அனுபவம் கற்றல் என்று வரையறுக்க நான் விரும்புகிறேன். இந்த செயல்பாடு கற்றலின் வழி
வந்தது என்று நாம் பார்க்க வேண்டும். இந்த செயல்பாடுகளை இவ்வகை கற்றல் என்பதை நம் உடல்
அறிவாக பெற்றிருக்கிறது. அனுபவத்தின் வழி பெற்றிருக்கிறது. பரிசோதனை முயற்சிகளின் வழி
பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து இயங்குவதன் வழியாக பெற்றுக்கொள்ள முடியும். ஒரு
முந்தைய செயல்பாட்டிற்கும் பிந்தைய செயல்பாட்டிற்கும் இடையே விளைகிற விளைவில் இருந்து
பெற்றுக்கொள்ள முடியும் என்று பல்வேறு சாத்தியங்கள் இருக்கிற சூழலில் கற்றல் தொடர்ந்து
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த கற்றல் முறையை ஒரு மனிதனினுடைய அடிப்படை
உயிர், உடல் பாதுகாப்பு குறித்த, தகவமைப்பு குறித்த அனுபவத்தின் வழியாக விளைகிற கற்றல்
முறையை நாம் அப்படியே அனுபவிப்பதும் அப்படியே ஏற்றுக் கொள்வதும் அப்படியே உள்வாங்கிக்
கொள்வதுமே கற்றலுக்கு நாம் தருகிற புரிதலும் மரியாதையும். இது மதிப்புமிக்கது.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment