சிறார் நலம்
முந்திய நிமிடம்வரை தான்
விளையாடுவதற்கு தடை சொன்ன, தன்னைப் பற்றி கடுமையான அவதூறான விமர்சனங்கள் செய்த தன்னை
அடிக்க கை ஓங்கிய தன்மீது வார்த்தைகளால் வசைகளால் பொழிந்து தள்ளிய ஒரு மனிஷியை தான் விளையாடுகிற போது தன் ஆனந்தத்தை
ஆராதிக்கிற போது தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த குழந்தை விரும்புகிற
விருப்பத்தை நாம் மனித சமூகத்தில் மனிதப் பொது மனநிலையில் விரிவாகப் பேசுவதற்கு வாய்ப்பே
இல்லை. இந்த உதாரணத்தை பதின்பருவ அல்லது வயது வந்த ஒருவரிடம் பொருத்தி பார்த்தீர்களென்றால்
நீங்கள் நான்கு மணிக்கு உங்கள் அலுவலகத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று முடிவு
செய்கிறீர்கள். 4 மணிக்கு உங்கள் மேல் அதிகாரியிடம் அனுமதி கோருகிறீர்கள். நான்கு மணிக்கு
அவர் உங்களை நிற்கச் சொல்கிறார். உங்கள் வேலையின் முக்கியத்துவத்தை விளக்குகிறீர்கள்.
நிற்கச் சொல்கிறார். மீண்டும் உங்கள் உரையாடல் கனமாகிறது. வழக்கமான உங்கள் பணி நேரம் 5 மணி என்ற நிலையில்
இருந்து ஒரு மணி நேரம் முன்னதாக அனுமதி கேட்கிறபோது அவர் மறுக்கிறார். உரையாடல் கனக்கிறது.
மீண்டும் மறுக்கிறார். நீங்கள் வேகமாக பேசுகிறீர்கள். உங்களுடைய பணி நிமித்தமாக இருக்கிற எல்லாவற்றையும் விளக்குகிறீர்கள்.
எதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை. மீண்டும் மறுக்கிறார். ஒரு 20 நிமிடம், 25 நிமிடம்
கழித்த பின்பு உங்களைச் செல்ல அனுமதிக்கிறார். நீங்கள் செல்கிறபோது நீங்கள் தூக்கி
சுமக்கிற பெரும் கவலைக்குரிய மனநிலை 4 மணிக்கு நம்மை அனுப்பவில்லை என்ற கோபம். பின்பு
நீங்கள் செல்கிற நிகழ்ச்சியில், நீங்கள் செய்கிற வேலையில், நீங்கள் பங்கேற்கிற நிகழ்வில்
உங்கள் உயர் அதிகாரி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிற நேரடியான எதார்த்தம்
இருந்தால் கூட நீங்கள் மீண்டும் அழைத்து உங்கள் உயர் அதிகாரியை அந்தப் பணியில் இணைத்துக்
கொள்வதற்கான மன நிலையே உங்களுக்கு வராது.
அடுத்தடுத்த காலங்களில் அவர் எதிர் படுகிற காலங்களில் அவரோடு இந்த நான்கு மணி விவகாரத்தை மனதில் நிறுத்திக்கொண்டு எத்தனை காலம் ஒரு நீண்ட இடைவெளியை பராமரிக்க வாய்ப்பு இருக்கிறதோ இந்த நீண்ட இடைவெளியை நீங்களோ உங்கள் உயர் அதிகாரியோ தொடர்ந்து பராமரித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பது இந்த சமூக நிஜம்.
இந்த இடைவெளியை ஒரு நிமிட
நேரத்தில் உடைத்து எரிந்த குழந்தையின் மனநிலை கலீல் ஜிப்ரான் குழந்தைகளைப் பற்றி எழுதுவதற்கான
அடிப்படை என்று நான் பார்க்கிறேன். இவர்கள்தான் குழந்தைகள். இந்த அரைமணி நேரம் நீங்கள்
போராட்டமாக உங்கள் குழந்தையை நிறுத்தி வைத்தவுடன் அந்தக் குழந்தை பெரும் போராட்டத்திற்கு
பிறகு நீரில் இறங்கி விளையாட வாய்ப்பு கிடைத்தவுடன் விளையாடுகிறது. அந்த விளையாட்டின்
நீர்த்திவலைகள் பொங்கி எழுகிற தண்ணீரின் அலை,
இந்த ஆனந்தம் தன் தாயும் அனுமதிக்க வேண்டுமென்றோ தன்னுடன் தன் தாய் இணைந்து விளையாட
வேண்டுமென்றோ ஒரு நிமிட நேரத்தில் நினைப்பதை நீங்கள் மன்னிப்பு என்று அல்லது மறதி என்று
சுருக்கி விடுவீர்கள். அந்தக் குழந்தை உங்களை மன்னிக்கவோ அல்லது நீங்கள் செய்த பைத்தியக்காரத்தனத்தை
மறக்கவோ இல்லை. அந்தக்குழந்தை வெறுமனே நீங்கள் கோபம் கொள்கிறீர்கள் என்பதைக் கூட பொருட்படுத்தவில்லை.
கோபம் கொண்டாலொழிய மன்னிப்பை பற்றிய உரையாடலுக்கு
அவசியமில்லை.
ஒரு குழந்தை உங்களோடு கோபம்
கொள்கிறது என்றால் மட்டுமே நீங்கள் கோபத்தின் பாற்பட்டு நியாயம் சொல்கிறபோது அல்லது
அந்தக் கோபத்தின் பாற்பட்டு நீங்கள் திருத்திக் கொள்கிறபோது உங்களை மன்னிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் குழந்தைகள் எப்போதும் கோபம் கொள்வதில்லை.
குழந்தைகள் எப்போதும் ஆத்திரம் கொள்வதில்லை. குழந்தைகள் எப்போதும் நெறிபிறழ்வாக இருப்பதில்லை.
அவர்கள் நெறிபிறழ்வதையோ பிறரின் கோபத்தையோ
பிறரின் ஆத்திரத்தையோ அறியாமையாக பொருட்படுத்துவதில்லை என்று பல குழந்தைகள் சாட்சிகளாக
நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள் அவரவர் வீடுகளில். எல்லாப் பெற்றோருக்கும்
இப்படி ஒரு கதை உண்டு.
புதிதாக போட்டிருக்கிற கால்சட்டையை
விலையுயர்ந்த கால் சட்டையை கழட்ட வேண்டும் என்று குழந்தை தரையில் பிரண்டு உருண்டு அழும்.
தாய் அந்த கால் சட்டையை போட்டு தான் இருக்க வேண்டும் என்று தாயின் போராட்டம் இருக்கும்.
இருவரும் நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் சண்டையிட்டு மல்லுக்கட்டி போராடி கடைசியில் பெரும்
விரக்தியோடு தாய் தன் குழந்தையின் கால் சட்டையை கழட்டியவுடன் ஏக மகிழ்ச்சியில் குழந்தை
தாயின் கழுத்தை கட்டிக் கொள்கிற நிகழ்ச்சியை எல்லா இளம் தாய்மார்களும் பார்த்திருப்பார்கள்.
ஒரு மணி நேரம் உங்கள் கோரிக்கையை மறுத்து கொண்ட ஒருவரிடம் அவர் ஒருவேளை உங்கள் கோரிக்கையை
ஏற்றுக் கொள்வார் என்றால் நீங்கள் பெரும் வெற்றி பெற்றவராகவும் அவர் உங்களுக்கு அடிமை
என்பது போலவும் நீங்கள் உரிமையை, அதிகாரத்தை மீட்டெடுத்துவிட்டீர்கள் என்பது போலவும்
உங்களது பாவனையை இந்த சமூகம் உங்களுக்கு பழக்கி வைத்திருக்கிறது. குழந்தைகளிடம் அப்படி
எதுவும் இருக்காது.
நீங்கள் ஒரு மணி நேரம் குழந்தையோடு
மறுத்து நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்கள் மறுப்பு தளர்வாகும் போது, உங்கள்
மறுப்பு அனுமதியாக மாறும் போது அந்தக் குழந்தை உடனடியாக உங்களிடம் ஒட்டிக் கொள்கிற,
உங்களிடம் அன்பு பாராட்டுகிற, உங்களுக்கு முத்தம் வைக்கிற பெரும் மலர்ச்சியான நிகழ்வை
உங்களுக்கு செய்து கடந்துவிடும். இந்த செயல்பாடு, இந்தக் குறியீடு பொது மனநிலைக்கு
பொருந்தாதது. இந்தக் குறியீடு, இந்த செயல்பாடு பொது மனநிலை உள்ளவர்களால் புரிந்து கொள்ள
முடியாதது. இவர்கள்தான் குழந்தைகள். குழந்தைகளின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்கிற
எந்த ஆராய்ச்சியும் நமக்கு அவசியமில்லை. குழந்தைகளுக்கு ஆழமே கிடையாது. குழந்தைகள்
மிக வெளிப்படையாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு அடர்த்தியே கிடையாது. குழந்தைகள்
மிக தளர்வாக இருக்கிறார்கள். நேர் எதிரான கருத்து உரையாடல் நிகழ்ந்தாலும் கூட அவர்களுக்கு
அனுமதி கிடைத்தவுடன் அவர்களின் ஆனந்தத்தையும் அவர்களின் ஆராதனையையும் பெரும் மகிழ்வோடு
உங்களுக்கு, தடுத்தவருக்கு, மறுத்தவருக்கு பகிர்ந்தளிக்கிற ஒரு பெரும் விசாலமான பார்வையும்
மனநிலையும் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை இந்த சமூகத்தால் புரிந்து கொள்ளவே முடியாது
என்பதை நான் பார்க்கிறேன். இந்த குழந்தையின் மனநிலையை புரிந்து கொள்வதன் வழியாகவே ஒரு
பெரும் கவிஞன் ஒரு மகா கவிஞன் குழந்தையைப் பற்றி கவிதை வடிவதற்கு முன் குழந்தையைப்
பற்றிய கவிதையை வாசிப்பதற்கு முன் நாம் குழந்தைப் பற்றி முன் தயாரிப்புகளை செய்து கொள்ளவேண்டும்
என்று நான் கருதுகிறேன். மிக அவசியமானது.
குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள்
என்பது நீங்கள் குழந்தையை பற்றி எவ்வாறு கருதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது அல்ல.
நீங்கள் குழந்தையைப் பற்றி எவ்வாறு கருதிக் கொண்டு இருப்பீர்கள் என்று எல்லோருக்கும்
தெரியும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை, ஒரு குறிப்பிட்ட சமூக இனத்தை, குறிப்பிட்ட
அரசியல் அமைப்பு முறையை, குறிப்பிட்ட நாடு சார்ந்த சிந்தனை முறையை, குறிப்பிட்ட வர்க்கம்
சார்ந்த சிந்தனை முறையை, எந்த ஒன்றையும் உங்களுக்குள் பொருத்தி வைத்திருக்கிற நபராக
நீங்கள் இருக்கலாம். இந்த அடிப்படையிலேயே உங்களுக்கு குழந்தை பற்றிய சிந்தனை வாய்த்திருக்கும்.
அந்த எல்லையைத் தாண்டி உங்களால் சிந்திக்க முடியாது. ஆனால் எந்த வரையறைக்கும் உட்படாமல் குழந்தைகளுடைய
பார்வையும் இயல்பும் விசாலமானது.
ஒரு தாயின் அனுமதி எல்லையை
ஒரு குழந்தையின் அன்பு தாண்டிவிடும். ஒரு தாயின் கோபத்தின் எல்லையை ஒரு குழந்தையின்
கருணை தாண்டிவிடும். ஒரு தாயின் கவலையின் எல்லையை ஒரு குழந்தையின் செழுமை தாண்டிவிடும்.
ஒரு தாயின் துக்கத்தின் எல்லையை ஒரு குழந்தையின் உயிர்ப்பு நிலை தாண்டி விடும். ஒரு
தாயினுடைய பயத்தின் எல்லையை, ஒரு குழந்தையினுடைய பெரும் நம்பிக்கை தாண்டி விடும். நாம்
சமூகமாக வைத்திருக்கிற கவலைகளை உயிர்ப்பாகவும் சமூகமாக வைத்திருக்கிற கவலைகளை, துக்கங்களை
உயிர்ப்பாகவும் உயிர் துடிப்பாகவும் மாற்றுகிற பெரும் ஆற்றல் குழந்தைகளுக்கு இருக்கிறது.
எல்லா அவநம்பிக்கைகளையும்
தைரியமாக கடந்து செல்கிற புத்திசாலித்தனம் குழந்தைகளுக்கு இருக்கிறது. எல்லா பெரும்
கோபங்களையும் ஆற்றாமைகளையும் கருணைகளை கொண்டு கழுவி விடுவதற்கான ஆற்றல் குழந்தைகளுக்கு
இருக்கிறது. அப்படித்தான் குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகள் இப்படித்தான் இருக்கிறார்கள்
என்பதை பார்ப்பதற்கு பெரும் தடையாக நமக்குள் சமூகம் கொடுத்து வைத்திருக்கிற, சமூகத்தைச்
சார்ந்திருக்கிற, சமூக நம்மை இழுத்துக் கட்டி வைத்திருக்கிற பெரும் சிக்கல்களோடு நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து
விடுபடுகிற முயற்சியில் இவற்றிலிருந்து நகர்ந்து விடுகிற முயற்சியில் ஒரு கவிதையை படிக்கிறோம்
என்ற மனபாவத்தோடு இந்த கவிதையை நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது கலீல் ஜிப்ரானுடைய குழந்தைகள்
பற்றி.
குழந்தைகள் எந்த முன்முடிவும்
இல்லாமல் நிறைந்த அன்பாக எந்தக் கோபமும் இல்லாமல் நிறைந்த கருணையாக எந்த பயமும் இல்லாமல்
நிறைந்த தன்னம்பிக்கையாக எந்த சோர்வும் இல்லாமல் நிறைந்த உயிர்ப்பாக குழந்தைகள் எப்போதும்
இருக்கிறார்கள். இந்த குழந்தையினுடைய உயிர்ப்பை, இந்த குழந்தையினுடைய கருணையை இந்தக்
குழந்தையினுடைய முன் முடிவின்மையை கலீல் ஜிப்ரான் குழந்தையினுடைய இருப்பாக, இயல்பாக
கவிதையை துவங்குகிறார்.
கவிதை “உங்கள் குழந்தை உங்கள்
குழந்தை அல்ல. இவை எல்லாம் நீங்கள் வைத்திருக்கிற எந்த அம்சத்தோடும் பொருந்தாது. உங்கள்
குழந்தை உங்கள் குழந்தை அல்ல” என்று தொடங்கப்படுகிறது. கலீல் ஜிப்ரானினுடைய குழந்தை
பற்றிய பார்வை புதிய பார்வையாக இருக்கிறது. இந்த புதிய பார்வையை புரிந்து கொள்வதற்கு
குழந்தையை சற்று அருகில் சென்று நாமும் புரிந்து கொள்வதற்கு தேவை இருக்கிறது.
…தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment