அதிகாரம் 1 / குறள் 1 (அகர முதல்)
மனிதன் எப்போதும் கடவுளை தேடுகிறவனாக இருந்ததில்லை.
மனிதனுக்கு கடவுள், படைப்பு, பேரண்டம், இருத்தல், முழுமை இவற்றைப் பற்றிய ஒழுங்குமுறைகள்
குறித்து பெரிய அக்கறை இருந்ததில்லை. கடவுள் பற்றி பேசுகிறவர்கள் எல்லோரும் ஒரு புள்ளியில்
சந்திக்கிறார்கள். அவர்கள் சந்தித்த ஒற்றைப் புள்ளி குறித்து பலநூறு பக்கங்களில் ஆவணப்படுத்தி
இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று ஒரே குரலில் சொல்கிறார்கள்
என்றாலும் கூட கடவுளை அடைவதற்கும் பார்ப்பதற்கும் தடையோடு மனித சமூகம் இருப்பதை, இருக்கிறதை
பார்க்க முடிகிறது.
மனித சமூகத்திற்கு கடவுள் பற்றிய தேடல் விதவிதமான
வேகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது அடர்ந்த வேகமாக மாறுகிற போது தளர்வான முரணாக
மாறுகிறபோது அதன் மீது புதிய விவாதங்கள் பிறக்கக்
கூடும். ஆனால் மனிதன் எழுப்புகிற கடவுள் பற்றிய கேள்வி, கடவுளைப் பற்றிய தேடலும் அல்ல.
கடவுளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற முன்முயற்சியும்
அல்ல. படைப்பு, தான் கற்பனையில் வைத்திருக்கிற படைப்பு, படைக்க வேண்டும் என்று கருதி
வைத்திருக்கிற பொருளை மனிதன் தன் கற்பனையில் வைத்திருக்கிற படைப்பை உருவாக்க வேண்டும்
என்று சிந்தித்து வைத்திருக்கிற படைப்பை தானே உருவாக்குகிற ஆற்றலை பெற்றவனாக நவீன காலத்தில்
மாறி இருக்கிறான். யாராவது ஒருவர் வந்து ஒன்றைப் படைத்துக் கொடுப்பார்கள் என்கிற கற்பனை
நவீனத்தின் வழியாக விஞ்ஞானத்தின் வழியாக இன்று சாத்தியமாயிருக்கிறது. மிக எளிமையாக
மனிதனுக்கு அந்த இடம் கிடைத்துவிடவில்லை. மனிதன் தன் மன இருளில் இருக்கிற எல்லாவற்றையும்
ஒரு முறை, இரு முறை என முயன்று படைத்துக் கொள்ளக் கூடிய வல்லமையோடு இருக்கிற போது மனிதனுக்கு
படைப்பு குறித்து வினா வருகிறது. அப்படித்தான் வரும்.
தனக்குத் தேவையான ஒன்றை, தன் கற்பனையில் இருக்கிற ஒன்றை படைத்துக் கொள்கிற ஆற்றல் வருகிற போது படைப்பு தன் கற்பனைக்கு முன்பு செய்யாத ஒன்றை தாமே படைப்பாய் நின்று செய்து கொள்ள முடியும் என்கிற நிலைக்கு வருகிறபோது படைப்பு என்பது என்ன என்ற கேள்வியை மனிதன் எழுப்புவது விசேஷமானதல்ல. அது இயல்பானது. மனித சமூகத்தில் படைப்பும் கடவுளும் நெருக்கமான ஒப்புமையாக நெருக்கமான உவமைகளாக இருப்பதால் படைப்பும் கடவுளும் ஒப்பீட்டளவில் பொருந்திப் போகிற அளவில் பார்க்கிற போது, இருக்கிறபோது படைப்பு பற்றி மனிதனுக்குள் எழுகிற கேள்வி, கடவுள் பற்றி எழுகிற கேள்வியாக மாறிவிடுகிறது.
இந்த மனிதனுக்கு கடவுளை புரிந்து கொள்வது சிக்கலானதுமல்ல.
எளிதானதுமல்ல. எளிமையாக மனிதனுக்கு தேடுகிற
ஒன்று படைப்பு பற்றிய செயல். படைப்பு பற்றிய
வடிவம். படைப்பு குறித்தான அக உரையாடல். இத்தகைய உரையாடலை துவங்கிய மனிதனுக்கு கடவுள்
குறித்த விசாலமான பார்வையை கடவுள் குறித்த ஆழமான செய்திக் குறிப்புகளை பலரும் வைத்திருக்கிறார்கள்.
ஆய்வு செய்தவர்கள் வைத்திருக்கிறார்கள். உளவியல் ஆய்வாளர்கள் வைத்திருக்கிறார்கள்.
தத்துவ அறிஞர்கள் வைத்திருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்காக வேலை செய்த சமூக புரட்சியாளர்கள்
வைத்திருக்கிறார்கள். யாவரும் மனிதனுக்கு இத்தகைய செய்திகளை வைத்திருக்கிறார்கள். இந்திய
மரபு கடவுளை ஒரு மனிதன் தன் ஆணவத்தை கரைத்து, இயற்கையோடு பிரபஞ்சத்தோடு தம்மை இணைத்துக்
கொள்கிற நிலைக்கு பெயர் கடவுள் என்று வைத்திருக்கிறது.
‘கட உள்’. உள்ளத்தைக் கடந்து போவது என்ற ஒரு
எளிய பொலிப்புரை கடவுளுக்கு சொல்லப்படுவதுண்டு. கடவுள் என்பது உள்ளம் கடந்தவர். உங்கள்
அறிவினை கடந்தவர். மனிதனுடைய ஆணவக் குறிப்புகளை கடந்தவர் என்றும் கிழக்கத்திய மரபுகளில்
சொல்லப்படுவதுண்டு.
சமாதி என்ற ஒரு சொல் இருக்கிறது. இதற்கு இணையான
வேறு மொழிச் சொற்கள் அகராதியில் பார்க்கிறபோது என்னால் காண முடியவில்லை. வேர்ச் சொல்லாக
இந்திய மொழிகளில் சமாதி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மொழிகளில் பலமொழிகளில்
சமாதி என்கிற சொல் இதே சொற்குறிப்புகளிலே பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது. சம
ஆதி - ஆதிக்கு சமமான என்ற பொருளோடு சமாதி என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஒரு மனிதன்
சமாதி நிலையை எய்த வேண்டும் என்று யோகாவை உருவாக்கிய பதஞ்சலி மாமுனி குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதனின் வாழ்வியல் இலக்கு சமாதி என்பதாகும். யோகாவில் யமம், நியமம், ஆசனம், பிராணயாமம்
என்று படிக்கட்டுகளை அடுக்குகிற பதஞ்சலி மாமுனி சமாதி என்று மனிதனுடைய இலக்கை நிறைவு
செய்கிறார். மனிதன் ஆதிக்கு சமமாக தன்னை உயர்த்திக் கொள்வது யோகாவின் இலக்காக இருக்கிறது.
இன்றும் சித்த மரபுகளில் இயற்கையோடு தம்மை கரைத்துக் கொண்டவர்களை சமாதி நிலை எய்தியவர்
என்று குறிப்பிடுவது வழக்கம். இந்தியாவில் தமிழ் சூழலில் இலக்கிய ஆவணங்களில் பார்க்கிறபோது,
தல வரலாறுகளில் பார்க்கிறபோது சமகால மனிதர்களால் போற்றப்படுகிற, மதிக்கப்படுகிற பலரும்
இயற்கையோடு தம்மை கரைத்துக் கொண்டவர்கள் என்கிற தன்மையில் சமாதி நிலை எய்தவர்கள், சமாதி
நிலையை மேற்கொண்டவர்கள், இயற்கையோடு தம்மை கரைத்துக் கொண்டவர்கள் என்கிற கருத்தாகங்களில்
வழிபடப்படுகிறார்கள்.
ஆக, இந்திய சமூகத்தில், கிழக்கத்திய மரபுகளில்
கடவுள் என்பது ஒரு மனிதன் அடையக்கூடிய நிலையாக இருக்கிறது. ஒரு மனிதன் அடையக்கூடிய
நிலை. ஒரு மனிதன் அகமாற்றம் அடைந்து கடவுளாக மாறிவிட முடியும். ஒரு மனிதன் தன்னைத்
தானே உயர்த்திக் கொள்ள முடியும். ஒரு மனிதன் தன்னளவில் தனக்குள் இருக்கிற ஒன்றை கழற்றி
எறிவதன் மூலமாக, உருமாற்றிக் கொள்வதன் மூலமாக அவனே கடவுளாக மாறிவிட முடியும் என்கிற
கருத்தாக்கமும் வழிபாட்டு முறைகளும் முன்னெடுப்புகளும் இந்திய சமூகத்தில், கிழக்கத்திய
சமூகத்தில் பார்ப்பதற்கு இருக்கின்றன.
இந்த வகையில் ஒரு மனிதன் ஆதியோடு இருக்கிறான்.
ஆதியோடு பயணிக்கிறான். ஆதியோடு சமமாகிறான். ஆதிக்கு சமமாக தன்னை உயர்த்துவதன் வழியாக
சமாதி நிலையை எய்துகிறான் என்கிற நம்பிக்கை தரவுகள் காண முடிகிறது. ஒரு மனிதன் கடவுளாக
மாற முடியும் என்பதை ஏற்றுக்கொள்கிற சமூக நிலையில்,
ஏற்றுக்கொள்கிற உரையாடல் களத்தில் கடவுள் என்பது, படைப்பு என்பது ஏற்படுத்துகிற அதிர்வும்
படைப்பை நோக்கிய, கடவுளை நோக்கிய மனிதனின் கேள்வியும் தான் உயர்த்திக் கொள்கிற இடம்
நோக்கி நகர்த்துவதற்கு வாய்ப்புள்ள சமூகமாக, வாய்ப்புள்ள சமன்பாடுகளை வைத்திருக்கிற
சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment