அதிகாரம் 84 - பாடல் 834
பெருமதிப்புக்குரிய அன்பர்களுக்கு,
வாழ்வியல் பற்றி நாம் புரிந்து கொள்வதற்கு
நிறைய அம்சங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் முழுமையாகவே இந்த வாழ்வை நிறைவுடன் வாழ்வதே
சரியானது என்பது வாழ்வியல் குறித்த கோட்பாடு.
அறியாமையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு,
கோபதாபங்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கு நல்ல உறவுகளை, நட்பை பேணிக்கொள்வதற்குரிய
எல்லா அம்சங்களையும் தம் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவுமான
ஒரு பெரும் பயணத்தை வாழ்வியல் பயணமாக, வாழ்வியலின் அடிப்படைக் கூறாக நாம் பார்க்க முடிகிறது.
இந்த புவியில் பிறக்கிற எல்லா உயிர்களும் சமமானவை.
மனிதன் சற்று உயர்ந்த, சிறந்த குணாம்சங்கள் கொண்டிருக்கிற நிலை என்பது மற்ற உயிர்களை
ஒப்பிடுகிற போது தம் வாழ்வை எவ்வாறு செம்மையாக்கிக் கொள்கிறார் என்பதில் அடங்கி இருக்கிறது.
ஒரு மனிதனின் உயிர் பிறப்பு என்பது மற்ற உயிர்களின் உயிர் பிறப்பை ஒத்திருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்வியல் பயணம் நிறைவடைகிற போது அது மற்ற உயிர்களைப் போல இருக்கக் கூடாது என்பது வாழ்வியல் குறித்தான தேடலும் வளர்ச்சியுமாக இருக்கிறது. ஆனால் மனிதன் பிறக்கிற போது மற்ற உயிர்களைப் போல அறியாமையிலேயே இருக்கிறான். மனிதன் தொடர்ந்து அறியாமையிலேயே இருக்கிறான், பேதமையிலேயே இருக்கிறான் என்று வாழ்வியல் குறித்த முன்னோடிகளும் தத்துவஞானிகளும் தத்தமது உரையாடல்களில் பேசுகின்றனர், முன்வைக்கின்றனர்.
மனிதன் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அவர்களது
பேதமை களையும் வரை அவர்கள் வாழ்வு வாழ்ந்ததாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்று தத்துவ
மரபுகள் முன்வைக்கின்றன.
அறியாமை என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும்
இருக்கிறது. உடல் பற்றிய அறியாமை நோயாக இருக்கிறது; உயிரின் மெய்ப்பொருள் பற்றிய அறியாமை
பாவங்களாக இருக்கிறது; வாழ்வியலின் அறிவு பற்றிய அறியாமை அவரது அறிவின்மையாக இருக்கிறது.
ஒரு மனிதன் கல்வி சாலையில் கல்வி கற்க முடியும்.
பல்கலைக்கழகங்களில் தேவைக்கு அதிகமாக பட்டங்களை பெற முடியும். பொருளாதாரத்தில் மேம்பட்ட
வெற்றியாளராக மாற முடியும். அரசியல் தளத்தில் உயர்ந்த அதிகாரியாக மாற முடியும் என்றாலும்
கூட அவர் தம் வாழ்வை எவ்வாறு அறிந்து வைத்திருக்கிறார் என்பதிலேயே அவரது வாழ்வு நிறைவுக்குரியதாக
கணக்கில் கொள்ளப்படுகிறது. பட்டங்கள் பெற்றவர் யாவரும் அறியாமையிலிருந்து விடுபட்டவராக
தத்துவ மரபு கணக்கில் கொள்வதில்லை. பெரும் அதிகாரியாக இருப்பவர் வாழ்வை செம்மையாக வாழ்ந்து
கொண்டிருக்கிறார் என்று பொருள் கொள்ள முடியாது. உயிர் பற்றி, உயிரின் மேன்மை பற்றி,
ஆன்மாவின் விடுதலை பற்றி தெரியாதவர் தம் வாழ்வை சிறப்பாக வாழ்கிறார் என்று கணக்கு வைக்க
முடியாது. தமக்கு ஏற்பட்டிருக்கிற நோய் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் அறியாமையிலேயே
இருக்கிறார்கள் என்று பொருள்படுகிறது.
ஒரு மனிதன் அறிந்து கொள்வதிலேயே வாழ்வியலை
கடைபிடிக்க முடியும். தம் வாழ்வின் முழுப் பொருளை புரிந்து கொள்வது என்பது அவர் தமக்கு
ஏற்பட்டிருக்கிற, தமக்குள் இருக்கிற பேதமையில் இருந்து விலகிக் கொள்ள முடியும். பேதமை
இல்லாத மனிதர்களே முழுமையான மனிதர்களாக, முழுமையாக வாழ்பவர்களாக கருத முடியும். பேதமை
என்பது புரிதலின்மை, பேதமை என்பது கற்றல் இல்லாமை, பேதமை என்பது உறவு பாராட்டுவதில்
ஏற்படுகிற, பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டிருக்கிற பலவீனமான பகுதி. இவை எல்லாமும் பேதமை.
வள்ளுவர் பேதமையை கற்றல் இல்லாத ஒன்றாகவும்
கூறுகிறார். உணர்ந்துகொள்ளாத ஒன்றாகவும் கூறுகிறார். கற்றலையும் உணர்ந்து கொண்டதையும்
பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாதவர்களும் பேதமை உள்ளவர்களாகவே வள்ளுவர் வரையறுக்கிறார்.
கற்றல் என்பது என்ன? உணர்தல் என்பது என்ன?
பகிர்ந்து கொள்வது என்பது என்ன? என்றெல்லாம் கூட நாம் விவரித்து உரையாடிப் பார்க்க
முடியும். நீங்கள் உங்கள் வாகனத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பயணிக்கிறீர்கள் என்றால் நீங்கள் திட்டமிட்ட தூரத்திற்கு குறிப்பிட்ட அளவு எரிபொருள் தேவைப்படும். ஒரு குறிப்பிட்ட
அளவு எரிபொருள் போதும் என்று நீங்கள் திட்டமிட்டுக் கொண்டு பயணிக்கிற போது நீங்கள்
சென்று சேரும் இடத்திற்கு முன்பே உங்கள் வாகனத்தில் எரிபொருள் தீர்ந்து விடும் என்றால்
அடுத்த முறை அந்த தூரத்திற்கு உரிய எரிபொருளை வழக்கத்தை விடவும் கூடுதல் அளவோடு நிரப்பிக்
கொள்கிற புத்திசாலித்தனத்தை கற்றுக் கொள்வீர்கள். ஒரு நிகழ்வில் இருந்து உங்களைச் சுற்றி
நடக்கிற செயல்பாடுகளில் இருந்து ஒன்றை புரிந்து கொள்வது கற்றல் என்று பொருள்படும்.
கல்விக்கூடங்களில் அறிவை சேகரிப்பது, தகவல்களை
சேகரிப்பது முழுமையான கற்றல் ஆகாது. ஒரு மனிதன் தன்னளவில் நகர்கிறபோது, வாழ்வை வாழ்ந்து
பயணிக்கிற போது அந்த மனிதனைச் சுற்றி நடக்கிற உள்ளும் புறமுமாக தென்படுகிற ஒவ்வொரு
நிகழ்விலும் அந்த மனிதன் புரிந்து கொள்கிற, உணர்ந்து கொள்கிற செய்தியே புத்திசாலித்தனமாக
பொருள் கொள்ளப்பட்டு கற்றலாக விளக்கப்படுகிறது. நிகழ்விலிருந்து ஒன்றை புரிந்து கொள்வது
கற்றல். அவ்வாறு கற்றுக் கொள்வதை ஓதுவது என்று வள்ளுவர் வரையறுக்கிறார். ஓதுவதும் உணர்வதும்
நிகழ்வின் அடிப்படையில் உள்ளும் புறமுமாக நிகழ்வது. நீங்கள் உணர்ந்து ஓத முடியும்;
ஓதி உணர்ந்து கொள்ள முடியும். ஒன்றை உணர்ந்து கற்றுக் கொள்ள முடியும்; கற்றுக் கொள்வதன்
வழியாக ஒன்றை உணர முடியும். ஓதி உணர்ந்து என்று ஒரு செய்யுளை, ஒரு பாடலை வள்ளுவர் துவங்குகிறார்.
அறியாமை குறித்து, பேதமை குறித்து விளக்குகிற
வள்ளுவரின் இந்த பாடல் மனிதனின் அடிப்படை வாழ்வியல் கோட்பாட்டை முன்னிறுத்துகிறது,
வரையறுக்கிறது, விளக்கிச் சொல்கிறது. ஒரு மனிதன் தன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட
ஒன்றை, உணர்ந்து கொண்ட ஒன்றை பிறரோடு பகிர்ந்து கொள்வது என்பது நிகழ்ந்துவிடும். ஒரு
விளக்கு உரிய வெளிச்சத்தோடு எரிந்து கொண்டிருக்கிற போது அந்த வெளிச்சத்தை விளக்கின்
முயற்சியால் கூட நிறுத்தி விட முடியாது என்கிற காட்சியை நாம் பார்க்க முடியும். கற்றலும்
உணர்தலும் ஒரு மனிதனுக்குள் நிகழ்கிற போது விளக்கு வெளிச்சம் போல் சுடர் விடுகிற போது
அந்த எரி ஜுவாலையில் இருந்து வெளிப்படுகிற ஒளி
பார்க்கிற, கடந்து போகிற எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளப்படுகிற ஒன்றாக மாறிவிடும்.
கற்றலும் உணர்தலும் ஒரு மனிதனுக்குள் நிகழ்கிற போது பகிர்தல் என்பது இயல்பாக வெளிப்படுகிற
ஒன்றாக மாறிவிடும் என்று நான் பார்க்கிறேன்.
வள்ளுவர் ‘ஓதி உணர்ந்தும் பிறருக்கு உரைத்தும்’
என்று அந்த செய்யுளில் குறிப்பிடுகிறார். பிறருக்கு உரைத்து என்பது நிகழ்வது. அது நிகழ்த்தப்படுவது
அல்ல. எப்போது ஒரு மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறானோ, எப்போது ஒரு மனிதன் உணர்ந்து கொண்டிருக்கிறானோ
உணர்வுகளும் கற்றலும் தருகிற புத்திசாலிதனத்தோடு ஒரு மனிதன் விழிப்பு பெற்றவனாக பேதைமை
நீங்கியவனாக இருக்கிறானோ அந்த பேதைமை நீக்கம் பெற்றவுடன் அந்த ஒளி சுடர் வெளிச்சத்தை
வீசுவது போல பகிர்ந்து கொள்ளுதலும் உரைத்தலும் நிகழ்ந்து விடுகிறது என்று நாம் பார்க்க
முடியும்.
பேதைமை அப்படித்தான் நீங்குகிறது. பேதமை, அறியாமை, விழிப்புணர்வின்மை எல்லாமும் பேதமை என்ற ஒற்றைச் சொல்லிற்குள் பொறுத்து விட முடியும்.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment