Tuesday, November 22, 2022

திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல் - 3 - பகுதி 2

 

                      அதிகாரம் 84 - பாடல் 834 

            ஓதிஉணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்தான் அடங்காப்
                பேதையின் பேதையர் இல்.

ஒரு மனிதனின் வாழ்வு முழுமையாக நிறைவடைவதற்கு, ஒரு மனிதனின் வாழ்வு முழுமையாக பயணப்படுவதற்கு அவன் எல்லா அம்சங்களிலும் பேதமை நீங்கியவனாக இருத்தல் அவசியம்.

உடல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத பேதமையை நோய் என்று நாம் குறிப்பிட முடியும். தத்துவ ஞானி ஓஷோ ஓர் இடத்தில் உரையை துவங்குகிற போது மனிதனே நோய் என்று துவங்குகிறார். மனிதனே நோய் என்பது மனிதனுக்கு உடல் பற்றி இருக்கிற பேதமை. மனிதனுக்கு உடல் பற்றி விழிப்புணர்வு இல்லாததே நோயாக வெளிப்படுகிறது ஓஷோ அவ்வாறு குறிப்பிடுகிறார். ‘மனிதனே நோய்’ என்று  தம் உரையைத் துவங்குகிறார்.

ஆன்மாவின், உயிரின் மெய்ப்பொருளை புரிந்து கொள்ளாத ஒன்றை பாவம் என்று தத்துவ மரபு கருதுகிறது. ஆன்மாவின் மெய்ப்பொருள் பற்றி தெரியாத விழிப்பற்ற நிலையை, பேதமையை பாவம் என்று குறிப்பிட முடியும். இயேசு கிறிஸ்து உலகில் பிறந்த அனைவரையுமே பாவிகள் என்று வரையறுக்கிறார். இயேசு கிறிஸ்துவின் பாவி என்ற சொல்லுக்கு ஒரு மனிதன் தன்னளவில் இருக்கிற உயிர் பற்றி, ஆன்மா பற்றி கொண்டிருக்கிற அறியாமையே என்று பொருள்.

மகாவீரர் விழிப்புணர்வின்மையை குறிப்பிடுகிறார். எல்லா மனிதர்களும் பேதமை நீங்கி, நோய் நீங்கி, விழிப்பு பெற்று பாவம் நீங்கி வாழ்கிற வாழ்வை பேதமை நீங்கிய வாழ்வாக தத்துவ மரபு முன் வைக்கிறது. அவர்களது செல்வம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அவர்களது தகவல் சேமிப்பு கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அவர்களது அதிகாரம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. ஒரு மனிதன் தன்னளவில் எப்போது பேதமையை நீக்கி கொள்கிறானோ, ஒரு மனிதன் தன்னளவில் எப்போது விழிப்புணர்வு பெற்றுக் கொள்கிறானோ அவனே மெய்யாகவே நோய் நீங்கியவனாக, மெய்யாகவே பாவம் நீங்கியவனாக, மெய்யாகவே விழிப்பு பெற்றவனாக கருதப்படுகிறான். இது புத்தருக்கு பொருந்தும்; இது மகாவீரருக்கு பொருந்தும்; இது ரமண மகரிஷிக்கு பொருந்தும். இது உலகம் முழுவதும் மனித சமூக மேம்பாட்டிற்காக பாடுபட்ட எல்லா தத்துவ ஞானிகளுக்கும் பொருந்தும்.

யார் ஒருவர் பேதமை நீக்கி இருக்கிறாரோ, யார் ஒருவர் விழிப்புணர்வு பெற்றிருக்கிறாரோ அவரே தம் வாழ்வை நிறைவாக வாழ்கிறார் என்று தத்துவ மரபுகள் பொருள் கொள்கின்றன. அந்த வகையில், ஒரு மனிதன் பிறப்பிலேயே பேதமையோடு பிறக்கிறான். ஒரு மனிதன் பிறப்பிலேயே அறியாமையோடு பிறக்கிறான். ஒரு அறியாமை தான் பிறக்கிறது. ஒரு பேதமை தான் பிறக்கிறது. பேதமையும் அறியாமையும் விழிப்புணர்வின்மையும் தான் பிறக்கிறது. பிறந்த பின் அது கற்றுக்கொள்ள துவங்குகிறது. உணர்ந்து கொள்ள துவங்குகிறது. உணர்வும் கற்றலும் ஒளியாக ஜொலிக்கிற போது அது பரவத் துவங்குகிறது. இது பரவுகிறது என்கிற விழிப்புணர்வோடு அடங்கி, சூல் கொண்டு தன்னளவில் இருக்கிற விழிப்புணர்வாக, முழு உணர்வாக இருப்பதே அறிவாக, முழுமையான வாழ்விற்கான இலக்கணமாக வள்ளுவர் வரையறுக்கிறார். இப்படி இல்லாத பேதமை எவ்வாறு வாழ்ந்தாலும் அது மனித வாழ்வாக கணக்கில் கொள்ள முடியாது என்று வள்ளுவர் முன் வைக்கிறார்.

“ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் 

பேதையின் பேதையர் இல்”

இந்த குறள் ஆழ்ந்த பொருள் உள்ளது. கனமான செய்தியைச் சொல்கிறது. ஓதி உணர்ந்து என்பதை உணர்ந்து ஓதி என்றும் நாம் பொருள் கொள்ள முடியும். ஓதுவதும் உணர்வதும் உணர்வதும் ஓதுவதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. ஓதுகிற போது உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொண்ட போது ஒன்றை ஓதவும் முடியும். ஓதுவது என்பது கற்றலே, தெரிந்து கொள்வதே, படித்துக் கொள்வதே, அனுபவம் பெற்றுக் கொள்வதே என்று நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

கற்றுக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் கற்றதும் உணர்வதும் பெற்ற பின்பு அது ஒளியாக வெளிப்படுகிற போது அதை புரிந்து கொண்டு அதன் வழிப்படாதவர்கள் பிறக்கிற பேதையிலேயே அதிக அறியாமை உள்ளவர்கள் என்று வள்ளுவர் இந்த பாடலை முடிக்கிறார்.

யார் ஒருவர் மிகுந்த அறியாமையுடையவர். இந்த உலகில் பிறக்கிற எல்லா குழந்தைகளும் ஓஷோ சொல்வது போல நோயாளிகள். இந்த உலகில் எல்லா குழந்தைகளும் பிறக்கிறபோது பாவிகளாக பிறக்கிறார்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். இந்த உலகில் பிறக்கிற யாவரும் புனிதமற்றவர்கள் என்று தத்துவ மரபுகள் கூறுகின்றன. அப்படி இருக்கிற சூழலில் உண்மையிலேயே யார் பேதைத் தன்மையோடு இருக்கிறார். உண்மையிலேயே யார் அறியாமையோடு இருக்கிறார். யார் மிகுந்த போலித்தனத்தோடு இருக்கிறார். யார் விழிப்புணர்வோடு இல்லை என்று வரிசைப்படுத்துகிற வள்ளுவர் இந்தக் குறளில் சொல்கிறார், பேதைகளிலேயே பெரும் பேதை, அறியாமையிலேயே மிகப்பெரிய அறியாமை கொண்டவர் கற்றுக்கொள்ளாதவர், உணர்ந்து கொள்ளாதவர், கற்றும் உணர்ந்தும் கொண்ட செய்திகளை பிறரோடு பகிர்ந்து கொள்ளாதவர் இந்த உலக பேதைகளிலேயே பெரும் பேதையாக வள்ளுவர் வரையறுக்கிறார்.

இந்த உலகில் தத்துவஞானிகள் சொல்வது போல அனைவரும் பேதைகளாக பிறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வாழ்வியல் பயணத்தில் வாழ்க்கைக்குரிய இலக்கை நோக்கி நகர்கிற போது கற்றுக் கொள்வதும் நகர்ந்து கொள்வதும் உணர்ந்து கொள்வதும் கற்றதையும் உணர்ந்ததையும் பிறரோடு பகிர்ந்து  கொள்வதும் நிகழ்கிற போது அவர் தன்னளவில் ஒளி பெற்றவராக மாறுகிறபோது அந்த தனிமனிதனின் பேதை குணம் மங்கத் துவங்குகிறது. விடுபடத் துவங்குகிறது. இப்படி செய்ய முடியாதவர் பேதைகளிலேயே பெரும் பேதையாக மாறிப் போகிறார். எல்லோரும் பேதைதான். பிறக்கிற எல்லோரும் பேதைதான். பிறக்கிற எல்லோரும் பாவிகள் தான். பிறக்கிற எல்லோரும் நோயுற்றவர்கள் தான். தமக்கு ஏற்பட்டிருக்கிற நோயையும் தமக்குள் இருக்கிற பாவங்களையும் தமக்குள் இருக்கிற அறியாமையையும் விடுவித்துக் கொள்வதற்கான கல்வியையும் உணர்வையும் பகிர்ந்து கொள்வதற்குரிய பக்குவத்தையும் பெற்றுக்கொள்ளாதவரே பெரும் பேதை என்கிற தன்மையோடு இந்த வாழ்வியலில் இலக்கணத்தை, பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

 ஒரு மனிதன் பேதமையில் இருந்து விடுபடுவதற்கு, ஒரு மனிதன் விழிப்பு பெற்றவனாக மாறிக் கொள்வதற்கு இருக்கிற எல்லா சாத்தியங்களும் பயன்படுத்திக் கொள்வதற்கு காத்திருக்கின்றன. அப்படி பயன்படுத்தி நகர்ந்து செல்கிற புத்தர்களும் மகாவீரர்களும் இந்த பூமியில் வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த வகையில் பயணிக்கிற வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புத்தனின் கூறு இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சாராம்சம் இருக்கிறது. இவற்றை புரிந்து கொள்ள முடியாதவர் பெரும் அறியாமை கொண்டவராக இருக்கிறார் என்பதை ஒரு வாழ்வியல் புரிதலோடு வள்ளுவர் முன்வைக்கிறார். வள்ளுவரின் ஆழமான, மிகவும் பொருள் பொதிந்த, அடர்ந்த பொருள் பொதிந்த குறள்,

“ஓதி உணர்ந்து பிறருக்கு உரைத்து தான் அடங்கி வாழ்வதே பெரும் வாழ்வு. பேதமை இல்லாத வாழ்வு. அவ்வாறு வாழாதவர் பேதைகளிலேயே பிறக்கிற எல்லா பேதைகளையும் விட மிகுந்த அறியாமை உடையவர். மிகுந்த பிற்போக்கானவர். மிகுந்த சோர்வுக்குரியவர் என்று இந்தக் குறளின் வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

“ஓதிஉணர்ந்தும் பிறருக்கு உரைத்தும்தான் அடங்காப்

பேதையின்  பேதையர் இல்”.

நாம் பேதையில் இருந்து. பேதமையில் இருந்து விடுபட்டுக் கொள்வதற்கு, வாழ்வியலை புரிந்து கொள்வதற், வாழ்வியலின் இலக்கணத்தின் படி வாழ்வதற்கு எல்லா சாத்தியங்களையும் உரையாடிப் பார்க்க முடியும். செய்து பார்க்க முடியும். வெற்றி பெறவும் முடியும். இதற்குப் பின்னால் நாம் புரிந்து கொள்கிற, தேடிக் கொள்கிற, பரிசோதித்துக் கொள்கிற  பொருள் நாம் பேதியாக இருக்கிறோம். நமது பேதமை விலகிக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஆழமாக பார்க்க வேண்டும். எனது பேதமை முழுமையாக விடுபடுவதற்கு நாம் வாழ்வியலை செம்மையாக புரிந்து கொள்வதற்கு ஓதுவதும் உணர்வதும் பெற்றதை கற்றதை உரைப்பதும் என்று துவங்க வேண்டி இருக்கிறது. இப்படி துவங்க முடியாத ஒருவன் பேதைகளில் பெரும் பேதையாக இருக்கிறான் என்று வள்ளுவரின் கண்டனத்தை கணக்கில் வைத்துக் கொண்டு ஒரு மனிதனின் வாழ்வு பேதமை நீங்கிய வாழ்வை நோக்கி நகர வேண்டும் என்கிற அக்கறையோடு வாழ்வை மேற்கொள்வது வள்ளுவம் காட்டுகிற ஆகச்சிறந்த வழி. நாம் பேதமையை நீக்குவதற்கு, கற்பதும் கற்றதை உணர்வதும் உணர்ந்ததை உரைப்பதுமாக வாழ்க்கை பயணத்தை உரையாடலும் செயல்பாடுமாக துவங்குவது அவசியம். 

                            ...தொடர்ந்து பேசுவோம்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...