Thursday, November 24, 2022

திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல் - பாயிரம்

 

                                                                  பாயிரம்

www.swasthammadurai.com


அன்பிற்குரியவர்களே!

 ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான கருத்தாக்கம், நம்பிக்கை, விருப்பம் என்கிற வகைகளில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது கடவுள்.

  மனிதனுடைய எல்லா வாழ்வியல் அம்சங்களிலும் கடவுளின் இருப்பும் கடவுளின் இயக்கமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. உரையாடலுக்குறியதாக இருக்கிறது. மனித சமூகம் துவங்கிய நாள் தொட்டு தனக்கு மேலே இருக்கின்ற ஒன்றை குறித்து வினா எழுப்பிய உரையாடல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. 

கடவுள் என்கிற கருத்தாக்கத்தை சமூகம்தான் உருவாக்கி இருக்கிறது என்று சொல்கிற தத்துவ ஆய்வாளர்களும் உண்டு. கடவுள் என்கிற கருத்தாக்கத்தை மனிதனே கண்டு உருவாக்கியிருக்கிறான் என்று சொல்கிற நம்பிக்கையாளர்களும் உண்டு. தத்துவ ஆய்வாளர்களும் உண்டு. நான் கடவுளை கண்டிருக்கிறேன் என்று கடவுளைக் கண்டவர்கள் பதிவு செய்து வைத்திருக்கிற பதிவுகள் மத நூல்களில் இருக்கின்றன. இவ்வாறு கடவுள் குறித்து நிறைய கருத்தாக்கங்கள் மனித சமூகத்திற்கு தொடர்ந்து வழி காட்டுவதற்கும் விவாதிப்பதற்குமாக இருந்து கொண்டே இருக்கின்றன.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிற காலத்திலும் கூட கடவுள் குறித்த விவாதங்கள் தொழில்நுட்பத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

கடவுள் என்கிற நபர், கடவுள் என்கிற ஆற்றல், கடவுள் என்கிற நம்பிக்கை, கருத்தாக்கம் இவை எல்லாமும் இருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வு ஒரு பக்கம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மனிதனைப் பொறுத்தவரை கடவுள் பற்றிய உரையாடல் அவசியப்பட்டுக்  கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடவுளை ஏற்றுக் கொள்கிற கூட்டமும் கடவுளை மறுக்கிற கூட்டமும் கடவுள் இருந்துவிட்டு போகட்டும் என்கிற கூட்டமும் கடவுள் இருக்க முடியாது என்கிற கூட்டமுமாக மனித சமூகம் கலந்து, பிரிந்து இருப்பது வாழ்வியல் முறையில் மறுக்க முடியாத அளவிற்கு காண்கிறோம். இந்த காட்சியை நாம் மறுப்பதற்கு இல்லை. தவிர்க்க முடியவில்லை. கடவுள் பற்றிய மெய்ப்பொருள் ஒருபுறம், கடவுளின் மெய்ப்பொருள் பற்றிய உரையாடல் ஒரு புறம். ஆனால் கடவுள் குறித்து கடவுளை சுற்றி பேசுகிற உரையாடலை இந்த சமூகம் காலம் காலமாக விரும்புகிறது. அதற்கு பொருத்தமான காரணங்களையும் சமூக சீர்திருத்த மாண்புகளையும் மனித சமூகம் கடவுள் குறித்த உரையாடலுக்குள் வைத்திருக்கிறது.

இந்த உரையாடலின் அடிப்படையில் கடவுளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது ஒரு மனிதனுக்கு மிகுந்த சவாலானது. ஒரு மனிதன் தன்னளவில் ஒன்றை கற்றுக் கொள்ளவும் கற்றுக்கொண்டதை உரையாடவும் பகிர்ந்து கொள்ளவும் செய்கிற முயற்சியை போல கடவுள் பற்றிய உரையாடலை எளிமையாக செய்து விட முடியாது.

கடவுளை இருப்பது போலவும் இல்லாதது போலவும் பேசுவதற்கு தன்னளவில் பெரிய ஆய்வினை ஒரு தனி மனிதன் செய்ய வேண்டியிருக்கிறது. கூட்டமாக வாழ்கிற சமூகத்தில், சமூகத்திற்குள் கூட்டமாக வாழ வேண்டும் என்கிற தனிமனிதனின் மனநிலையில் கடவுள் கேள்விப் பொருள் அல்ல, விவாதப் பொருள் அல்ல.  அது நம்பிக்கையின் கருத்துரு.  நீங்கள் கடவுளை விவாதிக்காமலே கடவுளை பற்றி எந்தவிதமான உரையாடலும் கேள்வியும் நடத்தவோ எழுப்பவோ வாய்ப்பில்லாமலேயே முழுக்க நம்பிக்கையோடு கடவுளை நீங்கள் தொழ முடியும். ஆராதிக்க முடியும். பயணிக்க முடியும். ஆனால் ஒரு மனிதன் கடவுளை சமூக உறவோடு அணுகுகிற போது நம்பிக்கை வெற்றி பெறவும் தேக்கமடையவும் வாய்ப்பு இருக்கிறது.

கடவுள் பற்றிய கருத்தாக்கத்தில் ஒரு தனி மனிதனின் தேடல் என்பது முதன்மையானதாக, முக்கியமானதாக மாறுகிற வரை கடவுள் என்கிற கருத்தாக்கம் தனி மனிதனின் தேடலின் அடிப்படையில் வார்த்தை கோர்வைகளாக, சொற்றொடர்களாக முடிந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

என்னைப் பொறுத்த அளவில், கடவுள் என்கிற கருத்தாக்கத்தை ஆய்வாளர்களும் தத்துவஞானிகளும் போற்றவும் மறுக்கவும் செய்திருக்கிறார்கள். இருவேறு வாதங்களும் மறுப்பிற்குரிய வாதங்களும் போற்றுதலுக்குரிய, ஏற்புக்குரிய வாதங்களும் சம எடை உள்ளவையாக இருக்கின்றன. இரண்டு வாதங்களையும் பின்பற்றுகிற மக்களின் வாழ்க்கை முறை அவரவர் அளவில் போதுமானதாக இருக்கிறது. தீர்வுக்குரியதாக இருக்கிறது. வழிகாட்டுதலுக்குரிய எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

கடவுளைப் பற்றி சொற்போர் நிகழ்த்தி தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை எனும் அளவிற்கு மிக நுட்பமான சொற்களுக்குள் அடங்காத பகுதியாக இந்த கருத்தாக்கம் இருக்கிறது. கடவுளை நம்புகிறவர்கள், கடவுளை போற்ற பரிந்துரை செய்கிறவர்கள், பெரும் சமூக மாற்றத்தை, வாழ்வியல் மாற்றத்தை உருவாக்கியவர்கள் எல்லாமும் கூட இருவேறு அம்சங்களிலும் இருக்கிறார்கள். இந்த உலகின் வாழ்க்கை முறையை வரலாற்று பகுதியை தனக்கு முன்பாகவும் பின்பாகவும் என்று கோடு கிழித்துக் காட்டும் அளவிற்கு தம் வாழ்வியலை பதிவு செய்த வரலாற்று ஆளுமை இயேசு கிறிஸ்து.

இயேசு கிறிஸ்துவினுடைய வருகையை வைத்தே இந்த சமூக வாழ்வியல் பயணம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவிற்கு முன்பு, இயேசு கிறிஸ்துவிற்கு பின்பு எனும் சொல் உருவாகும் அளவிற்கு இயேசு கிறிஸ்துவினுடைய செயல்பாடு இந்த சமூகத்தில் செல்வாக்கு செலுத்தி இருக்கிறது. இயேசு கிறிஸ்து கடவுளை பரமபிதா என்று நம்பிக்கை கொள்கிறார். தூயஆவி என்று பரிந்துரை செய்கிறார். தூய ஆவியின் பிதாமகன் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். இந்த உலகில் சமூக நெருக்கடிகள் எல்லாவற்றிற்கும் தீர்வாக இருப்பது மனம் சேர்த்து வைத்திருக்கிற தத்தமது கோட்பாடுகள். எல்லா கோட்பாடுகளும் மறுப்பதற்குரியவை. எல்லா கோட்பாடுகளும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியவை. எல்லா  கோட்பாடுகளையும் ஒருமுறை களைத்து போட்டு சீர் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று எல்லா கோட்பாடுகளையும் நிராகரித்து கோட்பாடுகளை நிராகரிக்கிற ஒரு தனி மனிதனே தனக்கு  ஒளியாக, விளக்காக, அறிவாக மாற முடியும் என்று முன் வைக்கிற புத்தர் இயேசு கிறிஸ்துவின் அளவிற்கு சமூகத்தில் கொண்டாடப்படக்கூடியவர்.  இந்த உலகத்தில் மாற்றத்திற்கான வழி வகையை செய்தவர். புத்தரின் கோட்பாடு கடவுளின் கருத்தாக்கத்திற்கு  மறுப்பானது.

சமூக மாற்றத்திற்காக வேலை  செய்த, சமூக மாற்றத்திற்காக ஒழுக்க நெறிகளைப் பேசிய தத்துவ  ஞானிகள் கடவுளை ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். பின்நவீனத்துவம் பேசிய இலக்கியத்தை, வரலாறை, அறிவியலை, வாழ்வியலை மிக நுட்பமாக பேசிய சமூகத்திற்கு அடிக்கோடிட்டு காட்டிய பெரும் தத்துவ ஆய்வாளர்கள் நீட்சே உள்ளிட்ட பலரும் கடவுளை மறுத்திருக்கிறார்கள். இப்படி கடவுள் கருத்தாக்கம் இரு வேறு தளங்களிலும் விவாதத்திற்குரிய பொருளாக இருக்கிறது. ஒரு மனிதன் கடவுளை எவ்வாறு பார்ப்பது? எவ்வாறு புரிந்து கொள்வது? என்கிற வாதம் கிழக்கத்திய மரபில் சற்று முற்போக்கானது. உலக அளவில் கடவுள் கொள்கைகள் விதவிதமாக வளர்த்தெடுக்கப்பட்டாலும் கிழக்கத்திய மரபில் மனிதன் கடவுளை புரிந்து கொள்வதற்கு வழிமுறைகளை வைத்திருக்கிறது மரபார்ந்த கோட்பாடுகள். ஒரு மனிதன் தனக்குள் இருக்கிற கடவுள் தன்மையை புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாக கிழக்கத்திய மரபு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது. நிறைய கோட்பாடுகள், கிழக்கத்திய மரபார்ந்த செயல்பாடுகள், வழிமுறைகள் கடவுள் குறித்த பயிற்சி முறைகளை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மனம் குறித்த ஆய்வுகளை இலக்கியங்கள் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. இப்படி கடவுள் பற்றிய ஆய்வுகளை ஒட்டுமொத்த வாழ்வியல் மரபுகளில் இருந்து ஒப்பிடுகிறபோது கிழக்கத்திய வாழ்வியல் மரபு சற்று முற்போக்கான வேகத்தோடு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. கடவுளை தனிப் பொருளாக பார்க்கிற நிலையிலிருந்து நகர்ந்து, காண்கிற எல்லா பொருட்களிலும் கடவுளின் அம்சம் இருப்பதாக கருதுகிற கருதுகோள் கிழக்கத்திய மரபில் இருக்கிறது.

மேற்கத்திய கடவுள் பற்றிய கோட்பாடுகளில் பார்க்கிறபோது கடவுள் வழங்கிய மதிப்புமிக்க மறை நூலைத் தவிர மற்ற நூல்கள் கடவுள் பற்றிய இருப்பை பேசி விட முடியாது. ஒரு நூல் மட்டும் தான் கடவுள் வழங்கியிருக்கிறார். அதற்கான விளக்கங்களை அவரே உள்ளடக்கி அந்த நூலை ஏற்றி இருக்கிறார். அந்த நூலுக்கு இணையான வேறொரு நூலை வைப்பது, பேசுவது, கடவுளுக்கு எதிராக பேசுகிற குற்றமாக கருதப்படும். மேற்கத்திய மரபில், மேற்கத்திய மத கோட்பாடுகளில் இப்படி ஒரு வழக்கம் இன்றும் இருக்கிறது. கிழக்கத்திய மரபில் கடவுளை நீங்கள் எல்லா புத்தகங்களிலும் காண முடியும். எல்லா பொருட்களிலும் காண முடியும்.  எல்லா பொருட்களிலும் எல்லா புத்தகங்களிலும் எல்லா கருத்துக்களிலும் எல்லா மனிதர்களிடமும் கடவுளை காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கிற கதைகளும் புராணங்களும் கோட்பாடுகளும் இருக்கிறது. இப்படி கடவுள் குறித்த விரிவான உரையாடலுக்குரிய வாய்ப்போடு கிழக்கத்திய மரபு இருக்கிறது என்பதை நாம் பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒரு மனிதன் கடவுளின் இருப்பை குறித்த விவாதத்தை துவங்குகிற போது அவன் எங்கிருந்தும் துவங்கலாம் என்கிற ஒரு வாய்ப்பை கிழக்கத்திய மரபு வைத்திருக்கிறது.

கடவுளை ஏற்றுக் கொள்வது மறுப்பதும் பின்பற்றுவதும் உதாசீனப்படுத்துவதும் கூட அந்த தனி மனிதனின் சமூக வாழ்வோடு, அறவாழ்வோடு தொடர்பில் இருக்கிறது என்கிற மென்மையான தல உறவோடு இந்த கருத்தாக்கங்கள் கிழக்கத்திய வாழ்க்கை மரபில் வைக்கப்பட்டிருக்கின்றது என்று நான் பார்க்கிறேன். ஒரு மனிதன் கடவுளை எந்த வகையிலும் புறக்கணிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் வாழ்நாளில் சில காலம் ஏற்றுக்கொள்ளவும் பிற்காலத்தில் மறுக்கவும் ஆரம்பத்தில் மறுக்கவும் பிற்காலத்தில் ஏற்றுக் கொள்ளவுமான எல்லா வாய்ப்புகளையும் கிழக்கத்திய கடவுள் கொள்கைகள் கடவுள் மறுப்பு கொள்கைகள் உள்ளடக்கி வைத்திருக்கின்றன என்பதையும் பார்க்கிற தன்மையோடு நாம் திருக்குறளை அணுக முடிகிறது.

பொதுவாக இந்த மனநிலை, இந்த அணுகுமுறை கடவுள் குறித்த அணுகுமுறை ஒரு மனிதனின் கடவுள் என்கிற ஒற்றைக் கருத்தாக்கத்திற்குள் நிற்காமல் எல்லா அம்சங்களுக்கும் பொருந்துகிற, உரையாடலுக்கு வாய்ப்பு இருக்கிற ஒன்றை கடவுளின் கருப்பொருளாக உருவகமாக பேசிப் பார்க்கிற ஒரு மாபெரும் விசாலமான பார்வை திருக்குறளில் அமையப்பெற்று இருக்கிறது.

 திருக்குறள் துவங்குகிற முதல் நான்கு அதிகாரம் மனிதன் எவற்றையெல்லாம் கடவுள் என்று நம்புகிறானோ, கடவுள் என்கிற தோற்றத்தை நம்புகிறவர்கள், கடவுள் என்கிற தோற்றத்தை மறுக்கிறவர்கள், கடவுள் என்கிற தோற்றத்தை பின்பற்றுகிறவர்கள், கடவுள் என்கிற தோற்றத்தை உதாசீனப்படுத்துகிறவர்கள், கடவுளோடு இணக்கம் காட்டுகிறவர்கள், கடவுளோடு பிணங்கி இருக்கிறவர்கள், கடவுளோடு தொளதொளப்பான கருத்து வைத்திருப்பவர்கள், கடவுள் மீது உறுதியான கருத்து கொண்டிருப்பவர்கள் என்று எவ்வகைப்பட்ட கருத்தாக்கத்தோடும் கடவுளை இணைத்து வைத்திருக்கிறவர்கள் என்று யாவருக்கும் பொருந்துகிற தன்மையோடு பாயிரம் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடவுள் வாழ்த்து - நேரடியாக கடவுள் என்கிற கருத்தாக்கத்தின் மீது பாடப்படுகிற அதிகாரம். இரண்டாவது கடவுளை கடவுளாக, தோற்றமாக, உருவமாக, உருவம் இல்லாமல், வணக்கத்திற்குரிய மதிப்பிற்குரிய வகைகளோடு இந்த அதிகாரத்தில் நாம் பார்க்க முடியும். தொடர்ந்து கடவுள் இவ்வகைப்பட்டவரா என்று இந்திய சமூகத்தில் கிழக்கத்திய சமூகத்தில் தத்துவ மரவில் ஆய்வு செய்கிறபோது இல்லை இயற்கையோடு இருக்கிறவர் என்கிற தன்மையோடு நீங்கள் ஒருவேளை சிந்தனை உதிக்கும் என்றால் இரண்டாவது இயற்கை வலியுறுத்துகிற வான்சிறப்பாக பாயிரம் தொடர்கிறது.

ஒரு மனிதனின் தோற்றம் சார்ந்த, பிம்பம் சார்ந்த, கருத்தாக்கங்கள் சார்ந்த பின்பற்றும் கடவுள் கோட்பாடுகளை நிறுத்தி முடிக்காமல் ஒரு மனிதனின் விசாலமான கேள்விகளுக்கு அடுத்த அடியை துவங்குகிற இடமாக இயற்கை வழிபாடு இயற்கையின் மாண்பு குறித்து பேசுகிற வான் சிறப்பு இரண்டாவது அதிகாரமாக திருக்குறளில் தொடங்குகிறது. தோற்றத்தில், கடவுளின் முன் பணிகிற பணிவில், கடவுளைத் தொழுகுகிற தொழுகையில் ஒரு மனிதனுக்கு வேட்கையாக விருப்பமாக நம்பிக்கையான ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றுக்கொள்ளலாக இருக்கிறது. தொடர்ந்து அந்த மனிதன் 40 வயதில் கடவுளை வெறுக்கிற போது கடவுள் தோற்றத்தோடு நிற்கவில்லை என்று அவனுக்கு புரிதல் ஏற்படுகிற போது அவனின் விசாலமான பார்வை இயற்கையை நோக்கி நகரும் என்றால் அந்த நகர்வு அந்த விசாலமான பார்வையின் விவரிப்பு, விரிவாக்கம் இயற்கையாக இயற்கையை நோக்கி திரும்புகிறபோது இயற்கையை சுவீகரித்துக் கொள்வதற்கு, இயற்கையோடு கரைந்து கொள்வதற்கு இயற்கையின் தரம் குறித்து உரையாடுவதற்கான வாய்ப்பாக வான் சிறப்பு என்று கடவுளை போற்றுகிற பாயிரத்திற்குள் ஒரு விரிவான உரையாடல் திருவள்ளுவர் செய்கிறார்.

கடவுளின் அம்சங்கள், கடவுள் பற்றிய கருத்தாக்கம் எத்தகைய ஒற்றை புள்ளிக்குள்ளும் நிறுத்தி விட முடியாத அளவிற்கு விசித்திரமானது, விரிவானது என்கிற ஒரு நேர்மையான விவாதத்தை, உரையாடலை தன் குறளில் முதல் இரண்டு அதிகாரத்தில் வைத்திருக்கிறார். இரண்டையும் புரிந்து கொண்டு இரண்டின் மீதும் தெளிவு கொண்டு போற்றுகிற ஒருவரை நீங்கள் தனியாக கண்டுபிடித்து ஒன்றைப் பின்பற்றுவதற்கு உங்களுக்கு ஒரு வேலை மனதில் தயக்கமோ, சோம்பேறித்தனமோ கூட ஏற்படும் என்றால் இவை இரண்டையும் புரிந்து கொண்ட ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். பின்பற்றலாம். அவரோடு அவர் சொல்கிற கருத்துக்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளலாம். அதன் மீது நீங்கள் பயணிக்கலாம். 

 

இத்தகைய பின்பற்றும் வாய்ப்பை, பின்பற்றும் நபரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிற முயற்சியாக அதன் மீது ஒரு உரையாடலை உரையாடிப் பார்ப்பதற்கான வாய்ப்பாக “நீத்தார் பெருமை” என்று மூன்றாவது அதிகாரத்தை வகைப்படுத்தி இருக்கிறார் வள்ளுவர். நீத்தார் பெருமை என்பது துறவை மேற்கொண்டவர். இருப்பைப் புரிந்து கொண்டவர். இயற்கை உள்வாங்கி கொண்டவர். இயற்கையோடு தம்மை கரைத்துக் கொண்டவர் என்றெல்லாம் அதற்குள் விரிவான உரையாடல் செய்வதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் நீத்தார் பெருமையில் வள்ளுவர் வைத்திருக்கிறார்.

இவை மூன்றும் கடவுளுக்கு உரிய பேசு உவமைகளாக இருக்கிறது. இவற்றோடு இன்னும் நுட்பமாக ஒரு மனிதன் தன்னளவில் இறை அல்லது இறையின்மை, ஏதுமின்மை என்கிற தத்துவ விசாரணைக்குள் நகர்கிறபோது ஒரு மனிதன் இயற்கையை, தன்னை இணைத்துக் கொள்கிற இயற்கையின் புதுக் கோட்பாடை அரண் என்று ஒரு முடிவுக்கு வர முடியும். அரண் என்பதை பேசுவதற்கான அதிகாரத்தை நான்காவதாக வள்ளுவர் வைத்திருக்கிறார். இந்த நான்கு அதிகாரமும் கடவுள் பற்றிய உரையாடல், இயற்கை பற்றிய உரையாடல், இரண்டையும் கற்று தேர்ந்து உள்வாங்கிக் கொண்டு பயணிக்கிற துறவியல் பற்றிய அதிகாரம், அரண் பற்றிய அதிகாரம் இவை நான்கும் குறியீட்டு உவமையாக, உதாரணமாக, துவங்குவதற்கு இசைவான புள்ளியாக கடவுள் கோட்பாடுகளை இணைத்தோ மறுத்தோ கடவுள் பற்றி உங்களுக்கு எத்தகைய வாத விவாதங்கள் இருந்தாலும் அதைப்பற்றி வள்ளுவர் எந்தவிதமான கவனமும் இல்லாமல் மிக நுட்பமாக எந்த மனிதர்களும் வந்து சேர்வதற்குரிய எல்லா அம்சங்களையும் கடவுள் வாழ்த்து பாயிரம் என்ற அதிகார வரிசைக்குள் ஒன்றன்பின் ஒன்றாக வகைப்படுத்தி வைத்திருக்கிற செழுமை திருக்குறளில் காண முடிகிறது.

இந்த பாயிரத்திற்குள் மரபு என்பது பொதுவாக  துதிப்பது. தமிழ் இலக்கிய மரபில் பாயிரங்கள் துதிப் பாடல்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். திருக்குறள் அல்லாத இன்ன பிற மரபு நூல்களில் இலக்கியங்களில் பாயிரங்கள் என்பது துதிப் பாடல்களாக போற்றுதலுக்குரிய பாடல்களாக வகைப்படுத்தி தொகுத்திருப்பார்கள். இந்த பாயிரத்திற்குள் கடவுள் கருத்தாக்கத்தை துவங்கி, கடவுள் கருத்தாக்கம்  குறித்து பேசுகிற எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும் களமாக உதாரணங்களையும் உவமைகளையும் உவமானங்களையும் செருகி சேர்த்து உரையாடலுக்குரிய தன்மையோடு, புரிதலுக்குரிய தன்மையோடு தேடலை நிறைவு செய்கிற தன்மையோடு தேடலை துவக்கி விடுகிற தன்மையோடு வள்ளுவர் வகைப்படுத்தி இருக்கிறார்.

பாயிரம் என்பது கடவுளை நீங்கள் எவ்வாறு மறுக்கிறீர்கள் என்பதற்கும் பொருந்தும்.   கடவுளை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள் என்பதற்கும் பொருந்தும். பாயிரம் கடவுள் பற்றிய கடவுள் என்கிற கருத்தொன்றும் இல்லாத ஒன்றைப் பற்றிய இரு வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய வெளிப்படுத்துகிற ஒன்றாக அமையப்பெற்று இருக்கிறது. ஒரு ஞானத்தின், ஞானம் தேடுபவரின் தேவையையும் ஞானத்தின் ஆசிர்வாதத்தையும் ஒன்றாகக் கட்டி வைத்திருக்கிற ஒன்றாக பாயிரம் இருப்பதாக நான் பார்க்கிறேன்.

…தொடர்ந்து பேசுவோம்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...