Tuesday, November 8, 2022

திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல் - 2 - பகுதி 1

 திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல்

www.swasthammadurai.com


திருக்குறள் குறித்து ஒரு தொடர்ந்த உரையாடல் செய்து கொண்டிருக்கிறோம். 

திருக்குறளை மாறுபட்ட பல்வேறு வாழ்வியல் கோணங்களில் பெரும் கவிஞர்களும் அறிவாளிகளும் பேசி இருக்கின்றனர்.

ஒரு தத்துவார்த்த பார்வையோடு பல்வேறு கருத்துக்களும் திருக்குறள் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நான் திருக்குறளை எனக்கு விருப்பமான திருக்குறள் ஆளுமையும் அழகும் சிதறாமல் எனக்கு விருப்பமான பாவனையோடு உரையாடிப் பார்க்க வேண்டும் என்கிற அம்சத்தில் இந்த உரையாடலை செய்கிறோம்.

திருக்குறள் ஒரு உலக ஞானமான, ஞானத்திற்குரிய குறியீடான நூலாக நான் பார்க்கிறேன். இந்த உலக மெய்ப்பொருள் எல்லா தத்துவ ஞானிகளும் சொல்வது போல இந்த உலக மெய்ப்பொருள் இரு வேறு எதிர் நிலைகளை உள்ளடக்கியது என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

எல்லா தத்துவ ஞானிகளும் இந்த கருத்தில் உடன்படுகிறார்கள். இரண்டு வேறு எதிர்முனைகள், இரண்டு வேறு எதிர்த் துருவங்கள், இரண்டு வேறு வேறு எதிர் கருத்துக்கள் எப்போதும் சேர்ந்தே இருந்து இந்த உலகத்தின் தத்துவங்களை, செயல்பாடுகளை நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்பது உலக ஞான மார்க்கத்தின், உலக தத்துவத்தின் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கிற ஒரு நீரோட்டம். அந்த அழகு ஞானமார்க்கத்திற்குரிய நிறைய குறியீடுகள் திருக்குறளுக்குள் இருக்கிறது என்பதால் திருக்குறளை நான் ஒரு ஞானக் குறியீடு என்று சொல்ல, குறிப்பிட, ஆராதிக்க விரும்புகிறேன்.

திருக்குறள் நேர் எதிரான செம்மையான இரு வேறு வாதங்களை தனக்குள் வைத்திருக்கிற நூலாக இருக்கிறது. எல்லா இலக்கிய நூல்களுக்குள்ளும் இத்தகைய கூர்மையான இரு வேறு வாதங்கள் வாய்ப்பில்லை. இத்தகைய இரு வேறு வாதங்களை வைத்திருக்கிற இலக்கியங்களும் தத்துவ நூல்களும் திருக்குறள் அளவிற்கு உரையாடுகிற பலத்தோடு பயணிப்பவையும் இருக்கின்றன தளர்வாக இருக்கிற நூல்களும் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் விட திருக்குறள் நேர் எதிரான இரு வேறு வாதங்களை மிகுந்த அதே கனத்தோடு கனம் மாறாமல் வைத்திருக்கிற  அம்சத்தை நாம் பார்க்க முடியும். பெயரிலேயே நாம் அதை துவங்கலாம்.

திருக்குறள் என்பது இந்த செய்யுளினுடைய பெயர். குறல் வெண்பா என்பது இலக்கியங்களில் மிகச்சிறிய அசை, அமைப்பு முறையை குறிக்கும். சொல் அடுக்குகிற அடுக்கு முறையில் மிகச்சிறிய அமைப்பு முறை குறள். தமிழ் மரபில் திரு என்பது மிக உயரிய ஒன்றிற்கு பயன்படுத்தக்கூடிய சொல். மிகச் சிறிய ஒன்றாகவும் மிக உயரிய ஒன்றாகவும் இருக்கிற ஒரு பேரழகு திருக்குறளுக்குள் இருக்கிறது. குறள் என்றால் சிறியது. திரு என்றால் பெரியது. எவற்றை மிக மதிப்பாக, எவற்றை மிக பிரமிப்பாக, எவற்றை முன்மாதிரியாக நாம் குறிப்பிடுகிறோமோ அவற்றைத் திரு என்று அழைப்பது தமிழ் மரபு.  இலக்கிய, இலக்கண வரையறைப்படி மிக எளிமையாக மிக சிறிதாக யாரும் எளிமையாக புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கிற வடிவத்திற்கு குறள் வடிவம் என்று பெயர். இவை இரண்டும் ஒன்றாக இணைகிற நேர் எதிர் கனம் கொண்ட நேர் எதிர் பொருள் கொண்ட இரண்டு சொற்கள் ஒன்றாக இணைகிற ஒரு பேரழகு திருக்குறள் என்ற சொல்லில் இருக்கிறது. இப்படியான நேர் எதிரான கனத்த வாதங்களை நாம் திருக்குறளுக்குள் பார்க்கிறபோது அது ஒரு ஞானக் குறியீடாக இருக்கிறது, ஞான பொக்கிஷமாக இருக்கிறது என்பதை நாம் தவிர்க்கவும் முடியவில்லை. அதை பருகுகிற பாவனையோடு நாம் கற்க வேண்டி இருக்கிறது. பார்க்க வேண்டி இருக்கிறது. படிக்க வேண்டி இருக்கிறது.

திருக்குறளுக்குள் இன்னொரு மிக முக்கியமான குறிப்பிடத்தகுந்த பலராலும் பார்க்கப்படுகிற, கேள்விப்பட்டிருக்கிற ஒரு முரண்.

ஒரு மனிதன் மிக சோர்வாக இருக்கிறபோது எல்லா நம்பிக்கைகளும் அந்த மனிதனுக்கு இயலாமையாகிவிட்டபோது அந்த மனிதனுக்கு என்ன திருக்குறள் சொல்லலாம் என்று நாம்  யோசித்த உடனே நம் முன் வருவது “முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்".  எந்த முயற்சி? எப்படிப்பட்ட முயற்சி? நீங்கள் முயற்சித்தால் முயற்சிக்குரிய விளைவு உங்களுக்கு கூலியாக, உங்களது முயற்சிக்கு இணையான ஒன்றை பெற்றுக் கொள்வீர்கள். யார் தடுப்பது, யார் கொடுப்பது என்கிற வாதமே இங்கு கிடையாது.

தெய்வத்தால் ஆகாது என்றாலும் கூட முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற செயியுளை நாம் பலரும் பல நேரங்களில் படித்திருப்போம். உரையாடி இருப்போம்.  தெய்வத்தால் ஆகாது என்றாலும் கூட நீங்கள் செய்கிற முயற்சி உங்களுக்கு நல்ல கூலியை, பலனைக் கொடுக்கும் என்கிற அம்சத்தில் திருவள்ளுவர் ஒரு செய்தியை தன் குறளுக்குள் குறிப்பிடுகிறார்.  தெய்வம் செய்யலாம், செய்யாமல் இருக்கலாம். நீங்கள் தெய்வத்தை மீறி முயற்சி செய்தால் அதற்குரிய பலனும் கிடைக்கும் என்கிற தன்மையில் திருவள்ளுவர் அந்த செய்தியை பதிவு செய்கிறார். திருவள்ளுவருக்கு தெய்வத்தின் மீது பெரிய அபிப்பிராயம் ஏதும், கருத்துக்கள் ஏதும் இல்லை போல என்று தெய்வத்தால் ஆகாது என்று குறிப்பிட்டவுடன் நமக்கு தோன்றக்கூடும்.

ஆனால் மிக அழகான முரண் திருவள்ளுவர் “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்” என்று கடவுள் வாழ்த்தோடு திருக்குறளை துவங்குகிறார். இந்த இரண்டு வேறு வாதங்களையும் நீங்கள் பார்க்கிறபோது கடவுள் வாழ்த்தோடு துவங்குகிற ஒரு பெரும் புலவன் தெய்வத்தால் ஆகாது என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. சொல்ல முடியாது. நீங்கள் கடவுளை நம்புகிற நபராக இருக்கிறபோது தெய்வம் உதவாது என்று எந்த மரபிலும் எந்த மார்க்கத்திலும் ஏற்புடையது கிடையாது. தெய்வமாகாது, தெய்வம் உதவாது என்றாலும் கூட நீ தெய்வத்தையும் வெல்வதற்குரிய தன்மையோடு நீ உழைக்க முடியு,ம் முயற்சிக்க முடியும் என்று சொல்கிற ஒரு புலவனால் கடவுள் வாழ்த்தோடு அவன் பாடலை துவங்க முடியாது. நேர் எதிரான கனத்த வாதம்.  கடவுளை தொழுது துவங்குகிற வள்ளுவர் முயற்சி பற்றி குறிப்பிடும் போது தெய்வத்தை பின்னுக்கு வைத்து தெய்வத்தை இரண்டாம் பட்சமாக மாற்றுகிற ஒன்றையும் செய்கிறார். இரண்டு கனத்த வாதங்களை தன் குறளுக்குள் வைக்கிறார். நீங்கள் உண்கிற உணவு எந்த உணவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். உங்களுக்கு உடல் நலமாக இருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று "அருந்தியது அற்றது போற்றி உணின்” என்பதுதான்.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்"

என்று ஒரு செய்யுளை வைத்திருக்கிறார். மருந்து என்பது யாருக்கு வேண்டாம், யாருக்கு நோய் இல்லை என்று உரையாடுகிற போது திருவள்ளுவர் எல்லாமும் உண்ணலாம், எல்லாமும் பருகலாம், எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம், எதுவும் பத்தியம் இல்லை. எதுவும் சரியானது தான். எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு நிபந்தனை மட்டும். அது எந்த நிபந்தனை என்றால், நீங்கள் உண்கிற, நீங்கள் ஏற்றுக் கொள்கிற ஒன்று உங்களுக்கு தேவை உடையதாக இருக்க வேண்டும்.

“அருந்தியது அற்றது போற்றி உணின்” என்கிற குறள் உணவை மட்டும் சொல்வதாக நாம் புரிந்து கொள்ள முடியாது. அருந்தியது அற்றது என்பது நீங்கள் ஏற்றுக் கொள்கிற எல்லாமும். நவீன மருத்துவ ஆய்வுகள் உங்கள் கண்கள், உங்கள் காதுகள், உங்கள் உணர்வுகள், உங்கள் மனம் எல்லாமும் உணவை கிரகிக்கிற வேலையைச் செய்கின்றன என்பதை விஞ்ஞான ரீதியில் நிரூபித்துக் கொண்டே இருக்கிற சூழலில் நாம் வாழ்கிற போது வள்ளுவர் சொல்கிற அருந்தியது அற்றது போற்றி உணின் என்பது வெறுமனே வாய் வழி உணவை மட்டும் சொல்வதாக அமைந்து விடாது. அவர் எல்லாவற்றையும் சொல்கிறார்.  உணவாக, காட்சியாக, ஒளியாக, ஒலியாக, தொடுதலாக, மன சீற்றமாக, உந்துதலாக எவை இருந்தாலும் அவற்றை உங்கள் தேவையின் பொருட்டு, உள்ளே சென்றதும், வெளியே சென்றதும் உள்ளிட்ட கவனத்தின் பொருட்டு, எடுத்துக் கொள்வீர்கள் என்றால் உங்களுக்கு நோய் இல்லை என்று ‘மருந்து’ என்கிற அதிகாரத்தில் உணவை குறிப்பிடும் போது சொல்கிறார். நீங்கள் எடுத்துக் கொள்கிற எந்த ஒன்றும் உங்கள் தேவையின் அடிப்படையில் அமையும் என்றால் உங்கள் தேவையின் அடிப்படையில் எடுத்துக் கொள்வீர்கள் என்றால் உங்களுக்கு நோய் கிடையாது.

                                                                            ...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...