Wednesday, December 28, 2022

திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல் – அதிகாரம் 2 / குறள் - 12 / பகுதி - 2

 அதிகாரம் 2 / குறள் - 12 / பகுதி - 2

    இறைவன் வாக்கு கொடுத்தபடி 40 நாட்கள் பெருமழை, தொடர்ந்த மழை இரவு பகலாக காற்றும் மழையுமாக பெய்து கொண்டே இருக்கிறது. நோவாவின் 600 ஆம் வயதில் இரண்டாம் மாதத்தில் 17ஆம் நாள் இந்த நிகழ்வு துவங்கிற்று. 40 இரவுகள், 40 பகல்கள் பெய்த பெரும் மழையால் உலகம் முற்றிலுமாக அழிந்து போயிற்று. இறைவனின் வெளிப்பாடு கேடு பெற்று இருந்த இந்த உலகம், கலக்கமுற்று இருந்த இந்த உலகம் இறைவனின் ஆர்வத்தின் பெயரால் புதுப்பிக்கப்பட்டது. முழு உலகமும் இந்த 38 பேர்கள் தவிர அழிந்தது. 40 நாட்கள் தொடர் மழைக்குப் பிறகு உலகம் முழுவதும் நீர் சூழ்ந்திருந்த சூழலில் நோவாவின் பேழை மட்டும் நீரில் மிதந்தது. 150 நாட்கள் மிதந்து சென்ற பின் 150 ஆவது நாள் மாலை அந்தப் பேழை, அந்தக் கப்பல்  அராரத் மலை உச்சியில் சென்று தரை தட்டி நின்றது.

தொடர்ந்து மழையின் காரணமாக 150 நாள் பயணித்த பிறகு தரைதட்டி நின்ற கப்பல் சூழ்ந்திருந்த பெரு வெள்ளம் வடியத் தொடங்கியது அங்கே பூமி வெளிப்படத் தொடங்கியது. அராரத் மலை உச்சியில் அதன்பின் நோவா தன் குடும்பத்தாருடன் தொடர்ந்து 350 வருடங்கள் வாழ்ந்தார் என்று இந்த கதை தொடர்ந்து செல்கிறது.

          உலகத்தை புதுப்பிக்க, உலகத்திற்கு நன்மை புகட்ட, நன்மை அறிவிக்க எப்போதும் இறைவன் இயற்கை, முழு பொருள், மெய்மை ஏதாவது ஒரு வகையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதற்கு ஏராளமான புனைவுகள் இருக்கின்றன. கதைகளும் சான்றுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அத்தகைய பதிவாக இந்த நோவாவின் கதையும் இருக்கிறது. எல்லாக் கதைகளின் சாராம்சமும் ஒன்று. எப்போது துயரம் சூழ்கிறதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன். துயரத்தை வெல்வதற்குரிய எல்லாவற்றையும் செய்து முடிப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மாக்கள் சொல்வது போல எல்லா இதிகாசங்களிலும் மறை நூல்களிலும் நோவாவின் பேழைகளும் கப்பல்களும் கிருஷ்ண பரமாத்மாவின் புதுப்பிப்பும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கான சான்றுகளும் கதைகளும் தொடர்ந்து இருக்கின்றன.

இத்தகைய தன்மைக்குள் இறைவன் அருவமாகவோ உருவமாகவோ அருவுருவமாகவோ தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்குரிய   சாத்தியங்கள் உள்ளனவா என்று மனிதனுக்கு கேள்வி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மனிதனின் சிந்தனா முறை, சிந்திக்கும் வேகம் அப்படியானது. ஆனால் அருவமாகவோ உருவமாகவோ அருவுருவமாகவோ என்கிற தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு இறைவன் இயற்கை, மெய்மை, முழு பொருள், இருத்தல் இவற்றின் வெளிப்பாடு இயற்கையாக இருக்கிறது.

காற்றாக இருக்கிறது; மழையாக இருக்கிறது; வெளிச்சமாக, வெயிலாக இருக்கிறது; ஆகாயமாக இருக்கிறது. இவற்றிற்குள் இருக்கிற ஒவ்வொன்றும் மனிதனின் அறிவிற்கு அடுத்த இலக்கை தீர்மானித்துக் கொள்கிற வல்லமையோடு இருக்கின்றன. எப்போதும் மனிதன் இவற்றை வெல்வதற்குரிய இடத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை. ஆனாலும் இந்த புதிர் இயற்கையாக, இந்த புதிர் மறைப்பொருளாக, இந்த புதிர் பேருண்மையாக, இந்த புதிர் அச்சமூட்டுவதாக, ஆசி வழங்குவதாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் ஒன்று நீராக, மழையாக என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.

இயற்கையின், இறைநிலையின் ஒரு பிரதிநிதியாக நீர் இருக்கிறது. மறை பொருளின் வெளிப்பாடாக நீர் இருக்கிறது. இந்த மறை பொருளின் வெளிப்பாடு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எல்லோருக்கும் பொதுவானதும் இல்லை. அது ஒன்றை மட்டும் கணக்கில் வைத்திருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் ஔவை பெருமாட்டியின் சொல்லொன்று இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது, "நல்லார் ஒருவர், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை" என்கிற வரி ஆழ்ந்த பொருள் உடையது. மழை பெய்வது நல்லார் ஒருவருக்கே. வெயில் அடிப்பதும் நல்லார் ஒருவருக்கே. இயற்கையின் எல்லா விளைவுகளும் நல்லா ஒருவருக்கே. பூமி சுழல்வது நல்லார் ஒருவருக்கே. 

நோவாவின் கதையில் வருவது போல பூமி கேடு நீங்கி புதுப்பித்து கொள்வதும் நல்லார்  ஒருவர் பொருட்டே. ஆக நல்லார் ஒருவர் பொருட்டே இயற்கையின் இயக்கம் இருக்கிறது, இறைவனின் வெளிப்பாடு இருக்கிறது, முழுமையின் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை வள்ளுவர் வழி நாம் பார்க்க முடியும். நல்லார் ஒருவர் பொருட்டு இந்த இயற்கை தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறது இயற்கையின் வெளிப்பாடு நல்லார் ஒருவர் பொருட்டே இருக்கிறது என்பதை வள்ளுவர் பாடலில் சொல்வதின் வழியாக நான் புரிந்து கொள்வது நல்லார் ஒருவர் பொருட்டே, இந்த இயற்கை இயங்குகிறது என்பது மட்டுமல்ல; நல்லார் ஒருவருக்கு இயற்கையை தன்பால் ஈர்க்கிற வல்லமை உள்ளது என்பதையும் சேர்த்து பார்க்க முடியும்.

வள்ளுவர் தொடர் முயற்சி குறித்து, பணிவு குறித்து வெவ்வேறு இடங்களில் பேசுகிறார். ஒரு குறளில் ஒரு பெண்ணின் பக்தி குறித்து பதிவு செய்கிற போது சாத்தியமில்லா ஒன்றை சொல்வதற்கு உவமையாக மழை பெய்வதை குறிப்பிடுகிறார்.  ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்று ஒரு குறள் முடிவடைகிறது.  கணவனிடம் பெரும் பக்தியாக இருக்கிற ஒரு பெண்மணிக்கு, நேசிப்பவரிடம் பெரும் மதிப்பாக இருக்கிற ஒருவருக்கு, தன்னை பணிவாக்கிக் கொள்கிற, நன்மையின் பக்கம் இருக்கிற, அறத்தின் பாற்பட்டு இருக்கிற ஒருவருக்கு தெய்வ வழிபாடு இல்லை என்றாலும் கூட அவர் விரும்பினால் மழை பெய்யச் செய்ய முடியும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.  தெய்வம் தொழாள் என்று துவங்குகிற செய்யுள் அது.  அறம் மீறாது இருக்கிற ஒருவர் விரும்பினால் அவர் என்ன விரும்புகிறாரோ அந்த விருப்பம் உலகம் நம்புகிற, தெய்வத்தின் தலையீடை மீறி செயலாக்கம் பெறுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அறத்தின் பாற்பட்டு வாழ்கிற ஒருவருக்கு, அறத்தில் நிற்கிற ஒருவருக்கு இயற்கை அப்படி தன்னை பிரதிபலிக்கிறது, வெளிப்படுத்துகிறது என்பதை நாம் இந்த குறளின் வழியாக பார்க்க முடியும். ஒரு மனிதன் அத்தகைய வல்லமை உடையவன். அறம் மீறாத, தன்னைப் பார்த்த, தனக்குள் விழிப்பு பெற்ற, தன்னை வென்ற ஒரு மனிதனால் இயற்கையின், முழுமையின் எல்லாவற்றையும் தன் வசப்படுத்துகிற வல்லமை வந்து விடுகிறது. அப்படி ஒரு மனிதனுக்காக இயற்கை தானே முன்வந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அப்படித்தான் இந்த பாடல் சொல்கிறது.

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை" வள்ளுவரின் சொல் நுட்பத்திற்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு. இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு பெரும் ரசனைக்குரிய செய்யுள் அடி இது. இந்தச் செய்யுளின் பொருள் இன்னும் அழகு உடையது. துப்பார்க்கு என்பது துப்பு என்பது மேன்மையான, ஆக்கமான, தூய, நன்மைக்குரிய என்று பொருள் கொள்ள முடியும். அகராதியில் பார்க்கிறபோது துப்பு என்கிற சொல் வினைச் சொல்லாக உமிழ்தல் எனவும் பெயர்ச் சொல்லாக உணவாக, தூய்மையான, வெள்ளையான, வெளிப்படையான, மேன்மையான என்று பல பொருள்களில் பெயர்ச் சொல்லாக நிற்கிறது.

துப்பார்க்கு என்பது மேன்மை உள்ளவருக்கு நோவாவை போல், அவ்வையார் பாட்டியின் நல்லார் ஒருவரைப் போல் இருப்பவருக்கு, துப்பாய அவரைப் போல மேன்மையாக, துப்பாக்கி அவரிடம் இருக்கிற, அவரைச் சுற்றி இருக்கிற, அவருக்காக இருக்கிற சிறுசிறு பிழைகளை சுத்தமாக்கி துப்பாக்கி, துப்பார்க்கு இன்னும் பரிசுத்தமான நிலைக்கு நகர்ந்தவருக்கு இன்னும் மேன்மையான ஒன்றாக தன்னை அர்ப்பணிக்கிறது மழை என்று இந்த பாடலை வள்ளுவர் வரைந்திருக்கிறார்.

மேன்மையான ஒருவருக்கு, மேன்மையான ஒன்றாக, அவருக்காக இருக்கிற அவரைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றையும் இன்னும் மேன்மையாக்கி இன்னும் புதிய மேன்மை நிலையோடு, மேன்மையை அர்ப்பணிக்கிற மழையாக, பாயிரத்தில் இரண்டாம் அதிகாரத்தில் மழையை இறையின்  இருத்தலின் பிரதிநிதியாக வகைப்படுத்துவதாக நான் புரிந்து கொள்கிறேன்.

மழை தண்ணீர் அல்ல. சர்வ வல்லமை கொண்டது. தண்ணீர் போல் தெரியும். என்றாலும் மழை தண்ணீர் அல்ல. அது முழுமையின் பிரதிநிதி என்று வள்ளுவர் வகைப்படுத்துவதற்கு பொருள் இருக்கிறது. உங்கள் சேமிப்பு பாத்திரங்களில் இருக்கிற தண்ணீரை நீங்கள் பார்க்கிற நிலப்பரப்பில் வாரி ஊற்றுகிற போது தண்ணீர் உறிஞ்சி கொள்வதை பார்க்க முடியும். மீண்டும் மறுநாள் காலையில் ஓரிரு நாள் கழித்து பார்த்தால் நீங்கள் ஊற்றிய தண்ணீரின் படிமங்கள், வடு அப்படியே இருக்கும். இது தண்ணீரால் செய்ய முடிந்த ஒன்று. ஆனால் நீங்கள் பார்த்து வைத்திருக்கிற ஒரு நிலப்பரப்பில் மழை பெய்யும் என்றால் மழை பெய்து முடித்த கால இடைவெளிக்குப் பிறகு அந்த நிலம் முழுவதும் பசுமை பூத்திருக்கும். புற்கள் முளைத்திருக்கும். அந்த நிலத்தை பூக்கச் செய்கிற, மலரச் செய்கிற வல்லமையும் மழைக்கு இருக்கிறது. எனவே மழை தண்ணீர் அல்ல. மழை முழுமையின் பிரதிநிதி. பிரபஞ்சத்தின் வெளிப்பாடு. தண்ணீர் நாம் சேமிப்பு கொள்கலனுக்குள் அடக்கி வைத்திருக்கிற திரவம். மழை அவ்வாறானது அல்ல. அது எல்லோருக்குமாக இருந்தாலும் பணிவு உள்ளவர்களுக்கு, அறம் உள்ளவர்களுக்கு  இறைபிறழ்வு  நிகழாதவர்களுக்காக இறையே வெளிப்படுகிற வெளிப்பாடாக இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் இந்த செய்யுள் நுட்பமான இயற்கையின் வெளிப்பாடை கேடு விளையும் போது நான் வருவேன் என்று இறைத்தூதர்கள் சொல்வது மாதிரி, நல்லார் ஒருவர் அவர் பொருட்டே எல்லோருக்கும் இறை, இயற்கை வழங்குகிறது என்று அவ்வை சொன்னது போல உலகம் அழிந்து கொண்டிருக்கிற வேளையில் நோவாவிற்கு கப்பல் செய்யச் சொல்லி கட்டளையிட்ட இறை ஒளி போல, அடர்ந்த ஒரு அரவானின் மேல், அறம் கொண்டவன் மேல் அக்கறையுள்ள இயற்கையின் வெளிப்பாடு மழை.

தூயவரின் சிந்தனைக்காக, தூயவரின் தூய்மைக்காக தூய்மையாக அவரைச் சுற்றி இருக்கிற கேடுகளை தூய்மையாக்கி மிகத் தூய்மையான நபராக அவரை மாற்றி அவருக்கு தூய்மையான ஒன்றை இயற்கை வழங்குகிறது. இறைநிலை வழங்குகிறது. அது தூய்மையானவர்களுக்கு எப்போதும் நிகழும். அறம் கொண்டவர்களுக்கு எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அதை தான் வள்ளுவர் தன் அடிகளில் வடித்து வைத்திருக்கிறார்.

 "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்

             துப்பாய தூவும் மழை" .

மழை தண்ணீர் போல் அல்ல. அது இயற்கையின் பிரதிபலிப்பு. இறைவனின் அர்ப்பணிப்பு. தூயவர்களுக்காக, அறம் பாடுபவர்களுக்காக வாழ்வை செம்மையாக வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வு கொண்டவர்களுக்காக எப்போதும் பெய்து கொண்டே இருக்கிறது. இன்னும் எப்போதும் பெய்யும்.

                                 …தொடர்ந்து பேசுவோம்...

 

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...