Thursday, December 8, 2022

மரியாதை

                                                மரியாதை

 

 ஒருவருக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன?

 எவ்வாறு ஒருவரை மரியாதையோடு நடத்துவது? ஒருவரிடம் எவ்வாறு மரியாதையோடு   நடந்து கொள்வது?  இதைப் பற்றி உங்கள் கருத்து, விளக்குங்கள் ஐயா.

www.swasthammadurai.com


அன்பர்களே,

 மரியாதை என்பது முழுக்க சமூகம் சார்ந்தது.  நீங்கள் சமூகத்தில் உங்களை தொடர்புபடுத்துகிற, தொடர்புபடுத்திக் கொள்கிற நிலையிலேயே சமூகத்திற்கான சில வரையறைகளை ஏற்றுக் கொண்டவர்களாக ஆகிறீர்கள். 

சமூகத்தில் நீங்கள் ஒரு நபரோடு உறவாடுகிற போது அந்த உரையாடல், அந்த உறவாடல் சமூகம் வைத்திருக்கிற ஏதாவது ஒரு வகைப்பட்ட உறவு நிலையிலேயே உருவாக்கப்படுகிறது. நீங்கள் சமூகத்திற்குள் எந்த வகையான உறவாடலை மேற்கொண்டாலும் அந்த உறவிற்குரிய பொருத்தமான, அந்த உறவிற்குரிய அவசியப்பட்ட கருத்தாகங்களாக சில பாவனைகளை சமூகம் முன்வைக்கும்.

ஒரு கணவன் மனைவியோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பெற்றோரோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒரு தலைவன் தொண்டர்களோடு எவ்வாறு இருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் ஒரு வணிகம் செய்பவரோடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் ஒரு உறவு நிகழ்கிற எல்லா இடங்களிலும் சமூகம் அதற்கே உரிய நிர்மாணிக்கப்பட்ட ஒரு கருத்தாக்கத்தை வரையறுத்து வைத்திருக்கிறது. நெறிப்படுத்தப்பட்ட தன்மையிலேயே இந்த சமூகத்தினுடைய உறவாடல் இயக்கம் இருக்கிறது. அடிப்படையில் இதற்கு மிக முக்கியமான காரணமாக நான் கருதுவது சமூகத்திற்கு தனி மனிதன் குறித்த ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு மனிதன் எவ்வாறு இயங்க வேண்டும், ஒரு மனிதன் சமூகத்திற்கு ஆபத்து இல்லாமல், சமூகத்திற்கு முரண் இல்லாமல், சமூகத்திற்கு கழகம் இல்லாமல் எவ்வாறு நெறிப்படுத்தப்பட வேண்டும் என்று சமூகம் தன் அனுபவத்தில் பாற்பட்டு சில நெறிமுறைகளை முறைப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த வகையிலேயே ஒரு உறவோடு நீங்கள் துவங்குகிற போது அந்த உறவிற்கான அடையாளங்களும் அனுமதிக்கப்பட்ட வடிவங்களுமாக சில கருத்தாக்கங்கள் இருக்கின்றன. அவற்றில் உங்களது உரிமைகள், உங்களது கடமைகள், உங்களது பாராட்டுக்கள், உங்களது எதிர் வினைகள் எல்லாமும் வரையறுக்கப்பட்டிருக்கும்.

 நீங்கள் ஒருவருக்கு சமூகரீதியாக உறவை வகைப்படுத்திட விரும்பினால் அந்த உறவு சமூகத் தன்மையோடு இருப்பதை உறுதி செய்ய விரும்பினால் நீங்கள் சமூகம் வைத்திருக்கிற ஒரு  வரையறையிலிருந்து அந்த உறவை பாராட்டுவதை தவிர வேறு வழி இல்லை. குறைந்தபட்சம் சமூகத்தில், புற உலகில் உங்களை சுற்றி இருக்கிற ஒவ்வொரு நபரிடத்திலும் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்குரிய வழிகாட்டு நெறிமுறைகள் உங்கள் முன் இருந்து கொண்டே இருக்கும். உங்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும். உங்கள் பள்ளிகளில், கல்லூரிகளில், உங்கள் கல்வி  குறிப்புகளில் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இயங்க வேண்டும் என்றெல்லாம் கூட தொடர்ந்து வற்புறுத்தப்பட்டிருப்பீர்கள். பழக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருப்பீர்கள்.  இவை எல்லாமும் உங்களுக்குள் குடி கொண்டிருக்கும்.  இவற்றிலிருந்து நீங்கள் உறவினை துவங்குகிற போது இவற்றில் இருந்து உங்களது உரையாடலை துவங்குகிற போது மிக அவசியமான ஒன்றாக ஒரு மனிதனை நாம் சமூகம் வைத்திருக்கிற வரையறைகளோடு பொருந்தி மரியாதை செய்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு மனிதனை மரியாதையோடு நடத்துகிறோமா, ஒரு மனிதனிடம் மரியாதையோடு  நடக்கிறோமா என்கிற கேள்வி மரியாதை என்கிற கருத்தாக்கம் சார்ந்ததல்ல. இந்த சமூகம் வைத்திருக்கிற மரியாதை என்கிற எல்லையை மிகச் சரியாக பராமரிக்கிறோமா என்கிற அடிப்படையில் துவங்கப்படுகிறது. மரியாதையோடு நான் இருக்கிறேனா என்று நீங்கள் யோசித்தால் மரியாதையோடு ஒருவரை நீங்கள் நடத்துகிறீர்கள் என்று பார்ப்பீர்கள் என்றால் அது மரியாதைக்கும் உங்களுக்குமான வடிவம் அல்ல. மரியாதைக்கும் சமூகம் வைத்திருக்கிற பொருண்மைக்குமான களம்.

நீங்கள் மரியாதையோடு நடத்துகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற போது சமூகத்தினுடைய மரியாதை எல்லையை நீங்கள் தொடவில்லை என்றால் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள். நீங்கள் மரியாதையாக நடக்கவில்லை என்று நினைத்தால் கூட சமூகம் வைத்திருக்கிற மரியாதை எல்லையை கடந்துவிட்டால் நீங்கள் மதிப்புக்குரியவர்களாக மாறிவிடுவீர்கள். நீங்கள் முன் வைக்கிற மரியாதை என்கிற சொல் சமூகம் வைத்திருக்கிற மரியாதை என்கிற எல்லைக்குள் எவ்வாறு பொருந்துகிறது என்கிற அடிப்படையிலேயே நெறிப்படுத்தப்படுகிறது. முழுமை பெறுகிறது.

நான் ஒருவரை மரியாதையாக நடத்துகிறேன். நான் ஒருவரிடம் மரியாதையாக நடந்து கொள்கிறேன் என்று நீங்கள் உங்களுக்குள் கண்டுபிடிக்கிற போது கேள்வி எழுப்புகிறபோது மரியாதையோடு நடந்து கொள்கிறேனா மரியாதையோடு நடத்தப்படுகிறேனா என்று நீங்கள் பார்க்கிற போது சமூகம் வைத்திருக்கிற அல்லது சமூகமாக உங்களுக்குள் இருக்கிற மரியாதை எல்லையில் இருந்து அவற்றை அளவு செய்கிறீர்கள். மதிப்பீடு செய்கிறீர்கள். இந்த மதிப்பீடு என்பது உங்களது மரியாதை குறித்த ஒரு மனிதனை, ஒரு உயிரை நேசிப்பின் பாற்பட்டு செய்யப்படுகிற மரியாதை குறித்தது அல்ல இந்த மதிப்பீடு. சமூகம் வைத்திருக்கிற எல்லைக்கு நான் பொருந்துகிறேனா, சமூகம் நெறிப்படுத்தி வைத்திருக்கிற நெறிமுறைகளுக்கு நான் இசைவாக இருக்கிறேனா என்கிற தவிப்போடு இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.

நீங்கள் மரியாதையோடு இருப்பதும் மரியாதையோடு இல்லாமல் இருப்பதும் உங்கள் சமூகம் உங்களுக்குள் செல்வாக்கு செலுத்தி வைத்திருக்கிற நெறிமுறைகள் இவை எல்லாமும் தீர்மானிக்கிற ஒன்றாக இருக்கிறபோது நீங்கள் மரியாதை குறித்து உரையாடுவீர்கள் என்றால் சமூகத்திற்கு சமூகம், நிலப்பரப்பிற்கு நிலப்பரப்பு, காலத்திற்கு காலம் மரியாதை குறித்த விளக்கங்களும் மதிப்பீடுகளும் உருவாவதும் காலாவதியாவதும் நடந்து கொண்டே இருக்கும். நீங்கள் எந்த காலத்தினுடைய  மரியாதை குறித்து பேசுகிறீர்கள் என்பது எனக்கு கேள்வி ஆகிறது.

ஆதி சமூகத்தில் மரியாதை ஒன்றாக பார்க்கப்பட்டது. நவீன சமூகத்தில் மரியாதை வேறொன்றாக பார்க்கப்படுகிறது. நான் ஒருவரிடம் மரியாதையாக நடந்து கொள்கிறேன் என்று குறிப்பிடுகிற காலமும் நபரும் இன்றைய மனிதரா, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரா, இனி வருகிற நபரா எந்த மனிதரைப் பற்றி எந்த மனிதருக்குரிய மரியாதை குறித்த நெறிமுறைகள் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள் என்பது எனக்கு கேள்வி ஆகிறது.

மரியாதை என்பது ஒரு மனிதனை, ஒரு உயிரை மதிப்பதற்கான வரையறையாக சமூகம் வைத்து வைத்திருப்பது பொருந்தாமையின் குறியீடு. ஒரு உயிரை மதிப்பதற்கும் ஒரு உயிரை உயர்த்துவதற்கும் ஒரு உயிரை நேசிப்பதற்கும் ஒரு உயிரோடு உறவு பாராட்டுவதற்கும் நீங்கள் மரியாதை குறித்த கருத்தாக்கங்களோடு அணுகுவது பொருத்தமில்லாதது. மரியாதை குறித்த கருத்தாக்கத்தோடு ஒரு உயிரோடு இணக்கம் பாராட்ட முடியாது, உறவு பாராட்ட முடியாது. நீங்கள் ஒரு உயிரோடு இணக்கமாக ஒரு உயிர் உங்களோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் என்றால், இருக்க வேண்டும் என்று உங்களைப் பண்படுத்தி கொள்வீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது சமூகம் வைத்திருக்கிற அளவுகோலில் இருந்து விடுபடுவது. சமூகம் வைத்திருக்கிற நெறிமுறைகளில் இருந்து விடுபடுவது. உங்களுக்கு எது அன்பு என்று கருதுகிறீர்களோ அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு உயிரோடு இணக்கம் பாராட்டுவது போதுமானது. அதுவே அந்த உயிருக்கு நீங்கள் செய்கிற மரியாதை.

ஒரு உயிரோடு நீங்கள் எவ்வளவு நேசமாக இருக்கிறீர்களோ அதுதான் அந்த உயிருக்கு நீங்கள் தருகிற மதிப்பு. உங்களோடு உங்களுக்குள் எழும்புகிற அன்பும் உங்கள் குறித்து உங்களுக்கு இருக்கிற இணக்கமும் கருணையும் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்குரிய தன்மையோடு நீங்கள் இயங்க முடியும் என்றால், நகர முடியும் என்றால் அவற்றை அன்பு என்று பொருள்படுத்திக் கொள்ளலாம். அன்பு ஒரு உயிரை நேசிப்பதற்கு போதுமானது. அன்பு ஒரு உயிரோடு இசைவாக இருப்பதற்கு போதுமானது. அன்பு ஒரு உயிரோடு பயணிப்பதற்கு போதுமானது. இந்த உயிரோடு என்று நான் முன் வைக்கிற நீங்க அல்லாத வேறொரு உயிர் என்பது உங்கள் குழந்தையாக இருக்கலாம். உங்கள் வீட்டில் வளர்கிற பூச்செடியாக இருக்கலாம். நீங்கள் மதிக்கிற கடவுளாக இருக்கலாம். நீங்கள் விரும்புகிற நாய்க்குட்டியாக இருக்கலாம். உங்களோடு பணிபுரியும் நபராக இருக்கலாம். உங்கள் அண்டை வீட்டுக்காரராக இருக்கலாம். யார் ஒருவரும் மரியாதையோடு நடத்தப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் யார் ஒருவரையும் முரண்பாடு இன்றி கடந்து போக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் யார் ஒருவரையும் மதிப்பாக மரியாதையாக நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மீது காட்டுகிற அன்போடு அவரிடம் வெளிப்படுங்கள். உங்கள் மீது உங்களுக்கு இருக்கிற கருணையோடு அவரிடம் வெளிப்படுங்கள். உங்களை நீங்கள் நேசிக்கிற நேசிப்போடு அவரிடம் பயணப்படுங்கள். இது மரியாதை கடந்த, சமூக நெறிமுறைகள் கடந்த ஒரு முழுமையான உறவு நோக்கிய உறவை பலப்படுத்துகிற உறவு பாராட்டுகிற மிக நுட்பமான எளிமையான வழி.

…தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...