ஞானம் என்பது என்ன? யார் ஞானம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள்?
அன்புள்ளவர்களே!
உண்மையிலேயே ஞானம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஞானம் என்பது என்ன என்பது பற்றிய எந்த அறிவும்
எனக்கு கிடையாது. ஞானம் என்பது என்னவாக இருக்கிறது, இருக்கும் என்று எந்த அனுபவமும்
கிடையாது.
ஒரு மனிதன் தன் வாழ்வில் நாள்தோறும் தனக்கு
ஏற்படுகிற வாழ்வியல் அனுபவத்தை கற்றுக்கொண்டு அனுபவத்தை பெற்றுக் கொள்வதன் வழியாக தன்னை
புத்தி கூர்மை உள்ள மனிதனாக மாற்றிக் கொள்கிற அடிப்படை கற்றல் அவனை வளர்த்தெடுக்கும்
என்று கருதுகிறவன் நான். என் பார்வை அவ்வளவுதான்.
ஒரு மனிதன் அன்றாடம் பெறுகிற அனுபவங்களை அவன்
வாழ்வில் நகர்கிற நகர்விற்கு பொருத்திப் பார்க்கிற விழிப்புணர்வு இரண்டாவது அம்சம்.
ஒரு மனிதன் பெறுகிற அனுபவமும் அனுபவத்தை பொருத்திப்
பார்க்கிற விழிப்புணர்வும் ஒரு மனிதனுக்கு நல்வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்கு போதுமானது
என்று நான் பார்க்கிறேன். இலட்சியங்களும் இலக்குகளும் ஒரு மனிதனின் வாழ்வை என்ன செய்கின்றன
என்று பார்ப்பதற்குரிய பார்வை ஒரு மனிதனுக்கு அவசியம் என்று நான் கருதுகிறேன்.
ஞானம் என்பது எவ்வாறாக இருப்பது, எவ்வாறு இருக்கிறது என்பதை விடவும் இன்று ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்வில் நிகழ்கிற ஒன்றைப் பார்ப்பதற்குரிய பார்வை திறன் அற்றவர்களாக, பலகீனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவ்வாறு இருப்பவர்களுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கவலைக்குரியதாக இருக்கிறது.
தகவல் சேகரிப்பை அறிவாக கருதிக் கொள்கிற சமூகம்
உருவாகிக் கொண்டிருக்கிறது. அறிவு என்பது வேறு, தகவல் சேகரிப்பு என்பது வேறு என்பதைப்
பிரித்துப் பார்க்கிற பார்வை நமக்கு அவசியமாகிறது. அனைவரும் அறிவோடு இருக்க வேண்டும்
என்று விரும்புகிறேன். அனைவரும் தகவல் சேகரிப்பில் இருந்து விடுபட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இத்தகைய விருப்பம் நிறைவேறுவதற்கு ஞானம் என்பதை விடவும் அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும்
பெற்றுக் கொண்டதை புரிந்து கொள்ளவுமான விழிப்புணர்வு அவசியம் என்று நான் பார்க்கிறேன்.
யார் ஞானியாக இருக்கிறார்கள் என்று வகைப்படுத்தி
பார்க்கிறபோது ஞானிக்குரிய எந்த வரையறையும் ஒருவருக்கு பொருந்துவது போல் இன்னொருவருக்கு
பொருந்துவதில்லை. நிறைய ஞானம் குறித்த தத்துவ நூல்களை வாசிக்கிற போது குழப்பமே எஞ்சுகிறது.
மிகச் செல்வ சீமானாக எல்லா அனுபவத்தையும் பார்த்த ஒரு நபர் எளிமையாக ஞானம் அடைய முடியும்
என்று ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. அந்த கட்டுரை உதாரணமாக, சான்றாக குறிப்பிடுகிற
நபர் புத்தர். மிகப்பெரிய வசதி வாய்ப்புள்ள அரச குடும்பத்தில்
பிறந்த ஒரு நபர் எல்லாவற்றையும் அனுபவமாக பார்த்து, எல்லாவற்றையும் கரைத்து, எல்லாவற்றையும்
பெற்றுக் கொண்டு துறந்து விடுவதற்கு எளிய வாய்ப்பிருப்பதால் அவர் எளிமையாக ஞானத்தை
எய்து விடுவதற்கு சாத்தியம் உள்ளவர் என்று அந்த கட்டுரை குறிப்பு சொல்கிறது.
பிற்காலத்தில் நவீன இந்தியாவில், இந்தியாவில்
பிறந்த புத்தரை விடவும் ஜவஹர்லால் நேரு அதிக செல்வம் உள்ளவராக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஜவஹர்லால் நேருவினுடைய பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் எளிய இரவு ஆடை இத்தாலியத்திலிருந்தும்
லண்டனில் இருந்தும் வாங்கப்படும் என்று ஆய்வுக் குறிப்புகள், செய்திக் குறிப்புகள்,
ஆவணக் குறிப்புகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. செல்வமானவர்கள், எல்லாவற்றையும் கடந்தவர்கள்
ஞானம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நாம் ஒரு கட்டுரை குறிப்பை வைத்து நம்புவோம்
என்றால் புத்தரை விடவும் அதிக சாத்தியம் நேருவுக்கு இருக்கிறது. ஆனால் புத்தர் தான்
ஞானமாகியிருக்கிறார். ஞானி என்று போற்றப்படுகிறார். செல்வத்தின் வழியாக, செல்வத்தின்
சேகரிப்பின் வழியாக, செல்வத்தை கடந்ததன் வழியாக ஒரு மனிதன் ஞானி ஆக மாறிவிட முடியாது.
ஏழையாக இருப்பவர்கள் இலக்குகள் இல்லாமல் இருப்பார்கள்.
எவற்றிலும் பற்று கொள்ளாமல் இருப்பார்கள். எனவே ஏழையாக இருப்பவர் எளிமையாக ஞானியாகி
விட முடியும் என்ற கட்டுரையை நான் படித்திருக்கிறேன். அப்படித்தான் பகவான் ரமண மகரிஷி
ஞானம் பெற்றார். இன்னும் நிறைய திபெத்திய ஞானிகள் எளிமையாக ஏழையாக இருக்கிறபோது ஞானம்
பெற்றார்கள் என்று ஆய்வுக் குறிப்புகள் இருக்கின்றன. அப்படி என்றால் இந்தியா மாதிரியான
மூன்றாம் உலக நாடுகளில் இருக்கிற பெரும்பான்மையான மக்கள் ஞானியாகவே பிறப்பதற்கும் ஞானியாகவே
வாழ்வதற்கும் ஞானியாகவே மடிந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏழையாக இருப்பது ஞானத்திற்கு
போதுமான தகுதி என்று நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.
காமம் கடந்தவர், காமத்தை முழுமையாக மேற்கொண்டவர்
ஞானியாக முடியும் என்று ஒரு கருத்தாகம் உருவாகி இருந்தது. குறிப்பாக நவீன தத்துவ ஆய்வாளர்கள்
ஓஷோவின் வருகைக்கு பிறகு காமம் குறித்த உரையாடல் நிகழ்த்தப்பட்டபோது காமம் குறித்து
நிறைய பேசுகிறவர்கள், காமம் குறித்து நிறைய உரையாடல் செய்கிறவர்கள், அது குறித்து விவாதிக்கிறவர்கள்
ஞானி ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காமம் தான் ஞானத்திற்க்கான தடை. காமம் குறித்த தடைதான்
ஞானத்திற்குரிய தடைக்கல் என்றெல்லாம் கூட விவாதங்கள்
செய்யப்பட்ட சூழலில் காமத்தை எந்த பொறுப்பும் இல்லாத மேலை நாடுகள் காமம் குறித்து அதிக
உளவியல் சிக்கல் இருக்கின்றன என்று பதிவுகள் இருக்கிற, ஆவணங்கள் இருக்கிற மேலை நாடுகள்
ஞானியை உருவாக்கவில்லை. காமத்தை அடக்கி வைப்பதன் வழியாக ஞானம் பெற முடியும் என்று ஆய்வு
குறிப்புகளை, தத்துவ குறிப்புகளை, ஞானம் குறித்த கட்டுரைகளை நாம் படிக்க முடிகிறது.
அந்த வகையில் காமத்தை அடக்கி வைப்பவர்களும் ஞானம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை.
இயற்கையோடு இயற்கையாக வாழ்கிறவர்கள் ஞானப்
பெற முடியும் என்று தத்துவக் குறிப்புகள், கட்டுரைகள் கூறுகின்றன. இயற்கையோடு இயற்கையாக
வாழ்கிற மலைவாழ் மக்கள் ஞானம் பெற்றவர்களாக பார்ப்பதற்கில்லை. இயற்கையில் இருந்து தனிமையாக
இருப்பவர்கள் ஞானம் பெற முடியும் என்று ஆய்வுகளில் நாம் படிக்கிற போது தனிமையாக இருப்பவர்கள்
பெரும்பாலும் மன நோயின் குறியீடு கொண்டவர்களாக உளவியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.
இப்படி யார் ஞானம் பெறுவது என்று ஒரு முடிவிற்குள் செல்ல முடியாத அளவிற்கு குழப்பமான
பகுதியாக ஞானம் இருக்கிறது. யார் ஒருவரை ஞானி
என்று நாம் மதிப்பது என்று தேர்வு செய்வதற்கு எந்த மதிப்பீடும் எவரிடமும் இல்லை.
உங்கள் வாழ்நாளை ஒருவர் குறித்துச் சொன்னால்
அவரை ஞானியாக பார்ப்பதற்கான சாத்தியம் உங்களுக்கு இருக்கிறது. நாளை உங்கள் வீட்டில்
நடக்கிற நிகழ்வு ஒன்றைப் பற்றி இன்றே நான் கூறினேன் என்றால் நீங்கள் என்னை ஞானி போல்
பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் முகக்குறிப்பு, உங்கள் அவயக் குறிப்பு, உங்களது
வேகம், உங்களது மன எரிச்சல் இவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகளில் இருந்து நான்
ஒரு தொகுப்பாக உங்களிடம் ஒன்றை பகிர்ந்து கொண்டேன் என்றால் நீங்கள் என்னை ஞானி போல்
பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது எல்லாமும் உங்களின் அறியாமை.
ஞானிகள் பெரும்பாலும் பார்ப்பவர்களின் அறியாமயிலேயே
உருவாகிறார்கள் என்று நான் பார்க்கிறேன். ஞானம் என்பதும் அப்படியானதாக இருக்கிறது.
ஞானம் பெறுவதும் ஞானியாக ஒருவர் மாறுவதும் என்கிற கருத்தாகங்களை விடவும் முக்கியமானது
அன்றாடம் ஒருவரின் வாழ்வில் நிகழ்கிற நிகழ்வையும்
நேர்மையாக எதிர்கொள்கிற தைரியம் உள்ளவராக ஒருவர் இருக்க வேண்டும். சமூகம் வைத்திருக்கிற
கருத்தாக்கங்களை உடைத்துக் கொண்டு தமக்கு அறமாய் இருக்கிற இயற்கையின் இசைவாய் இருக்கிற
ஒன்றை செய்து பார்க்கிற ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு ஒருவர் முயற்சிக்க
வேண்டும். இந்த முயற்சியின் வழியாக அவர் பெறுகிற அனுபவத்தை சரியாக பார்க்கிற விழிப்புணர்வு
அவருக்கு வேண்டும். இதன் வழியாகவே ஒருவர் தம்மை வாழ்வு முழுவதும் நலமாகவும் வளமாகவும்
மகிழ்வாகவும் வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஞானிக்கு அல்லது ஞானத்திற்கு
இவை பயன்படுமா என்பது பற்றி எனக்கு நம்பிக்கையும் இல்லை. கவலையும் இல்லை. ஆனால் ஒரு
மனிதன் மகிழ்வாக வாழ்வதற்கு அனுபவத்தை பார்ப்பதும் அனுபவத்தின் முன் தன்னை உறுத்திக்
கொள்வதும் பெற்றதின் வழியாக தன்னை சீர் செய்து கொள்வதும் சீர் செய்து கொள்வதை பக்குவமாக
விழிப்புணர்வாக இந்த சமூகத்தோடு பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வதுமாக இருக்கிற ஒரு
மனிதன் மகிழ்வாக இருக்க முடியும்.
அவர் ஒருவேளை ஞானி என்று பிற்காலத்தில் இந்த
சமூகம் போற்றுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
…தொடர்ந்து
பேசுவோம்...
No comments:
Post a Comment