Saturday, May 27, 2023

இயற்கைக்கு எதிரானது நெறிப்பாடு - உரையாடல் 1 - சிவ.கதிரவன்

 

இயற்கைக்கு எதிரானது நெறிப்பாடு

www.swasthammadurai.com


மதிப்பிற்குரியவர்களுக்கு வணக்கம், 

பொதுவாக வாசிப்பும் உரையாடலும் மதிப்பிற்குரியவை. இன்று நாம் குழந்தைகளைப் பற்றி உரையாடல் செய்து கொண்டிருக்கிறோம் குழந்தைகளைப் பற்றிய உரையாடல் சமூகம் முழுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகள் உரையாடல் பொருளாக எல்லா இடங்களிலும் வெளிப்படுகின்றனர். மையப்படுத்தப்படுகின்றனர். பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் பற்றிய உரையாடல் நடக்கிறது. வீடுகளில் குழந்தைகள் பற்றி உரையாடல் நடக்கிறது. பெரியோர் மத்தியில், வயது முதிர்ந்தோர் மத்தியில் குழந்தைகள் பற்றி உரையாடல் நடக்கிறது. அரசாங்கம் குழந்தைகளைப் பற்றி விவாதிக்கிறது. சர்வதேச, தேசிய அளவில் முகாம்களாக வகுத்து குழந்தைகளுக்கான அக்கறையும் ஆலோசனையும் தருகிற உரையாடல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் குழந்தைகள் பற்றிய உரையாடல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலுக்குள் குழந்தைகள் மையப் பொருளாக இருக்கின்றனர் என்பதையும் நாம் பார்க்கிறோம். குழந்தைகள் பற்றிய உரையாடல் என்பது எல்லா இடங்களிலும் நடைபெறுவது என்பதை விடவும் நாம் குழந்தைகள் பற்றி பேசுவதற்கும் பொதுவான குழந்தைகள் பற்றிய உரையாடல் என்பதற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நம் குழந்தைகள் பற்றி உரையாடுவதற்கு சமூகத்தில் இருக்கிற குழந்தைகள் பற்றிய உரையாடல் நடப்பதற்கும் இடையே இருக்கிற வேறுபாடு என்பதை வேறுபட்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூகம் குழந்தைகள் பற்றி தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருக்கிறது.  நீங்கள் சாலையில் நடந்து செல்கிற போது உங்களுக்கு அறிமுகம் இல்லாத அல்லது அறிமுகம் செய்து கொண்ட ஏதாவது ஒரு குழந்தை உங்களை கண்ணோடு கண் பார்க்கிறபோது உங்களை அறியாமல் நீங்கள் அந்த குழந்தையோடு விளையாட்டை துவங்கி விடுவீர்கள். உரையடலை துவங்கி விடுவீர்கள். குழந்தையோடோ அல்லது குழந்தையை அழைத்து வருபவரோடோ உங்களது உரையாடல் துவங்கிக் கொண்டிருக்கிறது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

குழந்தைகளைப் பற்றி நாம் பேசுவதற்கு எந்த திட்டமும் இல்லாமல் இருந்தாலும் கூட குழந்தைகள் நம்மை பார்க்கிறபோது நம்மை கடந்து செல்கிற போது நமக்குள் ஏதாவது ஒரு வகையில் உரையாடலை துவங்கி விடுகின்றனர் என்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அவ்வாறு குழந்தைகள் பற்றிய உரையாடல் என்பது சமூக முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நாம் எல்லோரும் அப்படியான உரையாடலை சமூகத்திற்குள் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் பார்க்க முடியும். இந்த குழுவாக அமர்ந்து குழந்தைகளைப் பற்றி உரையாடல் செய்வதற்கும் சமூகம் முழுவதும் குழந்தைகள் பற்றி உரையாடல் செய்வதற்கும் பெரிய வேறுபாடு என்பது இருக்கிறது.

 குழுவாக அமர்ந்து நாம் செய்கிற உரையாடல் என்பது சமூகத்திற்குள் நிகழ்கிற குழந்தைகள் பற்றிய உரையாடல் என்பதிலிருந்து பல்வேறு தளங்களில் பல்வேறு விவரங்களின் அடிப்படையில் வேறுபாடு உடையதாக இருக்கிறது.

ஒரு பள்ளிக்கூடம் குழந்தையை பற்றி குழந்தையை மையப் பொருளாக வைத்து உரையாடுகிறது என்றால் அந்த பள்ளிக்கூடத்திற்குள் நிகழ்கிற உரையாடலின் சாராம்சம் அந்த குழந்தையை நன் மதிப்பெண் பெற வைப்பது என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. பள்ளிக்கூடங்கள் தெருக்களில் பார்க்கிறபோது பள்ளிக்கூட வாசல் முகங்களில் பார்க்கிறபோது பள்ளிக்கூடத்தின் வளாகத்தை சுற்றி பார்க்கிற போது நூறு, ஐம்பது குழந்தைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிலாகிக்கிற விளம்பர பலகைகளை நாம் காண்கிறோம். இவற்றின் நோக்கம் குழந்தைகள் வெற்றி பெறுகிறார்கள். குழந்தைகள்  சிறப்பானவர்கள் என்கிற வெளிப்பாடை முன் வைப்பதல்ல. இவற்றை நோக்கம் அந்த குழந்தைகளின் புகைப்படங்கள் வழியாக அங்கே சுட்டி காட்டப்படுகிற வெற்றியின் வழியாக குழந்தைகள் நன் மதிப்பு பெறுபவர்களாக, நல்ல மதிப்பெண் பெறுபவர்களாக பள்ளிக்கூடத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தும் வியாபாரச் சந்தை பொருளாக பார்க்கப்படுகின்றனர் என்பதை நான் பார்க்கிறேன். இந்த வகையில் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை குழந்தைகளுக்குள் இருக்கிற உரையாடல் பொருளை தேர்ச்சி விகிதத்திலும் பள்ளிக்கூடத்திற்குரிய கல்விமுறை குறித்தான உரையாடலிலுமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம்   பார்க்கிறோம்.

குடும்பங்களில் குழந்தைகள் பற்றிய உரையாடல் எவ்வாறு நிகழ்கிறது என்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். குடும்பத்திற்கு ஏதாவது ஒரு வகையில் சமூகம் சார்ந்த நடைமுறை ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் அப்படி இருப்பதை நாம் பார்க்கிறோம். குறிப்பிட்ட வகையான உணவு உண்பவர்கள், குறிப்பிட்ட வகையான மத நம்பிக்கை உடையவர்கள், குறிப்பிட்ட முறையான செயல்பாட்டு முறையை வைத்திருப்பவர்கள், குறிப்பிட்ட வகையான உடை, குறிப்பிட்ட வகையான வாழ்வு முறை, என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான நிலைப்பாடு சமூக ரீதியில் இருப்பதை நாம் காணலாம். இந்த சமூக ரீதியில் இருக்கிற குடும்ப நிலைப்பாடுகளை உள்வாங்கிக் கொள்வதற்கு தயார்படுத்துவது குழந்தைகள் மீது நடத்தப்படுகிற தொடந்த செயல்பாடாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த குழந்தை எந்த வகையான உணவை உண்ண வேண்டும். எந்த வகையான உணவை மறுக்க வேண்டும் என்று அந்த குழந்தைக்கு சொல்லித் தரப்படுகிறது. சமூகம் அமர்ந்து உட்கார்ந்து குழந்தைகளைப் பற்றி பேசவில்லை என்றாலும் கூட சமூகத்தின் ஊடாக, சிந்தனை முறையின் ஊடாக, வாழ்வியல் முறையின் ஊடாக ஒரு குழந்தைக்கு என்னவெல்லாம் உரையாடல் வழியாக கடத்தப்பட வேண்டுமென்று தெளிவான திட்டத்தோடு சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய உரையாடல் குழந்தைகள் பற்றிய உரையாடலாக குடும்பங்களுக்குள் நிகழ்கிறது.

மத வழிபாட்டுக்கூடங்களில் குழந்தைகள் யாரை வணங்க வேண்டும் என்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உரையாடலாக மாறிக் கொண்டிருக்கிறது. அரசியல் தளங்களில் எதிர்காலக் குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும். அவர்களது கல்வி எவ்வாறு இருக்க வேண்டும். அவர்களது பண்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று வகைப்படுத்தி தொகுத்துக் கொடுக்கிற வேலையை குழந்தைகள் பற்றிய உரையாடலுக்குள் செய்து கொண்டே இருப்பதையும் நாம் பார்க்கலாம். இவ்வாறு ஒவ்வொரு தளங்களிலும் குழந்தைகள் பேசுபொருளாக இருக்கின்றனர். குழந்தைகளின் மீது அக்கறை செலுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு தேவையான வசதி வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்கிற பல்வேறு அம்சங்களில் குழந்தைகள் பற்றிய உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது நண்பர்களே.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...