Saturday, May 27, 2023

இயற்கைக்கு எதிரானது நெறிப்பாடு - சிவ.கதிரவன்/உரையாடல் -2

                                 இயற்கைக்கு எதிரானது நெறிப்பாடு

www.swasthammadurai.com


குழந்தைகள் பற்றிய பொது உரையாடல் என்பதற்கும் நாம் குழுவாக இருந்து இந்த புத்தகங்களின் வழியாக இலக்கியங்களின் வழியாக தத்துவ விசாரணைகளின் வழியாக குழந்தைகளைப் பேசுகிறோம்; குழந்தைகளைப் பற்றி பேசுகிறோம்; குழந்தைகளைச் சுற்றி பேசுகிறோம் என்று பேசுகிறபோது சமூகத்தில் இருக்கிற குழந்தைகள் உரையாடலுக்கும் நாம் பேசுகிற குழந்தைகள் உரையாடலுக்கும் இருக்கிற  வேறுபாட்டை நீங்கள் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகம் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றார்களோ அவற்றிற்கு மாற்றாக எவ்வாறு குழந்தைகள் மாற்றப்பட வேண்டும் என்கிற தொணியில், என்கிற பாவனையில், என்கிற நோக்கத்தில் தொடர்ந்து சமூகம் உரையாடல் நடத்திக் கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை எந்த அழுக்கும் இல்லாத எந்த மத நம்பிக்கையும் இல்லாத எந்த சாதிய சார்பு நிலையும் இல்லாத இந்த உணவுத் தேர்வும் இல்லாத பழக்கத்தில் இருக்கிற குழந்தையை குறிப்பிட்ட மத நம்பிக்கைக்கு குறிப்பிட்ட சாதிய சார்பு நிலைக்கு குறிப்பிட்ட வாழ்வியல் முறைக்கு கஏபித்தல் உருவாக்குகிற தன்மையில் குழந்தைகள் குறித்த உரையாடல் சமூகத்திற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நாம் பேசுகிற குழந்தைகள் குறித்த உரையாடல் அப்படியானதல்ல.  குழந்தைகள் எந்த சார்பு நிலையிலும் இருப்பதில்லை என்பதைப் பார்ப்பதற்குரிய உரையாடல். குழந்தைகளுக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதை தெரிந்து கொள்வதற்கான உரையாடல். குழந்தைகள் எப்போதும் புதிதாக இருக்கிறார்கள் என்பதை கண்டு கொள்வதற்கான உரையாடல். குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்களோ அவ்வாறே ஏற்றுக் கொண்டு அவர்களோடு நாமும் பயணிப்பதற்குரிய உரையாடல். நாம் செய்கிற உரையாடல் என்பது குழந்தைகளை மையப்படுத்திய உரையாடல். குழந்தைகள் எப்போதும் புனிதமாக இருக்கிறார்கள். குழந்தைகள் பட்டாம்பூச்சி போல இருக்கிறார்கள். குழந்தைகள் மீன் குஞ்சுகள் போல இருக்கிறார்கள் என்று குழந்தைகளின் நடவடிக்கையை புனிதப் படுத்துகிற நோக்கத்தில் நடக்கிற உரையாடல் போல இந்த உரையாடல் அமைந்து விடக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அப்படியான உரையாடல் நாம் செய்யவில்லை. குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வதற்குக்குத்தான் இந்த உரையாடல். குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதிலிருந்து நாம் ஏதேனும் ஒன்றைப் பார்த்துக் கொள்வதற்கு தான் இந்த உரையாடல்.

குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதில் நாம் பார்த்துக் கொள்வதற்கு என்ன இருக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதில் நாம் பார்த்துக் கொள்வதற்கு ஏராளமாக இருக்கிறது என்கிற ஆச்சரியமும் உங்களுக்கு எழலாம். ஏனென்றால் குழந்தைகள் இவ்வாறெல்லாம் இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் வழியாக புதிய புதிய செய்திகளை நாம் வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும்  முற்படுகிறோம். உள்ளபடிக்கே உணர்வுப் பூர்வமாக குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதை விடவும் வெளியிலிருந்து வருகிற செய்திகள் வழியாக ஒப்பிட்டு பார்க்கிற மனநிலையில் நம் உரையாடல் நிகழ்கிற போது மீண்டும் சமூகத்திற்குள் நடக்கிற உரையாடல் போலவே நாம் உரையாடல் நிகழ்ந்து விடுகிறது.

 ஒரு காட்சியில் ஒரு தந்தை தன் குழந்தையை ஒரு பேருந்து நிலையத்தில் தன் கடையில் வைத்திருக்கிறார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு பேருந்து நிலையம் அது. அந்தப் பேருந்து நிலையத்தில் அந்த இளம் தந்தை தம்  குழந்தையை தமது கடையில் வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். அந்த குழந்தை அங்கு இருக்கிற தினசரி வார பத்திரிகைகளை விற்பனை செய்கிற பணியை செய்து கொண்டிருக்கிறது. அவர் பொருளாதாரப் பின்னணியோடு பார்க்கிற போது அந்த குழந்தை வேலையில் இருந்து ஒன்றை கற்றுக்கொண்டு பொருள் தேடி அந்த குடும்பத்திற்கு தர வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த தந்தைக்கு அப்படியான நெருக்கடி இல்லை. அந்த குழந்தை எல்லா குழந்தைகளையும் போல சராசரியான சமூக மதிப்பீட்டின் அடிப்படையில் பள்ளிக்கு சென்று வருவதற்கு வாய்ப்புள்ள குழந்தை. என்றாலும் கூட அந்த தகப்பனார் அந்த  குழந்தைக்கு அப்படி ஒரு வேலையை தந்திருக்கிறார். தினசரி காலை அந்த குழந்தை பள்ளிக்கு சென்று வீடு திரும்பியவுடன் மாலை நேரத்தில் கடையில் வந்து நிற்க வேண்டும். தந்தையோடு கடையில் உதவிகளை செய்ய வேண்டும். பின்பு இரவு வேளையில் தந்தைக்கு வேலை முடிகிற போது அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு செல்வார். இது வழக்கமான நடைமுறை. இந்த நடைமுறையில் இருக்கிற எதார்த்தம் என்ன உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அந்த குழந்தையோடும் அந்த தந்தையோடும் நான் பேசினேன்.

எதற்காக குழந்தையை இவ்வாறு உங்கள் வேலை நேரத்தில் இணைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கடையில் ஏன் அமர்த்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறபோது அந்தத் தந்தை சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்தக் குழந்தை பள்ளிக்கு சென்று திரும்புகிற விளையாட்டுத்தனமும் துடுக்குத்தனமும் நிரம்பி இருக்கிற குழந்தை மாலை நேரம் முழுவதும் கடையில் நிற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிற தந்தை சொன்ன விடை மிகுந்த ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உரிய செய்தியை உள்ளடக்கியதாக இருந்தது. அந்த தந்தை சொன்னது, அந்தக் குழந்தை இந்த வயதில் கஷ்டப்படுவதன் வழியாக இந்த வயதில் வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன் வழியாக பின்னாளில் பெரும் விஞ்ஞானியாக வருவதற்கு முடியும் என்று அந்த தந்தை உத்திரவாதமாக நம்பினார். எதை வைத்து இவ்வாறு சொல்கிறீர்கள் என்று நான் அந்த தந்தையிடம்  பேசிய போது, கேட்ட போது அவர் ஒரு விஞ்ஞானியின் பெயரைச் சொல்லி அந்த விஞ்ஞானி ரயில் நிலையங்களில்   மாலை நேரத்தில்  வாய்ப்பிருக்கும் காலங்களில் தினசரி பத்திரிகைகளை கொடுத்து, விற்று தன் வாழ்நாளிலை  நடத்தினார். அதன் வழியாக அனுபவங்களை கற்றுக்கொண்டு பின்னால் ஒரு பெரும் விஞ்ஞானியாக இந்த உலகத்திற்கு வெளிப்பட்டார் என்கிற தகவலின் அடிப்படையில் தம் குழந்தைக்கும்  அப்படியான ஒரு வாய்ப்பை உருவாக்கி தருகிறேன் என்று அந்த நம்பிக்கையை காரணமாக அந்தத் தந்தை சொன்னார்.  இப்படி ஒரு மூடநம்பிக்கையை இந்த சமூகம் ஒரு தந்தைக்கு வழங்கி இருக்கிறது.

 இளம் வயதில் ரயில் நிலையத்தில் ஒரு செய்தித்தாளை விற்பனை செய்வதன் வழியாக ஒரு குழந்தை பின்னாளில் விஞ்ஞானியாக மாறி இருக்கிறது என்கிற விதிவிலக்கான ஒற்றை வரலாற்றுக் குறிப்பை வைத்துக்கொண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் மாலை நேரத்தில் தினசரி செய்தித்தாளை, வார பத்திரிகைகளை விற்பனைக்கு கொடுத்து விடுவது என்கிற அபத்தமான ஒன்றை இந்த சமூகம் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் இந்த சமூகம் குழந்தைகளைப் பற்றி சிந்திக்கிற முறை.

என்னிடம் சிகிச்சைக்காக ஒரு குழந்தை அழைத்து வரப்பட்டது. நான் சிகிச்சை செய்கிற போது சில நேரங்களில் குழந்தைக்கு உடலில் அசௌகரியமோ, வலியோ ஏற்படுகிறது என்கிற பட்சத்தில் குழந்தையோடு வந்திருக்கிற பெற்றோர்கள், காப்பாளர்கள் அந்த குழந்தையிடம் உரையாடல்    செய்வதுண்டு. அப்படியான உரையாடல் நான் சிகிச்சை செய்கிற நேரத்தில் நடந்தது. ஒரு குழந்தை படுக்க வைக்கப்பட்டு அந்த குழந்தையினுடைய உடலில் சிகிச்சைக்குரிய  முறைகளை நான் செய்து கொண்டிருக்கிற பொழுது அந்த குழந்தை அழத் தொடங்கியது. அப்போது அந்த தந்தை உனக்கு என்ன பொருள் பிடிக்கும் என்றார். அந்தக் குழந்தை ஒரு பொருளை குறிப்பிட்டது. நேற்று வேறொரு பொருளை சொன்னாயே என்று கேட்டார். நேற்று அது பிடிக்கும் என்று அந்த குழந்தை சொன்னது. என்ன நிறத்தில் அந்த  பொருள் வேண்டுமென்று அந்த தந்தை கேட்டார். அந்த குழந்தை பச்சை நிறத்தில் வேண்டும் என்று சொன்னது. நேற்று பிங்க் கலர் என்று சொன்னாயே என்று அந்த தந்தை  மறுபடியும் கேட்டார். நான் நேற்று அதை சொன்னேன். ஆனால் இன்று எனக்கு பச்சை நிறம் தான் பிடிக்கிறது என்று சொன்னார். அந்த தந்தை அந்த குழந்தையின் முகத்தை பார்த்து என்னையும் பார்த்து ஒரு வார்த்தை சொன்னார். இவ்வாறு மாற்றி மாற்றி  பேசினால் உன்னை பைத்தியம் என்பார்கள் என்று அந்த குழந்தைக்கு கண்டனமாகவே இந்த வார்த்தையை  அந்த தந்தை பதிவு செய்தார்.  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு குழந்தை நேற்று ஒன்றாகவும் இன்று ஒன்றாகவும் இருக்கிறது என்பதை  பைத்தியக்காரத்தனமானது என்று இந்த சமூகம் கருதிக் கொண்டிருக்கிறது. அந்தக்  கருதுகோலின் அடிப்படையில் இருந்து ஒவ்வொரு குழந்தைகளையும் நிர்பந்திக்கிற, கட்டுப்படுத்துகிற வேலையை இந்த சமூகம் செய்து கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு குழந்தையை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...