Tuesday, May 30, 2023

இயற்கைக்கு எதிரானது நெறிப்பாடு - சிவ.கதிரவன்/உரையாடல் -3

                                 இயற்கைக்கு எதிரானது நெறிப்பாடு

www.swasthammadurai.com


நண்பர்களே ஒரு குழந்தை திணிப்பதன் வழியாக மலர்ந்து விட முடியாது. குழந்தைகள் மலர்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். குழந்தைக்கு ஆதரவாக, குழந்தைக்கு எதிராக பேசுகிற கருத்தியல் உள்ளவர்கள் எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள் குழந்தைகள் எப்போது மலர்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை. மலர்ச்சியாகவே இருக்கிற ஒரு குழந்தை ஒரு ரோஜா பூ போல. மல்லிகை பூ போல. மலர்ச்சியாகவே இருக்கிற ஒரு குழந்தை. ஒரு கருத்தை தொடர்ந்து வற்புறுத்துவதன் வழியாக. திணிப்பதன் வழியாக வேறொரு மலராக வளர்ந்து விட முடியும் என்று சமூகம் கருதி கொண்டிருக்கிறது. இந்த சமூக கருதோட்டத்தில் இருந்து மாறுபட்ட சிந்தனையை. மாறுபட்ட செயல்பாட்டு முறையை. மாறுபட்ட உரையாடல் நடைமுறையை செய்து பார்ப்பது தான் நாம் உரையாடுவதன் நோக்கம். நாம் உரையாடுவதற்கு தெளிவான நோக்கம் இது ஒன்றுதான்.

குழந்தைகள் மலர்ச்சியாக இருக்கிறார்கள் என்பது மேற்கத்திய அணுகு முறையில் தத்துவ விசாரணைகளுக்கு உட்படாமல் குழந்தைகளை புகழ்வதும் புனிதப் படுத்துவதும் என்கிற அடிப்படையில் இருப்பது அல்ல. குழந்தைகள் இருப்பிலேயே. இயல்பிலேயே அவர்களுக்கே உரிய தனி பாவனையோடு, அவர்களுக்கே உரிய தனி சூத்திரங்களோடு இயல்பாக, மகிழ்ச்சியாக, மலர்ச்சியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் மௌனங்களையும் சத்தங்களையும் வெளிப்பாட்டு மொழியாக வைத்திருக்கிறது.

 எனக்கும் என் குழந்தைக்கு நடந்த உரையாடல் ஒன்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ஜென் கதையை நான் படித்திருக்கிறேன். அந்த ஜென் கதை ஒரு ஆடு மேய்ப்பவனை பற்றிய கதை. ஒரு ஆடு மேய்ப்பவன் தன் ஆடை அழைத்துக்கொண்டு தன் ஆடு கட்டப்பட்டிருந்த பட்டியில் இருந்து வேறொரு இடத்திற்கு நகர்ந்து செல்கிறான். அப்போது ஆட்டினுடைய கழுத்தில் ஒரு கயிறு கட்டப்பட்டு அதன் மறுமுனை இவனது கையில் பிடிக்கப்படிருக்கிறது. அவன் நடந்து செல்கிறான். ஆடு புற்களை பார்த்து இழுக்கிறது. அந்த வழியில் வந்து ஜென் குரு இந்த கதையினுடைய பகுதியில் பேசுகிறார். இப்போது ஆட்டை அவன் பிடித்து இருக்கிறானா? அல்லது ஆடு அவனைப் பிடித்து இருக்கிறதா? என்கிற கேள்வியை அந்த ஜென்குரு வைத்திருக்கிறார். பார்வையில் பார்க்கிறபோது ஆட்டை அவன் பிடித்து இழுத்து இருக்கிறது போல நமக்குத் தெரியும். ஆடு அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்றும் நாம் விவரங்களை வியாக்யானங்களை செய்யலாம். ஆனால் ஜென் கதை அவற்றை, அவற்றிற்குள் இருக்கிற சூத்திரத்தை ஜென் மொழியில் முடித்து வைத்திருக்கிறது. இந்த கதையை நான் என் மகனுக்கு சொல்லினேன். நான் சொல்லி முடித்து இந்த கதைக்குள் இருக்கிற ஜென் நீதியையும் என் குழந்தையோடு பகிர்ந்து கொண்டேன். குழந்தை கதை முழுவதையும் கேட்டுவிட்டு என் குழந்தை எனக்கு சொன்னது ஆட்டிற்கு பசி எடுக்கிற போது புல்லை பார்க்கிற போது ஆடு அவனைப் பிடித்து இழுக்கிறது. ஆட்டினுடைய தேவையும் ஆட்டினுடைய பராமரிப்பு நோக்கமும் ஏற்படுகிற போது, உருவாகிற போது ஆட்டினை அவன் பிடித்து இழுக்கிறான் என்று ஜென் தளத்திற்குள் இருந்து வேறொரு பகுதியை, பார்வையை என் குழந்தை எனக்கு சொல்லிக் கொடுத்தது. இதுதான் குழந்தைக்குள் இருக்கிற ஒன்றாக நான் பார்க்கிறேன்.

இப்படி குழந்தைகள் நாம் கருதுகிற எல்லையில் இருந்து ஒன்றை கண்டுபிடித்து அல்லது அந்த எல்லைக்கு உட்படாமல்  வேறொரு பகுதியோடு இருக்கிறார்கள் என்கிற நிஜத்தில் இருந்து நாம் ஒன்றை பார்க்க வேண்டி இருக்கிறது. அதுதான் சமூகம் முழுவதும் நடக்கிற குழந்தைகள் குறித்த உரையாடலுக்கும் நாம் செய்கிற குழந்தைகள் குறித்த உரையாடலுக்கும் இருக்கிற ஒரு மிகப்பெரிய வேறுபாடு.

இன்று குழந்தைகள் பற்றி பேசுகிற போது எல்லோரும் குழந்தைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் குழந்தைகள் பற்றிய பேசுபொருள் இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளை தொடர்ந்து நெறிப்படுத்துகிற ஒரு வேலையை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம்.  அடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டிய பேருண்மை குழந்தைகள் நெறிப்படுத்துவதற்கு எதிரானவர்கள். நாம் எப்போதும் நெறிப்படுத்துவதற்கு ஆதரவாக செயல்படுகிற சமூக மனதோடு இருக்கிறோம். ஏதாவது ஒன்று நம்மை நெறிப்படுத்தினால் நமக்கு போதுமானது. நமக்கு தேவையான செய்தியை யாராவது ஒருவர் கண்டுபிடித்து வைத்திருந்தால் அவர் பாராட்டுக்குரியவர். சமூகம் முழுவதும் நெறிப்படுத்துவதற்கு இலகுவான நெறிப்படுத்துவதற்கு ஆதரவான எல்லா புத்தகங்களும் எல்லா ஆவணக் குறிப்புகளும் எல்லா ஊடக விமர்சனங்களும் பெரும் பெயரை பெற்றுக் கொள்கின்றன. பெரும் ஆதரவை பெற்றுக் கொள்கின்றன.

ஒரு புத்தகமோ, ஒரு ஆவணக் குறிப்போ, ஒரு செய்தி குறிப்போ எப்போதெல்லாம் பெரும் பெயரையும் பெரும் ஆதரவையும் பெறுகிறது என்று நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் எளிதாக ஒரு உண்மை புரியும். நீங்கள் எந்த ஒன்றையும் முயற்சிக்காமல், நீங்கள் எந்த ஒன்றையும் செய்து பார்க்காமல் உங்களுக்கு தேவையான விடைகளை அந்தச் செய்தி குறிப்பு வைத்திருக்கும் என்றால் அது ஆதரவுக்குரியதாக மாறிவிடும். குழந்தைகள் பற்றிய புத்தகங்களும் அதுதான். குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டியது இல்லை. குழந்தைகளுக்கு எவற்றை எல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. குழந்தைகளுக்கு எவற்றை எல்லாம் கற்றுக் கொடுக்கலாம் என்று நீங்கள் ஆதரவு தேட வேண்டியதில்லை. எல்லாவற்றிற்குமான ஒன்றை ஒரு புத்தகத்தின் வழியாக உங்கள் கையில் கொடுப்பார்கள் என்றால் அவர்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த சேவையை செய்கிறார்கள் என்று இந்த சமூக நம்பி கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையை மாற்றி அமைப்பதற்காக இந்த நம்பிக்கைக்கு ஊடாக இருக்கிற பயனற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்காக நாம் ஒரு உரையாடலை செய்கிறோம். குறிப்பாக குழந்தைகள் குறித்த உரையாடலுக்குள் இதுதான் நோக்கமாக இருக்கிறது. குழந்தைகள் என்பது பொருளாக இல்லை. குழந்தைகள் என்பது இயக்கம். குழந்தைகள் என்பது இயற்கையினுடைய வெளிப்பாடு, பிரதிநிதித்துவம். ஒவ்வொரு குழந்தையும் இயற்கைக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். குழந்தைகள் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட எந்த தடையும் எந்த அங்கீகாரமும் குழந்தைகளுக்கு பொருட்டாகவே இருந்ததில்லை. எல்லா வகையான உடைகளையும் குழந்தைகள் பொருத்திக் கொள்கிறார்கள். பொருந்திக் கொள்கிறார்கள். எல்லா வகையான பண்பாட்டிலும் குழந்தைகள் தம்மை பொருத்திக் கொள்கிறார்கள். தாமும் பொருந்திக் கொள்கிறார்கள்.

இப்படி எந்த முடிவும் இல்லாத எல்லை கடந்த பெரும் அழகோடு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு நமக்கு ஒரு தயாரிப்பு தேவை இருக்கிறது. இந்த தயாரிப்பு நெறிப்படுத்துவதற்கு உரிய புத்தகங்கள் வழியாக நமக்கு எப்போதும் கிடைக்காது. நெறிப்படுத்துகிற புத்தகங்கள் குழந்தைகளை நெறிப்படுத்துகிற புத்தகங்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளுக்குரிய கண்காணிப்பாளர்களை நெறிப்படுத்துகிற புத்தகங்களாக இருந்தாலும் சரி. ஆசிரியர்களை, பெற்றோர்களை என்று குழந்தைகளுக்கு பக்கத்தில் இருக்கிற யார் ஒருவருக்கும் நெறிப்பாடுகளை வழங்குகிற புத்தகங்கள் எல்லாமுமே குழந்தைகளுக்கு எதிரானவை.  ஏனென்றால் அடிப்படையில் குழந்தைகள் நெறிப்படுத்துபவர்களுக்கு உரியவர்கள் அல்ல. நெறிப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நெறிப்பாடுகள் தேவை இல்லாதவர்கள். இந்த குழந்தை இந்த சமூகத்திற்குள் தம்மை பொருத்திக் கொள்கிற தேவை வருகிறபோது அந்த குழந்தை ஒன்றைக் கற்றுக் கொள்ளும் என்பதை குழந்தை கொடுத்த ஆய்வாளர்களுடைய மேன்மையான ஆவணங்கள் வழியாக நாம் பகிர்ந்து கொள்ள முடியும். ஜான் ஹோல்டு இதை குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...