Thursday, May 25, 2023

கடவுள் எது? - திருக்குறள் பொருள் உரையாடல் - சிவ.கதிரவன்/ பகுதி 3

                                 கடவுள் எது?

ஒரு சம்பவத்தை சொல்லி, நான் வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன். வேறொரு வாகனம் என் எதிரே வந்து என் மீது மோதுகிறது. நான் உயிர்ப்பிளைத்து விட்டேன். கடவுள் இருக்கிறார் என்று இந்த உவமையை உங்களுக்கு சொல்லலாம். ஆனால் இது எல்லா இடங்களிலும் பொருந்தாது என்று வள்ளுவர் கருதுகிறார்.

கடவுளுக்கு இணையாக ஒன்றை உங்களுக்கு தெரிந்த ஒன்றை சொல்ல வேண்டும். எப்படி விமானத்திற்கு இணையாக தெரிந்த ஒன்றாக பறவை பறந்து வருவதை ஒப்பிடுகிறோமோ அப்படியான ஒப்பீடாக, கடவுளுக்கு இணையான ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்றால் கடவுளுக்கு இணையான ஒன்றின் வழியாக கடவுளை காண வேண்டும் காண முடியும் என்று வள்ளுவர் கருதுகிறார் என்று பார்க்கிறபோது வள்ளுவரினுடைய முயற்சி வந்து நிற்கிற இடம் கடவுளை நீ பார்க்க வேண்டும் என்றால், கடவுளை நீ உணர வேண்டும் என்றால், கடவுள் எவ்வாறு இருக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மொழிக்கு  அகரம்(அ) எவ்வாறு இருக்கிறதோ அதேபோல்  உலகிற்கு கடவுள் இருக்கிறார். கடவுளும் மொழியும் ஒரே தட்டில் வைத்து பார்க்கிற இணை தன்மை உள்ளதாக இருக்கிற உண்மையை வள்ளுவர் நம் முன் வைக்கின்றார். இவ்வளவு பெரிய சாத்தியத்தை கடவுளை உணர்த்தும் சாத்தியத்தை மொழி வைத்திருக்கிறது. மொழி ஆளுமை வைத்திருக்கிறது. மொழிக்குப் பின்னால் இருக்கிற எல்லாமும் வைத்திருக்கிறது என்கிற அளவில் மொழியின் முதன்மையை, மொழியின் முக்கியத்துவத்தை சொல்கிற வள்ளுவர் வேறொரு இடத்தில் உயிர் வாழ்வதற்கு, பூமியில் இருக்கிற உயிருக்கு கண்ணாக இருப்பது மொழியல்ல எண் என்கிறார் இது முரண்.

உயிருக்கு முதன்மையாக இருப்பது, உயிருக்கு பயன்பாட்டு அளவில் முதல் இடத்தில் இருப்பது உலகில் உள்ள உயிருக்கெல்லாம் முதன்மையாக இருப்பது மொழி என்று கடவுளை ஒப்பிட்டு சொல்லுகிற வள்ளுவர், வேறொரு இடத்தில் உயிருக்கு கண் போன்று இருப்பது, உயிருக்கு முதன்மையாக இருப்பது மொழியல்ல எண் என்று முரணாக சொல்கிற ஒரு பேரழகு திருக்குறளுக்குள் இருக்கிறது. வேறொரு இடத்தில் வேறொரு முரணை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள  ஆசைப்படுகிறேன்.

கடவுள் வாழ்த்துடன் துவங்குவது இலக்கிய மரபு. எல்லா இலக்கிய நூல்களும் கடவுள் வாழ்த்தோடுதான் தான் துவங்கும். இன்னும் இன்றும் நம் வீடுகளில் அச்சிடுகிற அழைப்பிதழ் கூட கடவுள் வாழ்த்தோடு தான் துவங்குவதை நாம் பார்க்க முடியும்.  எந்த மரபை பின்பற்றுபராக இருந்தாலும் எந்த மார்க்கத்தை வழிபடுபவராக இருந்தாலும் துவங்குகிற போது கடவுள் வாழ்த்தோடு துவங்குவது ஒரு மரபு. கடவுள் வாழ்த்தோடு துவங்குகிற வள்ளுவர் அகர முதல என்று துவங்கி பத்து பாடல்களிலும் கடவுள் என்கிற ஒன்றை, கடவுள் என்கிற கருத்தை வலியுறுத்தி பேசுகிற வள்ளுவர் வேறொரு இடத்தில் தெய்வத்தால் ஆகாது என்று மாறுபடுகிறார்.

தெய்வத்தால் ஆகாது என்று கருத்திருக்கிற ஒருவர் கடவுள் வாழ்த்தை வைத்து பாட்டு எழுதுவது சாத்தியமில்லை. அல்லது கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு பத்து பாடல்களை எழுதிய ஒருவர் எந்த இடத்திலும் தெய்வத்தால் ஆகாது என்று சொல்ல முடியாது. இது திருக்குறளுக்குள் இருக்கிற மற்றொரு முரண்.  இப்படி முரண் என்கிற பேரழகு தத்துவ நூல்களுக்குள் இருப்பதைப் பார்க்க முடியும். இது தத்துவ நூல்களுக்குள் மட்டும் தான் சாத்தியம்.  திருக்குறளை நாம் இலக்கிய நூலாக நாம் படிக்க முடியும். திருக்குறளை இலக்கியம் கடந்து வாழ்வியல் நூலாக படிக்க முடியும். திருக்குறளை வாழ்விற்குரிய சூத்திர நூலாக படிக்க முடியும். எல்லா நிலைகளிலும் நாம் திருக்குறளை வாசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் பரிந்துரைப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.

நீங்கள் சோர்ந்து இருக்கிற போது முயற்சி குறித்தான செய்யுள் பாக்கள் உங்களுக்கு உதவி செய்யும். திருக்குறளுக்குள் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது. நல்ல நிர்வாகம் செய்வதற்கு திருக்குறள் உங்களுக்கு உதவி செய்யும். நன்றாக ஒருவரோடு நட்பு பாராட்டுவதற்கு திருக்குறள் உங்களுக்கு உதவி செய்யும். ஒருவரை மறுத்து பேசுவதற்கு, அறம் பேசுவதற்கு திருக்குறள் உங்களுக்கு  உதவி செய்யும். எல்லா அம்சங்களிலும் திருக்குறள் உங்களுக்கு உதவி செய்யும்.

எல்லா அம்சங்களுக்குள் இருக்கிற முரண்பாடுகளோடு திருக்குறள் இருக்கிறது என்கிற தளத்திலும் நாம் வாசித்து பார்க்க வேண்டி இருக்கிறது. இதுவரை இது ஒரு உரையாடப்படாத பகுதி என்று நான் பார்க்கிறேன். திருக்குறள் ஒரு தத்துவ நூல் என்று நான் உங்களோடு அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்.  கடவுள் எது என்பதுதான் நாம் முன் வைத்திருக்கிற தலைப்பு.  கடவுள் யார் என்பது அல்ல சிக்கல். நாம் தலைப்பின் வழியாக குறளை வாசிக்கிற போது இதுவரை சமூகத்தில் கடவுள் யார் என்று தான் விவாதம் நடந்திருக்கிறது. கடவுள் எது என்பது குறித்து நாம் விவாதிப்பதற்கு பழகியதே இல்லை. இன்னொரு சிக்கல், கடவுள் உயர்திணையாகத்தான் இருக்க வேண்டும் என்று மனித சமூகத்திற்கு ஒரு கருத்து இருக்கிறது. கடவுள் எந்த திணையாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

கடவுள் உயர்திணையாகவோ, அஃறிணையாகவோ, இல்லாத திணையாகவோ இது மூன்றும் கலந்த ஒன்றாகவோ எவ்வாறு வேண்டுமென்றாலும் இருக்கலாம். நாம் தேர்வு செய்து இருக்கிற, முன்வைக்கின்ற தலைப்பு கடவுள் எது? என்பதுதான். கடவுள் எது என்பதற்கான தேடலில் நாம் திருக்குறள் வழியாக பார்க்கிறபோது, தேடுகிற போது திருக்குறளுக்குள் இருக்கிற கடவுளின் கூறு முரண்.  உலகில் இருக்கிற அழகு, நேர் எதிரான முரண்களின் கலவை என்று நான் பார்க்கிறேன். உலகின் சமநிலை முரண்களிலேயே வாழ்கிறது. இரண்டு நேர் எதிரான பருவங்களை ஒரு ஆண்டு கடந்தாக வேண்டும் என்பது உலக இயக்க  விதி. இரண்டு நேர் எதிரான வெளிச்சப் பண்பை ஒரு நாள் கடந்தாக வேண்டும் என்பது  இயக்க விதி. இரண்டு நேர் எதிரான மூச்சு சுழற்சியை ஒரு மனிதனின் சுவாசம் கடந்தாக வேண்டும் என்பது இயற்கையின் இயக்க விதி. இப்படி முரண்களிலேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் பின்னால் இருக்கிற கருத்தாக்கம், பின்னால் இருக்கிற செயல்பாட்டு வடிவம், பின்னால் இருக்கிற சூத்திரம், பின்னால் இருக்கிற ஏதோ ஒன்று அல்லது ஏதும் இல்லாத ஒன்று கடவுள் என்று நாம் துவங்கிக் கொள்ள முடியும். இந்த முரண் கடவுளாக, கடவுள் அல்லாததாக, எல்லாமுமாக, எதுவும் அல்லாததுமாக நான் உங்களோடு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

திருக்குறள் முழுவதும் முரணோடு இருக்கிறது. முழுவதும் கடவுளோடு இருக்கிறது. தெய்வத்தில் துவங்கி, முடிக்கிற போது கணவனுக்கும் மனைவிக்கும் காதலனுக்கும் காதலிக்கும் முரண்பாடு வருகிற போது அந்த முரண்பாட்டை  தீர்த்துக் கொள்வதற்கான நுட்பமான காதலர்கள் பேசிக் கொள்கிற,  காதும் காதும் வைத்து பேசிக் கொள்கிற ரகசியமான குலில் இருக்கிற ஒரு ரகசியத்தை திருவள்ளுவர் 1330 வது குறளில் வைக்கிறார். எது காதலுக்கு இன்பம். உண்மையிலேயே முரண்பாடும் முரண்பாட்டிற்கு பின்பு எழுகிற இணக்கமும் காதலுக்கு அழகு. இந்த குறளை திருக்குறள் என்ற மொத்த பகுதியில் இருந்து நாம் பார்க்கிறபோது கடவுளும் காதலும் சேர்வதற்கு வாய்ப்பில்லை என்கிற அளவிற்கு சமூகம் பிரிந்து கிடக்கிறது. கடவுளையும் காதலையும் சேர்த்து பேசிவிட முடியாது. சேர்த்து பேசி விடுவதன் வழியாக ஒன்று கடவுளை காண முடியாது. இல்லையென்றால் காதலை காண முடியாது.

கடவுளும் காதலும் சேர்ந்து இருப்பதற்குரிய முரண் அடங்கிய, முரண் தெரித்து வெடிக்கிற பேரழகோடு திருக்குறள் இருக்கிறது. இப்போதும் நாம் பார்க்க முடியும். கடவுளில் துவங்கி காதலனுக்கும் காதலிக்கும் இடையே இருக்கிற முரண் தீர்ப்பது எப்படி என்று காதலை வலியுறுத்தி குறள் நிறைவடைகிறது. இந்த முரண் கடவுளின் வடிவம். கடவுள் எது என்பது முரணினுடைய வெளிப்பாடு. கடவுள் ஏதுமில்லை என்பதும் முரணினுடைய வெளிப்பாடு. முரணிலிருந்தே கடவுள் இருப்பதையும் கடவுள் இல்லாமல் இருப்பதையும் நீங்கள் வியாக்கியானம் செய்ய முடியும். கடவுள் இருக்கிறார் என்பதை முரணிலிருந்தே வியாக்கியானம் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. முரண் இருப்பதால் கடவுள் என்று ஒன்று இல்லை என்பதற்கு வியாக்கியானம் அளிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியான முரண் இது.

கடவுளில் துவங்கி கடவுளும் காதலும் சேர்ந்திருக்கிற பேரழகு திருக்குறளுக்குள் இருக்கிறது. முரண் என்கிற கருத்தாக்கத்தில் நாம் அந்த கடைசி குறளை வாசிப்பு செய்கிறபோது கடவுள் அல்லது முரண் அந்த ஒற்றைக் குறளுக்குள் இருக்கிறது. முரண் வருகிறது. பின்பு இணக்கம் வருகிறது. காதலனுக்கும் காதலிக்கும் இருக்கிற நெருக்கத்திற்குள் முரண் வருகிறது. அந்த நெருக்கத்திற்குள் இணக்கம் வருகிறது. இணக்கமும் பிணக்கும் முரணானது. இணக்கமும் பிணக்கும் முரணானது என்பதன் வழியாக அப்படியே விட்டு விடாமல் இணக்கமும் பின்பு முரணும்  பின்பு முரணும்  இணக்கமும் என்று மாறி மாறி இருப்பது தான் காதலுக்கு அழகு என்று திருவள்ளுவர் நிறைவு செய்கிறார்.

மொத்தக் குறளுக்குள்ளும் விதவிதமான முரண்பாடுகள் வேறுவேறு இடங்களில் இருக்கிறது. வேறு வேறு இடங்களில் வெளிப்படுகிறது. இத்தகைய பேரழகான முரண் கடவுளின் வெளிச்சமா,க கடவுளுக்குள் இருக்கிற குறியீடாக, கடவுளைச் சொல்லி வழிகாட்டுகிற வழிப்பாதையாக நான் பார்க்கிறேன். ஒரே ஒரு கடவுளின் குறியீடை சொல்லி இந்த நிகழ்வை நான் நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தமிழ் சொல் அமைப்பு முறையில் ‘திரு’ என்பது பெரிது என்று அர்த்தம். ‘குறள்’ என்பது சிறிது என்று அர்த்தம். குறள் என்று நீங்கள் ஒன்றை குறிப்பிட்டு செய்யுள் எழுதினால் இருப்பதிலேயே மிகச் சிறிய வடிவம் குறள். ஒருவரை மிக உயர்வாக, மிகப்பெரியதாக நீங்கள் குறிப்பிட வேண்டும் என்று சொன்னால் அவரைத் ‘திரு’ என்று அழைப்பது வழக்கம். பெரிய ஒன்றும் சிறிய ஒன்றும் இணைந்திருக்கிற பேரழகு, முரண் திருக்குறளில் பெயரிலேயே இருக்கிறது. முரண் என்பது தத்துவம் சார்ந்தது. தத்துவத்திற்குள் எழுகிற புரிதல் சார்ந்தது. அது கடவுளும் கடவுளின்மையும் சார்ந்தது. முரணும் தத்துவமும் கடவுளும் கடவுளின்மையுமாக இருக்கிற ஒரு பேரழகு திருக்குறளுக்குள் ஒளிந்திருக்கிறது. கடவுள் எது? என்பது குறித்து தொடர்ந்து பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

நன்றி.

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...