Sunday, June 11, 2023

இயற்கைக்கு எதிரானது நெறிப்பாடு - சிவ.கதிரவன்/உரையாடல் -4

                                         இயற்கைக்கு எதிரானது நெறிப்பாடு

www.swasthammadurai.com


ஒரு குழந்தை தனக்கு தேவையான ஒன்றை சமூகத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் தான் விரும்புகிற ஒன்றை சமூகத்திற்கு கொடுப்பதற்கும் தயாராகவே இருக்கிறது என்பதை ஜான் ஹோல்டு குறிப்பிடுகிறார்.

ஜான் ஹோல்ட் மிகப்பெரிய குழந்தைகள் குறித்த மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவர். 1940 களில் குழந்தை சமூகம் குறித்து இந்தியச் சூழலில் பெரிய ஆய்வுகள்  பே.தூரன் உள்ளிட்ட குழந்தை ஆய்வாளர்கள், உளவியல் சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. பே.தூரன் போன்ற ஆய்வாளர்களினுடைய குழந்தைகள் ஆய்வு முறைக்கும் ஜான் ஹோல்ட் போன்ற ஆய்வாளர்களினுடைய குழந்தைகள் ஆய்வு முறைக்கும் நெருக்கமான பகுதிகள் இருந்தாலும் கூட சமூகம் உளவியல் சார்ந்த பெரிய விளக்கமான பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும் கூட குழந்தைகளை குழந்தைகளாக பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும், அக்கறை ஏற்பட வேண்டும் என்று சொன்னவர்கள் பே.தூரன் ஜான் ஹோல்ட் உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள்.

இன்னொரு புறம் குழந்தைகளுடைய மையத்தை ஆய்வு செய்வதற்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தத்துவ ஆய்வாளர்கள் உரையாடல்களை செய்து கொண்டே இருக்கிறார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகளை பார்க்கிறபோது, ஜே. கிருஷ்ணமூர்த்தியின் விளக்கங்களை பார்க்கிற போது குழந்தைகளை இயற்கையை புரிந்து கொள்வதற்குரிய தனி மனித தடையை எவ்வாறு விளக்கிக்  கொள்வது என்கிற ரீதியில் நாம் அவற்றை பேசி பார்க்க முடியும். இவ்வாறு குழந்தைகள் குறித்த உரையாடல் என்பது உன்னதமான வேறொரு பகுதியை உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதை நாம் உரையாடல் பொருளாக வைத்திருக்கிறோம்.

குழந்தைகளைக் குறித்த கற்றல் என்பது குழந்தைகளை குறித்து நாம் கற்றுக் கொள்வது. குழந்தைகளை வழிப்படுத்தும், நெறிப்படுத்தும் முறைகளை கற்றுக் கொள்வது அல்ல. குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்றுக் கொள்வது அல்ல. குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை நாம் கற்றுக் கற்றுக் கொள்வதற்காகத்தான் குழந்தைகள் குறித்த கற்றலை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். சமீபத்தில் நான் பார்த்த, படித்த, வாசித்த புத்தகம் ஒன்று. குழந்தைகளுக்கு உரிய தீர்வுகளை அந்த புத்தகம் உள்ளடக்கமாக வைத்திருக்கிறது.  அந்த புத்தகத்தை விமர்சனமாகவும் அணிந்துரையாகவும் ஆதரவாகவும் எழுதியவர்கள் சமூகத்தில் போற்றப்படுகிற பெரும் ஆளுமைகளாக இருக்கிறவர்கள். அந்த புத்தகத்தை வாசிக்கிற போது குழந்தைகளை உள்ளடக்கிய, குழந்தைகளின் உள்ளடக்கத்தை பேசுகிற ஜே.கிருஷ்ணமூர்த்தி, பே.தூரன், ஜான் ஹோல்ட் உள்ளிட்ட ஆய்வாளர்களின் அணுகு முறையில் இருந்து குழந்தைகளை நாம் புரிந்து கொண்டோம் என்றால் இந்த புத்தகம் இது போன்ற புத்தகங்கள் குழந்தைக்கு நெறிப்படுத்துவதற்கு ஆதரவாகவும் குழந்தைக்கு நேர் எதிரான திசையிலும் செல்வதாக நாம் பார்க்க முடிகிறது.

குழந்தைகளைப் பற்றி பேசுகிற எல்லோருக்கும் அடிப்படையாக இருக்கிற மிக முக்கியமான அமைப்பு, முக்கியமான சூத்திரம் குழந்தைகளை எவ்வாறு சமூகத்தில் பொருத்துவது. குழந்தைகளை எவ்வாறு சமூகத்தில் பொருத்துவது என்று யார் ஒருவர் நினைத்தாலும் அதற்கு இசைவான, ஆயிரக்கணக்கான பக்கங்கள், ஆவணங்கள் நம் கண் முன்னே இருக்கிறது. நம் கண் முன்னே இருக்கின்றன என்பதை நாம் பார்க்க முடியும். குழந்தைகள் சமூகத்திற்கு பொருந்தியே ஆக வேண்டும் என்கிற உள் கருத்தாக்கம் நமக்குள் இருக்கிற வரை குழந்தைகளை இவ்வாறான நெருக்கடி செய்வதும் இவ்வாறான நெருக்கடிகளை நியாயம் என்று பார்ப்பதும் நமக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரு குழந்தை, உங்கள் குழந்தை, உங்கள் வீட்டில் வளர்கிற குழந்தை, பள்ளியில் இருக்கிற குழந்தை, உங்களுக்கு ஆதரவாக நீங்கள் ஆதரவாக இருக்கிற குழந்தை எந்த வகையிலேனும் சமூகத்திற்கு  பொருத்தமானவர்களாக மாறிவிட வேண்டும் நீங்கள் கருதிக் கொண்டிருப்பீர்கள் என்று சொன்னால் அது போதுமானது குழந்தைகளுக்கு எதிராக  நீங்கள் சிந்திப்பதற்கு.

குழந்தைகள் ஏன் சமூகத்திற்கு இசைவானவர்களாக மாற வேண்டும் என்ற கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டுப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஒரு குழந்தை ஏன் சமூகத்திற்குள் பொருந்த வேண்டும். எது ஒரு குழந்தையை சமூகத்திற்குள் பொருந்த வேண்டும் என்று நிர்பந்திக்கிறது? ஒரு குழந்தை எத்தனை வகையான பேரழகோடு இருக்கிற ஒரு குழந்தை, சமூகத்திற்குள் பொருந்தியே ஆகவேண்டும் என்று நாம் ஏன் நிர்பந்திக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள் நாம் கேட்டு பார்க்க வேண்டி இருக்கிறது. சமூகம் ஒன்றை மீண்டும் மீண்டும் வைத்துக் கொண்டே நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. வாழ்வில் எல்லோருக்கும் நினைவான பகுதியிலிருந்து கிளறி பார்த்தோம் என்றால், தேடிப் பார்த்தோம் என்றால் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நண்பர்களோடு சுற்றித் திரிந்த காலம் மிக மகிழ்வான காலம் என்று ஒரு குறிப்பை நாம் வைத்திருப்போம். ஒரு தனிமனிதரை அழைத்து மிகவும் மகிழ்வாக இருந்த காலம் எது என்று கேட்பீர்கள் என்றால் அவர் சொல்லுகிற குறிப்புகளை பார்ப்பீர்கள் என்று சொன்னால் அவர் குழந்தை பருவமாக குறிப்பாக பள்ளிகளில் கல்லூரிகளில் படித்த காலம் அவருக்கு பறப்பதற்கான காலமாக இருந்தது. சொர்க்கத்தில் வாழ்ந்த காலமாக இருந்தது என்று அவர் சொல்லக்கூடும். எல்லோரும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் அப்படித்தான் சொல்கிறோம். தொடர்ந்து இது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. உண்மையிலேயே இந்த சமூகம் ஒரு குழந்தையை பள்ளிக்கூடத்தின் வழியாக, கல்லூரிகளின் வழியாக, பல்கலைக்கழகங்களின் வழியாக சமூகத்திற்கு பொருந்துகிற நபராக மாற்றுகிறது.

நேர் எதிரான விமர்சனத்தை நான் உங்கள் முன் பதிவு செய்கிறேன். பள்ளிக்கூடமும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஒரு குழந்தைக்குள் இருக்கிற அக உணர்வை அகப்பகுதியை உடைத்து இந்த குழந்தையை சமூகத்திற்கு உரிய ஆளாக மாற்றுகிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. நாம் எப்போது சமூகத்திற்கு உரிய ஆளாக மாறுகிறோம் என்பது பள்ளிக்கூடத்தில் தான் தொடங்குகிறது. எப்போது சமூகத்திற்குரிய ஆளாக நடந்து கொள்கிறோம் என்பது கல்லூரிகளில் தான் வெளிப்படுகிறது. எப்போது சமூகத்தில் வெற்றி பெறுகிற ஆளாக மாறுகிறோம் என்கிற சூத்திரத்தை பல்கலைக்கழகங்கள் சொல்லித் தருகின்றன. ஒரு குழந்தை மீண்டும் மீண்டும் சமூகத்திற்குள் நுழைவதற்குரிய எல்லா சாகச பயிற்சிகளையும் பள்ளிக்கூடம் தந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மையில் நாம் பார்க்க வேண்டியது அந்த உண்மைக்குள் ஒளிந்திருக்கிற இன்னொரு புறம் குழந்தையினுடைய வெகுளித்தனம், குழந்தையினுடைய அறியாமை, குழந்தைக்குள் இருக்கிற மௌனம், மென்மை பள்ளிக்கூடங்கள் வழியாக சமூகத்திற்குள் பொருந்த வேண்டும் என்கிற கருத்தியலின் பாற்பட்டு சிதைவுறப்படுகிறது, சிதைக்கப்படுகிறது என்பதை நாம் மறுப்பதற்க்கில்லை.

 வெகுளியாக இருக்கிற குழந்தைகள், எந்த ஒன்றையும் சூழ்ச்சியோடு பார்க்காத குழந்தைகள் பள்ளிக்கூடங்களின் வழியாக சூழ்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் மறுத்து விடவே முடியாது. சமூகத்திற்குள் பொருந்துவதற்குரிய சூத்திரங்களை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்கள் சொல்லித் தருகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. என்றாலும் கூட பள்ளிக்கூடம் மகிழ்வான காலம் என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு சொல்லிக் கொண்டிருப்பது யார் என்பது தான் கேள்வி. மகிழ்வான காலம் என்று, பறக்கிற காலம் என்று, சொர்க்கமான காலம் என்று பள்ளி வாழ்க்கையை, கல்லூரி வாழ்க்கையை நாம் மேன்மையாக சொல்லிக் கொண்டே இருக்கிற பகுதிக்குள் ஆழமாக பார்த்தோம் என்றால் அப்போதுதான் குழந்தையாக இருக்கிற நாம், குழந்தையாக இருந்த நாம், சமூகத்திற்கு பொருந்துகிற நபராக, சமூகத்தில் வெற்றி பெறுகிற நபராக, சமூகத்தின் சுரண்டலுக்கு பலியாகிற நபராக நம்மை மாற்றிக் கொண்ட நேரம். இந்த மாற்றிக் கொண்ட நேரத்தை இன்றும் கூட நாம் நமது நினைவலையிலிருந்து மகிழ்ச்சிக்குரிய காலமாக பதிவு செய்ய அனுமதித்திருக்கிறோம் என்பதை நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய வேறுபட்ட நெறிப்படுத்தப்படுகிற ஒன்றை போற்றுகிற நாம் குழந்தைகளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கான உரையாடல் தான் குழந்தைகள் பற்றிய உரையாடலாக நான் பார்க்கிறேன். சமூகத்தில் குழந்தைகள் பற்றிய உரையாடல் என்பது தனி களமாக இருக்கிறது. தனி திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மகிழ்வாக இருந்த காலத்தில் உண்மையிலேயே நீங்கள் மகிழ்வாக இல்லை. நீங்கள் சமூகத்திற்காக நிர்பந்தப்பட்டிருக்கிறீர்கள். சமூகத்திற்காக அழுத்தப்பட்டு இருக்கிறீர்க.ள் நீங்கள் சமூகத்தில் வாழ வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருக்கிறீர்கள். சமூகத்தில் வெற்றி பெற வேண்டும் என்று சூத்திரங்களை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். இவை எல்லாம் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதைக் கூட கவனிக்க முடியாத அளவிற்கு மந்தத் தன்மை நமக்குள் நிலவிக் கொண்டிருக்கிறது என்பதை   நினைவுபடுத்துவதற்கு தான் குழந்தைகள் குறித்த உரையாடலை நம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளை நெறிப்படுத்துவது குறித்து ஏராளமான செய்திகளை புத்தகங்களும் கட்டுரைகளும் தன்னகத்திலேயே வைத்திருக்கிறது. ஒரு குழந்தை பொய் சொன்னால் என்ன செய்வது. உடனடியாக அந்த குழந்தைக்கு பொய்யையும் உண்மையையும் விளக்கி சொல்கிற பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நெறிப்படுத்தலாக இந்த சமூகம் நமக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறது. புத்தகங்கள் வழியாக இதை செய்கிறது. ஒரு குழந்தை தன் தந்தையிடம் கேட்கிற, தன் தாயிடம் கேட்கிற அறியாமை குறித்த பகுதிகளை விளக்கிச் சொல்வதற்கு பதிலாக புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்கிற குழந்தையின் மீது வன்மத்தையும் தாக்குதலையும் தொடுக்கிற கருத்தியலை புத்தகங்களும் கட்டுரைகளும் ஆவணங்களும் தொடர்ந்து நமக்கு தந்து கொண்டே இருக்கின்றன.

 பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஒரு குழந்தை தன் தாயோடு பேசுகிறது, “அம்மா நான் உங்களோடு பேச வேண்டும்.” அம்மா நான் உங்களோட பேச வேண்டும் என்று அந்த 18 வயது குழந்தை தன் தாயுடன் பேசுகிறது. அதற்கு அந்த தாய் சொல் என்றவாறு பதில் அளிக்கிறார். உடனே அந்த குழந்தை சொல்லுகிறது, “என் பள்ளி தோழன் ரகு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று”. உடனே அந்த அம்மாவிற்கு எல்லாமும் புரிந்து விட்டது. அந்த குழந்தைக்கு 18 வயது ஆகிவிட்டது. பக்கத்தில் இருக்கிற ரகு என்கிற மாணவனை பாலியல் ரீதியாக ஏதோ ஒன்று கற்பனை செய்து கொண்டிருக்கிறாள் என்று தன்னுடைய கற்பனையிலிருந்து, உலகத்தில் இருக்கிற எல்லா குழந்தைகளுக்குமுரிய சிக்கலை இந்த கற்பனையின் வழியாக நீக்கிவிட வேண்டும் என்று அந்த தாய் எத்தணிப்பதாக ஒரு உரையாடலை துவங்கி, பாலியல் புரிதலை குழந்தைகளுக்கு தர வேண்டும் என்று அபத்தமான வகையில் கட்டுரைகளை நாம் படிக்க முடிகிறது.

வெவ்வேறு நாடுகளில் நடக்கிற வெவ்வேறு காலச் சொல்லில் இருந்த தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு குழந்தைகள் மீது நடத்தப்படுகிற உரையாடல் என்பது எவ்வாறானதாக இருக்கிறது என்பதை எல்லாம் பார்ப்பதற்குரிய ஒன்றை நம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றில் மிகக் குறிப்பாக நான் உங்களுக்கு சொல்ல  விரும்புவது, நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது குழந்தைகள் எப்போதும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அவர்கள் அமைதியாக இருப்பதில்லை. குழந்தைகள் மகிழ்வாக இருக்கிறார்கள் என்பதற்கு நாம் வைத்திருக்கிற பொருளில் அவர்கள் மகிழ்வாக இருப்பதில்லை. குழந்தைகள் வெளிப்படுகிறார்கள் என்பதை கவனிப்பதற்கு நமக்கு தனித் திறன் தேவைப்படுகிறது. இந்த தனித்திறன் என்பது நான் புரிந்து கொள்வதற்காக பகிர்ந்து கொள்கிறேன். எப்போதும் எல்லா மனிதர்களும் குழந்தைக்கு உரிய மகிழ்ச்சியான ஒன்றை வைத்திருப்பவர்களாகவேத்தான் இருக்கிறோம். ஆனால் சமூகம் பல்வேறு தடைகளை நம் முன் கோர்த்து வைத்திருக்கிறது. குழந்தையாக இருக்கிற நமக்கு குழந்தையாக வெளிப்படுவதற்குரிய சாத்தியங்களை சமூகம் தடையாக நம்முன் மாட்டி வைத்திருக்கிறது. நமக்கு தடை செய்து வைத்திருக்கிறது. இந்த தடையை உடைப்பதற்கு இலக்கணமாக  முன்மாதிரிகளாக குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்குரிய உரையாடலை தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். 

 எல்லோருக்குள்ளும் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் குழந்தைகள் போல் வெளிப்பட முடியவில்லை என்பதைத்தான் நம் உரையாடல் வழியாக கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எல்லோருக்குள்ளும் குழந்தைகள் இருக்கிறார்கள். நீங்கள் பகல் நேரத்தில் அதிகமான வெக்கையும் புழுதியுமாக இருக்கிற பனைக்காடுகளில் நடந்து செல்வதற்கும் ஓடி விளையாடுவதற்கும் குழந்தைகள் போல ஆர்வம் இருக்கலாம். ஆனால் உங்கள் மனதில் உங்களுக்கு சமூகம் வழங்கி இருக்கிற வெட்கத்தின் காரணமாக நீங்கள் வயது வந்தோர் என்கிற அறிவின் காரணமாக உங்களால் உற்சாகமாக விளையாட முடியாது. விளையாட முடிவதில்லை. இவ்வாறு விளையாட முடியவில்லை என்பதை பார்ப்பதற்கும் விளையாடுவதன் வழியாக நீங்கள் இன்னும் அழகானவர்களாக, மேன்மையானவர்களாக மாறி கொள்வதற்கும் உரிய உரையாடலை நாம் பல்வேறு புத்தகங்கள் வழியாக செய்து பார்க்க வேண்டி இருக்கிறது. இத்தகைய நோக்கத்தில் உரையாடப்படுகிற உரையாடல் தான் நமது குழந்தைகள் குறித்த உரையாடல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்காக பேசுகிற எல்லா புத்தகங்களும் குழந்தைகளுக்காக பேசுவதில்லை. அவை சமூகத்திற்காக பேசுகின்றன. அவை கல்விக்கூடங்களுக்காக பேசுகின்றன. மத நிறுவனங்களுக்காக பேசுகின்றன. அவை அரசியல் சார்பு நிலையில் நின்று பேசுகின்றன. அவை குழந்தைகளுக்காக பேசுவதில்லை. குழந்தைகளுக்காக பேசுவது என்பது உங்களுக்காக பேசுவது. ஒவ்வொரு தனி மனிதனினுடைய மகிழ்ச்சியை  வெளியில் கொண்டு வருவதற்காக பேசுவது. குழந்தைகளுக்காக பேசுவது என்பது உங்கள் நினைவுப் பகுதியில் இருந்து சமூகம் வைத்திருக்கிற எல்லா கசடான விஷயங்களையும் நீக்கிக் கொள்வதற்காக பேசுவது. இதுதான் குழந்தைகளுக்காக பேசுவது.

ஒரு புத்தகம் உங்களுக்கு கையில் கிடைத்தவுடன் அது உங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தால் அதுவும் குழந்தைகள் பற்றி பேசுகிற புத்தகமாக தான் நான் பார்க்கிறேன். உங்களை நினைவு படுத்துகிற உங்களுக்கும் உங்கள் சமூக நிலைப்பாட்டிருக்கும் இடையே இருக்கிற முரண்பாடுகளை நினைவு படுத்துகிற செய்தியாக இருக்கும் என்றால் அந்த புத்தகம் குழந்தைகளுக்குரிய புத்தகமாகத்தான் நாம் கருதி கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படி ஒவ்வொரு உரையாடலுக்குள்ளும் ஒவ்வொரு புத்தகங்களுக்குள்ளும் ஒவ்வொரு  செய்தி குறிப்பிற்குள்ளும் உள்ளடக்கமாக இருக்கிற ஒன்று உங்களுக்கு உரியதாக இருக்கிறதா என்பதிலிருந்தே அவை உங்கள் குழந்தைகளுக்கு உரிய புத்தகமாக இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டி இருக்கிறது நண்பர்களே.

இந்த வகையிலேயே ஒரு உரையாடல் என்பது ஒரு நீளமான பயணத்தில் செல்ல  வேண்டியிருக்கிறது. நாம் செல்ல வேண்டும். அவ்வாறுதான் நாம் பயணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகள் என்பது வெறுமனே பொருளடக்கமான கருத்தாக்கமல்ல. குழந்தைகள் வாழ்வியலை, இயற்கையின் பார்பட்டு, இருத்தலின் பார்பட்டு வெளிப்படுத்துகிற வெளிப்பாடுகள். குழந்தைகள் இயற்கைக்கு நெருக்கமாகவே இருக்கிறார்கள் என்று எல்லா கவிஞர்களும் பேசுகிறார்கள். இயற்கைக்கு நெருக்கமாகவே இருக்கிறார்கள் என்பதை கவிதையின் வழியாக மட்டும் பேசிவிட்டு கடந்து போவது குழந்தைக்கு செய்வதாக, குழந்தைக்கு செய்கிற நன்மையாக நாம் கருதி கொள்ள முடியாது. குழந்தைகளை பார்ப்பதற்கு நாம் முயற்சிக்கிற போது அந்த முயற்சியில் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் வழியாக நம்மைப் பார்ப்பது.

குழந்தைகளை வாசிப்பதற்கு நாம் புத்தகங்களை தேடுவதை விடவும் குழந்தைகளை வாசிப்பதற்குள், புத்தகங்களின் வழியாக குழந்தைகளை வாசிப்பதற்குள் நாம்  வாசிப்பது நம்மை தெரிந்து கொள்வதற்கான வாசிப்பே. ஒரு ஆவணம், ஒரு வரலாற்று குறிப்பு, ஒரு செய்தி குறிப்பு, ஒரு புத்தகம் எல்லாவற்றிற்குள்ளும் உள்ளடக்கமாக குழந்தைகளைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி உண்டு என்றால் அந்த செய்தியின் வழியாக நீங்கள் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொள்ள முடியும் என்றால் அது உங்களைப் பற்றி நீங்கள் கற்றுக் கொள்வதாக இருக்கட்டும். அத்தகைய கற்றுக்கொள்ளலே உண்மையிலேயே குழந்தைகளைப் பற்றி நீங்கள் கற்றுக் கொள்வதற்கு உதவி செய்யக்கூடும். குழந்தைகளைப் பற்றி கற்றுக் கொள்வது என்பது நெறிப்படுத்துவது அல்ல. இந்த சமூகத்தை நெறிப்படுத்துவது அல்ல. இந்த சமூகத்திற்குரிய ஒன்றை குழந்தைகளுக்கு வழங்குவது அல்ல. சமூகத்தையும் குழந்தைகளையும் ஒரு புள்ளிக்குள் இணைத்து கட்டுகிற முயற்சி அல்ல. குழந்தைககளை அவர்கள் இயற்கையாகவே இருக்கிறார்கள்  என்கிற தளத்தில் நிறுத்தி, அவற்றை ஏற்றுக் கொண்டு அவர்களிடம் இருந்து நம்மை பார்த்துக் கொள்வதற்கு, இயற்கையாக இருக்கிற  குழந்தைகளிடமிருந்து இயற்கைக்கு விரோதமாக இருக்கிற நமது இடைவெளியை நீக்கிக் கொள்வதற்கும்  சுருக்கிக் கொள்வதற்குமான வாய்ப்பாக நம் உரையாடல் பயன்பட வேண்டும். அவ்வாறான தன்மையில் நம் உரையாடல் செய்யப்பட வேண்டும். அப்படியான புத்தகங்களும் அப்படியான ஆவணக் குறிப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான் சமூகத்திற்கு நாம் உரையாடல் வழியாக எடுத்து வைக்கிற காட்சி, வெளிப்பாடு.

இந்த வகையில் எல்லா புத்தகங்களும் எல்லா கருத்து குறிப்புகளும் குழந்தைகளை காட்சிப்படுத்துவதற்கு மிக முக்கியமாக எடுத்து வைக்க வேண்டிய முதல் அடி - குழந்தைகளை சொல்வதன் வழியாக நம்மை நமக்கு காட்டி கொடுக்க வேண்டி இருக்கிற.து  காட்டிக் கொடுக்க வேண்டும். எந்த புத்தகம் படித்தாலும் எந்த குறிப்பை படித்தாலும் நாம் குழந்தைகளை கற்றுக் கொள்வதற்காக படிக்க வேண்டி இருக்கிறது. குழந்தைகள் வழியாக நம்மை தெரிந்து கொள்வதற்காக நாம் படிக்க வேண்டி இருக்கிறது. நம்மை தெரிந்து கொள்வதன் வழியாகவே குழந்தைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பேருண்மையை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு நாம் படிக்கிற, நாம் பேசுகிற, நாம் உரையாடுகிற எல்லாவற்றிலும் நம்மை தேடுவதே போதுமானது. அதுவே குழந்தைகளிடம் நம்மை அழைத்துச் செல்லும்.

தொடர்ந்து பேசுவோம்....

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...