Tuesday, July 11, 2023

கல்வி – இலக்கும் இலக்கணமும் - உரையாடல் - 3 / சிவ.கதிரவன்

                                 கல்வி – இலக்கும் இலக்கணமும்

www.swasthammadurai.com


மனிதனின் மதிநுட்பம், மனச்சான்று. (மனச்சான்று என்பது இன்று நவீனத்தில் உளவியலின் வளர்ச்சிக்கு பிறகு கான்சியஸ்னஸ், சூப்பர் கான்ஷியஸ்னஸ், காஸ்மிக் கான்ஷியஸ்னஸ் என்றெல்லாம் வளர்ந்து வந்திருக்கிறது.) மனச்சான்று என்று பார்க்கிறபோது அது வெறுமனே மனசாட்சியாக, மனதின் பிம்பமாக, மனதின் நிலையாக, மனதின் உரையாடலாக என்று சுருங்கி விடவில்லை. சாதாரணமான மனச்சான்று - தீபக் சோப்ரா அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார், நான் கடவுள்” என்கிற ஒரு புத்தகத்தை அவர் எழுதுகிறார். பின்னாளில் அது தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. தீபக் சோப்ரா அவர்களின் நான் கடவுள்” என்கிற புத்தகத்திற்குள் வாசித்து வருகிற போது மனச்சான்றினுடைய வடிவத்தை தீபக் சோப்ரா   வகைப்படுத்துகிறார். மனிதனின் மனம் எங்கு இருக்கிறது? எவ்வாறு இருக்கிறது? இவை எல்லாமும் நவீன தன்முனைப்பு மனச்சான்றினுடைய குறிப்புகளாக அவர் தொகுக்கிறார். அந்த புத்தகத்தில் தனது மனச்சான்று, பிரபஞ்சத்தின் மனச்சான்று, காஸ்மிக்கினுடைய மனச்சான்று, யுனிவர்சல் மனச்சான்று என்று   கான்சியஸினுடைய வகைப்பாடுகளை அவர் தொகுக்கிறார். அது எல்லாமும் அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்பட்ட மனச்சான்றுகள். அப்போது மனசான்று என்பதும் மனித தொழில்நுட்பம் என்பதும் நுண்ணறிவுத் திறன், நுண்ணறிவுத் திறன் என்பது பார்வை அல்ல. இன்சைட். இன்டியூஷன், உள்ளுணர்வு.

நுண்ணறிவுத் திறன் என்று வேறொரு கட்டம் இருக்கிறது கல்வி கற்பதற்குள். நுண்ணறிவுத் திறன், பகுத்தறிவு, ஒன்றை ஒன்றோடு பொருத்திப் பார்க்கிற,  தர்கித்துப் பார்க்கிற, தர்க்கம் செய்து பார்க்கிற, ஒன்றை ஒன்றோடு இணைத்து பார்க்கிற, பகுத்தறிவு. விருப்பாற்றல் (willingness), நன்னடத்தை விதிகள் இன்னும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்கள் சமத்துவத்தை பேண வேண்டும் என்று  அரசியல் பேசுகிற சமத்துவ அரசியல்வாதிகளினுடைய செல்வாக்கிற்குp பிறகு மேற்கத்திய உலகம் தொழில் புரட்சி என்கிற  பெரும் மாற்றத்தை கண்ட பிறகு கல்விக்குள் இருக்கிற வகைப்பட்டியல் மனிதனுடைய மதிநுட்பம், மனச்சான்று, நுண்ணறிவுத் திறன், பகுத்தறிவு, விருப்பாற்றல், நன்னடத்தை விதிகள், நோக்கம் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன.

ஆரம்ப கால கல்வி முறை - கிரேக்க கல்வி முறைகளில் இவையெல்லாம் நாம் பார்க்க முடியும். இவை எல்லாவற்றிற்கும் மையமாக இருப்பது சமூகத்தில் மனிதன் நடக்கிற, அதிர்கிற, அவசரப்படுகிற, அகமாய் இருக்கிற ஒன்று இவற்றையெல்லாம் வடிவமைக்க வைத்திருக்கின்றன. இவற்றில் இருந்தே இவை எல்லாம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கிரேக்க கல்வி முறையில் மனிதனினுடைய மனதின் நுட்பத்தை ஒழுங்கு படுத்துவதற்குரிய விதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பிறரிடம் பெறும் தகவல், இறை நம்பிக்கை, தனிமனிதனினுடைய நடத்தை இவை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கிற, உயர்ந்த சட்டப்படி இயங்கும் பிரஜையாக ஒரு மனிதன் மாற வேண்டும் என்று கிரேக்க கல்வி முறை ஒரு கல்வியை திட்டமிட்டு வடிவமைக்கிறது.

அன்றைய காலத்தில் அப்படி ஒரு தேவை இருந்தது. கிரேக்கர்கள் தத்துவங்களின் முன்னோடி என்று  ஒரு வாதம் இப்போதும் தத்துவ பரப்பில் இருந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் தத்துவங்களை விவாதித்து பார்த்தவர்கள், விரிவாக செய்து பார்த்தவர்கள், அதற்குள் மோதிப் பார்த்தவர்கள் கிரேக்கர்கள் என்ற பெயரை நாம் பார்க்க முடியும். அப்படி ஒரு பெரும் பெயரைப் பெற்றுக் கொண்டவர்கள் அவர்கள். அவர்களுடைய கல்வி முறைக்குள் உருவாக்கப்பட்ட, செதுக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட  வரிசை பட்டியல் மனிதனினுடைய மதிநுட்பம், பிறரிடம் பெரும்  தகவல், அவர்களின் இறை நம்பிக்கை, அவர்களின் விருப்பம், நன்னடத்தை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய, சட்டத்தை பின்பற்றுகிற, உயர்ந்த ஒரு மனிதனாக மனிதன் உயர்த்தப்பட வேண்டுமென்று அவர்கள் கல்வி முறையை வகைப்படுத்துகிறார்கள். அப்படித்தான் அவர்கள் கல்வி முறை வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து வந்த சோபிஸ்டுகளின் கல்வி முறை, அரிஸ்டாட்டிலினுடைய கல்வி முறை, பிளேட்டோவினுடைய கல்வி முறை எல்லாவற்றிற்கும் கல்வியினுடைய அடிப்படையாக  இருந்தது நல்ல ஆட்சியை. எல்லாவற்றிற்கும் இருக்கிற கல்வி முறைகளினுடைய இலக்கணம் என்பது, இலக்கு என்பது கல்வி முறைகள் வைத்திருக்கிற நல்ல ஆட்சி.  ஒரு மனிதனுடைய நல்ல ஆட்சி. அந்த நல்ல ஆட்சிக்கு அடிப்படையாக எது வேண்டுமோ நல்ல ஆட்சிக்குரிய மனிதனாக ஒரு மனிதனை எவ்வாறு மாற்ற முடியுமோ அவற்றையெல்லாம் கல்வியாக வடிவமைக்க வேண்டும் என்று வரலாற்று ஆரம்ப காலத்தில் கல்வி குறித்து இயங்கியவர்கள் இயங்கி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆவணங்களின் வழியாக, வரலாற்றின் வழியாக பார்க்க முடிகிறது. கல்வி முறை பின்பு ஐரோப்பிய கல்வி முறையாக வளர்கிறது.

ஐரோப்பிய கல்வி முறைகளின் தோற்றத்தை பார்க்கிற போதும் ஒரு முற்போக்கு கிறிஸ்தவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தாமஸ் ஆக்வினாஸ் வரையறுக்கிறார். அவரது கல்வி முறை பின்னாளில் மிகப்பெரிய கல்வி முறையாக பார்த்தவர்கள் உண்டு. இன்றும் கூட உரையாடல் பொருளாக தமிழகத்தில் கல்வி குறித்து பேசுபவர்கள் இத்தகைய ஐரோப்பிய கல்வி முறையினுடைய நீட்சியை தொகுத்து நீட்சியை உள்ளடக்கமாக வைத்து பேசுவதற்குரிய நியாயத்தை அவர்கள் பார்க்க முடியும். அவர்கள் இப்படி ஒரு நியாயத்தோடு பேசுகிற பேச்சை நாம் கேட்க முடிகிறது. ஒரு கல்வி முறைக்குள் ஒரு மனிதன் முற்போக்கு கிறிஸ்தவனாக, சிறந்த ஆட்சியை பின்பற்றுபவனாக, சுயமரியாதை உள்ள மனிதனாக மாறுவதற்குரிய திட்டங்களை கல்வி முறை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது என்பதை நாம் தவிர்க்கவே முடியாமல் கடந்து வருகிறோம் வரலாறு நெடுக கல்வியை பற்றி பார்க்கிறபோது, பேசுகிறபோது.

இந்த மனிதன் ஏன் எப்படிப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும் என்று நாம் விசாரித்தோம் என்றால் அவன் அக உணர்வில் இருந்து கல்விக்கான தேவையை கல்விக்கான செய்திகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும். கல்வியினுடைய தேவை எங்கே இருந்து துவங்குகிறது என்றால் மனிதனுடைய பதற்றத்தை, மனிதன் இன்னொருவரோடு உறவு பாராட்டுகிற, உறவுப்போக்கை தீர்மானிக்கிற   தன்மையில் இருந்தே கல்வி என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது. நிறைய அறிவு கோட்பாடுகளை சமூகம் வரலாறு நெடுகிலும் வைத்திருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். நிறைய ஆய்வாளர்கள், நிறைய புத்தகங்களை குறிப்பிட்டு பேசுகிறபோது நிறைய ஆய்வாளர்கள் செய்திருக்கிற எல்லா ஆய்விற்குள்ளும் இருக்கிற பேருண்மை இதுதான்.

கல்வி தனி மனிதனின் அக உணர்வில் இருக்கிற அதிர்வை நீக்குகிற ஒன்றாக, நீக்க வேண்டிய ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு கல்வி முறையிலும் இப்படி இருக்கிறது. ஏனென்றால் கல்வி முறை என்று பார்க்கிற போ,து கல்வி முறை என்று கேட்கிற போது, கல்வி முறை பற்றி விசாரிக்கிறபோது, ஒவ்வொரு கல்வி முறைக்குள்ளும் என்னை இருக்கிறது என்பதை மிகுந்த நிதானத்தோடு, நியாயத்தோடு, கரார் தன்மையோடு,  சமரசமின்மையோடு  பேசிப் பார்க்க வேண்டியது என்பது கல்வி குறித்து பேசுகிற மிக முக்கியமான பொறுப்பு. அந்த பொறுப்பிலே நாம் உரையாட வேண்டும் என்கிற மிகுந்த பணிவோடு நான் சேகரித்த விவரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் கல்விக்குள் இருக்கிற விவரங்களும் விஷயங்களும் பின்னாளில் சமூகத்தில் நடைமுறைக்கு வருகிற போது ஒரு வகுப்பறையாக மாறுகிறது என்பதை நான் பார்க்கிறோம்.

தொழில் புரட்சியினுடைய விளைவாக காரல் மார்க்ஸ் சொல்வது போல வளர்ந்து வருகிற தொழில் புரட்சி மனிதர்களை உற்பத்தி சாதனமாக பயன்படுத்தும். காரல் மார்க்ஸ் விரிவாக சொல்கிறார், ஒரு மனிதன் உற்பத்தி சாதனமாக பயன்படுத்தப்படுவான். மார்க்ஸினுடைய வார்த்தையின்படி வளர்ந்து வருகிற தொழில்நுட்பத்திற்கு ஆண் என்றும் பெண் என்று பேதம் கிடையாது. எல்லாவற்றையும் யாவரையும் உற்பத்தி சாதனமாக பயன்படுத்துகிற திட்டமும் போக்கும் வளர்ந்து வருகிற தொழில்நுட்பத்திற்குள் இருக்கிறது என்று நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் பதிவு செய்து வைத்திருக்கிறார் அவரது ஆய்வு உரைகளில். அந்த வகையில் தொழில் புரட்சி துவங்கியவுடன் எல்லோரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற தேவையிலிருந்து ஆணும் பெண்ணும் வேலைக்கு செல்கிற போது இளம்  தம்பதியரின் குழந்தைகள் பாதுகாப்பு வேண்டி ஒரு இடத்தில் நிறுத்தப்படுகிறார்கள். ஒரு தவிப்பிற்கு உள்ளாகிறார்கள். இப்போது நேரடியாக குழந்தைகளினுடைய புறப்பாதுகாப்பு காரணத்தின் அடிப்படையில் கல்வி சாலைகள் என்று ஒரு புதிய வடிவத்தை இந்த சமூகம் உருவாக்குகிறது. தொழில் புரட்சியினுடைய விளைவாக.

தொழில் புரட்சியில் பங்கேற்கிற, தொழில் புரட்சியை ஆளுகிற இந்த பங்கேற்பாளர்களும் ஆளுகிறவர்களும் சேர்ந்து எடுத்த முடிவின் அடிப்படையில் ஒரு கல்வியை முதன்மையாக குழந்தைகளை உடலாலும் உளவியலாலும் காற்று, நீர், ஆகாயத்தில் இருந்து வெக்கையில் இருந்து பாதுகாக்கிற ஒரு பாதுகாப்பு கூடத்தை கட்டுவது என்று முடிவெடுக்கிறார்கள். அந்தமுடிவின் அடிப்படையில் வகுப்பறைகள் துவங்குகின்றன. இப்படித்தான் வகுப்பறையினுடைய துவக்கம் இருக்கிறது. வகுப்பறையின் மிக முக்கியமான தேவையும் காரணமும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  தாயும் தந்தையும் செய்து வருகிற வேலையை எந்த இடத்திலும் தொந்தரவு செய்யாதவர்களாக இருக்க வேண்டும். குழந்தைகள் முழுக்க ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தாலும் கூட அவர்களுக்கு எந்த நேரத்திலும் எந்த வேலையிலும் எந்த தயக்கமும் இல்லாமல் அவர்கள் விளையாடவும் அங்கு குழந்தைப் பருவத்தை கழித்துக் கொள்வதற்கு வாய்ப்புள்ள இடமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அழுவார்கள் என்றால், அவர்கள் ஏங்குவார்கள் என்றால், அவர்கள் தவிப்பார்கள் என்றால் உணர்வு ரீதியாக தாய்க்கும் தந்தைக்கும் ஏற்படுகிற மன நெரிசல் உற்பத்தியை கேள்விக்கு உள்ளாக்கும்  என்கிற ஒற்றை நோக்கத்திற்காக கல்வி முறை தொழில் புரட்சிக்கு பின்பு குழந்தைகளினுடைய புறவியல் பாதுகாப்பு  மையங்களை உருவாக்குகிறது. பின்னாளில் அதுவே வகுப்பறைகளாக மாறி இருக்கின்றன என்று கல்வியினுடைய தளம் வேறொரு பரிமாணத்திற்கு விரிகிறது.

இப்போது கல்வி இந்த கூடங்களுக்குள் அடைபடுகிற போது நிர்பந்தமாகவே மனித சமூகத்தினுடைய வளர்ச்சி போக்கின் காரணமாகவே ஒரு மனிதன், சமூகம் இப்படியான ஒன்றோடு, இப்படியான ஒன்றை உருவாக்குகிற தன்மையோடு நகர்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். வரலாற்றில் இதற்கான ஆவணக் குறிப்புகள் இருக்கின்றன. நாம் பார்க்க முடியும்.  கல்வி எதற்காக துவங்குகிறது என்கிற அந்த அடிப்படை பட்டியலில் குழந்தைகள் அப்பா அம்மாவை, தாய் தந்தையரை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கல்வி தேவைப்படுகிற ஒன்றாக மாறிவிடுகிறது. அந்த வகையில் இன்றும் குழந்தைகள் அப்படியான கல்விக்கூடங்களுக்குள் தாய்தந்தையரினுடைய வேலையை, தாய் தந்தையரினுடைய போக்கை தொந்தரவு செய்யாத நபர்களாக, பாதுகாப்பாக இருப்பதற்குரிய எல்லாவற்றையும் கல்விக்கூடங்கள் செய்து வருகின்றன என்பதை நாம் இன்றும் பார்க்க முடிகிறது.

வகுப்பறையின் வரலாறு இப்படித்தான் நமக்கு காட்டுகிறது. வகுப்பறையின் வரலாற்றுக்குள் தேடுகிற போது இப்படித்தான் வகுப்பறை துவங்குகிறது. பின்னாளில் உலகம் முழுவதும் தொழில் புரட்சியின் காரணமாகவும் ஒற்றை ராஜாங்கத்தை உருவாக்க வேண்டும் என்கிற காரணமாகவும் வெவ்வேறு விதமான அரசாங்கங்கள் தன் நீளமான கைகளை உலகம் முழுவதும் பரப்பத் துவங்குகிற போது அந்த அரசாங்கத்தினுடைய வியாபாரத்தை வணிகத்தை ஆங்காங்கே இருந்து பார்த்துக் கொள்வதற்கு நபர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த நபர்களை உருவாக்குகிற கல்விக்கூடங்கள் தேவைப்படுகின்றன. அந்த நபர்களை உருவாக்குகிற கல்வி கூடங்களை   உருவாக்குவதற்கென்று கல்வி முறைகள் திட்டமிடப்படுகின்றன என்று ராஜாங்கத்தை வடிவமைக்கிற கல்வி குழுக்கள் பறைசாற்றுகின்றன. ராஜாங்கத்திற்குள் வரையறுக்கப்பட்ட கல்வி முறைகள் எல்லாமும் அந்த ராஜாங்கத்தை பாதுகாக்கவும் அந்த ராஜாங்கத்திற்கு தேவையான நிர்வாக அமைப்புகளை அந்த உரிய இடத்திலிருந்தே செய்து கொள்ளவும் நிர்வாகம் செய்கிற எல்லா ஆலோசனைகளையும் நிர்வாகம் தருகிற எல்லா ஆலோசனைகளையும் ஆங்காங்கே இருக்கிற நபர்கள் செயல்படுத்துவதுமான ஒரு வகுப்பறையினுடைய தேவை உருவாகிறது. அகமனிதனினுடைய நீ நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஏக்கத்தை, நான் நன்றாக இருக்க வேண்டும் என்கிற தவிப்பை   ராஜாங்கங்கள் பயன்படுத்திக் கொண்டு ஒரு ராஜாங்கத்திற்கு உட்பட்ட ஒரு பிரஜையை, ஒரு மனிதனை உருவாக்குகிற கல்வி முறையை ஒரு கல்வி முறையாக திட்டமிட்ட ஒரு ஏற்பாடை வரலாற்றில் நாம் பார்க்கிறோம். அப்படி உருவானது தான் மெக்காலையின் கல்வி முறை என்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

…தொடர்ந்து பேசுவோம்…

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...