Saturday, July 22, 2023

கல்வி – இலக்கும் இலக்கணமும் - உரையாடல் - 6 / சிவ.கதிரவன்

                                      கல்வி – இலக்கும் இலக்கணமும்

www.swasthammadurai.com


உளவியல் மருத்துவத்தில் மாபெரும் சேவையாற்றி இருக்கிறது. நவீன மருத்துவம் குணம் செய்ய முடியாத பல்வேறு சிக்கல்களை உளவியல் மருத்துவம் குணமாக்கி இருக்கிறது. ஒரு மனிதன் மகிழ்வாக வாழ்வதற்கு மருத்துவத்தில் உளவியல் மருத்துவம் செய்த பணி பெரும் விளைவை ஏற்படுத்தியவை. நவீன மருத்துவம் எப்போதெல்லாம் தேங்கி நிற்கின்றனவோ, நவீன மருத்துவத்தினுடைய மருந்துகள் எப்போதெல்லாம் வேலை செய்யவில்லையோ அப்போதெல்லாம் மனிதனுக்கு நல்ல நலத்தை, உடல் ஆரோக்கியத்தை கொண்டு வந்து சேர்ப்பதில் உளவியல் மருத்துவத்தின் பங்கு அளப்பரியது. உளவியலை மருத்துவமாக பார்ப்பதில் மிகுந்த பெருமிதத்தோடு நாம் பார்க்க வேண்டும் என்று பார்க்கிறவேளையில் உளவியல் கல்விக்கு எதிராக வேறொரு வேலையை ஆபத்தாக செய்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை அவற்றை நாம் அப்படித்தான் பார்த்தாக வேண்டிய குறிப்புகளை காண்கிறேன் நான்.

மருத்துவமாக பார்க்கிறபோது உளவியல் பெரும் மாமேதைகளினுடைய கொடை அது. மருத்துவத்தில் சிக்மன் ப்ராய்ட் ஆற்றிய பணி சாதாரணமானதல்ல. மருத்துவத்திற்குள் சிக்மன் ப்ராய்ட் ஒருவேளை வரலாற்றில் வரவில்லை என்றால் இன்று மனித சமூகம் பைத்தியக்காரர்களின் கூடாரமாக மாறி இருக்கும். மனித சமூகத்தினுடைய எல்லா பைத்தியக்காரத்தனங்களையும் எல்லா பிற்போக்குத்தனங்களையும் நேர்மையாக ஆய்வு செய்வதற்கான துவக்கப் புள்ளியை உருவாக்கியவர் சிக்மன் ப்ராய்ட். அவருக்கு முன்பும் சில உளவியலாளர்கள் இருக்கிறார்கள். அவருக்கு பின்பும் சில உளவியல் பேசுபவர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் இருக்கிற பெரும் பணி ஒரு மனிதனினுடைய நலம் குறித்து, ஆரோக்கியம் குறித்து உருவாக்கிய கோட்பாடுகளும்  நியாயமான நேர்மையான  விவாத பொருட்களும் என்று மனித சமூகத்தை நலப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன.ஒரு வேலையை செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்களது பணியில் கல்வியை ஒரு குறிப்பிட்ட துறைக்குள் பொருத்தி, கல்வி போன்ற ஒரு குறிப்பிட்ட துறைக்குள் பொருத்தி அதற்கான உட்குறியீட்டுகளை உருவாக்குவது என்பது ஆபத்தான அபத்தமான வேலை.

இரண்டையும் நாம் நேர்கோட்டில் வைத்து பேசித்தான் ஆக வேண்டி இருக்கிறது. இப்படியான  தன்மையோடு நாம் உளவியல் ஆய்வுகளை குழந்தைகள் மீது பார்க்கிற போது மிக கடுமையான வலியோடு கடந்து போக வேண்டியிருக்கிறது. பல உளவியல் ஆய்வாளர்கள் குழந்தைகளை கல்வி கூடத்திற்குள் எப்படியாவது பொருத்திவிட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பேசுகிற ஆரம்பப் பள்ளி படி நிலை, ஏழு வயது, எட்டு வயதில் செல்கிற பள்ளிக்கூடங்களில் துவங்கி அவர்கள் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என்று வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி எல்லாம் குழந்தைகளை நகர்த்துவது என்கிற திட்டத்தை வகுத்திருக்கிறார்கள்.

மூன்றாம் வகுப்பு குழந்தை எவ்வாறு படிக்க வேண்டும் என்று ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவை என்னவென்றால் வண்ணமயமான குறிப்புகளை வைத்து குழந்தைகளை கற்றுக் கொள்ள வைக்க முடியும் என்று மூன்றாம் வகுப்பு குழந்தைக்கான முன் தயாரிப்பு. நான் இப்போது சிந்தித்துப் பார்க்கிற போது, நினைவூட்டி பார்க்கிறபோது நான் வண்ணமயமான புத்தகங்களை ஏன் படித்தேன் என்றால் எனக்கு பின்னால் இப்படி ஒரு கூட்டம் இயங்கி இருக்கிறது என்று எனக்கு பெரும் கோபத்தை கிளப்புகிறது. நான் ஏதோ ஒரு கிராமத்தில் மூன்றாம் வகுப்பில் உட்கார்ந்து படிக்கிற போது நான் இப்படித்தான் படிக்க வேண்டும் என்று அட்டைகளை என் ஆசிரியர் கையில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்த ஒரு பரிசோதனை எலி போல என்னை மாற்றி இருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறபோது எனக்கு கோபமாக வருகிறது.

அனேகமாக இந்த செய்தி நீங்கள் கேள்விப்படும்போதும் உணர்வுப் பூர்வமாக நீங்கள்  கோவமடைய வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன், அடைவீர்கள் என்று நம்புகிறேன். இது எப்படியான அணுகுமுறை. உளவியலில் பார்க்கிற அணுகுமுறை எப்படியான அணுகுமுறை. மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு வண்ண அட்டைகளை கொடுத்து விடு. ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு குச்சிகளை கொடுத்து விடு, பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பரிசோதனை குழாய்கள் கொடுத்து விடு என்று குழந்தைகளிடம் இவற்றையெல்லாம் கொடுத்து வேடிக்கை பார்க்கிற பரிசோதனை முயற்சியை என்னவென்று சொல்வது.  இது குழந்தைகளுக்கு எதிரானது மட்டுமல்ல. மனித குலத்திற்கே எதிரானது என்று நான் கூற விரும்புகிறேன். அப்படியான ஆபத்தான செயல்பாடு இது. இப்படித்தான் கல்விக்குள் நிகழ்ந்திருக்கிறது என்பதை தான் நாம் மீண்டும் மீண்டும் அழுத்தமாக பார்க்க வேண்டி இருக்கிறது. பார்த்து வருகிறோம். இவை எல்லாமும் குழந்தைகள் மீது குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையாக நான் பார்க்கிறேன் நண்பர்களே.

தொடர்ந்து இப்படியான வகுப்பறைகளின்  நெருக்கடி இந்த நெருக்கடியின் விளைவாக குழந்தைகள் கைகட்டி அமர வைக்கப்படுகிறார்கள். இந்த வகுப்பறையினுடைய நெருக்கடியின் விளைவாக இந்த பரிசோதனை முயற்சியினுடைய விளைவாக நடந்து போகும்போது உனது பின்னங்கையை சேர்த்து கட்டிக் கொள் என்று நடக்க சொல்கிறார்கள். வெப்பம் மிகுந்த காலச் சூழலில் படிக்கிற பள்ளிக்கூடங்களில் கூட மாணவர்கள் காலுறை அணிந்து செருப்பு அணிய வலியுறுத்தப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று மூன்று வயது குழந்தைக்கு புகட்டப்படுகிறது. இவை எல்லாமும் வகுப்பறை எவ்வாறு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று  நடத்தப்பட்ட உளவியல் ஆய்வுகளின் வெளிப்பாடு. இது மாணவர்களை பற்றிய எப்போதும் கவலைப்பட்ட கல்வியாக கல்வி முயற்சியாக இருந்ததே இல்லை என்பதை நாம் பார்க்க முடிகிறது.

கற்றல் என்பது எவ்வாறெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. கற்றலுக்குள் இருக்கிற தனிமனித வேறுபாடு என்ன. ஒரு மனிதனினுடைய மறதி குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் ஏன் மறக்கிறான் என்று கற்றல் குறித்து, கற்பித்தல் குறித்த வேலைகளில் கற்பித்தல் குறித்த ஆய்வுகளில் ஒரு குழந்தை ஏன் மறைக்கிறது ஒரு ஆய்வாளர் ஆய்வு செய்து இருக்கிறார். நீங்கள் நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். சரி ஏன் ஒருவர் மறப்பது குறித்து ஒரு ஆய்வாளர் ஆய்வு செய்கிறார். ஒருவனுக்கு மறந்து போகிறது. ஒரு குழந்தை M என்ற எழுத்தை ஆங்கிலத்தில் M என்று குறிப்பிடப்படுகிற எழுத்தை W என்று எழுதுகிறது. ஒரு ஆய்வாளர் உடனே அந்த குழந்தையினுடைய மூளை அறிவித்திறனை எடுத்து வைத்துக் கொண்டு ஆய்வுகளை துவங்கி விடுகிறார். இரண்டு வரிகள் சேர்ந்து படிக்க முடியாத ஒரு குழந்தை மறந்துவிட்டேன் என்று சொல்கிறது. உடனே அவரது மூளையை எடுத்து வைத்து ஆய்வுகள் துவங்கி விடுகிறது. மறத்தில் குறித்த ஆய்வு ஏன் நிகழ்த்தப்பட வேண்டும். கல்வி வகுப்பறைக்குள் மறத்தல் குறித்து ஏன் நடத்தப்பட வேண்டும். ஏன் ஒருவர் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லாவற்றிற்குள்ளும் ஒரு பயிற்சி முறை உருவாக்கப்பட்டு இருக்கிறது கல்வி முறைக்குள், வகுப்பறைக்குள்.

வகுப்பறைகள் என்பது வெறுமனே அவை வகுப்பவையாக தமிழில் வகுப்பறை என்ற சொல் மிக நுட்பமான பொருள் கொண்டது. வகுத்தல் என்பது பிரிவுபடுத்துதல் என்று பொருள். பிரித்தல் என்ற பொருள். சம எண்ணிக்கையில் பிரிப்பது. இன்றும் கூட கணித பாடங்களில் நாம் வகுத்தல் என்கிற செயல்பாட்டு முறையை வைத்திருக்கிறோம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று. ஒன்றை, ஒரு குறிப்பிட்ட கருத்துருவின் அடிப்படையில் சம பங்காக பிரிக்கிற முறைக்கு பெயர் வகுத்தல். இப்படி வகுக்கிற பிரிக்கிற ஒன்றாக வகுப்பறைகள் இருக்கின்றன என்கிற தன்மையில் கூட இவற்றை பார்க்க முடிகிறது. பார்க்க வேண்டியது இருக்கிறது. வகுத்தல் அப்படித்தான் வகுப்பறையில் நிகழ்கிறது. வகுப்பறைகள் வகுத்தலை தான் செய்து கொண்டிருக்கின்றன. யாருக்காக வகுக்கின்றனர் என்றால் அதுதான் நாம் இவ்வளவு சாராம்சங்களை உள்ளடக்கிய தன்மையில் அவை வகுத்துக் கொண்டே இருக்கின்றன.

மனிதனை பிளவுபடுத்துவதற்கான காரணம் என்ன என்றால் மனிதன் எப்போதும் அச்சமாக இருக்க வேண்டும். எப்போதும் சுதந்திரமின்மையை உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவன் சுதந்திரமாக இருக்கத் துவங்கினால் அவனுக்கு வகுப்பறை அவசியமில்லை. ஒருவன் மிடுக்காக நிமிர தொடங்கினால் அவனுக்கு மேற்கூறை அவசியம் இல்லை. எல்லாமும் இவற்றை மையப்படுத்திய ஒன்றாக யாரும் சுதந்திரமாக இருக்கக் கூடாது என்கிற நோக்கத்திலேயே வகுப்பறைகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒருவன் நிமிர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே பள்ளிக்கூடங்கள் குறிப்பாக இளம் குழந்தைகள் படிக்கிற பள்ளிக்கூடங்களில் மேற்கூறைகளை வகுத்திருக்கிறார்கள். வார்த்திருக்கிறார்கள். வேய்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கிற கண்ணோட்டம் எனக்கு ஏற்படுகிறது.

 

இப்படித்தான் வகுப்பறைக்குள் திட்டங்களும் வகுப்பறையை ஒழுங்குபடுத்துகிற விதிகளும் உண்டாகின்றன. மறத்தல் கூடாது, நிற்றல் கூடாது, வாய் பேசி இருத்தல் கூடாது, அமர்தல் மட்டுமே வேண்டும் என்று விதவிதமான உளவியல் கோட்பாடுகளை இந்த உளவியல் கோட்பாடுகளை வகுப்பதற்கும் கல்வியை கொண்டு செல்வதற்கும் சமமான காலத்தில் பெரிய ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. இன்றும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை நாம் பார்க்கிறோம். இவற்றில் தான் நவீன   ஆசிரியர்களினுடைய தரம் குறித்து பேசுகிறபோது, நவீன ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பேசுகிற போது, நவீன ஆசிரியர்களுக்கு தரப்படுகிற கடமை குறித்து பேசுகிற போது அவர்கள் வகுப்பை ஆயத்தம் செய்ய வேண்டும். மனதில் அசை போடச் செய்ய வேண்டும். ஒரு காட்சியை ஒப்பிட்டு பாடங்களை நிகழ்த்த வேண்டும். நல்ல மதிப்பீடு கொடுப்பது குறித்து அவர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சேர்ந்தே, ஆசிரியர்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஆசிரியருக்கான உளவியல் ஆய்வு இருக்கிறது. மாணவர்கள் இவ்வாறு படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கான உளவியல் ஆய்வு இருக்கிறது. இவை இரண்டும் வகுப்பறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான திட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இதற்குள் இருக்கிற எல்லாமும் ஒரு மாணவனின் உடல் இயக்கத்தை எவ்வாறு தீர்மானிப்பது, நான் பார்க்கிறபோது குறிப்பிட்ட காலங்களில் விடப்படுகிற விடுமுறை எல்லாம் கூட அப்படியானவை தான். ஒரு மாணவனை மேற்கொண்டு மேற்கொண்டு ஒரு அழுத்தத்திற்குள் நிறுத்தி வைப்பதற்குரிய சாத்தியங்களை உருவாக்குகிற தன்மையோடு இந்த வகுப்பறையினுடைய விடுமுறைகள் கூட திட்டமிடபட்டு இருக்கின்றனவோ என்று நாம் பார்க்கிற வகையில் இவர்களுடைய கல்வி குறித்தான வேலை நிகழ்ந்திருக்கிறது நண்பர்களே. இப்படித்தான் கல்வியும் வகுப்பறியும் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

ஒரு வகுப்பினுடைய விதிமுறைகளும் ஒரு வகுப்பினுடைய வாய்ப்பு வசதிகளும் ஃபின்லாந்தினுடைய கல்வி முறையை பார்க்கிறபோது வகுப்பறையில் வகுப்பறையினுடைய வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் ஃபின்லாந்தினுடைய  கல்வி முறையில். வகுப்பறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரைபடத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படித்தான் வகுப்பறை இருக்கிறது என்று பார்க்க முடிகிறது. ஒரு மாதிரியான வகுப்பறைக்கு உலகம் முழுவதும் நல்ல கல்வி முறைக்கு ஃபின்லாந்து இருக்கிறது. முன்மாதிரியாக இருக்கிறது. ஆனால் ஃபின்லாந்து உண்மையிலேயே நல்ல கல்வி முறையை கொண்டு செல்கிறதா என்றால் ஃபின்லாந்தில் இருக்கிற குழந்தைகளினுடைய பதற்றத்தை அவை என்ன செய்கின்றன என்பதுதான் கேள்வி.

குழந்தைகளுடைய பதற்றத்தை என்ன செய்கின்றன?  குழந்தைகளுடைய பதற்றத்தை நீக்குவதற்கு என்ன செய்கின்றன? பதட்டம் நீக்குவதற்கு அவை செய்த வேலைகள் என்ன? இந்த வகுப்பறை பதற்றத்தை நீக்குவதற்கு என்ன உதவி இருக்கிறது? என்றெல்லாம் நாம் பேசுவதன் வழியாகவே ஒரு நாட்டினுடைய கல்வி முறை நல்ல கல்விமுறையா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லை என்றால் ஃபின்லாந்து போன்றதொரு வகுப்பறை மாதிரியை வைத்துக்கொண்டு புதிய புதிய அச்சத்தை உருவாக்குகிற, புதிய புதிய அச்சத்தை தக்க   வைக்கிற ஒன்றாக ஒரு வேலையை நாம் செய்து கொண்டே இருக்கிறோம். இந்த சமூகம் தொடர்ந்து செய்வது போல, இந்த உளவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து செய்வது போல ஒன்றைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் என்பதை பார்க்க முடியும்.

குழந்தைகளினுடைய எல்லா விதியமைப்பு முறைகளும் இப்படித்தான். வகுப்பறையினுடைய எல்லா விதியமைப்பு முறைகளும் இப்படித்தான். நீங்கள் இன்னும் நுட்பமாக பார்த்தால் குழந்தைகளுக்கு - நான் சில உதாரணங்களை சொல்கிறேன். குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் இது குழந்தைகளுக்கு.  ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் இது ஆசிரியர்களுக்கு. குழந்தைகள் அமர்ந்து கொண்டே இருக்க வேண்டும் இது குழந்தைகளுக்கு. ஆசிரியர்கள் அமரவே கூடாது. நாற்காலி கூட கிடையாது. இது ஆசிரியர்களுக்கு. குழந்தைகள் கைகட்டி நடக்க வேண்டும் இது குழந்தைகளுக்கு. கை கட்ட வேண்டிய தேவை இருந்தாலும் ஆசிரியர்கள் ஒற்றை கையை மடக்கி விட்டு ஒற்றை கையை கட்டிக் கொண்டு நடக்க வேண்டும். இது ஆசிரியர்களுக்கு. குழந்தைகள் கால் மடித்து அமர வேண்டும் இது குழந்தைகளுக்கு. ஆசிரியர்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது. இது ஆசிரியர்களுக்கு. குழந்தைகள் இன்னென்ன கிழமைகளில் இன்னென்ன துணிகளை உடுத்தி வர வேண்டும் இது குழந்தைகளுக்கு. ஆசிரியர்கள் இன்னென்ன கிழமைகளில் இன்னென்ன சேலைகளை உடுத்தி வர வேண்டும் இது ஆசிரியர்களுக்கு. இப்படி குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பறைக்குள் விதிகள் வகுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு எல்லாமும் கிரீடம் முளைத்தது போல் ஒரு உரையாடல் நடந்து கொண்டே இருக்கிறது. நாம் குழந்தைகளை செமபடுத்திக் கொண்டிருக்கிறோம் என்று. நான் ஆசிரியர்களுக்கும் சேர்த்தே பார்க்கிறேன். ஒரு குழந்தை இந்த கிழமையில் இந்த உடையை போட்டு வரவேண்டும் என்று நிர்பந்தம் கொடுக்கிற பள்ளிக்கூடம் இந்த கிழமையில் இந்த ஆடையை உடுத்தி வர வேண்டும் என்கிற நிர்பந்தத்தை ஆசிரியர்களுக்கும் கொடுக்கிறது. வேறொரு உடையை உடுத்திக் கொண்டு ஆசிரியர் வர முடியாது. அவர்களுக்கு விடுப்பாக அது கருதப்படும். வேறொரு உடையை உடுத்திக் கொண்டு எவ்வாறு மாணவர்கள் வருவது சாத்தியம் இல்லையோ அப்படியான நெருக்கடி ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. ஆனால் இதைப் பற்றி ஆசிரியர்களுக்கு கவலையே கிடையாது. ஆசிரியர்களுக்கு கவலையே கிடையாது என்பது போன்ற ஒரு பிம்பம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஆசிரியர்கள் பற்றி பேசுகிற தொழில் முறை வியாக்கியானங்கள், தொழில் முறை விவரங்கள் பின்பு ஆசிரியர்கள் உரிமை குறித்து வேறொரு நிலையை எடுக்கின்றன, அது தனி விவாதம். ஆனால் கல்விச்சாலைக்குள் வகுப்பறைக்குள் நடத்தப்படுகிற வன்முறைகள் எல்லோருக்கும் வகுப்பறை என்பது வன்முறை கூடமாக மாறிக்  மாறிக்கொண்டிருக்கிறதன் அறிகுறியாக வகுப்பறைக்குள் நுழைகிற எல்லோரும் நெறிப்பாடுகளிலேயே சிக்கி இருக்கிறார்கள்.

குழந்தைகளும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் AEO,DO உட்பட இதுதான் வகுப்பறைகள் செய்திருக்கிற வன்முறையினுடைய குறியீடுகள். CEO நினைத்தபடி பள்ளிக்கு செல்ல முடியாது. AEO அப்படி சொல்ல முடியாது. கல்வி மந்திரிக்குக் கூட அப்படி கட்டுப்பாடுகள் இருப்பதை நான் பார்க்கிறேன். இந்திய சுழலில் உலக சுழலில் குழந்தை விவாதத்தை மாற்றிப் பார்க்கலாம். வகுப்பறைகள் மாணவர்களை மட்டுமல்ல ஒரு மனித உரிமை மீறலுக்குரிய கூடமாக மாறி இருக்கிறது என்பதை இந்த வரலாற்று குறிப்புகள் வழியாக நாம் பார்க்க முடிகிறது நண்பர்களே. இப்படியான ஒரு வேலையை இப்படியான ஒரு உருவாக்கத்தை இந்த கல்விக் கூடங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மீறி இவை ஏன் செய்து கொண்டிருக்கின்றன என்பது மிக முக்கியமான வாதம், மிக முக்கியமான விவாதம். இவற்றை நாம் பார்ப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு நிதானமான மனப்போக்கு அவசியமாக இருக்கிறது. பதற்றத்தோடு இல்லாத ஒருவன் மட்டுமே இத்தகைய விவாதத்திற்குள் பங்கேற்று ஒரு சரியான முடிவை எடுக்க முடியும். ஒரு சார்பாக எங்கேனும் நாம் தவறினோம் என்றால் ஒரு நிலையான, ஒரு நிரந்தரமான, ஒரு சரியான முடிவை நோக்கி நகர்வது காலம் தாழ்த்திக் கொண்டே போகும். நகர்வது நிகழாமலே போகும். இப்படியான ஒரு அடிப்படை அம்சங்களோடு வகுப்பறை திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்கள் எங்கிருந்து உருவாகி இருக்கின்றன என்பதை பார்த்ததன் வழியாகவே ஒரு ஆசிரியர் - மாணவன் உறவு, ஆசிரியர் - பள்ளிக்கூட உறவு, பள்ளிக்கூடம் - கல்வி இலாக்கா உறவு, கல்வி இலாக்கா - பெரும் முதலாளிகளின் உறவு - கார்ப்பரேட் நிறுவனங்களின் உறவு என்று இந்த உறவுகளை வகைப்படுத்த முடியும்.

கல்வி என்பது இப்படி ஒரு நீளமான, அகலமான, ஆழமான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது. கல்வி என்பது மாணவர்கள் பற்றிய பிரச்சினையாக நாம் பேசி முடித்து விடுவதற்கில்லை. அதனால்தான் நான் மீண்டும் அடிப்படையில் குறிப்பிட்டது போல, ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஒன்றை அழுத்தமாக சொல்கிறேன். ஒரு மனிதனினுடைய, தனி மனிதனினுடைய அகப் பதற்றத்தை போக்குகிற ஒன்றாக கல்வி இருத்தல் அவசியம். அகப் பதற்றத்தை போக்குகிற ஒன்றாக கல்வி எப்போது மாறும்?. கல்வி அகப் பதற்றத்தை போக்குகிற ஒருவராக யார் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்று பெரும்பாலும் நாம் விரும்புகிறோம். மாணவர்களின் அகப்பதற்றத்தை யார் போக்குவா.ர் ஆசிரியர் போக்குவார் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் உண்மையிலேயே ஆசிரியர்களுடைய போக்கு எவ்வாறு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு வழிகாட்டப்படுகிறது. புரிந்து கொள்ளுதல் என்றால் சமூகத்தில் புரிந்து கொள்வது என்பது என்ன? ஒன்றை இயக்குவதற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்வது. ஒரு இயந்திரத்தை இயக்குவதற்கு நீங்கள் உங்களை பழக்கப்படுத்திக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் அந்த இயந்திரத்தை புரிந்து கொண்டவர்களாவீர்கள். ஒரு இயந்திரத்தில் எங்கு நீங்கள் சாவியை நுழைக்க வேண்டும். எங்கு முடுக்க வேண்டும். எங்கு சுழற்ற வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் அந்த இயந்திரத்தை புரிந்து கொண்ட நபராக கருதப்படுவீர்கள். இதுதான் புரிதல் பற்றிய வரையறை. சமூகம் அப்படித்தான் வைத்திருக்கிறது. எல்லோரும் அப்படித்தான். நீங்கள் ஆசிரியரிடம் குழந்தைகளை புரிந்து கொண்டீர்கள் என்று சொன்னால் ஆசிரியர்களினுடைய அதிகபட்ச வழக்கு மொழி உன் வயதில் இத்தகைய சேட்டைகளை நானும் செய்திருக்கிறேன். உன்னை எனக்கு தெரியும். இதுதான் குழந்தைகள் பற்றி ஆசிரியர் வைத்திருக்கிற புரிதலினுடைய உச்சபச்ச எல்லை. எல்லோருக்கும் தெரியும். தாயாக, தந்தையாக இருக்கிற எல்லோருக்கும் தெரியும். ஐந்து வயதில் நான் என்ன செய்தேன். ஏழு வயதில், எட்டு வயதில், 11 வயதில் 22 வயதில் 27 வயதில் என்ன செய்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக, எல்லோரும் குழந்தைகளை புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பேசுவது எந்த வகையில் நியாயமாதாக சரியானதாக இருக்கும். புரிதல் என்பது என்னவென்று சமூகத்திற்கு தெரியப்படுத்த வேண்டி இருக்கிறது.

கல்விக்கூடங்களில் புரிதல் என்பது இன்னும் விரிவாகப் பேச வேண்டிய இடம். ஆசிரியர்கள் மாணவர்களை புரிந்து கொண்டு நடந்தார்கள் என்றால் ஆசிரியர் மாணவர்களை புரிந்து கொண்டவர்களுக்கு பாடம் கற்பித்தார்கள் என்றால் மாணவர்களின் வளர்ச்சியை நாம் அபரிமிதமாக பார்க்க வேண்டும் என்று எந்த கற்பனைக்கும் இடமில்லை. அப்படியெல்லாம் பார்த்துவிட முடியாது. ஏனென்றால் புரிதல் என்றால் என்ன என்பதே இந்த சமூகத்திற்கு, குறிப்பாக மாணவர்கள் பற்றிய புரிதல் என்று இந்த சமூகத்திற்கு எதுவுமே கிடையாது. இந்த சமூக மாணவர்களை பற்றி வைத்திருக்கிற எல்லா புரிதலும் உன் வயதில் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நானும் உன் வயதை கடந்து வந்தவன் தான். எனக்கும் உன்னை பற்றி எல்லாம் தெரியும். நானும் உன்னை போல் சேட்டைகள் செய்தவன். இப்படியான புரிதலோடு எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இது மாறுவதே இல்லை. I know who are you?” என்று ஆங்கிலத்தில் கேட்கிறார்கள். நீ யார் என்று தெரியும். ஏனென்றால் நீ உன் வயதில் என்ன செய்கிறாயோ, அதை நான் என் வயதில் செய்து இருக்கிறேன். இத்தகைய புரிதலோடு ஒரு குழந்தையோடு நீங்கள் உறவாட வேண்டும். உரையாட வேண்டும் என்று முயற்சிப்பது உங்கள் புரிதலினுடைய தன்மையை நீங்களே கேலிக்குள்ளாக்குவது போல பொருளாகும். இப்படியான நாமே நம்மை கேலிக்குள்ளாக்குகிற பொருளோடு இன்று வகுப்பறை, பள்ளிக்கூட புரிதல் என்பது திட்டமிடப்பட்டிருக்கிறது, வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆக, புரிதல் என்கிற வார்த்தை, புரிதல் என்கிற சொல் மிக முக்கியமான சொல். நிச்சயமாக புரிதல் வேண்டி இருக்கிறது. ஒரு மாணவனை, ஒரு சக மனிதனை வழிகாட்டு முயற்சிக்கிற ஒருவர் நல்ல புரிதலோடு நகர வேண்டும். புரிதல் எதைப் பற்றி புரிதல். அவர் தன்னைப் பற்றி புரிந்து வைத்திருக்கிற வேண்டும். நான் ஒரு காட்சியை பார்த்தவுடன் ஏன் வெகுண்டெழுகிறேன் என்பது அவருக்கு இருக்கும் என்றால் காட்சியை பார்த்தவுடன்  கலவரம் ஆகிற ஒரு மனிதரை ஆற்றுப்படுத்த முடியும். ஒரு காட்சியைப் பார்த்தவுடன் நான் ஏன் தடுமாறுகிறேன் என்று ஒரு ஆசிரியை தெரிந்து வைத்திருப்பார் என்றால் காட்சியைப் பார்த்தவுடன் தடுமாறுகிற ஒரு புரிதலை ஒரு மாணவிக்கு ஒரு குழந்தைக்கு அந்த ஆசிரியர் கடத்த முடியும். இப்படியான புரிதல் என்பது தன்னை பற்றி, தான் இங்கு பிரள்கிறோம், தான் எங்கு நகர்கிறோம், தான் இங்கு அதிர்கிறோம், தான் எங்கு விளையாடுகிறோம், தான் எங்கு வினையிடுகிறோம் என்று தன்னை பற்றி புரிந்து வைத்திருக்கிற ஒரு நிலையிலிருந்து தான் உண்மையான புரிதல் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, நிகழும். அப்படியான புரிதல் கொண்ட ஒற்றை வேலையை இந்த சமூகம் கல்விக்கூடங்களில் செய்ய வேண்டி இருக்கிறது.

எல்லா நாடுகளிலும் வளர்ந்த நாடுகளுக்குரிய கல்விக்கூடங்கள் எப்படி இருக்கின்றன என்ற ஆய்வுக் குறிப்புகளை பார்க்கிறபோது ஒரு ஆய்வாளர் பின்லாந்தை கல்விக்கூடங்களின் மெக்கா என்று வரையறுக்கிறார். இஸ்லாமியர்கள் இம்மாதிரியான சென்சிட்டிவ் இஸ்யூஸ் என்று  வரையறுப்பார்கள். யாரும் இறைவனுக்கு இணையாக ஒன்றை சொல்லிவிட கூடாது. மெக்காவிற்கு இணையாக ஒரு கட்டிடத்தை ஒரு இடத்தை சொல்லிவிடக்கூடாது. அப்படி ஒரு வரையறையை ஒரு ஆய்வாளர் முன்வைக்கிறார். அப்படியான ஒரு புனிதப்படுத்தப்பட்ட, புனிதப்படுத்தலாக கருதப்பட்ட இடத்தில் கூட புரிதல் என்கிற விளைச்சலில் இருந்து கல்விக்கூடங்கள் திட்டமிடப்பட்டிருக்கிறதா, கல்வி கூடங்கள் கட்டப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. இன்றும் பள்ளிக்கூடத்திற்கு செல்கிற அமெரிக்க ஆசிரியர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு விடுவோமா என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வுக் குறிப்பை நான் படித்திருக்கிறேன். நவீனமாக,  2022 - 23 ல் கூட. இந்த ஆசிரியர் பள்ளிக்கூடத்தில் போய் என்ன பாடத்தை எந்த புரிதலில் மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முடியும். அமெரிக்கா என்று புகழப்படுகிற ஒரு நாட்டினுடைய பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவர் வீட்டு பாடம் கொடுத்ததற்காக ஆசிரியர் மீது வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. நீதிமன்றம் ஆசிரியர் அப்படியெல்லாம் வீட்டு பாடம் கொடுத்து விடக்கூடாது என்று தீர்ப்பளிக்கிறது. இந்த ஆசிரியர் பணி மீது இருக்கிற அழுத்தம் ஒரு நிதானமான ஆசிரியரை முதலில் உருவாக்க வேண்டும். நிதானமான ஆசிரியர் தன்னைப் பார்க்கிற ஆசிரியராக மாற வேண்டும். அவர் பின்னாளில் மாணவர்களை புரிந்து கொள்கிற முயற்சியில் இறங்க வேண்டும். அந்த முயற்சியின் வெற்றியாக மாணவனிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வளவு வேலை இருக்கிறது.

யாருக்கு, மிக உயர்ந்த கல்வி கூடமாக கருதப்படுகிற உலகின் சாம்ராஜ்யத்திற்கு தலைமையாக கருதப்படுகிற அமெரிக்காவின் பள்ளிக்கூடத்திற்கு. இன்னும் கிளை நாடுகளில் இருக்கிற பள்ளிக்கூடங்களினுடைய ஜனநாயகப் பூர்வமான அமைப்பிற்குள் இன்னும் வேறு வேறு சிக்கல்கள் இருக்கின்றன என்பதை தனி உரையாடலாக நாம் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வளவு கல்வி சிக்கல்கள் இருக்கின்றன. மாணவர்களை புரிந்து கொள்வது என்பது தன்னைப் புரிந்து கொள்வது என்கிற நியாயத்திலிருந்து தன்னை புரிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்து நிகழ்கிற போதுதான் ஒரு ஆசிரியரினுடைய ஒரு மனிதனினுடைய அகப்பணி சிறந்த பணியாக மாறத் துவங்குகிறது. தன் எங்கு அதிர்கிறோம். தன் எங்கு பார்க்கிறோம். தான் எங்கு நகர்கிறோம் என்று தொடர்ந்து நகர்கிற, நடக்கிற செயல்பாடுகளின் வழியாக ஒரு கல்வி முறை ஒரு வகுப்பறை என்பது எல்லா கட்டுப்பாடுகளையும் கடந்து எல்லா உள்ளடக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கி, சிறந்த விவாதத்தோடு நகர்ந்து செல்ல முடியும். இன்று ஆசிரியர் பணியோ, வகுப்பறையோ, மாணவர்களின் செயல்பாடுகளோ எல்லாமும் துறை சார்ந்ததாக வகுக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகின்றன. இதை நிர்வாகம் செய்யப்படுகிற அம்சத்தில் இயங்குபவை அல்ல. கல்வி என்பது நிர்வாகம் செய்யப்படுகிற அம்சத்தில் இயங்குகிற பொருள் அல்ல It’s not a commodity. இது ஒரு பொருள் அல்ல. இது உற்பத்தி சாதனம் மாதிரியான ஒன்றல்ல. இது வேறொரு அகமாற்றம்.  கல்வி கூடத்தின் அவசியம் ஏன் ஏற்பட்டது என்று நீங்கள் விவாதிக்கிற போதே துவங்கிவிடும். பதற்றம் நீங்குவதற்காக தான் கல்வி அவசியம் ஆகிறது. படபடப்பு நீங்குவதற்காகத் தான் கல்வி அவசியமாக இருக்கிறது. சமூகம் முழுவதும் நிரம்பி இருக்கிற பிரம்மாண்டமும் பிரமிப்புகளும் தகர்வதற்காகத்தான் கல்வி அவசியமாய் இருக்கிறது. அப்படியான அவசியமாக இருந்த கல்வி முறை நகர்ந்து நகர்ந்து நகர்ந்து பெரும் வரலாற்று நெடுகிலும் நகர்ந்து வந்து அக உணர்வாக மாற வேண்டும் என்கிற செயல் உருவாக்கம் பெறுவதற்கு நீண்ட காலம் நீண்ட நூற்றாண்டுகளாயிருக்கின்றன. இத்தகைய நீளமான வரலாற்று பின்னணியோடு கல்வியை பார்க்கிறபோது கல்வி மீண்டும் ஒரு பதற்றத்தை உருவாக்குகிற பொருளாக  துறை நிர்வாகமாக மாறுவது என்பது அனுமதிக்கப்படக்கூடாது. அது விவாதிக்கப்பட வேண்டும்.

அரசாங்கங்களும் கல்வியாளர்களும் உண்மையிலேயே கல்வி குறித்து அக்கறைப்படுபவர்களும் விவாதிக்க வேண்டிய செய்தி கல்வியை துறை சார்ந்து இருப்பதை பிரித்து, துறை சார்ந்து வைத்திருப்பதை தகர்த்து, அக மனிதனினுடைய உரையாடலுக்குரிய மையமாக வேறொரு அமைப்பு முறையை கண்டுபிடிக்க வேண்டும். வேறொரு அமைப்பு முறைக்குள் அவை விவாதிக்கப்பட வேண்டும். நிர்வாகம் செய்ய வசதியான ஒன்றாக, நிர்வாகம் செய்ய வசதியான ஒரு துறையாக அவற்றை மாற்றி விடுவது என்பது வசதிக்கானதே தவிர அவை சரியானதாக இருக்காது  என்பது எனது தனிப்பட்ட பார்வை. இது சிறந்த நிலைநோக்கி நகர வேண்டும் என்றால் அவை துறையிலிருந்து நகர்த்தப்பட்டு ஒரு விவாதப் பொருளாக மாற்றப்பட வேண்டும். அகவுணர்வு குறித்து பேசுகிற பேச்சு பொருளாக மாற்றப்பட வேண்டும். தத்துவ ஞானிகளும் தத்துவ ஆய்வாளர்களும் இலக்கியவாதிகளும் பங்கேற்கிற ஒரு கலந்துரையாடல் மையமாக அது மாற்றப்பட வேண்டும் என்பது எனது பார்வை. அப்படித்தான் கல்விக்குள் அக மாற்றத்தை பார்க்க முடியும். அகமாற்றம் குறித்த  கல்வியையும் பார்க்க முடியும். இந்த வகையில் ஒரு நீளமான உரையாடலை செய்வதற்கு நம் தொடர்ந்து வேறுவேறு தளங்களில் பேசிப் பார்க்க வேண்டி இருக்கிறது. துறை சார்ந்த ஆசிரியர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் துறை சார்ந்த கல்வியாளர்கள் என்றெல்லாம் துறை சார்ந்த எல்லா அடுக்கு முறைகளும் மாற்றியமைக்கப்பட்டு எல்லா அடுக்கு முறைகளும் நேர் செய்யப்பட்டு குழந்தைகளினுடைய அகவுணர்வை நாம் ஏன் தயங்குகிறோம், நாம் ஏன் பயப்படுகிறோம், நாம் ஏன் அதிர்வுருகிறோம் என்று பார்க்க வைக்கிற, விழிப்புணர்வை கற்றுக் கொள்கிற, நெறிப்படுத்துதல் ஏதுமில்லாத ஒற்றை புள்ளியில் இருந்து கல்வி என்பது துவங்கப்பட வேண்டும் என்று நான் பார்க்கிறேன்.

இந்த உரையாடலின் வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குரிய ஒற்றை செய்தியும் அதுதான். கல்வி குறித்து நீங்கள் உரையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் அது குழந்தைகளைப் பற்றிய உரையாடல் அல்ல. கல்விக்கூடங்கள் பற்றி உரையாடல் அல்ல. வகுப்பறைகள் பற்றிய உரையாடல் அல்ல.  அதைக் கடந்து ஒரு குழந்தை அல்லது ஒரு மனிதன் ஏன் தயங்குகிறான்? ஏன் அதிர்கிறான்? ஏன் வினையுறுகிறான்? ஏன் எரிச்சல் அடைகிறான்? ஏன் கோபம் அடைகிறான்? ஏன் கண்டு கொள்வதில்லை என்றெல்லாம் ஒரு மனிதனுக்குள் இருக்கிற அக மோதல்களை நிதானமாக தீர்க்க முயற்சிக்கிற, வழிவிட முயற்சிக்கிற, சாந்தமாக்க முயற்சிக்கிற, ஆற்றுப்படுத்துதல் நுட்பமாக கல்வி மாற்றப்பட வேண்டும். கல்விக்கு மட்டும்தான் அத்தகைய பண்பும் நீதியும் கூறுகளும் இருக்கின்றன. கல்வியால் மட்டும் தான் செய்ய முடியும். இப்படி செய்கிற ஒன்றிற்கு பெயர் தான் கல்வி என்று நான் உங்களோடு அழுத்தம் திருத்தமாக பகிர்ந்து கொள்கிறேன்.

 

நன்றி.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...