Monday, April 13, 2026

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு(பகுதி -2 ) - சிவ கதிரவன்

                 விருப்பம் - சுதந்திரம் - பொறுப்புணர்வு


  எந்த ஒன்றின் மீது பொருந்த முடியவில்லையோ உங்களுக்கு பொருத்தம் என்பது தோன்றவில்லையோ அப்போதெல்லாம் அதன் மீது விருப்பம் இருக்காது. இவ்வாறாக ஒரு எளிமையான சமன்பாடு போல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எளிமையாக நாம் பார்த்தோம் என்றால் பொருத்தமாக இருக்கிற எல்லாவற்றிலும் நீங்கள் விருப்பமாக இருப்பீர்கள். உங்களுக்கு பொருந்தாத ஒன்றின் மீது விருப்பம் ஏற்படாது. இது எளிமையானது. பொருந்தாத ஒன்றின் மீது அல்லது விருப்பமில்லாத ஒன்றின் மீது நீங்கள் இருக்கிற போது  அதனை விட்டு விலகுவது என்பதுதான் உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும். அவ்வாறு இல்லாமல் விருப்பமில்லை என்றாலும் அதில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் உந்தப்படுவீர்கள் எனில் அந்த வேலையில் நீங்கள் ஈடுபட முடியும். நல்ல வெற்றி கூட காண முடியும். ஆனாலும் அது உங்களுக்கு ஒரு மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கருத்து.  மன அழுத்தம் என்ன செய்கிறது? இந்த மன அழுத்தத்தின் வழியாக அந்த மனம் இருக்கிற உடலிற்கு சொந்தக்காரர் என்னவாகிறார் என்பதுதான் இன்று நோய்களுக்குரிய காரணமாக இருக்கிறது.

எவ்வளவு நோய்கள் வந்திருக்கின்றன என்று நீங்கள் பட்டியல் எடுத்துப் பார்க்கிற போது அவ்வளவு நோய்களுக்குப் பின்னாலும் மன அழுத்தம் என்பது குறிப்பிடத் தகுந்த ஒரு வேலையை செய்து கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் காண முடியும். நான் துவக்கத்தில் கூறியது போல உடலிற்கு அடிப்படையான சில இயக்க முறைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். உடலிற்குள் மூச்சின் இயக்கம், செரிமான இயக்கம், வியர்வை வெளியேற்றம், சிறுநீர் வெளியேற்றம், இன்ன பிற கழிவுகள் வெளியேறுகின்ற வெளியேற்ற முறைகள் உங்கள் உடலினுடைய அவையங்களின் இயக்கம், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் என்று பலவகையான உடல் இயக்கங்களை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இந்த உடல் இயக்கம் தன்னளவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதும் இந்த இயக்கங்களுக்கு தூண்டல் என்பது அதன் உள்ளேயே இருந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய உடல் இயங்கும் முறை.

உண்பதால் சத்தாக இருக்கிறோம், உறங்குவதால் சத்தாக இருக்கிறோம் என்கிற கோட்பாடுகள் எல்லாம் தனியாக வைத்து விட்டு பார்த்தால் கூட உயிரோடு இருக்கிற ஒரு உடல் தோற்றத்திற்கு அதன் அளவில் இயக்கம் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, இது மனித உடலிற்கும் பொருந்தும். உடல் எவ்வாறு இயங்க வேண்டும் என்கிற வரம்புகளையும் வரையறைகளையும் அந்த உடலுக்குள்ளேயே ஒரு சூத்திரம் போல் வைத்திருக்கிற அமைப்பும் இருக்கிறது.  இப்படி இயக்கம் முறைப்பட இயங்கிக் கொண்டே இருக்கிற போது இது நலமாக நிறைவாக இயங்குவதற்கு நம்முடைய மன செயல்பாடு இன்றியமையாத பங்கு வகிக்கிறது.  ஒரு தனி மனிதனினுடைய மனச் செயல்பாடு உடலினுடைய இயக்கப் போக்கிற்கு மிக நெருக்கமாக  பங்காற்றுகிறது என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.

உடல் தன்னளவில்  இயங்கிக்கொண்டே இருக்கிறது. அந்த உடலில் இருக்கிற உறுப்புகள் தன்னளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை யாவும் முறைப்பட, நெறிப்பட அதற்கே உரிய தூண்டலோடு இயக்கம் கொள்கின்றன. உள்வாங்குகின்றன, வெளித் தள்ளுகின்றன, சுழல்கின்றன,  பெருக்கின்றன, மெலிகின்றன. இவ்வாறு பல வகையான இயக்கங்கள் உள்ளே நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வளவு இயக்கமும் இயல்பு மாறாமல் நிகழ்ந்து கொண்டிருப்பவை. இந்த  இயக்கத்தை அப்படியே நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள் என்றால் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்றும் இதில் தடுமாற்றம் ஏற்படும் என்றால் நீங்கள் நலக்குறைவிற்கு உள்ளாகிறீர்கள் என்றும் நலம் பற்றி நீங்கள் எளிமையாக உணர்ந்து கொள்ள முடியும். இதுதான் நலம் குறித்து இருக்கிற எளிமையான வரையறை.

இயல்பாக இருக்கிற உடல் எப்பொழுது தன் இயல்பிலிருந்து விலகுகிறது, இயல்பிலிருந்து பிறழ்வடைகிறது? - விருப்பமான மனநிலையில் உடல் இயங்கும் என்றால் அந்த உடல் இயல்பு மாறாமல் இயங்கும். அழுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, விருப்பமில்லாமல் ஒரு செயல்பாட்டில் அந்த உடல் இயங்கும் என்றால் அந்த உடலினுடைய இயல்பான இயக்க முறை என்பது பிறழ்விற்கு உள்ளாகும். அது நோயாக வளர்ச்சி அடையும் என்பதுதான் மன அழுத்தம் என்பது உடலின் இயல்பை பிறழ்விற்கு உள்ளாக்குகிற கதை.   

நீங்கள் எந்த ஒன்றில் ஈடுபடுகிறீர்களோ, ஆர்வம் காட்டுகிறீர்களோ எந்த ஒன்றை செயல்படுத்துகிறீர்களோ இவற்றிற்குள் எல்லாம் நீங்கள் முழு விருப்பத்தோடு இருப்பீர்கள் என்றால் அந்த செயல்பாடுகள் வழியாக உங்களுக்கு எப்பொழுதும் நோய் வராது. நோய் வருவதற்கு நான் முன்பு சொன்னது போல பல காரணங்களை நீங்கள்  கூற முடியும், உணவு, மாசு, சுற்றுச்சூழல் கேடு, நஞ்சாக்கப்பட்ட உணவு உற்பத்தி முறை என்றெல்லாம் பல காரணிகள் இருந்தாலும் கூட மிக அடிப்படையாக உடலை நீங்கள் மேம்படுத்திக் கொள்வதற்கு விருப்பத்தின் பாற்பட்டு உங்கள் உடல் நலத்தை பராமரித்துக் கொள்வீர்கள்  என்றால்  உங்கள் வேலைத்தன்மையை அமைத்துக் கொள்வீர்கள் என்றால் நீங்கள் முழுவதுமாக நலம் பெறுவதற்கு அல்லது இழந்த நலத்தை மீட்பதற்கு மிக எளிமையான சாத்தியங்களை வாய்ப்புகளை பெறுவீர்கள்.

விருப்பம் இல்லாத செயல்களை செய்யாதீர்கள். விருப்பமில்லாத பணியில் உங்களை ஈடுபடுத்தாதீர்கள். விருப்பமில்லாத சொற்களை நீங்கள் சொல்லாதீர்கள் என்றவாறு நீங்கள் விருப்பத்திற்கு உரிய வகையில் உங்களது நடைமுறைகளை மாற்றிக் கொள்வீர்கள் என்றால் அது உங்கள் நலம் பெறுவதற்கான அருமருந்தாக செயல்படும். உங்கள் நலம் மீட்கப்படுவதற்கான அருமருந்தாக செயல்படும். இவ்வாறு மன அழுத்தம் உடல் நலத்தில் வினையாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால் மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கை முறையை ஒரு செயல்பாட்டு முறையை நீங்கள் கடைபிடிக்க முடியும். 

எந்த செயல்பாட்டிலும் எந்த இயக்கத்திலும் எந்த நடைமுறையிலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது - விருப்பத்தோடு நாம் அவற்றில் ஈடுபடுகிறோமா? விருப்பத்தோடு அவற்றில் நாம் வினையாற்றுகிறோமா?  செயல்படுகிறோமா என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் உங்களுக்கு அந்த பணியின் காரணமாக, அந்த செயல்பாடுகளின் காரணமாக எந்த விதத்திலும் உடல் நலப் பிறழ்வு  என்பது ஏற்படாது என்பதை நீங்கள் கண்கூடாக மெய்ப்பாடாக பார்க்க முடியும். 

                                            

அடுத்து, நீங்கள் விருப்பமான முறையில் உங்களது செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்ள துவங்குவீர்கள் என்றால் அந்த விருப்பமான செயல்பாடு என்பது உங்களுக்கு வழங்குகிற உயர்வு உங்களது சுதந்திரம். ஒரு குறுக்கு வழியில் நான் சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று நீங்கள் இவற்றை புரிந்து கொள்ளக்கூடாது. நீங்கள் ஈடுபடுகிற யாவற்றிலும்  நீங்கள் விருப்பத்தோடு இருக்கிறீர்கள் என்பது முதல் நிலை. நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா என்பது அதன் அடுத்த ஆழம். நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள் என்றால் நீங்கள் ஈடுபடுகிற செயல்பாடு உங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். நீங்கள் இப்போது ஒரு கற்பனைக்காக கண்ணை மூடி உங்களை சுற்றி இருக்கிற செயல்பாடுகளில், உங்களது உறவு பாராட்டும் உறவு முறைகளில் எந்த அளவிற்கு சுதந்திர உணர்வோடு இருக்கிறீர்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் எத்தனை கட்டுகளை உங்கள் கைகால்களில் கட்டி இருக்கிறீர்கள் அல்லது கட்டப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை எளிமையாக பார்க்க முடியும். இவ்வளவும் உங்களுக்கு மன அழுத்தத்தை தருகிற கட்டுகள். நீங்கள் சுதந்திரமாக செயல்படாத போது அல்லது விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற போது அவை ஏற்படுத்துகிற விளைவு என்பது முதன்மையாக உங்கள் உடல்நலப் பிறழ்வு. எனவே உடல் நலப் பிறழ்வில் இருந்து நீங்கள் விடுபடுவதற்கு நீங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்பி சுதந்திரமாக செயல்படுவீர்கள் என்றால் அது உங்கள் நலம் மேம்படுவதற்கு தொடர்ந்து உதவும்.

சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று சொன்னவுடன் நான் இன்றிலிருந்து சுதந்திரமாக செயல்பட போகிறேன் என்று நீங்கள் முடிவு செய்யலாம். எவற்றையெல்லாம் சுதந்திரத்தின் மீதான சிக்கல் என்று கருதிக் கொண்டிருக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்கள் இன்று செய்யத் துவங்கலாம். அப்படித்தான் நான் பார்த்திருக்கிறேன். என்ன நிகழும்? இப்போது இருந்து சுதந்திரமாக செயல்படு என்று நான் ஒருவரிடம் சொல்லி விட்டேன். உடனடியாக அவர் செய்த காரியம் இரவெல்லாம் விழித்திருந்தது. இரவெல்லாம் விழித்திருப்பது கண்விழித்து சினிமாவிற்கு செல்வது, இரண்டு, மூன்று மது புட்டிகளை முற்றுமுதலாக குடித்துக் களிப்பது, தொடர்ந்து புகைப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளை அவர் சுதந்திரம் என்று  செய்ய துவங்கினார். இந்த சுதந்திரமான செயல்பாடுகளை இவ்வாறு புரிந்து கொண்டு நீங்களும் கூட அவ்வாறு செய்யத் துவங்கக்கூடும். அது ஒன்றும் பிழையானது அல்ல. இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கிற போது அவர் தன் உடல் அளவில் சோர்வினையும்  நெருக்கடிகளையும் பார்க்கத் துவங்கினார்.  சுதந்திரமாக இருக்கிறபோதும் உடல் சோர்வு ஏற்படுகிறது என்பதை உணரத் துவங்கினார். உங்களுக்கும் அப்படி உணர்வு ஏற்படும். இப்போது உங்கள் உடலில் நீங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டலை உங்கள் உடலளவில் பெறுவீர்கள்.

நீங்கள் சுதந்திரமாக இருக்கத் துவங்கியவுடன் மிகக்  குறுகிய காலத்தில் உங்கள் சுதந்திரம் உங்களுக்கு பொறுப்புணர்வை கற்றுக் கொடுக்கும். நீங்கள் பொறுப்புணர்வோடு உங்களை பராமரித்துக் கொள்கிற நிலைக்கு உயர்வீர்கள். முதலில்  விரும்புவதை எல்லாவற்றையும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த செயல்பாடுகள் பலவற்றின் மீது உங்களுக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும். அந்த செயல்பாடுகள் உங்கள் உடலை என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். உங்கள் சுதந்திரத்திற்கு உங்கள் உடல் தான் உறுதுணையாக இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ஒரு நலமான உடல் இல்லாமல் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதை உணர முடியும். இவ்வாறு உங்கள் உடல் நலத்துடன் இருப்பதை நீங்கள் பொறுப்பாக்கிக் கொள்வீர்கள். உடல்நலத்தின் மீது நின்று கொண்டு சுதந்திரமாக இருக்கிற நிலைக்கு நீங்கள் உயர்வீர்கள் என்பது அதற்குள் நிகழ்கிற அடுத்த நிலை உயர்வு. 

--- தொடரும் ---

No comments:

Post a Comment

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு(பகுதி -2 ) - சிவ கதிரவன்

                      விருப்பம் - சுதந்திரம் - பொறுப்புணர்வு உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு - (பகுதி -1)     எந்த ஒன்றின் மீது பொருந்த மு...