Wednesday, October 13, 2021

சும்மா இருப்பது - பகுதி 4

                            சும்மா இருப்பது என்பது என்ன? 

www.swasthammadurai.com



சும்மா இருப்பது என்பது என்ன? என்று பார்ப்பதற்கு முன் இந்தக் கேள்வி எழும்புகிற நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது இன்னும் வசதியானது.

தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு மனதின் கேள்வியாக இது இருக்கக்கூடும். சும்மா இருப்பதை இரண்டு விதமாக நீங்கள் எதிர்கொள்ளலாம். சும்மா இருப்பதற்குள் அந்த இரண்டு விதத்தை ஒட்டி உங்களது கேள்விகளை எழுப்பி பார்க்கலாம்.

அதில் ஒன்று, சும்மா இருப்பது என்பது என்ன? அல்லது சும்மா இருப்பது எவ்வாறு செய்வது? என்ற வகையில் வெவ்வேறு கேள்விகளை சும்மா இல்லாத மனம் எழுப்பிக் கொண்டே இருக்கும்.

இயற்கையில் அல்லது இறைவனின் இயக்கத்தில் அல்லது இருத்தல் நிகழ்வில் என்று எந்த வகைப்பட்ட சொல்லையும் பயன்படுத்திக் கொள்ளலாம் சும்மா இருப்பதற்கான வார்த்தையாக. இந்த உலகம் முழுவதும் மனிதனின் மனம் கொண்ட இயக்கமே மனிதனின் இயக்கமாக அடையாளம் காட்டப்படுகிறது. ஒரு மனிதன் எவ்வாறு இயங்குகிறான்? என்பது அவனது தனிப்பட்ட மன இயக்கத்திலிருந்து உந்தப்படுவதாக இருக்கிறது. இந்த உந்துதல் என்பது எதை நோக்கிய உந்துதலாக இருக்கிறது.

ஒரு மனிதனின் இயக்கம் என்பது எதற்கான இயக்கமாக இருக்கிறது. ஒரு மனிதன் ஏன் பேசுகிறான்? ஒரு மனிதன் ஏன் வேலை செய்கிறான்? ஒரு மனிதன் ஏன் சண்டையிடுகிறான்? ஒரு மனிதன் ஏன் கண்டுபிடிக்கிறான்? என்றெல்லாம் கூட ஒரு மனிதனுக்குள் நடக்கிற ஒவ்வொரு பிரதிபலிப்பையும் நாம் ஏன் என்று கேள்வி கேட்டு பார்க்க வேண்டி உள்ளது.

ஒரு விஞ்ஞானி அணு ஆயுதத்தை கண்டு பிடித்து இருக்கிறார். உலகம் முழுவதையும் ஒற்றை வினாடிக்குள் அழித்து அட்டைப் பெட்டிக்குள் அடைத்து விடும் அளவிற்கு கருகச் செய்கிற ரசாயனங்களையும் எரிநுட்பங்களையும் கண்டுபிடித்திருக்கிறார். அந்த மனிதனை உலகம் முழுவதும் பாராட்டுகிறது. உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா பெரு அறிவியல் நிறுவனங்களும் போற்றுகிறது.

மொத்தமும் உலக அமைதிக்காக நகர வேண்டும் என்று கோட்பாடுகளும் வரையறைகளையும் வகுத்து வைத்திருக்கிற நிலைப்பாடுகள் ஒருபுறம். இந்த மனித குலத்திற்கு எதிராக விஞ்ஞானத்தை கூர்மையாக்குகிற கண்டுபிடிப்புகள் இன்னொருபுறம். இந்த இரண்டு முரண்பாடுகளுக்குள் மனிதன் அதிகம் தேர்வு செய்வது பரப்பிலிருந்து செய்யப்படுகிற தேர்வாக இருக்கிறது. அது மனிதனுக்கு எதிராக இருக்கிறது. இந்த எதிராக இருக்கிற மனநிலையை, தனக்கு எதிராக இருக்கிற மனநிலையை, தன் சமூகத்திற்கு எதிராக இருக்கிற மனநிலையை, தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு எதிராக இருக்கிற மனநிலையை உடைத்து உதிர்த்து விடுவதற்கான வேலையை எது செய்யும்? யார் செய்வார்? எவ்வாறு செய்வது என்று நீங்கள் தேடினீர்கள் என்றால் உங்களுக்கு சும்மா இருப்பது தான் பதிலாக கிடைக்கும்.

உங்களைச் சுற்றி இருக்கிற எல்லா விதமான சிக்கல்களுக்கும் உங்கள் இயக்கம் காரணமாக இருக்கிறது என்று உங்களுக்கு அறிவுறைகள் வரக்கூடும். நீங்கள் இந்த வேலையை இவ்வாறு செய்திருந்தால் சிக்கலில் வீழ்ந்திருக்கமாட்டீர்கள் என்று உங்களை வழி நடத்த ஆயிரம் நண்பர்கள் இருக்கக் கூடும். நீங்கள் இன்று சங்கடங்களை சந்திப்பதற்கு இத்தகைய தொழிலை துவங்கியது தான் காரணம் என்று உங்களை சுட்டிக்காட்ட உங்களைச் சுற்றி இருப்பவர்கள் முயற்சி செய்வார்கள்.

நீங்கள் இயங்குவதால் சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை என்பது எனது பார்வை. நீங்கள் எத்தகைய இயக்கத்தையும் கொண்டவராக இருக்கலாம். நீங்கள் திருடனாக இருக்கலாம். நீங்கள் காவல்துறையை சார்ந்தவராக இருக்கலாம். நீங்கள் கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம். நீங்கள் மருத்துவராக இருக்கலாம். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களது இயக்கம், உங்களது வேலை, உங்களது செயல்பாடு எப்போதும் உங்களை சிக்கலுக்குள் நிறுத்தாது.

ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பது என் வேலைதான் எனக்கு சிக்கலை உண்டாக்குகிறது. என் இயக்கம்தான் எனக்கு சிக்கலை உண்டாக்குகிறது. என் திருமணம் தான் எனக்கு சிக்கலை உண்டாக்குகிறது. நான் பெற்ற பிள்ளைகள் தான் எனக்கு சிக்கலை உண்டாக்குகின்றனர் என்று உங்கள் செயல் மீது குற்றம் சொல்லும் மனோபாவத்தை நீங்கள் சற்று மாற்றி அமைக்க வேண்டும்.

உங்கள் செயல்கள் எப்போதும் உங்களுக்கு எதிராக இருப்பதில்லை. உங்களுக்கு எதிரான ஒன்றை உங்களால் செய்ய முடியாது. ஆனாலும் இந்த சிக்கல்கள் இவ்வளவு விரிவாக உருவானதற்கு என்ன காரணம் என்றால் உங்கள் செயல் குறித்து, உங்கள் இயக்கம் குறித்து உங்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது. நீங்கள் திருடுவதை விழிப்புணர்வோடு செய்யமுடியும் என்று சும்மா இருப்பது குறித்த கோட்பாடுகள் அழுத்திக் கூறுகின்றன.

நீங்கள் எதையும் விழிப்புணர்வோடு செய்யமுடியும். நீங்கள் புகை பிடிக்க முடியும் விழிப்புணர்வோடு. நீங்கள் சாராயம் குடிக்க முடியும் விழிப்புணர்வோடு. நீங்கள் முடி திருத்தம் செய்ய முடியும் விழிப்புணர்வோடு. நீங்கள் உறங்கி எழ முடியும். உங்களுக்கு தேவையான உணவை உட்கொள்ள முடியும். எல்லா நேரங்களிலும் எல்லா செயல்களிலும் உங்களால் விழிப்புணர்வோடு இருக்க முடியும் என்றால் நீங்கள் சிக்கலில் இருந்து விடுபடக் கூடும் கூடியவராக இருப்பீர்கள். இந்த விழிப்புணர்வுக்குப் பெயர் வெறுமனே கண்காணிப்பது.

ஒரு சாலையில் செல்கிற வாகனத்தை எந்த மதிப்பீடும் இல்லாது வேடிக்கை பார்க்கிற மரத்தின் இலையை போல் நீங்கள் தலைசாய்த்து பார்க்க முடியும் என்றால் நீங்கள் விழிப்புணர்வோடு அதை கண்காணிக்கிறீர்கள் என்று பொருள். அந்த விழிப்புணர்வோடு எதுவும் செய்யாமல் நீங்கள் பார்க்க முடிந்தால் அதற்கு பெயர் சும்மா இருத்தல்.

 ALSO READ: சும்மா இருப்பது - Being Idle - Part -3

ALSO READ: சும்மா இருப்பது - Being Idle - Part -2

 

1 comment:

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...