Saturday, October 16, 2021

எவ்வாறு விரதம் இருப்பது? - FASTING

                                         எவ்வாறு விரதம் இருப்பது?

www.swasthammadurai.com


இன்று உணவை உட்கொள்வதில் இருக்கிற மிக முக்கியமான பகுதி விரதம் மேற்கொள்வது.

விரதம் மேற்கொள்வது பரிந்துரையாக தரப்படுகிற மருத்துவங்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றன. சமகாலத்தில் இயற்கை வழிப்பட்ட மரபுசார்ந்த மருத்துவங்கள் உணவு உட்கொள்வதற்கு சில வரையறைகளை வைத்திருக்கின்றன.

 நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற காலங்களில், நோய்வாய்ப்பட்டிருக்கின்ற நேரங்களில் ஒரு மனிதனுக்கு ஆகச்சிறந்த மருத்துவ உதவி என்பது முதலாவதாக அவர் உட்கொள்கிற உணவை நிறுத்தி வைப்பது அல்லது உணவின் தரத்தை திரவமாகவோ நீர்மமாகவோ மாற்றிக் கொள்வது என்கிற பரிந்துரை தரப்படுகிறது.

 “பட்டினியே சிறந்த மருந்து” என்கிற ஒரு பழமொழி மருத்துவம் சார்ந்த பழமொழியாக இன்றும் தமிழ் வழக்கத்தில் இருக்கிறது.

 “இலங்கணம் பரம ஔஷதம்” என்று சமஸ்கிருதத்தில் ஒரு சொல் இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் இலங்கணம் என்பது பட்டினியாய் இருப்பது. வெறும் வயிறாக இருப்பது, காலியான வயிறை வைத்திருப்பது என்று பொருள். இலங்கணம் பரம ஔஷதம் என்பதில் “ஔஷதம்” என்பது மருந்தைச் சொல்லக்கூடிய. பொருள் இலங்கணம் பரம ஔஷதம் என்பதும் பட்டினியாய் இருப்பது நல்ல மருந்து என்பதும் “பசித்துப் புசி” என்கிற பொருளில் விளக்கப்படுகிற மருத்துவ பரிந்துரை.

இன்றும் இயற்கை மருத்துவங்கள் நேரடியாக நவீன காலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவான இயற்கை மருத்துவங்களாக இருந்தாலும் சரி. மரபுசார்ந்த மருத்துவ முறைகளாக இருந்தாலும் சரி, உடல் இயக்கத்திற்கு பட்டினியாய் இருப்பதை ஒரு பரிந்துரையாக வைத்திருக்கின்றனர்.

சித்த மருத்துவ முறைகளில் இன்றும்கூட மருத்துவ சிகிச்சை துவங்குவதற்கு முன்பு அவருக்கு “சுகபேதி” என்றொரு ஒரு மருத்துவ பரிந்துரையை அவருக்கு செய்வதுண்டு. சுகபேதி என்பது வயிறை காலியாக செய்வதற்கான வயிறை பட்டினி போடுவதற்கான ஒரு சிகிச்சை முறை என்று சித்த மருத்துவ பயிற்சியாளர்கள் வைத்திருக்கிறார்கள். இதே சுகபேதி முறை ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்கிறது. இன்று வழக்கத்தில் இருக்கிற கருத்துருவாக்கங்களை சேர்த்துக்கொண்டு புதிய தன்மையோடு பயணிக்கிற, இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளப்படுகிற அக்குபஞ்சர் மருத்துவம் கூட உடல் நிலை சீரில்லாத போது உடனடியாக அமைதியாக இருக்கவும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருக்கவும் பரிந்துரை செய்கிறது. இப்படி பெரும்பாலான மருத்துவங்கள் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பட்டினியாக இருப்பதை பரிந்துரை செய்கின்றனர் என்பதை பார்க்க முடிகிறது.

உண்ணாவிரதம் என்பதும் உடல்நிலை சரியில்லாதபோது பட்டினியாய் இருப்பது என்பதும் உண்மையிலேயே ஒரே நிகழ்வு தானா என்பதை நாம் உடலளவில் புரிந்துகொள்ள வேண்டும். உயிரியல் செயல்பாடை பொருத்த அளவில் நீங்கள் உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருப்பீர்கள் என்றால் வயிற்றுக்கு, செரிமான மண்டலத்திற்கு ஒரு நீண்ட ஓய்வு கிடைப்பதாக மருத்துவ வரையறை கூறுகிறது.

உடலில் சக்தி பரிமாணம் ஆற்றல் பங்கீடு உடலில் செரிமான சக்தி ஓய்வாக இருக்கும்போது அந்த செரிமான சக்தி வேறுசில ஆற்றலாக மாற்றம் அடைகிறது என்று இயற்கை மருத்துவத்தின் கோட்பாடை “உடலின் மொழி” என்கிற புத்தகத்தில் மருத்துவர் உமர் ஃபரூக் பதிவுசெய்கிறார்.

 உடல் ஓய்வாக இருக்கிற போது, செரிமான மண்டலம் ஓய்வாக இருக்கிற போது அங்கு ஓய்வாக தேக்கப்பட்டிருக்கிற செரிமான சக்தி உடலுக்குள் வேறு என்ன மாதிரியான வேலைகளைச் செய்ய துவங்குகின்றன என்ற கோணத்தில் இயற்கை மருத்துவப் புரிதலில் ஒரு ஆழமான ஆற்றல் பங்கீடு கதையை தன் புத்தகத்தில் நுட்பமாக பதிவு செய்கிறார்.

உடல் சீர் இல்லாத நேரங்களில் நீங்கள் ஓய்வாக இருப்பதும் செரிமானத்திற்கு ஓய்வு கொடுப்பதும் உண்மையிலேயே ஆகச் சிறந்தது அவசியமானதும் கூட. ஆனால் உண்ணாவிரதம் என்பதும் உடல் நலமாக இருப்பதற்கும் எத்தகைய தொடர்பு இருக்கிறது என்பதை மருத்துவ தளத்திலிருந்து நாம் சற்று ஆழமாக உரையாடி பார்ப்பது தேவையாக இருக்கிறது.

உணவு என்கிற நலம் குறித்தான பகுதியில் உணவு நலம் பற்றி பேச வேண்டும் என்கிற போது உணவை மறுக்கிற பகுதிகள் குறித்தும் நாம் பேச வேண்டியது அவசியமாகிறது. எப்போது உண்பது என்பது நமக்கு எப்படி தெரிந்திருக்க வேண்டுமோ, எப்போது உண்ணாமல் இருப்பது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். நவீன மருத்துவங்கள் கூட உண்ணாமல் இருப்பதற்கு சில நடைமுறைகளை வைத்திருக்கின்றன. உடல் அசௌகரியமாக இருக்கிற போது, உடலில் நீர்ம நிலை குறைந்து போகிறபோது உடல் களைப்பாக இருக்கிற போது நவீன மருத்துவம் நேரடியாக சில உணவு பரிந்துரைகளை தருகின்றன. அது வழக்கமான உணவுப் பட்டியலில் இருப்பது போன்ற உணவாக இருப்பதில்லை. எளிய நீராகாரங்களும் பல உணவுகளும் கூட நவீன மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

உடலில் நீர்த்தன்மை கணிசமாக குறைந்திருக்கிற போது நவீன மருத்துவம் நீர் தன்மையை அதிகமாக்குகிற நீர்மப் பொருட்களை நேரடியாக இரத்தத்தில் செலுத்துகிற ஒரு வழக்கத்தையும் கையில் வைத்திருக்கிறது. மரபுசார்ந்த மருத்துவங்களும் ஓய்வாக இருக்கிற போது உடல் நலம் சீரில்லாமல் இருக்கிற போது எத்தகைய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை வகைப்படுத்தி வைத்திருக்கிறது.

நேரடியாக உடல் இயங்கும் முறைக்கு இசைவாக என்ன உணவுகளை எடுக்க வேண்டும்? எப்போது உணவுகள் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பது குறித்தான இயற்கை மருத்துவம் சார்ந்த ஆய்வுகளும் குறிப்புகளும் ஆவணங்களும் சற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மற்ற மருத்துவத்தை ஒப்பிடுகையில்.

 இந்த ஒட்டுமொத்த மருத்துவ ஆய்வுகளும் உணவு எப்போது உட்கொள்ளவேண்டும், உணவு எப்போது உட்கொள்ள கூடாது என்கிற பரிந்துரையில் தரப்படுகின்றன. இவை உடல் நலம் கெட்டு இருக்கிற நேரங்களில் சாலச் சிறந்தவையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

இப்போது உணவு மறுக்கும் அல்லது உண்ணாவிரதம் என்கிற நிலைகளில் இருக்கிற உணவு மறுப்பு என்பது என்ன வேலையை உடலில் செய்கிறது என்பது நாம் பார்க்கவேண்டிய பகுதியாக இருக்கிறது.

                                                                    தொடர்ந்து பேசுவோம்...

ALSO READ: MEDITATION(தியானம்)

ALSO READ: MONEY(பணம்)

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...