Wednesday, October 20, 2021

VARMA / வர்ம மருத்துவம் - பகுதி - 3

                                       வர்ம மருத்துவம் - பகுதி - 3

வர்ம மருத்துவம் பற்றி நாம் பேசுவதற்கு நிறைய பேசும் தளங்கள் இருக்கின்றன.

மருத்துவத்தினுடைய வர்ம மருத்துவப் புள்ளிகள், புள்ளிகளை தூண்டும் முறைகள், புள்ளிகள் இயங்கும் முறைகள், ஒரு புள்ளிக்கும் இரண்டு புள்ளிக்கும் மூன்று புள்ளிக்கும் ஐந்து புள்ளிக்கும் பத்து புள்ளிக்குமாக இருக்கிற தொடர்பு. மருத்துவத்தின் சாராம்சமாக விளங்குகிற வர்ம ஆற்றல் சுழல்கிற இடம், வர்ம ஆற்றல் சிதறுகிற இடம், வர்ம ஆற்றல் பயணிக்கிற இடம் என்று வெவ்வேறு தூண்டல் முறைகளில் நாம் பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் மருத்துவத்தினுடைய இயங்கு தளங்கள், சக்தி மையங்கள் என்று நாம் பார்ப்பதற்குரிய இடங்கள் இருக்கின்றன. ஒரு வர்ம மருத்துவத்தினுடைய தத்துவத்தில், வர்ம மருத்துவத்தினுடைய தத்துவ வரிசையில் சக்தி மையங்கள், ஆதார மையங்கள் ஆறு என்று மருத்துவம் ஓரிடத்தில் குறிப்பிடுகிறது. சித்த மருத்துவத்திற்கும் யோக மருத்துவத்திற்கும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு கூட இத்தகைய ஆதாரங்கள் உண்டு. ஆதார மையங்கள் என்று குறிப்பிடுகிற ஆறு மையங்கள் எல்லா தத்துவங்களிலும் இருக்கின்றன.

இந்த ஆதார மையங்கள் ஒரு வேலையைச் செய்கிறது. அவை சக்கரங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன. அடிப்படை சக்கரம். இதை மூலாதாரம் என்று சுவாதிஷ்டானம் என்று நாம் வழக்கமாக மருத்துவம் சார்ந்து மரபு சார்ந்து பயணிக்கிற எல்லா மருத்துவ புத்தகங்களிலும் இந்த மையங்களை பற்றி படித்திருப்போம். சுவாதிஷ்டானம் துவங்கி மூலாதாரம் துவங்கி சகஸ்காரம் வரை இருக்கிற ஆறு மையங்களைப் பற்றி மருத்துவம் பேசுகிறது. வர்ம மருத்துவமும் அவற்றைப் பற்றிய குறிப்புகளை வைத்திருக்கிறது.

தசை இயக்கம், உடல்கட்டு என்று ஒரு பெரும்பகுதியை வர்ம மருத்துவம் வைத்திருக்கிறது. ஏனென்றால் வர்ம மருத்துவம் என்று இந்த சமூகம் கருதி வைத்திருக்கிற ஒரு பெரிய பகுதி தாக்கும் முறை, தடுக்கும் முறை என்று எளிய மனிதனுக்கும் வர்ம மருத்துவம் என்றால் தாக்குவதும் தடுப்பதும் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு சமூகப் பார்வை. அது சரியா தவறா என்பது அல்ல இப்போது நாம் பேசுகிற செய்தி. இது ஒரு தளம்.

நாம் உடல் கட்டை, உடலமைப்பை, தசைகளின் செயல்பாடை, சதைகளின் செயல்பாடை, நரம்பு மண்டலத்தின் செயல்பாடை எவ்வாறு பார்த்து வைத்திருக்கிறோம், படித்து வைத்திருக்கிறோம். உண்மையிலேயே வர்ம மருத்துவம் அதை எவ்வாறு பார்த்து வைத்திருக்கிறது? படித்து வைத்திருக்கிறது? என்று நான் பிரித்துப் பார்ப்பதற்கு ஒரு பெரும் வாய்ப்பை இந்த மருத்துவம் உள்ளே வைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் கூட நாம் ஆய்வு செய்து பார்க்கவேண்டும், உரையாடிப் பார்க்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு குறிப்பை நான் படித்தேன். வர்மக்கலை என்கிற ஒரு சிறிய நூல் குறிப்பில் (யாழ்ப்பாணத்திலிருந்து வந்த புத்தகம்) வர்ம தத்துவத்தில் சொல்லப்படுகிற வாயுக்கள் பத்து. பத்து வாயுக்களுக்குள் இருக்கிற பெயர்களைப் பற்றி கூற விரும்பவில்லை. ஒரு குறிப்பிட்ட தளத்தை விவரிப்பதற்காக இந்த பகுதியை தொட்டு உங்களுக்குள் உரையாட விரும்புகிறேன். 

வாயுக்கள் பத்தில் அபான வாயு என்கிற ஒரு வாயு இருக்கிறது. இந்த அபானன் வெளி நோக்கி தள்ளும் தன்மை உடையது என்று அதைப் பற்றிய குறிப்பு. உடலுக்குள் இருக்கிற ஒன்றை வெளிநோக்கி தள்ளுவதற்கு அபானனினுடைய பங்கு முதன்மையானது என்பது வாயுக்களினுடைய குறிப்பை படிக்கும்போது நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு பெண்மணிக்கு முறையான மாதவிலக்கும் முறையான சுகப்பிரசவ குழந்தை பிறப்பும் சரியாக நிகழ்வதற்கு அந்தப் பெண்மணிக்கு அபான வாயுவினுடைய இயக்கம் செம்மையாக இருக்கிற போது மட்டுமே சாத்தியம் என்று அந்த குறிப்பை நான் படித்தேன். பிராண வாயு, அபானவாயு, உதான வாயு இப்படியான ஒவ்வொரு வாயுவிற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. ஒரு தரம் இருக்கிறது என்கிற அடிப்படையில் அந்த குறிப்பு நிறைய செய்திகளை வைத்திருக்கிறது.

இன்று சமகாலத்தில் நாம் தேடுகிற நவீன மருத்துவத்தோடு கிடைத்த அனுபவங்களை வைத்து பார்க்கிறபோது பெண்மணிகளுக்கு இயல்பான குழந்தை பிறப்பு என்பது குறைந்திருக்கிறது. பெரும்பாலும் அறுவை சிகிச்சை பரிந்துரை பெற்றவர்களாக மாறிப் போகின்றனர். அந்த வகையில் இந்த குறிப்போடு ஒப்பிட்டு பார்க்கிற போது அபான வாயுவினுடைய பலம், இயக்கம் முறையாக இருக்கும் என்றால் நவீன காலத்துப் பெண்களுக்கும் கூட சுகப்பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற ஒரு தளத்தை, வாயுக்கள் பற்றிய குறிப்பை நான் படித்து பார்ப்பதன் வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என்கிற தளத்தையும் நாம் இந்த வர்ம மருத்துவம் குறித்த உரையாடலில் பார்க்க முடியும்.

இப்படி ஒவ்வொரு தத்துவ தளத்திற்குள்ளும் வர்ம மருத்துவம் அதற்கே உரிய குறிப்புகளையும் சிறந்த தன்மைகளையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது என்கிற ஒரு பெரும் களம் இருக்கிறது. இவற்றையெல்லாம் தொகுக்கிற, ஆவணப்படுத்துகிற நோக்கத்தில் இந்த உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இது ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு மனிதனினுடைய உடல்நலத்தில் நின்றுவிடுவது அல்ல. ஒரு மனிதனினுடைய துயரத்தை உடலளவில் மட்டும் தீர்த்துக் கொள்கிற நோக்கத்தோடு இது இயங்குவது அல்ல. அல்லது அப்படி இயங்குகிறது, இயங்கவில்லை என்று விமர்சிப்பதும் இந்த ஆய்வின் நோக்கம் அல்ல.

இந்த ஆய்வின் நோக்கம் இந்த வர்ம மருத்துவம் தனக்குள் வைத்திருக்கிற எல்லாவிதமான குறிப்புகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிற தன்மையோடு முயற்சி செய்கிற ஒரு ஆய்வு அரங்கமாக ஆய்வு குழுமமாக நாம் செய்து பார்க்கவேண்டும், விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த வகையில் தொடர்ந்து வேறுவேறு தலைப்புகளில் இந்த தொடர் உரையாடல் இந்த ஆய்வரங்கம் நிகழ இருக்கிறது.

ஒரு சுருக்கமான அறிமுகத்தோடு இந்த ஆய்வு துவங்குகிறது. தொடர்ந்து நாம் வர்ம மருத்துவத்திற்குள் இருக்கிற தத்துவங்கள் சொல்கிற ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், சுவை உணர்வு, மன உணர்வு, கோஷங்கள், வாயுக்கள், தசை சதை உடற்கட்டு இப்படி என்னென்ன தளங்களில் ஒரு மருத்துவம் தனக்கே உரிய சிறப்பு அம்சங்களை வைத்து இருக்கிறது என்கிற பெரும் பகுதிகளை ஒருங்கிணைத்து பேசிப் பார்க்கிற, ஆய்வு செய்து பார்க்கிற தன்மையோடு தொடர்ந்து பயணிக்க இருக்கிறோம்.

தொடர்ந்து பேசுவோம்…

ALSO READ: VARMA / வர்ம மருத்துவம் / INTRODUCTION

ALSO READ: VARMA / வர்ம மருத்துவம் - பகுதி -2

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...