Monday, June 22, 2020

உணவு என்பது என்ன?

WHAT IS FOOD
உணவு என்பது என்ன?

    உள்ளபடியே சென்ற தலைப்பிற்கு முன்பு இதைச் சொல்லியிருக்க வேண்டும்,”உணவு என்பது என்ன?” என்பதை. உணவு பற்றி இதுவரை நிறைய செய்திகளை சேகரித்து வைத்திருப்பதாலும் முடிவு செய்து செயல்படுவதாலும் உணவு என்பது என்ன என்பதை விட எப்படியெல்லாம் உண்கிறோம் என்பது குறித்து முதலில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.    food in current lifestyle
    நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் புலன்கள் கண்,காது, மூக்கு,நாக்கு,தோல் வழியாக உங்களுக்குள் உணவு சென்று நலப்படுத்துகிறது.வளப்படுத்துகிறது. உங்களுக்குப் பொருந்தாத உணவு உங்களை சோர்வடையச் செய்கிறது.நோயுறச் செய்கிறது. உங்கள் புலன்கள் அனைத்தும் உணவிற்கான வாசற்படிகளே.உள்ளே செல்கிற உணவு செரிக்கப்பட்டு நலம் தருவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. உங்களின் உடல் மட்டும் உளவியல் சார்ந்த எல்லாத் தளர்வுகளுக்கும் இறுக்கங்களுக்கும் உணவு பெரும் பங்கு வகிப்பதாக நவீன ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. இதில் “உங்கள் அல்லது நீங்கள் என்கிற சொல் கவனிக்கத்தக்கது". ஒரு உணவு உங்களுக்குப் பொருந்துகிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பது நீங்கள்தான். சத்தான உணவு, சமச்சீர் உணவு, தனிச்சீர் உணவு, அமில உணவு, கார உணவு,ஆர்கானிக் உணவு, விலையுயர்ந்த உணவு,விலை குறைந்த உணவு போன்ற உணவு வரையறைகள் இருந்தாலும் எந்த உணவு வரையறையும் அனைவருக்கும் பொருந்துவதில்லை.


                            மேலும் ஒருவருக்கு அனைத்து உணவு வரையறையும் பொருந்தாது.சத்தான உணவு என்று ஆய்வு செய்து அறிவிக்கப்பட்ட ஒரு உணவு மோசமான எதிர் விளைவுகளை உடலுக்குள் ஏற்படுத்தத்தான் செய்கிறது.ஆரோக்கிய அளவுகளுக்குப் பொருந்தாத நிராகரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் சாலையோர மனிதர்கள் கூட உயிர் வாழத்தான் செய்கின்றனர். இங்கே உணவு என்பது என்ன?, உணவை செரிமானம் செய்ய வைப்பது யார், உணவை செரித்து ஆற்றலாக மாற்றிக் கொள்வது என்பது குறித்து ஆழமான,நுட்பமான ஆய்வு அவசியம். இயற்கை தீர்மானித்துள்ள உணவு சங்கிலி உணவு முறைகளை தெளிவாக வைத்திருக்கிறது என்று நான் புரிந்து கொள்கிறேன்.விலங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட உணவு மாறுவதேயில்லை.எல்லா விலங்குகளும் தமக்கான உணவு எது என்பது பற்றி தெளிவான உயிரியக்கத் தன்மையோடு இருக்கின்றன.ஒரு புள்ளிமானுக்கு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து ஏமாற்றி விட முடியாது.ஒரு கோழிக்கு நெல் தவிட்டை சரியாக அடையாளம் காணமுடியும்.கிளி நெல்லுக்காக ஜோசியம் சொல்லுமே தவிர காசிற்காக சொல்வதில்லை.புலி எவ்வளவு பசித்திருந்தாலும் புல்லைத் தின்னாது என்பது நீங்கள் அறிந்த பழமொழி. இவ்வாறு ஒவ்வொரு விலங்கினமும், பறவையினமும், தாவரயினமும், மீன்களும் நுண்ணியிரிகளும் கூட தமக்கான உணவை தாமே தேடி கண்டு கொள்ளும் ஆற்றலோடு இருக்கின்றன. மனிதனைத் தவிர்த்த மற்ற உயிரினங்களில் இயக்கமானது தமக்கு என்ன தேவையாக இருக்கிறதோ அதை உணவாகக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன.


                                நவீன கூற்றுப்படி எந்தச் சத்து தம் இயல்பிற்கு தேவைப்படுகிறதோ அந்தக் குறிப்பிட்டச் சத்துள்ள உணவை கண்டு, தேர்ந்து உட்கொள்ளுகின்றன. இதன் மூலம் இந்த பிரபஞ்ச இயக்கத்தில் தத்தமது பங்களிப்பை செய்து கொண்டே வருகின்றன.மனிதனுக்கு இந்தச் செயல்பாடு முற்றிலும் சிக்கலானது. தான் யார் என்பதும் தனக்குள் என்ன பற்றாக்குறையாக இருக்கிறது என்பதையும் கண்டு கொள்வது பெரிய சவால்.நடப்பு பொருளாதார ஓட்டத்தில் இந்த சவால் இன்னும் அடர்த்தியாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய உணவை, தமக்கு என்ன தேவையாக இருக்கிறது என்பதை கண்டு தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும் என்கிற முன்மொழிவை இயற்கை தந்துள்ளது.மனிதனைத் தவிர்த்து மற்ற அனைத்து உயிரிகளும் இந்த இயற்கையின் முன்மொழிவைப் பின்பற்றி தம்மை வளர்த்துக் கொள்கின்றன. மனிதனுக்கு இதைப் புரிந்து கொள்ள தடையாக தனித்தனியான பல முன் முடிவுகள் இருக்கின்றன.அத்தகைய முன் முடிவுகளின் கலவையில் வந்ததுதான் விதவிதமான உணவு வரையறைகள்.உங்களுக்கு ஒரு உணவு வரையறை சொல்லப்படும்போது கவனித்துக் கொள்ளுங்கள்,உங்களுக்குள் இருக்கிற தேவையை, வரையறுத்து தரப்பட்ட உணவு நிவர்த்தி செய்யுமா என்று தியானியுங்கள். உங்களை கவனியுங்கள். 


                            உங்கள் உள்ளுறுப்புகளின் பற்றாக்குறையை கவனியுங்கள். அவற்றின் தேவையை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் உண்பதற்கும் உங்கள் செவித்திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. கண்கள் தெளிவாக பார்ப்பதற்கும், செரிமானம் நன்றாக இயங்குவதற்கும் தொடர்பு இருக்கிறது. உங்கள் குழந்தையின் கருத்தரிப்பு உங்கள் உணவோடு இணைந்ததுதான். எந்த உணவை எனக்குத் தேவை என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ அது “நீங்களும்” உங்கள் “தேவையும்” சேர்ந்து எடுத்த தேர்வாக இருக்கட்டும். பொது உணவைப் பின்பற்றாதீர்கள். பொது உணவு வரையறையை ஆய்வு செய்து தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணவு தேவைப்படலாம். அதை தீர்மானிப்பது நீங்களாக இருக்கட்டும். “நீங்கள்” என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்தனியாக இருக்கிற தேவையாகும். “உங்கள் தேவையிலிருந்து தேர்வு செய்யும் உணவே உங்களுக்கான உணவு”.சரியான உணவு என்பதும் கூட அதுதான்.

No comments:

Post a Comment

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்             நா ம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொ...