![]() |
child |
குழந்தை
ALSO READ:மருத்துவரின் பண்பு
ஒரு குழந்தை நன்றாக வளர வேண்டும் என்கிற பார்வை அந்தக்குழந்தையின் உடல் மனம் வளர்ச்சி சார்ந்த பார்வையாக இருக்கிறது. இந்த சமூகம் முழுவதும் குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் ஒரு ஒற்றுமை நிலவுவதை பார்க்க முடிகிறது. அந்த ஒற்றுமையின் வழியாக விசாரிக்கிற போது ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது அந்தக் குழந்தை தாயின் கர்ப்பப்பையில் வளர்கிற காலம் என்கிற ஒரு பகுதியாகவும் பின்பு அந்தக் குழந்தை இந்த உலகிற்கு வந்ததற்குப் பிறகு வளர்ச்சி அடைகிற ஒரு குறிப்பிட்ட வயது வரை நிகழ்கிற வளர்ச்சி மாற்றங்கள் என்பது ஒரு பகுதியாகவும் அந்தக் குழந்தை சமூகத்தோடு வாழ்வதற்கு பழகிக் கொள்கிற ஒரு பகுதியாகவும் அந்த குழந்தை தனது வயது ஒத்த குழந்தைகளோடு இணைந்து விளையாடுகிற உரையாடுகிற வளர்கிற செயல்பாடுகளை ஒரு பகுதியாகவுமாக குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை நலம் என்பது பார்க்கப்படுகிறது. இது நடைமுறையில் இருக்கிற பார்வை. இந்தப் பார்வையை குழந்தை நலம் மீது அக்கறையோடு பார்க்கிறபோது விசாரிக்கிறபோது இந்தப் பார்வை குழந்தையினுடைய வளர்ச்சி பற்றி ஆய்வு செய்கிற பார்வை அல்ல. ஒரு முழுமையான பார்வை அல்ல. ஒரு குழந்தையின் உடைய உடல்சார்ந்த உடற்கூறு சார்ந்த மனம் சார்ந்து மனம் இயங்குகிற தளம் சார்ந்து இருக்கிற அணுகுமுறை என்பது போதுமானதல்ல. இந்த சமூகம் முழுவதும் இந்த இரண்டு அணுகுமுறையை தாண்டி வேறு அணுகுமுறைகளை கை கொள்வதில்லை. ஒரு பெற்றோருக்கு ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது சமூக அங்கீகாரம் சார்ந்த பாடமாகவே போதிக்கப்படுகிறது. ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு அறிவை திணிக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குழந்தையின் மீது ஆர்வம் கொண்ட ஒருவர் இந்தக் குழந்தை சமுதாயத்தில் தன்னளவில் பாதுகாப்பு நிலையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அதற்கான பரிந்துரைகளை அவர் அந்த குழந்தைக்கு செய்ய வேண்டும் என்று வழி காட்டப்படுகிறது. இவ்வளவுதான் இந்தச் சமூகம் சமகாலத்தில் குழந்தைகள் மீது வைத்திருக்கிற மதிப்பு ,மதிப்பீடு. இந்தச் சமூகம் ஒரு பெற்றோர், ஒரு குழந்தை வளர்ப்பாளர், ஒரு ஆசிரியர் குழந்தைகளை தனக்கு கொடுக்கப் பட்டிருக்கிற இலக்குகளிலிருந்து மட்டும் தனக்கு கொடுக்கப் பட்டிருக்கிற கௌரவங்களிலிருந்து மட்டும் தனக்கு கொடுக்கப் பட்டிருக்கிற வரையறைகளில் இருந்து மட்டும் பார்க்கிற மனோபாவம் சமூகத்தில் நியாயமானதாக இருக்கிறது. நியாயமானதாக போதிக்கப்படுகிறது. அது சமூக அளவில் நியாயமாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சமூகத்திற்கு ஒரு குழந்தையை ஒரு மனிதனை எவ்வாறு இயக்க வேண்டும், எவ்வாறு ஒரு மனிதன் இயங்க வேண்டும் என்பதில் ஆழமான நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் அந்தச் சமூகம் எந்த ஒரு சமூக வாழ்க்கை முறையும் ஒரு குழந்தையையும் தீர்மானிக்கிறது. அதில் வெற்றி பெறுவதற்கு சதா போராடிக் கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் வெற்றியும் அடைகிறது. சமூகம் தீர்மானித்து வைத்திருக்கிற சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கிற சமூகம் வழிகாட்டுகிற எந்த ஒரு வழிகாட்டலும் குழந்தையினுடைய அக உணர்வில் குழந்தையினுடைய வாழ்வியல் முறையில் சமூக ரீதியாக குழந்தையை தயார்படுத்துவதாகவே அமைவதை பார்க்க முடிகிறது. அவ்வாறு அமைய வேண்டும் என்பதுதான் சமூகத்தின் நோக்கம்.
ALSO READ:நோய் எங்கு ஆரம்பமாகிறது?
ஒரு குழந்தை இந்த சமூகத்தோடு எவ்வாறு இணங்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் வழிகாட்டுகிறார்கள். ஒரு குழந்தை இந்த சமூகத்தில் எவ்வாறு மதிப்பெண் பெற வேண்டும் என்றுதான் ஆசிரியர்கள் உதவி செய்கிறார்கள். ஒரு குழந்தை இந்த சமூகத்தில் எவ்வாறு உறவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தான் குழந்தை மீது அக்கறை கொண்ட ஒரு சமூக ஆர்வலர் குழந்தை மீது அக்கறை கொண்ட ஒரு ஆய்வாளர் குழந்தைக்கு உதவி செய்கிறார். ஒரு குழந்தை சமூகத்தோடு வாழ்வதற்கும் சமூகத்தோடு உரையாடுவதற்கும் சமூகத்தோடு உறவு பாராட்டுவதற்குமாக மட்டுமே இந்த உலகில் வருகிறது என்கிற ஒரு பொதுக்கருத்தை மீண்டும் மீண்டும் சமூகம் தன் நடைமுறை வழியாக திணித்துக் கொண்டே இருக்கிறது. அவை முழுக்க குழந்தைகளின் அக உலகத்திலிருந்து நேர் எதிரானது. குழந்தையை புரிந்து கொள்ள சற்று நாம் நகர வேண்டி இருக்கிறது. குழந்தையை உள் வாங்கிக் கொள்ள சற்று நாம் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. குழந்தைகளோடு இணக்கமான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு சற்று மெனக்கெட வேண்டியிருக்கிறது. இந்த அணுகுமுறை இந்த மெனக்கெடல் மட்டும்தான் குழந்தைகள் பற்றிய உண்மையான அக உலகம் குறித்து உண்மையான மனவடிவம் குறித்து குழந்தைகள் வளர்ச்சி என்பது எதை நோக்கி நகர்கிறது என்பது குறித்து உங்களால் கண்டுபிடிக்க உதவி செய்யும். இந்த உரையாடல் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். இந்த உரையாடல் குழந்தை நலம் குறித்து விசாரிக்கப்படுகிற விவாதிக்கப்படுகிற எல்லா தளங்களிலிருந்தும் சற்று வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் சமூகம் முழுவதும் குழந்தை பற்றி ஒரு நோக்கத்தோடு இயங்குகிற, வரையறுத்து வைத்திருக்கிற கோட்பாடுகள் நிரம்பி வழிகின்றன. அது குழந்தையின் மீது அக்கறை கொண்டு இயங்குகிற மற்றவருக்கு பெற்றோருக்கு நியாயமானது என்ற வலியுறுத்தல்கள் இருக்கின்றன. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு குழந்தையினுடைய நலம் குறித்து இயங்க வேண்டிய பார்க்க வேண்டிய பொறுப்பு என்பது குழந்தைக்கு நியாயமானதாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
ALSO READ:மருத்துவத்தின் நோக்கம்
ஒரு குழந்தை எப்போது எழுகிறது, எப்போது உணவு உண்கிறது, எப்போது உறங்குகிறது என்பது அல்ல அதனுடைய வளர்ச்சியினுடைய தன்மை. அது எல்லா மனிதர்களுக்கும் எல்லா விலங்குகளுக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் பொருத்தமான ஒன்று. அது ஒரு இயந்திர தன்மை. இயற்கையில் நடக்கிற இயங்குநிலை. பிரபஞ்சத்தில் பிறக்கிற பிரபஞ்சத்தில் இருக்கிற ஒவ்வொரு ஜீவராசிக்கும் இப்படியான ஒருவரை என்பது பிரபஞ்சம் வழங்கி இருக்கிறது. அந்தவகையில் இருக்கிற வரையறைகளை குழந்தைக்கு மட்டும் பிரத்தியேகமாக சிறப்பாக இருப்பதாக கருதி கொண்டு அவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களுக்கு உதவி செய்யவும் எத்தனிப்பது முயற்சி செய்வது என்பது போதுமானதல்ல. ஒரு குழந்தையை சற்று அகலம் கொண்ட பார்வையோடு நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. சற்று ஆழமான மன உணர்வோடு அணுக வேண்டி இருக்கிறது. ஒரு குழந்தையினுடைய வளர்ச்சி என்பது மேம்போக்கானது அல்ல. சமூகம் எப்போதும் குழந்தைகளை மேம்போக்கான மனநிலையிலேயே பார்க்கிறது. சமூகம் ஒரு குழந்தையை எப்போதும் மேம்போக்கான மனநிலையோடு அணுக முயற்சிக்கிறது. ஒரு நாள் முழுவதும் ஒரு மாதம் முழுவதும் ஒரு வருடம் முழுவதும் ஒரு குழந்தைக்கு எம்மாதிரியான கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று ஒரு ஆசிரியருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படுகிற வழிகாட்டுதல் என்பது பள்ளி அளவில் கல்லூரி அளவில் பல்கலைக்கழகங்கள் அளவில் குழந்தைகள் மீது வரையறுத்துச் சொல்லப்படுகிற சமூக வரையறைகளாக இருக்கின்றன. ஒரு மனிதன் தாம் மனிதனாக சமூகத்தில் இயங்குவதற்கு முன்பு பள்ளிக்கூடங்கள் பாடசாலைகள் அவனுக்கு சமூகத்தில் அவன் எவ்வாறு பழக வேண்டும் சமூகத்தில் அவன் எவ்வாறு வளர வேண்டும் சமூகத்தில் தன்னை எவ்வாறு பிணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியிலான அணுகுமுறைகளை வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. என்னைப் பொறுத்த அளவில் பள்ளிக்கூடங்களின் பணி என்பது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானதாக கருதுகிறேன். ஒரு பள்ளிக்கூடம் சமூகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை விடவும் ஒரு குழந்தைக்கு போதிக்க வேண்டிய செய்திகள் போதிக்க வேண்டிய பகுதிகள் போதிக்க வேண்டிய நுட்பங்கள் நிறைய இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு குழந்தை தனது படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளவும் தனக்கான உணர்வுள்ள பகுதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் தன் உயிராற்றலை ஆரோக்கியத்தை அடர்த்தியாக கொள்ளவும் பள்ளிக்கூடங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் பள்ளிக்கூடங்களின் பணி என்பது இந்த நிலையில் இருந்து நகர்ந்து நகர்ந்து இன்று சமூகத்தில் ஒரு குழந்தை எவ்வாறு வெற்றி பெற வேண்டும்; சமூகத்தில் ஒரு குழந்தை எவ்வாறு வளர வேண்டும்;சமூகத்தில் ஒரு குழந்தை எவ்வாறு வாழவேண்டும்; சமூகத்தில் எவ்வாறு உரையாட வேண்டும், உறவு கொள்ள வேண்டும் என்கிற தலங்களில் நகர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. பள்ளிக்கூடங்கள் என்ன வரையறைகளை இன்று குழந்தைகளுக்கு கற்பித்து கொடுக்கின்றனவோ பள்ளிக்கூடங்கள் எந்த பரிந்துரைகளை இன்று குழந்தைகளுக்கு வரையறுத்துக் கொடுக்கின்றனவோ அந்த பரிந்துரைகளையும்அந்த கற்றல் முறைகளையும் மட்டுமே குழந்தைகளுடைய வளர்ச்சியாக பெற்றோர்களும் நம்புகிற கருதுகிற பின்பற்றுகிற நிலை என்பது பரவலாகி வருவதை பார்க்க முடிகிறது.
ALSO READ:EDUCATION
நான்கு வயதில் ஒரு குழந்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் முடிவு செய்வதை விடவும் பள்ளிக்கூடங்கள் முடிவு செய்கின்றன. மூன்று வயதில் ஒரு குழந்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பள்ளிக்கூடங்கள் முடிவு செய்கின்றன. இரண்டு வயதில் ஒரு வயதில் கர்ப்பகாலத்தில் ஒரு குழந்தையை வளர்க்கிற தாய் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சமூகமும் பள்ளிக்கூடமும் தீர்மானிக்கிற ஒரு நிலை நோக்கி சமூகம் இன்று வளர்ந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பற்றி புரிந்து கொள்வது என்பது அவசியமானதாக நான் கருதுகிறேன். நான்கு வயதிற்கு முன்னதாக ஒரு குழந்தையை வளர்ப்பதில் பள்ளிக்கூடங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மூன்று வயது ,இரண்டு வயது ,ஒரு வயது குழந்தைக்கு என்ன மாதிரியான உணவை கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் பரிந்துரைக்கப் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன். அது பெற்றோரின் பொறுப்பு. அது சமூகத்தின் பொறுப்பு. பள்ளிக்கூடமும் மருத்துவமனைகளும் தலையிட முடியாத சமூக பகுதிகள் இருக்கின்றன. ஒரு உயிர்ப்பான உடல் நலத்தை மேம்படுத்திக்கொள்கிற, படைப்பாற்றலை மேம் படுத்திக் கொள்கிற, உறவுகளோடு இணக்கம் பாராட்டுதலை மேம்படுத்திக் கொள்கிற, வீட்டுமுறை வாழ்க்கையை ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் என்றால் அந்த குழந்தை மிகுந்த அக்கறை கொண்ட குழந்தையாக மிகுந்த புரிதல் கொண்ட குழந்தையாக உருவாக முடியும். இன்றைய நவீன ஆய்வு முறைகளும் நவீன கல்வி முறையும் இவற்றை குறைவாக மதிப்பீடு செய்கின்றன. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தொடர்ந்து தலையிட்டுக் கொண்டே இருக்கிற போக்குகளை பார்க்க முடிகிறது.
ஒரு வயது குழந்தை ஒரு வயதிற்கு முன்னதாக வளர்கிற, வளர்ச்சியில் இருக்கிற ஒரு குழந்தை என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை பள்ளிக் கூடங்களும் மருத்துவமனைகளும் தீர்மானிக்கின்ற போக்கு அதிகமாகிறது. அதிகமாக இருக்கிறது. மூன்று வயது குழந்தை எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதை பள்ளிக்கூடங்கள் தீர்மானிக்கின்றன. பள்ளிக்கூடங்கள் தீர்மானிப்பதை இடைவிடாது பின்பற்றுகின்ற மனோநிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர். இந்த அணுகுமுறை குழந்தைகளுக்கு எதிரானது, குழந்தைகளின் மீது செலுத்தப்படுகிற வன்முறை. ஒரு குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பெற்றோர் கண்டுபிடிக்க வேண்டியதாக இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் படைப்பாற்றலையும் குழந்தைகளினுடைய ஆரோக்கியத்தையும் குழந்தைகளினுடைய உணர்வுள்ள பகுதிகளையும் வளர்த்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்து நிலை மாறி நினைவாற்றலையும் உணர்ச்சிவச படலையும் வெற்றி கொள்ளலையும் கல்விக்கான இலக்காக தீர்மானித்து வைத்திருக்கின்றன. இது குழந்தைக்கு எதிரானது மட்டுமல்ல மனித சமூகத்திற்கே கூட எதிரானதாக மாறும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இது குழந்தை வளர்ப்பில் போதுமானது அல்ல. குழந்தை வளர்ப்பில் தேவைப்படுவது இதுவல்ல.
கலீல் ஜிப்ரான் என்கிற ஒரு கவிஞன் ஒரு கவிதை வரிகளில் குறிப்பிடுகிறார்,
"குழந்தைகள் உங்கள் வழியாக இந்த உலகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் உங்களுக்காக வருவதில்லை".கலீல் ஜிப்ரான் அனேகமாக பெற்றோர்களைப் பார்த்து, சமூகத்தை பார்த்து சொல்லியிருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். பெற்றோர்கள் வழியாக இந்த சமூகத்திற்கு குழந்தைகள் வருகிறார்கள் என்று கலீல் ஜிப்ரான் குறிப்பிடுகிறார். ஆனால் இந்தச் சமூகம் பெற்றோர்களுக்காக குழந்தைகள் வருவதாக அந்தக் குழந்தையை புரிந்து கொள்கின்றனர். எனக்காகவே நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று குழந்தைகளோடு போராடுவதை கலீல் ஜிப்ரான் சுட்டிக்காட்டுகிறார். கலீல் ஜிப்ரானினுடைய குழந்தைகள் இந்த உலகத்திற்கு பெற்றோர்கள் வழியாக வருகிறார்கள் பெற்றோர்களுக்காக வருவதில்லை என்கிற வாக்கியம் கவித்துவமானது மட்டுமல்ல மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த சமூகம் பிடித்து நைத்திருக்கிற குழந்தைகள் மீதான அத்தனை மதிப்பீடுகளையும் போட்டு உடைக்க வேண்டியதாக இருக்கிறது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்த கவிதையை வலியுறுத்துகிறது. அங்க வலியுறுத்தல் நியாயமானதாக நான் உணர்கிறேன். குழந்தைகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டுமென்று நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று நிறைய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இவை எல்லாம் குழந்தைகள் மீது குழந்தைகளை எப்படியாவது தமக்கு இணக்கமாக தமக்கு வாகாக தாம் கையாளுகிற ஒரு பொருள் போல இயந்திரம் போல மாற்றி விட வேண்டும் என்றுகருதுகிற மனோபாவம்.
ஒரு குழந்தையை ஒரு பெற்றோர் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்?. அந்தக் கேள்வி அடிப்படையானது. ஒரு குழந்தையை ஒரு சமூகம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்?. சமூகத்தைப் பொறுத்தவரை புரிந்து கொள்ளுதல் என்பது, பெற்றோரைப் பொறுத்தவரை புரிந்து கொள்ளுதல் என்பது ஒன்றாகவே இருக்கிறது. புரிந்து கொள்ளுதலின் நோக்கம் என்பது ஒன்றாகவே இருக்கிறது. ஒரு குழந்தையை ஒரு பெற்றோரும் ஒரு குழந்தையை ஒரு பள்ளிக்கூடமும் ஒரு குழந்தையை ஒரு சமூகமும் புரிந்து கொள்வதற்கு ஒரே நோக்கம்தான் ஒரு அந்த குழந்தையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்காக. ஏன் ஒரு குழந்தையை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற துடிப்பு எழுகிறது நம்முள்?. ஒரு குழந்தையை புரிந்துகொள்ளுதல் வழியாக அந்த குழந்தையை எளிமையாக கையாள முடியும். ஒரு குழந்தை எப்போது அழுகிறது என்று தெரிந்தால் அந்த குழந்தைக்கு அப்போது அழுகையை நிறுத்துவதற்கு நீங்கள் ஏதாவது செய்து விடுவீர்கள். ஒரு குழந்தை எப்போது ஓடும் என்று தெரிந்தால் அப்போது அந்த குழந்தையின் காலை கட்டிப் போட வசதியாக நீங்கள் தயாராகி விடுவீர்கள். குழந்தை எப்போது நடக்கும் என்பதை நீங்கள் ஆய்வு செய்வதே அந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு கால்களில் விலங்குகளை மாற்றிவிட வேண்டும் என்பதற்காகத்தான். உங்கள் தேடலும் உங்கள் புரிதல் பற்றிய அக்கறையும் தடையை நோக்கி நெருக்கடியை நோக்கியே நகர்கிறது. குழந்தையை விசாலமாக விரைவாக இயங்குவது குறித்து புரிந்து கொள்வது குறித்து நகர்வதில்லை, நடப்பதில்லை. ஒரு முழு சமூகமும் இந்த மனோபாவத்தில் இருப்பது நல்லதல்ல. குழந்தைகளினுடைய நலம் என்பது இப்படி ஆனது அல்ல. ஒரு குழந்தையை புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் ஒருவேளை புரிந்து கொள்ள முடியும் என்றால் அது குழந்தையாக இருக்காது. அது இயந்திரமாக மாறி விடும் அல்லது சமூகம் வடித்து வைத்திருக்கிற, சமூகம் வரையறுத்து வைத்திருக்கிற ஒரு மனிதனாக, இயந்திர தன்மை கொண்ட மனிதனாக அந்த குழந்தை மாறிவிடும். குழந்தையை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்பது என்னுடைய முன்வைப்பு.
ஏன் குழந்தையை புரிந்து கொள்ள முடியாது என்றால் குழந்தைகள் அறியாமையில் இயங்குகிறார்கள். அறியாமை இருக்கிற ஒரு குழந்தைக்கு ஒவ்வொன்றும் ஆச்சரியமானது. ஒவ்வொன்றும் புதிரானது. ஒவ்வொன்றும் மேன்மையானது. அது காண்கிற பார்க்கிற பேசுகிற உரையாடுகிற உறவு கொள்கிற ஒவ்வொரு செய்தியும் புனிதமானது. ஒரு குழந்தைக்கு தான் பார்க்கிற கல்லுக்கும் தான் இடரி விளையாடுகிற வைரத்திற்கும் எந்த வேறுபாடும் தெரியாது .தன் அப்பாவிற்கும் தன் வீட்டில் ஊர்கிற எறும்பிற்கும் எந்த வேறுபாடும் தெரியாது. இது குழந்தைக்கு மட்டும் தான் சாத்தியம். குழந்தைகள் எப்போதும் சிந்தனையிலிருந்து இயங்குவதே இல்லை.குழந்தைக்கு சிந்திக்கவே தெரியாது. சிந்திக்க வலியுறுத்துகிற வற்புறுத்துகிற நோக்கம் சமூகம் சார்ந்தது. ஒரு குழந்தை முழுக்க முழுக்க அறியாமையிலிருந்து இயங்குகிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அறியாமையிலிருந்து இயங்குகிற ஒரு குழந்தையை எவ்வாறு புரிந்து கொள்வது? உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் குழந்தையை புரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தில் இயங்குகிற போது அறியாமையையும் ஒரு அறிவாக கணக்கில் கொள்கிற ஆபத்தில் சிக்குவீர்கள் என நான் கருதுகிறேன். குழந்தை அறியாமையில் இருக்கிறது. எனவே அறியாமையில் இருக்கிற தன்மையிலிருந்து நம் குழந்தையை அணுக வேண்டும் என்று சமூகம் உங்களுக்கு வழிகாட்ட கூடும். அது இன்னும் சிக்கலானது. எப்போதும் குழந்தைகளை உங்களால் வெல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் அறிவு தளத்திலிருந்து இயங்குகிறீர்கள். குழந்தைகள் அறியாமையிலிருந்து இயங்குகிறார்கள். எந்த நேரத்தில் உங்களால் அறிவு தளத்திலிருந்து அறியாமைக்குள் தாவிக்குதிக்க முடியுமோ அந்த நேரத்தில் குழந்தையை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்
நீங்களும் குழந்தையும் சந்திக்கிற ஒரு புள்ளி உண்டு என்றால் அது உங்கள் அறிவை கழட்டி வைத்துவிட்டு உங்கள் அறிவை தூக்கி எறிந்துவிட்டு வெறும் அறியாமையில் ஒரு இருட்டு அறையில் இரண்டு கைகளையும் அகலமாக விரித்துக் கொண்டு நடக்கிற நடையில் இருந்து ,அறியாமையின் நிலையிலிருந்து ,குழந்தையை பார்க்க முடியும். இந்த நிலை மிகவும் முக்கியமானது. இந்த புரிதல் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் எப்போதும் அறியாமையிலிருந்தே இயங்குகிறார்கள். குளிக்க வம்பு செய்கிற ஒரு குழந்தை தண்ணீரில் விளையாட உற்சாகமாகவே இருக்கும். உங்களால் புரிந்து கொள்ள முடியாது. முதல் உணவில் ஒரு வடிவ பலகாரத்தை நீங்கள் கொடுத்து இருப்பீர்கள். அடுத்தநாள் அதே வடிவ பலகாரம் அந்த குழந்தைக்கு பிடிக்காது .நீங்கள் வைத்திருக்கிற சித்திரங்களை குழந்தைகள் வேறு கோணத்தில் பார்ப்பார்கள். நீங்கள் அமரச் சொல்கிற நாற்காலியை குழந்தைகள் வேறு ஒன்றாக பயன்படுத்துவார்கள். இவ்வாறு குழந்தைகள் உலகம் அறியாமையை மையமாக வைத்து புதிர்களையும் புனிதங்களையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. இவற்றிலிருந்துதான் குழந்தையினுடைய எதிர்காலம் என்பது குழந்தையினுடைய படைப்பாற்றல் என்பது குழந்தையினுடைய உற்சாகம் என்பது தீர்மானிக்கப்படுகிறது .இயங்குகிறது, செயல்படுகிறது. இவற்றைப் புரிந்து கொள்கிற மனோபாவம் என்பதைவிடவும் இவற்றை ஏற்றுக் கொள்கிறவர்தான் நல்ல பெற்றோராக நல்ல ஆசிரியராக இருக்க முடியும். குழந்தையினுடைய அறியாமையை,குழந்தையினுடைய வெறுமையான பார்வையை குழந்தையினுடைய இயல்பான இணக்கங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிற ஒரு மனோபாவம் மிகச் சிறந்ததாக நான் பார்க்கிறேன். அதைப் பரிந்துரைக்குறியதாக நான் பார்க்கிறேன். எந்த நிபந்தனையும் இல்லாது இருக்கிற ஒரு மனிதன் குழந்தைக்கு மிக பக்கத்தில் போக முடியும். நீங்கள் உங்கள் குழந்தையை பெற்றுக் கொண்ட ஒரு பொருளுக்காக நன்றி பாராட்டாமல் அழைத்து வருவதே இல்லை என்பதை பார்ப்பீர்கள் என்று நான் கருதுகிறேன். ஒருவரை பார்த்தால் அவருக்கு உங்கள் குழந்தை வணக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்பது உங்களின் நிலைப்பாடு. ஒரு கடையில் இருந்து ஒரு பொருளை பெற்றுக் கொண்டவுடன் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சொல்வது உடனடியாக நன்றியை வலியுறுத்துவீர்கள். ஒரு குழந்தை எவ்வாறு நடக்கவேண்டும் எவ்வாறு உட்கார வேண்டும் எவ்வாறு ஓட வேண்டும் எவ்வாறு உறங்க வேண்டும் என்றெல்லாம் கூட நீங்கள் வகுத்து வைத்திருக்கிறீர்கள். இவை அனைத்தும் குழந்தைக்கு எதிரானது .ஒன்றைமுடிவு செய்ய வேண்டும் நீங்கள். குழந்தை சமூகத்திற்காகவா? அல்லது குழந்தைகள் குழந்தைகளுக்கவா?. குழந்தைகள் குழந்தைகளுக்காக என்பதை உங்களால் ஒத்துக்கொள்ள முடிந்தால் நீங்கள் நல்ல பெற்றோர். குழந்தைகள் குழந்தைகளுக்காக என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடிந்தால் நீங்கள் நல்ல ஆசிரியர். குழந்தைகள் குழந்தைக்காக என்பதை நீங்கள் அங்கீகரிக்க முடிந்தால் நீங்கள் நல்ல குழந்தை மீது அக்கறை கொண்ட கொண்டவர்.
சமூகம் இவற்றின் எல்லாவற்றிற்குள்ளும் கேள்வியை வைத்திருக்கிறது. சமூகத்தால் குழந்தைகள் குழந்தைகளுக்காக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள் கடவுளுக்காக, குழந்தைகள் அரசாங்கத்திற்காக, குழந்தைகள் பெற்றோருக்காக, குழந்தைகள் தன் குடும்பத்திற்காக, இவ்வாறு குழந்தைகள் எப்போதும் பிறருக்காக பிற ஒன்றிற்காக,பிற அமைப்பிற்காக என்று வரையறுக்கிற வார்த்து வைத்திருக்கிற சமூக நிலைப்பாடுக்கு மத்தியில் குழந்தையை நீங்கள் குழந்தைகளுக்காக என்று பார்க்கவே முடியாது. அப்படி பார்த்தீர்கள் என்றால் நீங்களும் குழந்தையும் குற்றவாளியாக கருதப்படுவீர்கள். உங்களுக்குள் இந்த சமூகம் குற்ற உணர்வை ஏற்றி வைக்கும். நீங்கள் கேட்கிற எல்லா கேள்விகளும் குழந்தைகளுக்காக என்று நிற்கிற போது எல்லா கேள்விகளையும் எல்லா கேள்விக்கான விடைகளையும் குழந்தைகள் மிக இலகுவாக உங்களுக்கு வழங்குவதை நீங்கள் பார்க்க முடியும். இந்தப் பார்வை என்பது உங்களது நிபந்தனையற்ற தன்மையிலிருந்து ஏற்படுவது. இந்த பதில் என்பது குழந்தைகள் வழங்குகிற அறியாமையிலிருந்து கடத்தப்படுவது. பகிரப்படுவது. இந்த முறை குழந்தைகள் மீதான எல்லாவற்றையும் எல்லா தடைகளையும் எல்லாம் சிதைவுகளையும் நேர் செய்யும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
ALSO READ:குழந்தையின் மொழி
உலகம் முழுவதும் அதிக வன்முறைக்கு உட்படுத்தப்படுகிற வர்க்கமாக குழந்தைகள் வர்க்கம் மாறி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக பாலியல் வன்முறை. இந்தச் சமூகம் தான் ஏற்றி வைத்திருக்கிற எல்லா பாலியல் வன்மங்களையும் குழந்தைகள் மீது திணிக்கத் துவங்கி இருக்கிறது. அதை மறுக்கிற, அதை கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகளை நாம் செய்வதாக நம்பிக் கொண்டே இருக்கிறோம். இது குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற வன்மம் அல்ல; வன்முறை அல்ல; சமூகத்தின் பற்றாக்குறை. இந்த வன்மத்திற்கு எதிராக குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த கல்வியை புகட்டவேண்டும் என்று ஒரு பரிந்துரை வலுவாக முன்வைக்கப்படுகிறது. நீங்கள் பரிந்துரைக்கிற பாலியல் கல்வி என்பது குழந்தைகளை காமத்தில் இருந்து கடத்தி விடுமா? என்பது என் கேள்வி. ஒரு குழந்தையை பாலியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டு நகர்த்திவிடுமா என்பது என் கேள்வி. இந்த பாடங்கள் வழியாக நீங்கள் பாலியல் சார்ந்த வன்மங்களில் இருந்து விடுபட்டு விட்டீர்களா என்பது உங்கள் முன் வைக்கிற எனது கேள்வி. நான் இந்தக் கேள்வியை உங்கள் முன் வீசுகிறேன். நீங்கள் எந்த மாதிரியான பாலியல் பரிந்துரைகளை, பாலியல் கல்வி சார்ந்த வழிமுறைகளை குழந்தைகளுக்கு வைக்கிறீர்களோ அந்த வழிமுறை வழியாக அந்த பாடத்திட்டம் வழியாக உங்கள் பாலியல் வன்மங்களில் இருந்து விடுபட்டு விட்டீர்களா இந்த சமூகம் விடுபட்டு விட்டதா என்பது என் கேள்வி. அப்படி அல்ல.இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற எந்த அமைப்பின் வழியாகவும் இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற எந்த நேர்கோட்டின் வழியாகவும் இந்த சமூகம் ஒரு மனிதனை சுதந்திரமாக இயங்க அனுமதிப்பது இல்லை. இந்த சமூகம் தன் நோக்கத்திற்காக மட்டுமே ஒரு மனிதனை இயக்குகிறது. அதில் பாலியல் கல்வி முறையும் உள்ளடக்கியது. குழந்தைகள் உளவியல் என்று ஒரு துறை இயங்குகிறது. மன ஆய்வாளர்கள் மற்றும் மனோவியல் நிபுணர்கள் குழந்தைகள் உளவியல் பற்றி ஆய்வு செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த ஆய்வு முறையும் குழந்தைகளை எவ்வாறு இந்த சமூகத்தில் பொருத்துவது என்பது பற்றி இருக்கிறது. இந்த சமூகத்திற்கு தகுந்த ஒரு இயந்திரம் போல் குழந்தைகளை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பதுபற்றி இருக்கிறது. இந்த அணுகுமுறை என்பது குழந்தைகளுக்கு எதிரானதாக நான் பார்க்கிறேன். ஒரு குழந்தை எவ்வாறு கல்வி கற்க வேண்டும். கற்ற பாடங்களை எவ்வாறு நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என சிறப்பு பயிற்சிகளை மூளையின் இயங்கு திறன் கொண்டு இந்த சமூகம் இந்த நிபுணர்கள், மன ஆய்வாளர்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு குழந்தை இயல்பாக இருக்க வேண்டும் என்று ஒருபுறம் பேசி விட்டு ஒரு குழந்தையை உற்சாகமாக வளர்க்க வேண்டும் என்று ஒரு புறம் பேசி விட்டு அவர்களே, இந்த சமூகமே மறுபுறம் இந்த குழந்தைக்கு எதிராக இந்த குழந்தையை எவ்வாறு இயக்க வேண்டும் இந்த குழந்தைக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் இந்த குழந்தைக்கு எவ்வாறு நினைவாற்றலை அதிகப்படுத்த வேண்டும் என்று ஒரு பொருள் போல, இயந்திரம் போல தயார்படுத்துவது விரோதமானது. இந்த சமூகத்தினுடைய இரட்டை மனநிலை.நேரெதிரான இரட்டை முகம். மனவியல் ஆய்வாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் இந்த வேலையைச் செய்வதை பார்க்க முடிகிறது.குழந்தைகள் மீது தொடுக்கப்படுகிற வன்முறை என்பதும் உடலளவில் மட்டுமல்லாமல் மன அளவிலும் இவ்வாறாக தொடர்வதை நான் பார்க்கிறேன். இது ஒருவகையான கருத்தியல் வன்முறை. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவது என்பது சமூகத்தின் தேவை அல்ல.ஆனால் குழந்தைகளின் தேவை. இந்த சமூகம் நீண்ட செலவினங்களை அபாயம் நிறைந்த போர்களுக்கு முதலீடு செய்கிறது. அபாயம் நிறைந்த போர்கள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் உங்கள் குழந்தைகளை அமைதியாக வளர்க்க வேண்டும். நிதானமாக வளர்க்க வேண்டும். அன்பு நிறைந்தவர்களாக வளர்க்க வேண்டும். அப்படி வளர்ப்பதற்கு நீங்கள்துவங்க வேண்டிய புள்ளி, உங்கள் குழந்தையை அவர்களாகவே இருக்க விடுவது. உங்கள் குழந்தை என்ன விரும்புகிறதோ அந்த நிலையிலிருந்து அந்த குழந்தையை வளர்ப்பது. உங்கள் குழந்தை என்னவாக இருக்கிறதோ அவ்வாறாகவே உங்கள் குழந்தையை வார்ப்பது. உங்கள் அறியாமையிலிருந்து குழந்தையின் அறியாமையை புரிந்து கொள்ள முடியாது. உங்களது அறியாமை என்பது சமூகத்தை புரிந்து கொள்வதில் உங்களுக்கு ஏற்படுகிற தடுமாற்றம். குழந்தையின் அறியாமை என்பது எந்த எழுத்தும் எழுதப்படாத வெறும் பலகை. உங்களது அறியாமை என்பது உங்களது அறிவு சார்ந்தது. உங்கள் அறிவின் பற்றாக்குறை. குழந்தையின் அறியாமை என்பது எந்த விதத்திலும் அறிவிற்கு சம்பந்தமில்லாதது.அது வெறுமனே அறியாமை. எதைப் பற்றிய பதிவும் குழந்தைகளுக்கு இருக்காது. உங்களது அறியாமையிலிருந்து குழந்தைகளின் அறியாமையை புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்ள வேண்டுமென்று நீங்கள் எத்தனிப்பீர்கள் என்றால், முயற்சி செய்வீர்கள் என்றால், நீங்கள் தோல்வியை தழுவுவது தவிர வேறு வழி இல்லை. உங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமல் குழந்தைகள் மீது வன்முறையை கையாளுகிறீர்கள் என்பதை நான் பார்க்கிறேன். இவ்வாறாகவே குழந்தைகள் மீது வன்முறைகள் உங்கள் தோல்வியிலிருந்து சமூகத்தின் தோல்வியில் இருந்து தொடுக்கப்படுவதாக நான் புரிந்து கொள்கிறேன். ஆக, ஒரு குழந்தையினுடைய வளர்ச்சி நோக்கம் என்பது இந்த உலகம் அமைதியாக தன் காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கு மிக நெருக்கமானது. போர் இல்லாத ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் அமைதியான ஒரு குழந்தையை நீங்கள் உருவாக்க வேண்டும்.வாய்ப்பளிக்க வேண்டும். உலகம் முழுவதும் இருக்கிற எல்லாவிதமான மனித முரண்பாடுகளுக்கு இடையே இருக்கிற சிக்கல்களை உருவாக்கி வைத்தது இந்த சமூகம். இந்த கல்வி முறை. இந்த திணிப்புகள். இவற்றிற்கு மாற்றாக ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்றால் ,ஒரு உலகத்தை படைக்க வேண்டுமென்றால் அது குழந்தைகளில் இருந்து துவங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதற்கு எளிய வழி குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுவது. நீங்கள் முன்வைக்கிற எந்த கல்விமுறையும் குழந்தைகளுக்கானது அல்ல; அது சமூகத்திற்கானது. நீங்கள் முன்வைக்கிற எந்த வாழ்க்கைமுறையும் குழந்தைகளுக்கானது அல்ல, உங்களது சமயம் சார்ந்ததாகவோ உங்கள் சமுதாயத்தினுடைய இன்னபிற வடிவம் சார்ந்ததாகவோ இருக்கும். நீங்கள் முன்வைக்கிற எந்த உணவுப் பழக்கமும் குழந்தைகளுக்கானது அல்ல. நீங்கள் கருதுகிற ஆரோக்கியம் சார்ந்தது. நீங்கள் பரிந்துரைக்கிற எந்தவிதமான செயல்முறையும் உங்களது நினைவு சார்ந்தது, உங்களது அனுபவம் சார்ந்தது, உங்களது முடிவு சார்ந்ததே தவிர்த்து குழந்தைகளுக்கானது அல்ல.ஆக, குழந்தைகளை காப்பாற்ற வேண்டும், குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் நான் உங்களுக்கு அழுத்தமாக சொல்ல நினைப்பது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் குழந்தைகளோடு சும்மா இருங்கள். அதன் வழியாகவே அவர்கள் இந்த உலகத்தை, உங்களை, புரிந்து கொள்வதும் ஒரு அமைதியான உலகை ,போர்கள் இல்லாத உலகை உருவாக்கவும் சாத்தியம் இருக்கிறது.
நன்றி.
.
No comments:
Post a Comment